மெக்காலே கல்விக்கொள்கையைப் பற்றி சீமானும் பேராசிரியர் கருணானந்தனும் பேசும் இருவேறு காணொளிகளைப் பார்த்தேன். மெக்காலே கல்வி முறையால் பயன்கள் இருந்தது என கருணானந்தன் சொல்வது வெள்ளையர் ஆட்சியால் பயனிருந்தது என்பதன் நீட்சியாகத் தான் உள்ளது. என்ன பிரச்சினையென்றால் வெள்ளையரோ மெக்காலேயோ நம்மை முன்னேற்றும் நோக்கில் எதையும் செய்யவில்லை, பிராயிலர் கோழிக்கு தீனி போட்டு வளர்ப்பதைப் போல நம்மை வளர்த்தார்கள் என்பதே. அதை விட முக்கியமாக யாரும் மெக்காலேவை அவரது காலனிய நோக்கங்களுக்காக குறிப்பாக விமர்சிப்பதில்லை. கிட்டத்தட்ட 80 ஆண்டுகளாக நாம் அதே மெக்காலே கல்விமுறையைத் தான் பின்பற்றுகிறோம் என்பதே விமர்சனம். விமர்சனம் மெக்காலே மீதல்ல இதுவரையிலான அரசுகளும் அவை கொண்டு வந்த கல்விக்கொள்கைகள் மீதே. மெக்காலே என்பது வெறும் பெயர் தான். இதுவரையில் தொழிற்சாலைகளிலும் நிறுவனங்களிலும் குமாஸ்தா, மூளை உழைப்பு சுரண்டல் வேலைகளில் ஈடுபடவே மக்களுக்கு பயிற்சிகொடுத்தோம், சுயமாக எதையும் கண்டுபிடிக்க, உருவாக்க, சிந்திக்க, தொழில் செய்ய மக்களுக்கு பயிற்சி அளிக்க முயலவில்லை என்பதே குற்றச்சாட்டு.
முதலீட்டியத்திற்கு விளக்குப்பிடிப்பதற்கு கல்விக்கொள்கையை அமைப்பதைச் சொன்னால், தாராளவாத கொள்கைகளை விமர்சித்தால் உடனே பேச்சை வளைத்தொடிக்கும் நோக்கில் விமர்சிப்பவகள் அனைவரும் பழமைவாதிகள், சாதிய ஆதரவாளர்கள், மதவாதிகள் என அடிமடியில் கைவைப்பார்கள். கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும், சாதி, மதத் தாக்குதலால் அல்ல.
என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துவது நாம் யாராவது தாராளவாத முதலீட்டிய அமைப்புகளை விமர்சித்தால் நம் ஊரில் பெரிய முற்போக்காளர்களாகத் தெரிபவர்கள் முதலில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நம்மை அடிக்க வருவார்கள் என்பதுதான்.
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சமூக, வரலாற்றுச் சூழல் உண்டு, ஒன்றை இன்னொன்றுடன் முரட்டுத்தனமாக ஒப்பிடலாகாது என அறிவேன். இருந்தாலும் ஒரு பொதுவான ஒப்பீட்டைப் பண்ணிப் பார்ப்போம். ஐரோப்பிய நாடுகளில் கல்விக்காக குழந்தைகளை எந்தளவுக்கு உழைக்க வைக்கிறார்கள், நம் ஊரில் எவ்வளவு வதைக்கிறார்கள் எனப் பாருங்கள். என்னுடைய நண்பர் ஒருவர் ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு போய் சில வாரங்கள் இருந்துவந்த பின்னர் அவரிடம் கேட்டேன் அங்கு ஒரு வகுப்பில் எத்தனை மாணவர்கள், ஒருநாள் எவ்வளவு வகுப்புகள் நடக்கின்றன என்று. அவர் சொன்னார் வகுப்புகள் நடந்துகொண்டே இருக்கும், மாணவர்கள் தம் விருப்பம் போல தேர்வு பண்ணி வந்து போவார்கள், நாள் முழுக்க கல்லூரியில் இருப்பதில்லை என்று. மிச்ச நேரத்தை அவர்கள் வாசிக்கவும் ஆய்வு பண்ணவும் செலவிடுகிறார்கள். சிறுவயது முதலே அவர்களை அப்படிப் பழக்குகிறார்கள். நம் குழந்தைகளை பிறந்து விழுந்ததில் இருந்தே ஒரு நிமிடம் கூட நாம் ஓய்வாக இருக்க அனுமதிப்பதில்லை. கல்லூரியில் கூட 9-5 இடைவிடாமல் வகுப்புகள் நடக்கின்றன. அது முடிந்ததும் இரவு 10 மணிவரை இடுபணிகள். அது முடிந்தது வேலையில் சேர்ந்ததும் காலை 9 முதல் இரவு 9 வரை வேலை. யோசிக்க ஒரு நிமிடத்தைக் கூட கொடுப்பதில்லை.
இப்படியே நாம் பழக்குவதால் இந்த பிள்ளைகளுக்கு நேரத்தைக் கொடுத்தாலும் அவர்களுக்கு அதை உபயோகமாக செலவிடவோ, சுயக்கட்டுப்பாட்டுடன் தாமாக வேலை செய்யவோ இயல்வதில்லை. பொறுப்பற்றவர்களாக மாறுகிறார்கள். யாராவது மேலே இருந்து ஏய்க்கவில்லை எனில் வேலை செய்யவே முடியாதவர்கள் ஆகிறார்கள். ஒரு மனிதக் கூட்டத்தையே இந்த கல்வி உளவியல் அடிமைகளாக்கி வைத்திருக்கிறது. ஒரு கல்வியாளனாக வேறெவரையும் விட நான் இதை நன்றாக அறிவேன். இதைச் சொன்னால் எனக்கு மரியாதை குறையும் என நான் கவலைப்பட மாட்டேன்.
தாராளவாதிகள் இன்னொரு பக்கம் இதை விமர்சிக்கவே கூடாது, விமர்சித்தால் நீ பழமைவாதி, பார்ப்பனியவாதி என்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன், நாங்கள் இந்த கல்வியமைப்பை விமர்சிக்க மாட்டோம், செருப்பால் அடிப்போம். இது மாறும் வரை அடித்துக் கொண்டே இருப்போம். சாணியில் முக்கி அடிப்போம். ஒருநாள் மக்கள் முழித்துக் கொண்டு குரல் எழுப்பும் வரை அடிப்போம்.
கருத்துகள்