முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கனவு வாழ்க்கை, 'கனவு' வாழ்க்கை



 இன்று ஒரு நண்பர் என்னிடம் பாலிஷ் போட்ட யானைக் குட்டியைப் போன்ற காரைக் காட்டி "இந்த கார் ஒரு கோடி ரூபாய். பகத் பாஸில் வைத்திருக்கிறார். இதில் பயணிக்க அவ்வளவு சொகுசாக இருக்கும்." என்றார். இப்படி விலைமதிப்பான பொருட்கள், மின்னணு சாதனங்கள், வீடுகள் குறித்து யாராவது தொடர்ந்து தகவல்களை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நாம் மற்றவர்களைவிட ரொம்ப கேவலமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம் எனும் உணர்வு சட்டெனத் தோன்றிவிடுகிறது. நான் முன்பு மூவாயிரம் ரூ சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தபோது பணம் ஒரு பிரச்சினையாக, பணமின்மை போதாமையாகத் தோன்றியதில்லை. கடன் அதிகமானதால் ஒரு குடும்பத்தில் ஏழு பேர்கள் விடமருந்தி தற்கொலை பண்ணி ஒரு காருக்குள் அமர்ந்திருந்ததாக செய்தி படித்தேன். இப்படியான செய்திகளை நான் அதிகமாக முன்பு கேள்விப்பட்டதில்லை. மிக ஏழ்மையான நிலையில் சகித்துக்கொண்டு கௌரவமாக வாழ்ந்த குடும்பங்களை அறிவேன். இன்று அப்படியான வாழ்க்கை மிகவும் கடுமையாகிவிட்டது. ஏழ்மையும் கடனும் கைகோர்த்துவிட்டன. அனேகமாக எல்லாரிடமும் வீட்டு வசதிப் பொருட்கள், வாகனங்கள் இருக்கின்றன, அனேகமாக எல்லாரும் வீடு வாங்கவோ வாங்க முயலவோ செய்கிறார்கள், எல்லாரிடமும் ஏதோ ஒரு கடன் இருக்கிறது, எல்லாருமே ஒன்றுமே இல்லாததாக உணர்கிறோம், நிம்மதியற்று இருக்கிறோம். நிறைய பணமும் செல்வாக்கும் கொண்டவர்கள் இன்னொரு பக்கம் நிம்மதியற்றிருப்பதாகப் புலம்புகிறார்கள். கூடவே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என தம் செல்வத்தை ஊருக்கெல்லாம் காட்டி வெறுப்பேற்றவும் செய்கிறார்கள். இவ்வளவு குழப்பமான உலகை நாம் இதற்கு முன் பார்த்ததில்லை.

நிறைய பணமிருந்தால் பிடிக்காத வேலையைச் செய்ய வேண்டாம், பிடிக்காதவர்களுடன் பழக வேண்டாம் எனும் தர்க்கத்தை ஏற்க முடிகிறது. பணம் = நேரம் என்பதும் நேரத்தை சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்குப் பொருந்தும் உண்மை. கார் என்பது பயணிப்பதற்கான வாகனம் என்பதைத் தாண்டி அசையாமல் செல்கிற கார், அதிர்வில்லாமல் ஓசையின்றி போகிற கார், பெரிய வீட்டைப் போன்ற கார் எனும் ஏற்பாடுகளின் தேவையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அசையாமல், சத்தமின்றி பெரிய இடத்தில் இருக்க வேண்டுமெனில் ஒரே இடத்தில் இருந்தால்போதுமே! அடுத்து எதற்கு மக்கள் இவ்வளவு அதிகமாகப் பயணிக்கிறார்கள் என்பதும் புரியவில்லை. இருக்க நல்ல இடம், நல்ல உணவு, இலக்கியம் வாசிக்க, படைக்க நேரம், கற்பனை, விளையாட்டு, அவ்வப்போது கலவி (கவிஞர்களுக்கு கொஞ்சம் காதல்) ஆகியவற்றைத் தாண்டி எதுவும் பிரதானமாக மனிதனுக்குத் தேவையில்லை எனும் கட்சி நான். ஆனால் அதெல்லாம் ரொம்ப செலவு பிடித்ததாகிவிட்டது என்பதே நம் காலத்தின் துயரம்.
நிம்மதியான தொந்தரவில்லாத இடம் பெரும்பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. மற்றவர்கள் பயணிப்பதன் வழியாக இதை ஈடு கட்டத் தவிக்கிறோம். நல்ல உணவு கிடைக்காததால், தவறான உணவுத் தேர்வால் உடல் பாதிக்கப்பட்டு அதை ஈடுகட்ட பல்வேறு கேளிக்கைகள் நமக்குத் தேவையாகின்றன - உணவே மனிதனின் ஒரே மகிழ்ச்சி என பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆரோக்கியமான உணவு இல்லாதபோது அதற்கு ஈடு அதிகப்படியான காமம்தான். காமமும் கிடைக்காதபோது அதைக் குறித்த கற்பனை, வேடிக்கை பார்க்கும் இன்பம், போர்ன் போதை, மேம்போக்கான பொழுதுபோக்கைக் கொண்டு மனத்தை திருப்புகிறோம். வாசிப்பு, கற்பனை, படைப்பாக்கம் ஆகியவற்றுக்கு நிறைய நேரமும் ஓய்வும் அவசியம் - அது இன்று மத்திய வர்க்கத்துக்கு அருகி வருகிறது. வேலை நெருக்கடி, கடன், பாதுகாப்பின்மை, மிக நீண்ட வேலை நேரம், தூக்கமின்மை. அவர்களுக்கு கீழே உள்ளவர்களுக்கு கவலைப்படக் கூட நேரமில்லை. அந்த கால ஆப்பிரிக்க அடிமைகளைப் போல நாட்டில் 90% வாழ்ந்து வருகிறார்கள். கை, கால்களில் சங்கிலி இல்லை என்பதே வித்தியாசம். விளையாட்டை நீங்கள் அந்த கால அடிமையிடம் இருந்தும் பிரிக்க முடியாது. அப்படியே அவர்கள் தம் முகமையை மீட்டெடுப்பார்கள். ஆனால் இன்று நவீன சமூகம் விளையாடும் உரிமையை எடுத்துவிட்டு நமக்கு விளையாட்டை நிகழ்த்து கலையாக, கேளிக்கையாக மாற்றி அதன் முழுநேர நுகர்வோராக நம்மை மாற்றிவிட்டது. தொழில்ரீதியாக விளையாடுவோரைப் பார்த்துத் திகைத்து ரசித்துக் கிடக்கிறோம். நம்மிடம் துளி கூட விளையாட்டில்லை என்பதை யோசிக்கவே நேரமல்லை. ஏனென்றால் விளையாட இடமும் நேரமும் தேவை. நகரங்களில் இரண்டும் இல்லை.
இச்சூழலில் நமக்கு ஒரு கறுப்புக் கண்ணாடியை யாராவது ஒரு லட்சம் என்று சொன்னால், கைக்கடிகாரத்தை ஒரு கோடி என்றால் சந்தோஷமாக இருக்கிறது. இன்று நமக்கு கிடைக்கும் கண்ணாடியும் கடிகாரமும் மலிவானது எனும் எண்ணம் நம் வாழ்க்கையே மலிவானது எனும் எண்ணத்தைத் தள்ளிப் போட உதவுகிறது. அடையச் சாத்தியமே இல்லாத பொருட்களைப் பற்றி சிலாகிப்பது நிகழ சாத்தியமில்லாத நம் அன்றாட எளிய ஆசைகளைப் பற்றிப் பேசாமல் இருக்க உதவுகிறது. "எனக்கு அப்பெண்ணை முத்தமிட வேண்டும், எனக்கு எனக்கேயான ஒரு தனித்த இடத்தில் நிம்மதியாக வாழ வேண்டும், என்னை வலுவாக, முழுமையாக உணர வைக்கும் உணவைச் சாப்பிட வேண்டும்" எனும் அசாத்தியமே ஒரு கோடி மதிப்பிலான காரில், பிரைவெட் ஜெட்டில் செல்ல வேண்டும் எனப் பேச வைக்கிறது என நினைக்கிறேன். ஏனென்றால் மிகச்சாதாரணமான அனுபவங்களை விட விலைமதிப்பான வசதிகளைக் கருதுகையிலே அவை நமக்கு சாத்தியமாக, மிக அருகில் இருப்பதாகத் தோன்றுகின்றது. கொஞ்சம் பணமிருந்தால்போது, கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால்போது 'இதையெல்லாம்' அடைந்துவிடுவேன் என நினைக்கிறோம். இதற்கு நேர்மாறானதே உண்மையென நமக்கு ஏனோ தோன்றுவதில்லை.
நான் ஒரு ஆவணப்படம் பார்த்தேன் - அதில் ஜப்பானில் வாடகை செலுத்த வசதியின்றி கணினி மையத்தின் இரண்டு, மூன்று அடிகள் மட்டுமே இடமுள்ள சதுரத் தடுப்புக்குள் வாழும் மக்களைக் காட்டினார்கள். கருவறைக்குள் தூங்கும் கருவைப் போலத்தான் இரவில் படுக்க வேண்டும். அந்த நபர்களே பகலில் கேளிக்கை, கொண்டாட்டம் என ஈடுபட்டு தம் போதாமையை மறக்க முயல்கிறார்கள். எதிர்காலத்தில் பெரும்பாலான நகரங்களில் வீடுகள் இப்படித்தான் மாறும் என நினைக்கிறேன். அதில் வாழும் மக்கள் ஒரு கோடி, பத்து கோடி மதிப்பிலான வீடுகளைப் பற்றி கனவு காண்பார்கள், தாம் ஏன் இப்படி இருக்கிறோம் என யோசிக்க, கேள்வி கேட்க மாட்டார்கள்.
யார் இந்த வாழ்க்கையை இப்படி மாற்றியது? இதை ஏன் சொர்க்க உலகம் என்று சொல்கிறார்கள்? சமத்துவம், சமவாய்ப்புகள் உள்ளதாக ஏன் சொல்கிறார்கள்?
மிக நீண்ட சூப்பர் மார்க்கெட்டாக வாழ்க்கை மாறும்போது நம் டிராலி நிரம்பி வழிகிறது, நாம் அடுத்தவர்களின் டிராலியைப் பார்த்து மனம் வெதும்புகிறோம், நம் வாழ்க்கை காலியாக இருப்பதை நாமே பார்க்காமல் இருப்பது குறித்து நாம் நிம்மதியடைகிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...