எனக்கு தனிப்பட்ட முறையில் இதைப் பற்றி ஒன்றும் தெரியாது. இந்த பிறவியே எப்படி ஆரம்பித்தது, நான் கண்ணைத் திறந்து அழுது உலகை அறிந்து கொள்வதற்கு முன் எங்கிருந்தேன், உயிரற்று ஒன்றுமற்ற ஒன்றாக இருந்தேன் எனில் உயிரற்றது எப்படி உயிருள்ளவராக முடியும், காலம் இல்லாதவனாக இருந்தவன் எப்படி திடீரென காலத்துள் வந்து குதிக்க முடியும் ஆகிய ஹைடெக்கரிய கேள்விகள் எனக்கு உள்ளன. இதுவே தெரியாத போது நான் இந்த வாழ்வையோ இங்கு மிகத்தீவிரமாக நம்பப்படும் பலவற்றையும் உண்மையென நம்ப முடியாத இடத்திற்கு நகர்ந்துவிடுகிறேன். ஒருவர் உயிர்கொள்வது, பிறவியை எடுப்பதே விளக்கத்திற்கு அப்பாலானது எனும் போது அவர் உயிரிழப்பதும், அடுத்த பிறவிக்குப் போவதும் அசாத்தியம் தான். இங்கு சாத்தியம் இப்போதுள்ள ஒவ்வொரு கணமும் மட்டுமே. அதில் மட்டுமே பல பிறப்புகளைக் காண முடியும் என நினைக்கிறேன். இது என் தர்க்க மனம், என் தத்துவ அறிவு சொல்வது. அதே சமயத்தில், முற்பிறப்பு, அடுத்த பிறப்பு போன்ற கற்பனைகளில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அச்சிந்தனைகள் இந்த வாழ்வை ஒரு முடிவற்ற விளையாட்டாகப் பார்க்கத் தூண்டுகின்றன எனும் அளவில் முக்கியமானவை என ஒரு கலைஞனாக நினைக்கிறேன்.
ஷோவில் சிறப்பு விருந்தினராக வந்த போகன் சங்கர் சிறப்பாக பேசினார். அவர் ஒரு அசல் கவிஞனாக சிந்தித்து சொன்ன சில விசயங்கள் பிடித்திருந்தன என்றாலும் வேறு சில கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை. போகன் சொல்வதைப் போன்ற புத்தர் முற்பிறப்பை நம்பினாரா, அடுத்தடுத்த பிறவிகளை போதித்தாரா? ஆம், பல புத்தர்களில் அவரும் ஒருவர். புத்தரின் பிறப்புக் கதையிலே இந்த செண்டிமெண்ட் உண்டே. ஆனால் இன்னொரு புத்தர், நான் ஆர்வம் கொள்ளும் புத்தர், இந்த பிறப்புகளை மானுட இருப்பு, பிரக்ஞை உருவாக்கம், மறைவு சார்ந்து விளக்கியவர். ஒன்று சூனியவாத மரபு, மற்றொன்று யோகாச்சார மரபு. ஒவ்வொரு நிமிடமும் நம் அகம் பிறந்து பிறந்து மடியும் போது அங்கு ஒரு நினைவின் சரடு இருக்கிறது தானே, அதையே பின்னர் வைதீகர்கள் ஆன்மா என்று மீசை தாடி வரைந்து உபநிடங்களையும், கீதையையும் எழுதி குழப்பமாக விளக்கினார்கள். பௌத்தம் ஒரு உளவியல் அல்லது இருத்தலியல் தத்துவம். ஒரு ontological system. புத்தர் இந்த உலகில் மட்டுமே இருந்தார், அவர் எங்கும் போக முடியாது, அவரது பூதவுடலுக்கு அப்பால் அவருக்கு இருப்பு இல்லை எனக் காட்டவே பௌத்தர்கள் புத்தரின் பாதத்தை வழிபடுகிறார்கள். போகன் குறிப்பிட்ட மணிமேகலையின் வரிகளும் இவ்விதத்திலே பொருள் கொள்கின்றன.
உதயகுமரன் கஞ்சணனால் கொல்லப்பட்ட பிறகு வருந்தி அழும் அவன் தாயிடம் மணிமேகலை ‘உங்கள் மகனின் உடலுக்காக வருந்துகிறீர்கள் எனில் அதை பாதுகாத்து வைக்க வேண்டியதுதானே, அவன் ஆன்மாவுக்காக வருந்துகிறீர்கள் எனில் அது யாராகவும் எதுவாகவும் மறுபிறப்பெடுக்கக் கூடும் எனும் போது உங்கள் மகன் இங்கு உள்ள எந்த உயிராகவும் இருக்கலாம் எனும் போது நீங்கள் அனைவரையும் நேசிப்பதன் வழியாக உங்கள் மகனைத் தொடர்ந்து நேசிக்கலாமே’ என்று கூறி தெளிவுபடுத்துகிறாள். [உடற்கழு தனையோ உயிர்க்கழு தனையோ உடற்கழு தனையேல் உன்மகன் தன்னை எடுத்துப் புறங்காட் டிட்டனர் யாரோ உயிர்க்கழு தனையேல் உயிர்புகும் புக்கில் செயப்பாட்டு வினையால் தெரிந்துணர்வு அரியது அவ்வுயிர்க் கன்பினை யாயின் ஆய்தொடி எவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும். (சிறைவிடு காதை, 73 - 79)]
கவனித்தால் மணிமேகலையின் கூற்றில் நாம் நாகார்ஜுனரின் தர்க்கத்தின் வழி ஒரு கூற்றை அபத்தத்தை நோக்கி பின்நகர்த்தி முறியடிக்கும் விவாத முறைமையை (reductio ad absurdum) காண முடியும். உங்கள் மகனின் ஆன்மா மறுபிறப்பெடுத்து யாராக வந்துள்ளது எனத் தெரியாது என்பதை உங்கள் மகன் இங்கு யாராகவும் இருக்கலாம் என்பதைப் போலவே யாராகவும் இருக்க முடியாது என்றும் புரிந்துகொள்ளலாம். இன்னதென்று தெரிய முடியாத ஒன்று இல்லாததற்கு சமம் தானே. யாராகவும் மறுபடி பிறக்க கூடிய ஒருவராகிய உதயகுமரன் உங்கள் மகன் எனும் சிறப்பு இயல்பு, அடையாளம் இல்லாதவராகிறார், அப்போது அவர் உங்கள் மகனே இல்லை தானே? சாராம்சமாக இல்லாத ஒருவருக்காக ஏன் இரங்க வேண்டும்? இப்படி மணிமேகலையின் கூற்றே மறுபிறப்புக்கு, முற்பிறப்புக்கு எதிரானதுதான்.
கருத்துகள்