எழுத்தாளர்கள் நிறைய வாசிப்பது எவ்வளவு அவசியம் என பொதுவாக வலியுறுத்தப்படுவதுண்டு. எனக்கு அந்த கருத்துடன் பெரிதாக உடன்பாடில்லை. மிகையான வாசிப்பு எழுத்தாளர்களை தனிமைப்படுத்தவும், மிகையான அச்சத்தை, சுய-அபிமானத்தை ஏற்படுத்தவும் கூடும். ஒருவித ஏதிலிகளாக, தனியர்களாக மாறக் கூடும். அதனாலே சக-எழுத்தாளர்களிடம் பழகியும் பேசியும் அவர்களுடைய ஆளுமையில் இருந்து கற்றுக் கொள்வது, ஊக்கம் பெறுவது மிகவும் அவசியமானது. நான் புத்தகங்களில் இருந்து பெறுவதை விட நூறு மடங்கு அதிகமாக ஒரு சக-படைப்பாளியைக் காணும் போது கற்றுக் கொள்கிறேன். அவர்கள் உலகைப் பார்க்கும் விதத்தைப் பார்க்கையில் புதிய சிந்தனைகள், கற்பனைகள் நமக்குள் பிறக்கும், அவர்களின் செயல்பாடுகளைப் பார்க்கையில் நாம் தனியாக இல்லை, நாம் செய்வதும் சரிதான் எனும் தன்னம்பிக்கை ஏற்படும். இன்னொரு விசயம் - நான் கவனித்த வரையில் பொதுவாக, தனிமையில் இருப்பவர்களை விட சக-படைப்பாளிகளுடன் தொடர்ந்து உரையாடும் படைப்பாளிகள் மிகுந்த படைப்பாக்கத்துடன், திருப்தியுடன் இருக்கிறார்கள்.
தனது “நிக்கோமேக்கியன் எத்திக்ஸ்” நூலில் அரிஸ்டாட்டில் நட்பு என்பது ஒரு தனிமனிதரின் அக லட்சியத்தின் முழுமையான வெளிப்பாட்டை சாத்தியப்படுத்தும் உறவு என்கிறார். எப்படியான மனிதர்கள் இடையே அது சாத்தியமாகும் என்றும் பேசுகிறார். (இதை எத்தனை ஆயிரம் புத்தகங்கள் படித்தாலும் நாம் அடைய முடியாது, ஏனெனில் புத்தகங்களுக்கு ‘உயிரில்லை’, ‘இருத்தல்’ இல்லை.) சமமான சமூக அந்தஸ்து, திறமையும் பரஸ்பரம் மரியாதையும் கொண்டவர்களும் பழகும் போது சாத்தியமாகும் ஆளுமை பரிமளிப்பு ஏற்றதாழ்வான உறவில் எதிர்மறையாக மாறுகிறது என்கிறார். அதனாலே இளம் படைப்பாளிகள் தம்மைப் போல துவக்க நிலையில் உள்ள எழுத்தாளர்களுடன் பழகுவது அவர்களுடைய படைப்பூக்கத்துக்கு நல்லது என்று கூறலாம்.
இன்னொரு பக்கம், தாழ்வுணர்வு கொண்ட, குசும்பும் பொல்லாங்கு எண்ணமும் கொண்ட படைப்பாளிகளிடம் பழகுவது நம்மை சோர்வடைய வைத்துவிடும் தான், நான் மறுக்கவில்லை. அவர்களுடன் குடிப்பது நம்மை கிட்டத்தட்ட தற்கொலை நோக்கித் தள்ளிவிடும். சற்றே அவர்களைப் போலத்தான் தீவிரமான உணர்வுநிலையில் கொதி நிலையில் இருக்கும் படைப்பாளிகளும், எப்போதும் தன் பந்துவீச்சாளருக்கு விக்கெட் விழுந்த விராத் கோலியைப் போல இருப்பவர்களும். அவர்களைக் கையாளவும் ஒரு தனி சமநிலை, முதிர்ச்சி வேண்டும். சில படைப்பாளிகள் குழந்தையைப் போன்றும், சற்று ‘கோமாளித்தனமாகவும்’, மிகவும் கூருணர்வு கொண்டவர்களாகவும், எளிதில் காயப்படுபவர்களாகவும் இருப்பார்கள். அது அவர்களுடைய இயல்பான களங்கமின்மையில் இருந்து வருகிறது. அல்லது படைப்புக்காக அந்த நிலையில் வைத்துக் கொள்கிறார்கள் என்றும் கூறலாம். அவர்களிடம் பழகும் போதும் அதே களங்கமின்மையுடன் இருக்க வேண்டும் அல்லது காயப்படுத்தாமல் பழக கவனம், மென்மை வேண்டும். எப்படிப் பார்த்தாலும் இவை அன்றாட உலகில் நாம் வெகுவாக காண இயலாத இயல்புகள்.
என்னிடம் ஒரு பழக்கம் உள்ளது. நான் எழுத்தில் யாரையும் பிரதியெடுக்க மாட்டேன். பெரும்பாலும் பேச்சிலும் சிந்தனையிலும் தான். ஆனால் ஆர்வமூட்டும் எந்த படைப்பாளியைக் கண்டாலும் அவர்களுடைய நடத்தையை, அதன் வழி ஆளுமையை விலகி நின்று கவனித்துக் கொண்டிருப்பேன். அடுத்த சில நாட்கள் நான் கவனித்த விசயங்கள் என் ஆளுமைக்குள் வந்துவிடும். கிட்டத்தட்ட அவர்களாகவே என்னையறியாமல் நடந்துகொள்வேன். இது எனக்கு எழுத்து வாழ்வில் வெகுவாக உதவியுள்ளது. இது திட்டமிடாமல் எனக்குள் நிகழும் ஒன்று.
இந்த தன்னிச்சையான பழக்கம் உள்ளதாலே சில நேரங்களில் மிகவும் சாமான்யமான, அற்பமான மனிதர்களையும் பிரதியெடுக்கத் தொடங்கிவிடுகிறேன். நான் தினமும் சந்திக்கும் மனிதர்களில் 99% ஆட்கள் எந்த தீவிர லட்சியமோ சிந்தனைகளோ அற்றவர்களா, நான் கையாளும் இளையதலைமுறையினரில் சிலர் மிகவும் கிரிமினலாகவும் தந்திரமாகவும் நடக்கிறார்களா என்னையும் அவர்களையும் போல என்னையறியாமலே மாற்றிவிடுகிறார்கள். ரொம்பவும் மத்திய வர்க்க மனிதனாக சிந்திக்கத் தொடங்கிவிடுகிறேன் - எழுத்தில் அல்ல, நடத்தையில். நான் இவர்களைப் போன்றவன் அல்ல என்று மனதுக்குள் சதா சொல்லிக் கொண்டிருந்தால் பைத்தியம் பிடித்துவிடும். நான் உங்களைப் போன்றவன் அல்ல என்று சதா காட்டிக்கொண்டிருந்தால் அவர்களால் வெறுக்கப்படுவோம், தனிமைப்படுவோம். ஆனால் அவ்வப்போது சக-எழுத்தாளர்களை சந்தித்து உரையாடுவது என்னை ‘சுத்தப்படுத்தி’ இயல்பாக்கி விடுகிறது. ஒரு வண்டி சர்வீஸ் ஆகி வருவதைப் போல பளிச்சென்று ஆகிவிடுகிறேன்.
கருத்துகள்