வேலையென்பது அதிகப் பணத்தையும் சமூக ஏற்பையும் அதனாலே சமூக அதிகாரத்தையும் தரும் என ஒரு காலத்தில் நம்பப்பட்டது. இது நிலம் ஆணுக்கு உரிமையாக இருந்த காலத்தின் விழுமியம், அதன்மீதான நம்பிக்கை. 1950களுக்குப் பிறகு அது உடைந்து 70களுக்குப் பிறகு நிர்மூலமானது. உழைக்கும் ஆண்கள், தொழிற்சாலை அடிமைகளாகவும், நகரங்களில் உழல்பவர்களாகவும் தமது நேரம், உடல்மீது அதிகாரமற்றவர்கள் ஆனார்கள். அவர்கள் குடும்பத்தை இறுகப் பற்றிக்கொண்டார்கள். அங்கு தம் அதிகாரத்தைக் காட்ட முயன்று அவர்களில் சிலர் வன்முறையாளர்கள் ஆயினர். அதற்கடுத்த தலைமுறையில் தாராளமயமாக்கல் வர, பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்ல வேலையென்பதன் பொருள் துன்பம், அடிமைத்தனம், அவதி என அவர்கள் புரிந்துகொண்டதன் பதிவை நாம் 80, 90களின் வெகுஜனக் கதைகளில், படங்களில் நுட்பமாகப் பார்க்க முடியும் இதை முதலீட்டியம் விரும்பாது. முதலீட்டிய முகவரான பெண்ணியம் உடனே வேலையின் அர்த்தமின்மையை, அவதியை குடும்பத்தின், ஆண்களின் மீது சுமத்தியது. பேருந்தில், சமையலறையில் பெண்களுக்குத் துனம் என்றார்கள், ஆனால் பத்து மணிநேரம் வேலைக்காக ஓடுவதன் சிக்கலைப் பற்றி யாரும் பேசவில்லை. இன்று தனிப்பெண்களிடம் பேசும்போது அவர்கள் வேலையிட நிச்சயமின்மை, சுரண்டல், அழுத்தம் குறித்த கவலைகளை வெளிப்படையாகச் சொல்கிறார்கள். அவர்களில் மேல்தட்டினர் அதிகமாகக் குடிக்கிறார்கள், தூக்கமின்மையால், மன அழுத்தத்தால் துன்புறுகிறார்கள். மெல்லமெல்ல இன்று வேலை குறித்த புரிதல் மாறிவருகிறது.
குடும்பத்துக்காக உழைப்பது மிகவும் அழுத்தமுள்ள நெருக்கடியான விசயம், துன்பம். அதை ஆண்கள் அதிகமாகச் செய்கிறார்கள் எனில் அதற்கு சமூகக் கட்டாயமே காரணம். வேலைக்குப் போகும் பெண்கள் பயணம், வேலையிட இடர்கள், மன அழுத்தம் பற்றி வருந்துகிறார்கள் எனும்போது அதையெல்லாம் தொடர்ந்து சகிக்கும் ஆண்களுக்கு அதற்கான அங்கீகாரம் அவசியம் எனக் கருதுகிறேன்.
அடுத்து, வேலை என்பது தனிமனித துய்ப்புக்காக சம்பாதிக்கச் செய்யும்போது மட்டுமே விடுதலை, அல்லாவிடில் அடிமைத்தனம். இதை இன்று பெண்கள் உணர்ந்து வருகிறார்கள், அதனாலே குடும்ப அமைப்பை இளம்பெண்களில் ஒரு பகுதியினர் விரும்புவதில்லை என்பதே என் பார்வை. ஆனால் ஆண்கள் குடும்பத்துக்காக உழைக்க வேண்டும் என சமூகம் இன்றும் அழுத்தம் கொடுப்பதால் அவர்களால் அது சுலபத்தில் முடிவதில்லை. குடும்பம் இல்லாமல் சாப்பாட்டைக் கூட சமாளிக்கலாம், ஆனால் செக்ஸ் அவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை. உத்தியோகம் ஆண்களின் பொறுப்பல்ல, லட்சணமல்ல என்று பொதுசமூகம் கோரும்போதே பெண்களும் அதை ஏற்கும்போதே இன்று வேலையின் பொருட்டு ஆண்கள் நேரிடும் அழுத்தமும், செய்யும் தற்கொலைகளும் குறையும். வேலையை அதிகாரம் என நாம் தவறாக நினைக்கிறோம். அக்காலம் முடிந்துவிட்டது. இன்று ஆண்களின் வேலை அவர்களது நிபந்தனைக்குட்பட்ட அதிகாரம் மட்டுமே. வேலை என்பது அவ்வளவு நிச்சயமற்றதாகிட சம்பாத்தியமும் தற்காலிகமாகிட ஆண் அதிகாரத்திற்கு அர்த்தமில்லாமல் போய்விட்டது. நாம் இன்றும் பழைய பல்லவியைப் பாடியிராமல் வேலையைச் சுமையாக மட்டும் பார்க்க வேண்டிய காலம் வந்துவிட்டது. அதிகமாக சுமக்கிறவருக்காக பரிதாபப்படவும் அவரை ஆதரிக்கவும் வேண்டும் (அது ஆணோ பெண்ணோ). என்னுடைய வருத்தம் ஏன் அம்மாதிரி விவாதம் இங்கு நடப்பதில்லை என்பதே.
ஆம், வேலை ஒரு privilege தான், ஆனால் தனக்காக உழைத்துச் செலவு செய்யும்போது மட்டும். குடும்பத்துக்காக வெளியே போய் செய்யும் வேலையின் பெயர் சமூகச் சுராண்டல், அடிமைத்தனம். அதில் எந்த பெருமையும் இல்லை. சிக்கிக்கொண்டு விட்டடார்கள் என்பதைத் தவிர அவர்கள் அதில் நிலைப்பதற்கு வேறு காரணமும் இல்லை.
கருத்துகள்