கேள்வி: ஹலோ அபிலாஷ், இயல்புவாத நாவல் என்றால் என்ன?
பதில்: இயல்புவாதம் எதார்த்தவாதத்தின் கிளையாகத் தோன்றி பின்னர் தனக்கென தனி அடையாளம் பெற்றது. அதனாலே எதார்த்தவாத மற்றும் இயல்புவாத நாவல்களுக்கு இடையில் வேறுபாட்டைக் காண்பது சிரமம். எதார்த்தவாதத்தின் பல கூறுகளைக் கொண்டிருந்தால் விட்டேந்தியான, புறவயமான கதைகூறல் முறை, வாழ்வின் முன்கூறப்பட்ட தன்மை இயல்புவாதத்தின் கூறுகள். கதைசொல்லியின் உணர்ச்சிகரமான ஈடுபாடு இல்லாத கதைகூறல் என்றால் அது இயல்புவாத நாவல் என்று நாம் முடிவுசெய்து கொள்ளலாம். இயல்புவாத நாவலில் பிரதான பாத்திரம் தனது அக-ஊக்கத்தினாலோ தன்முயற்சியாலோ அல்லாமல் காலத்தின், இயற்கையின், சமூகச் சூழலின் தாக்கத்தால் நடத்தப்படுவதாக காட்டப்படும். சில நாவல்களில் எதார்த்தவாத, இயல்புவாத கூறுகள் கலந்திருக்கும். மேற்கில் எமிலி ஸோலா, ஜாக் லண்டன், ஹென்ரி ஜேம்ஸ், ஸ்டீபன் கிரேனின் படைப்புகளும், வில்லியம் பாக்னரின் சில கதைகளும் இயல்புவாதத்தின் சிறந்த உதாரணங்களாக கருதப்படுகின்றன. தமிழில் பூமணி, இமையம், கண்மணி குணசேகரனை இயல்புவாத நாவலாசிரியர்களாக குறிப்பிடுகிறார்கள்.
கருத்துகள்