ஒன்றுமே இல்லாமல் கதையை சுற்றி சுற்றி சுவாரஸ்யமாகப் பின்னி நம்மை ஏமாற்றி அமர வைக்கிற ஜேப்படி வித்தைப் போக்கு ஓ.டி.டிகளின் வருகைக்குப் பின் உருவாகியுள்ளது. படத்தை பார்த்து முடித்த பின்னர் இது என்னடா கதை, ஒன்றுமே இல்லையே, இதையா சுவாரஸ்யமாகப் பார்த்தோம் என்று தோன்றும். இத்தகைய படங்களில் ஒரு பாத்திரத்தின் சவால்கள், அவற்றை அவர் எதிர்கொண்டு வரும் விதங்களில் எந்த படிப்பினையும், விழுமியமும் இருக்காது. உ.தா., ஒருவர் தன் வீட்டுக்கொல்லையில் வந்தமரும் காக்காயைப் பிடிக்க முயன்று குளம் குட்டையில் விழுந்து தன் நண்பர்களையும் கூட அழைத்துக்கொண்டு மேலும் முயன்று நிறைய வேடிக்கைகள் நிகழ்வதாக ஒரு கதையை எழுதலாம். ஏன் அவர் காக்காயைப் பிடிக்க வேண்டும், அதனால் அவர் பெறுவதென்ன எனும் கேள்விகளுக்கு பதில் இருக்காது. இதை செவ்வனே பயன்படுத்தி நம்மை ஏமாற்றுகிறவர்கள் இந்தி மற்றும் மலையாளப் பட இயக்குநர்களே. இதை பஞ்சு மிட்டாயை சாப்பிடுவதுடன் ஒப்பிடலாம். இப்படங்கள் வழக்கமான வணிகப் படங்கள் அல்ல - வணிகப்படங்களிலும் சில மதிப்பீடுகள் குறித்த கவலைகள், கோபம் அடிப்படையாக இருக்கும். ஒரு பாத்திரத்தின் மாற்றங்களைக் காட்டுவார்கள். கதையென எதுவோ ஒன்று இருக்கும். இப்படங்களோ உள்ளே ஒன்றுமில்லாமல் நம்மை ஏமாற்றுகின்றன.
அண்மையில் நான் பார்த்த “பிரேமலு” அப்படித்தான் இருந்தது.
நாயகனுக்கு வேலையும் காதலியும் வேண்டும். அவனுக்கு படம் முடியும் போது வரை அவனுக்கு நல்ல வேலை கிடைக்காது. ஆனால் காதலி கிடைப்பாள். அதற்கு அவன் எந்த பிரயத்தனமும் செய்வதில்லை. அப்பெண்ணுக்கு அவனைப் பார்த்ததுமே பிடித்துவிடுகிறது. அவனுடைய ஒரே வேலை அவளை அதை ஒப்புக்கொள்ள வைப்பதுதான். இத்தகைய படங்களை ஏற்கனவே பார்த்திருப்பீர்கள் - ஆனால் அப்படங்கள் அப்படி தன் காதலை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் போது அப்பெண் சற்றே மாறியிருப்பாள். இதில் அவள் கடைசி வரை அப்படித்தான் இருக்கிறாள் - அவளுடைய ஈகோ, பிடிவாதம் எதுவும் மாறுவதில்லை; அவளது முடிவு மட்டுமே மாறுகிறது. நாயகனும் அப்படித்தான் - அவனும் கிளைமேக்ஸிலும் அப்படியே தான் இருக்கிறான். எல்லாம் வெறும் விளையாட்டாக முடிகிறது.
“12த் பெயில்” இந்திப்படமும் இப்படித்தான். அதைப் பற்றி தனியாக ஒரு பதிவு எழுதுகிறேன்.
கருத்துகள்