சமூகவலைதளங்களில் அரசியல் கதையாடல்களை முன்னெடுப்பது, அதன் வழி மக்கள் அதிகாரத்தைத் திரட்டுவது நல்லதே. ஆனால் சோற்றில் உப்பைப் போல ஓரளவுக்குத் தான் அது நம் வாழ்வில் இருக்க வேண்டும். சின்மயானந்தாவின் "பகவத் கீதையின்" பதவுரையில் முதல் அத்தியாயத்தின் முடிவில் ஒரு சுவாரஸ்யமான கருத்தைச் சொல்கிறார்: "இந்து தத்துவம் சிறப்பானது என்றாலும் அதை நேரடி வாழ்வில் பரிசீலித்துப் பார்க்கையில் பல்லிளித்து விடக் கூடும். அப்போது நாம் தத்தளித்து குழம்பிப் போய் நிற்போம், அர்ஜுனனைப் போல. அப்போது மீண்டும் தத்துவத்தில் அல்ல வாழ்வில், செயலிலே விடையைத் தேட வேண்டும். செயலே தத்துவம், தத்துவம் செயல் அல்ல." (அவரது கருத்தை என் மொழியில் தந்திருக்கிறேன்.) இது தத்துவத்தில் மிகவும் செல்லுபடியாகும் கருத்து. நானும் என் நண்பர்கள் சிலரும் முன்பு நாகார்ஜுனரை படிக்கையில் ஒவ்வொரு சுலோகத்துக்கும் நடப்புலகில் என்ன அர்த்தம் என பரிசீலிப்போம். எங்கள் கண்முன் யார் வந்தாலும், எது நடந்தாலும் உடனே நாகார்ஜுனரின் கருத்தை அதில் செலுத்தி ஆராய்வோம். அப்போது தான் அது எவ்வளவு சிக்கலானது, அதைப் புரிந்துகொள்வது எவ்வளவு சிரமமானது என விளங்கும்.
இதை நான் அரசியல் கதையாடலுக்கும் சொல்வேன். சமூக வலைதளங்கள் வந்த பின்னர் அரசியல் கதையாடல் நமது அன்றாட உரையாடல்களிலும் பரவலாகியுள்ளது. இதை நான் என் மாணவர்களை உற்று கவனிக்கையிலும் பிறரிடம் பேசும் போது உணர்கிறேன். ஆனால் இதை வெகுஜனத்தின் அரசியல் பங்களிப்பு என்று கூற முடியாது என்பதே சிக்கல். முன்னெப்போதையும் விட வாழ்வில் இருந்தும், அரசியலில் இருந்தும் அந்நீயப்பட்டு நிற்கிறோம். அதாவது நாம் பங்கேற்க பங்கேற்க அதிகமாக விலகிப் போகிறோம். இன்னொரு பக்கம் நாம் அணுக்கமாக இருப்பதாக ஒரு பிம்பமும் கட்டமைய அதில் மயங்குகிறோம். இது ஒரு ஆபத்தான போக்கு என நினைக்கிறேன்.
இதற்குத் தீர்வு சின்மயானந்தா சொல்வது தான் (அவரது பல கருத்துக்களை ஏற்காவிடினும் இதை ஏற்கிறேன்): நாம் பேசும் கருத்துக்களுக்கு / கதையாடல்களுக்கு நேரடி வாழ்வில் இடமுண்டா எனப் பார்க்க வேண்டும். இல்லாவிடில் அவற்றை கடாசி விட வேண்டும். அரசியல்மயப்படுவது என்பது நேரடி வாழ்வில் தானே தவிர பேச்சிலும் எழுத்திலும் அல்ல.
இன்னொரு விசயத்தையும் செய்யலாம். எளிய மக்களை / படிப்பு குறைவான மக்களை அணுகி கவனிக்கலாம், அவர்கள் எப்படி அரசியல்மயப்படுகிறார்கள், அதிகார வர்க்கத்திடம் பலன்களைப் பெற என்ன செய்கிறார்கள் என சிந்திக்கலாம். ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன். நான் எழுதிய அரசியல் கருத்துக்கள், நூல்களுக்கு ஆயிரம் மடங்கில் ஒன்றைக் கூட என் அம்மா பேசியதோ எழுதியதோ இல்லை. நான் மோடியைப் பற்றி முன்னூறு பக்கத்து புத்தகம் எழுதியிருக்கிறேன். என் அம்மாவுக்கு அதில் என்ன இருக்கிறதென்றே தெரியாது. ஆனால் உள்ளூர் கவுன்சிலரிடம் அவரால் நேரடியாக உரையாடவும், அவரைப் பற்றி அறிந்து வைத்திருக்கவும், விமர்சிக்கவும், தேவையானதை கேட்டுப் பெற்றுக்கொள்ளவும் அவரால் முடியும். அவருக்கு அடுத்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும், தன் நண்பர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று தெரியும். எனக்கு இந்த ஊரின் கவுன்சிலர் யாரென்றும் தெரியாது, தெரிந்தாலும் அவரிடம் உரையாடும் மொழியோ பரிச்சயமோ இல்லை. நான் இந்த நகரத்தில் இருந்து விரைவில் இன்னொரு மொழியறியா நகரத்துக்கு செல்கிறேன் எனில் அங்கும் இப்படி அந்நியப்பட்டே இருப்பேன். என்னைப் போன்ற எத்தனையோ மிதக்கும் மக்கள் தொகையை இப்போது பார்க்கிறேன்.
என் அம்மா பத்திரிகையும் நூல்களும் படிக்காதவர் என்றாலும் அரசியல்பட்டு இருக்கிறார். நாங்கள் அந்நியப்பட்டு இருக்கிறோம். பேஸ்புக்கில் அரசியல் பேசும் முன் பிரச்சினை எங்கிருக்கிறது என நாம் சிந்திக்க வேண்டும்.
கருத்துகள்