
வர்ணனையாளர்களில் தமிழ்நாட்டு முன்னாள் வீரர்களும் சரி, தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருந்து வெவ்வேறு அணிகளில் பயிற்சியாளர்களாக பணியாற்றியவர்களும் சரி தவறாமல் சில வீரர்களை ஒருபக்க சார்பாக விமர்சிக்கிறார்கள். அதுவும் தமிழ் வர்ணனை ஆரம்பித்த காலத்தில் இருந்தே பார்க்கிறேன் - சஞ்சு சாம்ஸன் தொடர்ச்சியாக தன் அணிக்காக அனேகமாக எல்லா பருவங்களிலும் ரன் அடித்தாலும், ஆட்டங்களையும் தனியாக வென்றளித்தாலும் அவரைப் பாராட்ட இவர்களுக்கு மனமே வராது. அவர் மீது கடுமையான காழ்ப்புணர்வு இவர்களிடையே உள்ளது. தமிழக வீரர்களில் தினேஷ் கார்த்திக்கையும் சுலபத்தில் பாராட்ட மாட்டார்கள். ஆனால் விஜய் சங்கரையும் அஷ்வினையும் விழுந்து புரண்டு பாராட்டுவார்கள். சங்கரா கமான், கமான் என்று வடிவேலுவை போல இரு கைகளையும் அசைத்து கூப்பிடுவார்கள். வெங்கடேஷ் ஐயரையும் தவறாமல் பாராட்டுவார்கள். இந்த மூன்று வீரர்களும் ஒரு சில பருவங்களைத் தவிர பிற போட்டிகளில் சோபிக்காதவர்கள். ஐ.பி.எல் ஏலத்தில் பெரிதாக கவனம் பெறாதவர்கள். இந்த பாகுபாடான மனநிலையை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அணி விசயத்திலும் இப்படித்தான் நடந்துகொள்வார்கள் - காலங்காலமாக கோப்பை வெல்லாத பெங்களூரையும் அண்மையில் மோசமாக ஆடி வரும் மும்பையையும் பாராட்டிக் கொண்டு இருப்பார்கள். சன் ரைஸர்கள் சொதப்பினாலும் பாராட்டுவார்கள். சென்னை தோற்றாலும் புகழ்ந்துகொண்டே இருப்பார்கள். தோனி வந்ததும் அவுட் ஆனாலும் ‘செம ஷாட் அடிச்சு அவுட் ஆனார்’ என மெய்சிலிப்பார்கள். வேறு அணிகளை துளியும் கண்டுகொள்ள மாட்டார்கள்.
கருத்துகள்