நான் கடந்த இரு ஆண்டுகளாக குத்துச்சண்டை பயில்கிறேன். ஆனால் ஒரு அமெச்சூர் கிளப் போட்டியில் என்னால் இத்தனை நாட்களாகப் பங்கேற்க முடியவில்லை. ஏனென்றால் இங்கு சக்கரநாற்காலி குத்துச்சண்டைப் போட்டிகளே இல்லை. கிரிக்கெட், பென்ஸிங் போன்ற மிகச்சில போட்டிகள் மட்டுமே ஆண்டுக்கொரு முறைமுறை அங்கங்கே நடக்கின்றன. பவர் லிப்டிங்கில் கூட நிறைய வாய்ப்புகள் உளன. ஆனால் குத்துச்சண்டைக்கு இடமேயில்லை. நான் இதை இன்று கர்நாடக அமெச்சூர் குத்துச்சண்டை அமைப்பின் செயலரிடம் விசாரித்து உறுதிசெய்தேன். ஆக நான் வெறுமனே குத்தும்பையில் பயிலலாம், ஸ்பாரிங் பண்ணலாம். ஆனால் ஒருபோட்டி வாய்ப்புகூட கிடைக்காது.
நான் நேற்று ஒரு கிளப் அளவிலான போட்டித்தொடரைப் பார்க்கப் போயிருந்தேன். ஒரு பக்கம் அப்போட்டிகளைப் பார்க்க ஜாலியாக இருந்தாலும் வெளியே வந்ததும் என்னையும் அவர்களையும் ஒப்பிட்டு மனம் துவண்டுவிட்டது. சுத்தமாகப் பயிற்சியே இல்லாதவர்கள், ஒழுங்காக ஒரு குத்துவிட முடியாதவர்கள் கூட ஆடினார்கள். பத்து வினாடி கூட தாக்குப்பிடிக்க முடியாதவர்கள் கூட ஆடினார்கள். சுமாராக ஆடுபவர்கள் கூட எதிராளியின் திறமைமையின்மையைக் கொண்டு வென்றார்கள். ஒருவரை நான் ஸ்பாரிங்கில் முறியடித்திருக்கிறேன். ரொம்ப நல்ல நண்பர். அவருக்கே ஆடுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது, எனக்கு கிடைக்கவில்லை, என்னைப் போன்றவர்களுக்கு அடிப்படைக் கட்டமைப்போ, ஏற்பாடோ இல்லையெனப் பார்த்தபோது மனம் கசந்துவிட்டது. இயல்புடலாளர்களுக்கு எந்த அடிப்படைத் தகுதியில்லாதபோதே கிடைக்கும், மிக சுலபத்தில் கிடைக்கும் வாய்ப்புகளுக்காக என்னைப் போன்றவர்கள் ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டிவரும். அதன்பிறகு அது வெறும் கனவாகவே முடியும்.
நான் இதைச் சொல்லும்போதே எவ்வளவு அபத்தமாகப் பிறருக்குப் படும் என்பதைப் புரிந்துகொள்கிறேன். உலக அளவிலேயே எந்த எழுத்தாளரும் இப்படியொரு விசயத்துக்காக வருத்தப்பட்டுப் புலம்பியிருக்க மாட்டார்கள். மேலும், இயல்புடலாளர்களுக்கான விளையாட்டு ஏற்பாடுகளை மாற்றுத்திறனாளிகளின் ஏற்பாடின்மையுடன் ஒப்பிடலாகாது என்பதையும் அறிவேன். ஆனால் வருத்தமும் கோபமும் மேலிடும் போது இந்த பகுத்தறிவு வேலை செய்யாது. அவருக்கு எளிதில் கிடைப்பது, கேட்காமலே கிடைப்பது, விரும்பாமலே கிடைப்பது கேட்கிற, விரும்புகிற, உழைக்கிற எனக்குக் கிடைக்கவில்லையே என்றே முதலில் யோசிக்கத் தோன்றுகிறது. நான் இப்படியெல்லாம் நினைப்பேன் என்று தெரிந்துதானோ என் மனம் இத்தனை ஆண்டுகளாக இத்தகைய விசயங்கள் பக்கம் ஆர்வம் கொள்ளாமல் எழுத்து வாசிப்பு என்றே இருந்துவிட்டதோ? என் எழுத்து லௌகீக உலகின் போதாமைகள் குறித்த ஏமாற்றங்களிலிருந்து என் தற்பாதுகாப்பு நடவடிக்கையோ?
எனக்கே இத்தகைய ஆசைகள் சில வருடங்களுக்கு முன்பு இல்லை. குத்துச்சண்டை மீதுள்ள ஆசையினாலே நான் பயிற்சியெடுக்கத் தொடங்கினேன். ஆனால் திடீரென்று போட்டியில் பங்கேற்கவேண்டும் என ஆசை ஒருநாள் தோன்றியது. ஆசை எப்போது ஏன் வருகிறது என்று யாராலும் சொல்லமுடியாது என நினைக்கிறேன். அதற்கு இடமிருக்கிறதா என்று கூட யோசிக்கமுடியாது. ஆசை நம்மை ஆட்கொண்டுவிடும், கூடவே ஏமாற்றமும் வருத்தமும் அழையா விருந்தாளியாக வரும்.
எனக்கு இன்னும் சில இலக்குகள் உள்ளன - இன்னும் தோள்வலிமையை அதிகரிக்கவேண்டும், தடுப்பாட்டத்தைக் கற்க வேண்டும், 5-10-15 நிமிடங்கள் என நான் ஆட்டத்தில் தாக்குப்பிடிக்கும் நேரத்தை பயிற்சிமூலம் அதிகரிக்க வேண்டும். அதன்பிறகு என்னால் எந்த போட்டி வாய்ப்புமின்றி தொடர்ந்து இதிலேயே இருக்கமுடியுமா எனத் தெரியவில்லை. நல்லவேளை எனக்கு இலக்கியம் என ஒரு துறை இருக்கிறது என்று நிம்மதியாக இருக்கிறது. எனக்கு அதில் சற்று ஆறுதலும் முழுமையாக சமமாகப் பங்கேற்பு வாய்ப்பும் எப்போதும் உண்டு.
நேற்றைய போட்டிகளில் பதக்கங்களை வென்ற என் நண்பர்களுக்கு இப்போதைக்கு என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கருத்துகள்