முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் TEFL வகுப்பு அனுபவம்



கடந்த ஆண்டு இறுதியில் ஏஷியன் காலேஜ் ஆப் டீச்சர்ஸ் நிறுவனத்தில் 120 Hour InternationalTESOL/TEFL In-Class Certification Programஇல் சேர்ந்து அயல் மொழியாளர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் முறைகளைக் கற்றேன். இது ஒரு பட்டயப் படிப்பு. வகுப்பிலேயே நிறைய இடுபணிகள், நேரடி வகுப்பெடுக்கும் சவால்களை முடித்துவிட்டு கடைசியில் கனடிய நிறுவனமான TCBE நடத்தும் டெஸோல் கேனெடா போர்ட் தேர்வையும் எழுதினேன். என் வாழ்வின் சிறந்த அனுபவங்களில் ஒன்றாக இந்த வகுப்பும் அதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகளும் அமைந்தன.
நான் பள்ளிக்கல்வி அளவில் பயிற்றுவித்ததில்லை என்றாலும் முன்பு ஒரு நண்பரின் தூண்டுதலால் இளங்கலை கல்வியல் பயின்று பட்டம் பெற்றேன். பயிற்றுவித்தல் குறித்த கோட்பாடுகள், மாணவர்களின் உளவியல், பயிற்சி என அமைக்கப்பட்ட அந்த வகுப்பில் "இதெல்லாம் தெரிஞ்சதுதானே" எனும் அனுபவம் பெற்ற ஆசிரியரின் அலட்சியம் எனக்கு இருந்தது. ஏனென்றால் என்னுடன் இருந்த மாணவர்கள் இளங்கலை முடித்துவிட்டோ பள்ளிக்கல்வி முடித்தோ நேரடியாகப் பயில வந்தவர்கள். அவர்களைப் பயிற்சி வகுப்பெடுக்கச் சொன்னால் ஐஸ்வர்யா ரஜினிகாந்தைப் போல ததிங்கிணத்தோம் பண்ணுவார்கள். நான் பெரிய சவால்கள் இன்றி ஒருமாதிரி ஜாலியாக அப்பட்டத்தை முடித்தேன். ஆனால் கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்துக்குப் பிறகு நான் அதே போன்ற வகுப்பில் அமர்ந்தபோது பயிற்றுவித்தல் குறித்த கோட்பாடு, நம்பிக்கைகள் மட்டுமல்ல வகுப்பின் அமைப்பு, வசதிகள், மாணவர்களின் எதிர்பார்ப்பு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டிருந்தது. அதாவது நான் கற்றதும், கற்றுவித்ததும் சம்பிரதாயமான வகுப்புகளில். அங்கு 70-100 மாணவர்கள் இருப்பார்கள். "சொல்லிக் கொடுப்போம்", "அறிவுறுத்துவோம்", கரும்பலகையை, நுண்பலகையை பயன்படுத்துவோம், குறிப்புகள் அளித்து தேர்வெழுத வைப்போம். ஆசிரியரின் போதனைதான் முக்கியமாக இருக்கும். இன்று மாணவர்களை மையமிட்ட பயிற்றுவித்தல் முறை வந்துவிட்டது. பள்ளி வகுப்புகளில் உள்ள வசதிகளோ ஏராளம். மாணவர்கள் கலைந்து அமரும் வகுப்பு, பயிலரங்கு பாணி வகுப்பு, 20க்கும் உட்பட்ட மாணவர்கள் அமரும்வகுப்புகள் அதிகமாகிவிட்டன (வசதியான நகரங்களில்). இவ்வகுப்புகளில் மாணவர்கள் ஆசிரியர் தம்மை ஆர்வமூட்டி கற்றலுக்குள் கொண்டுவர வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். தாமே கற்றுக்கொள்ளும் அறிவு படைத்தவர் என்பதால் ஆசிரியர் தனக்கு கற்றலுக்கான வசதிகளை ஏற்படுத்தினால், அவர் வகுப்பை ஒருங்கிணைத்தால் போதும் என நினைக்கிறார்கள். ஆசிரியர் எனும் இடத்தில் இன்று செயலாக்குநர் எனும் பெயரையே பரிந்துரைக்கிறார்கள். 360 பாகை மாற்றம் இது. உதாரணமாக, 40 நிமிட / 120 நிமிட வகுப்பை நீங்கள் 6-8 பகுதிகளாகப் பிரித்தால் எப்படி ஒரு பாடத்தை அறிமுகப்படுத்தி அதன் முடிவில் முழுமையாக கற்றுக்கொள்ள வைப்பது என்பதற்கு உத்திகளை வகுத்திருக்கிறார்கள். விளையாட்டுகள், ரசனையான இடுபணிகள், இணைநிலையினர் பயிற்றுவித்தல், செயலிகளின் பயன்பாடு, மீளச் சொல்லுதல், மீளச் செய்தல் என வழிமுறைகள் வகுப்பை வெகுசுவாரஸ்யமாக்குகின்றன.
எங்கள் TEFL வகுப்புகள் ரொம்ப ஜாலியான, களேபரமான அனுபவமாக அமைந்தன. ஆடுவது, பாடுவது, சவாலான பணிகளைச் செய்வது, புதிர்களை விடுவிப்பது, வரைவது என. அப்போதுதான் எனக்கு நான் ஏதோ விட்டராச்சார்யா காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் எனப் புரிந்தது. நான் எந்த கல்லூரியிலும் இத்தகைய வண்ணமயமான வகுப்புகளைக் கண்டதில்லை.
உயர்நிலை கல்வி நிறுவனங்களில் இன்று மிக அதிகமான பாடங்களை, சிரமமான பாடங்களைப் பயிற்றுவிக்க வேண்டியிருப்பதால், காலக்கெடுவைத் துரத்திக்கொண்டே இருப்பதால், 400-500 மாணவர்களை சமாளித்து தேர்வுத்தாள்களைத் திருத்தி பல நிர்வாகப் பணிகளைச் செய்ய வேண்டியிருப்பதால் இவ்வளவு ரசித்து, கற்றலின் சுவாரஸ்யத்தை, ஒவ்வொரு மாணவரும் பயன்படும்படி வகுப்பை நடத்த முடிவதில்லை. 100-200 மாடுகளை ஒற்றை ஆள் ஓட்டிக்கொண்டு போவதைப் போலத்தான். ஆனால் இந்த TEFL வகுப்புகள் குறைவான பங்கேற்பாளர்களுக்கு நெருக்கமாக அமர்ந்து பயிலரங்கு நடத்துவதைப் போல உள்ளன. அதனால்தான் இன்றைய சில தனியார் பள்ளிகள் கல்லூரிகளைவிட நான்கு மடங்கு அதிகக் கட்டணம் வசூலிக்கின்றன. உயர்நிலைக் கல்வியை விட பள்ளிக்கல்வியில் அதிகமாக நவீனமும் பரிசோதனை முயற்சிகளும் நிகழ்கின்றன. உயர்கல்வி வகுப்புகள் இன்றும் ராஜ்கிரண் தலையில் அடித்து பாடையை நோக்கி அழுவதைப் போலத்தான் உள்ளன.
நான் இந்த வகுப்பில் கலந்துகொண்டபோதுதான் என் பயிற்றுவித்தலை முழுக்க மாற்ற முடியும், மாற்றவும் வேண்டும் எனப்புரிந்து கொண்டேன். ஆனால் சிக்கலான கோட்பாடுகளை நாம் ஆங்கில உரையாடலை சொல்லித் தருவதைப் போல விளையாட்டு, புதிர், இடுபணி எனச் சொல்லித் தரவும் முடியாது. 300-400 பக்க கட்டுரைகளை நம் கல்லூரி மாணவர்கள் வகுப்புக்கு முன் படித்துக்கொண்டு வருவதில்லை. ஆசிரியர்தான் கரண்டியில் எடுத்து ஊட்ட வேண்டும். ஆனாலும் warmer, context setting, இடுபணிகளை ஒவ்வொரு வகுப்பிலும் விதவிதமாக முயன்று பார்த்தேன். அதில் வரும் பிரச்சினைகளை TEFL வகுப்பில் என் ஆசிரியரிடம் குறிப்பிட்டு தீர்வு கேட்பேன். கடந்த செமஸ்டரில் என் வகுப்புகள் மேம்பட்டதை உணர்ந்தேன். போனதும் இலக்கிய கூட்டத்தில் பேசுவதைப் போல ஆரம்பிக்காமல் முடிந்தளவுக்கு சுயகற்றலுக்கான வெளியாக வகுப்பை மாற்றினேன். ஆங்கிலப் பாடத்தைப் பொறுத்தவரையில் நான் இலக்கணம், சொல்வளம், எழுதும் முறை போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்தினேன் (ஏனென்றால் பாடத்திட்டமும் அதையே அனுமதிக்கும்). ஆனால் அவற்றைத் தாண்டி மிக எளிமையாக வாசிப்பு, கவனித்தல், பேச்சு, எழுத்து ஆகிய திறன்களை நேரடியாகச் 'சொல்லித் தராமலே செய்ய வைத்து' பயிற்றுவிக்க முடியும் என அறிந்த்கொண்டேன். இந்தப் பயிற்சியை உயர்கல்வியில் எப்படிச் செயல்படுத்துவது என்பதே சவால் என்று தோன்றுகிறது. அங்குதான் ஆசிரியரின் திறன், கற்பனை முக்கியமகிறது.
நான் விசாரித்தவரையில் இந்தியாவில் இளங்கலை கல்வியியல் வகுப்புகள் கூட இந்தளவுக்கு நவீனமாக, புத்துணர்ச்சியாக நடப்பதில்லை. அதனாலே இப்போது கல்வி நிறுவனங்களே தமது முதுகலைப் படிப்பில் TEFT சான்றிதழ்ப் படிப்பையும் இணைத்து விடுகிறார்கள்.
எங்கள் ஆசிரியர் ஷாலினி ஜோன்ஸ் நான் பார்த்ததில் மிகச்சிறந்த ஆசிரியர்களில் ஒருவர் -அவர் ஒரு அறிஞரோ சிந்தனையாளரோ அல்லர். நான் அத்தகையோரையே கல்லூரியில் கண்டிருக்கிறேன். இவர் செயல்பாட்டுநர் - முழுக்க வேறுவிதமான கல்வியியல் ஆசிரியர். என்னைவிட வயதில் குறைவானவர். ஈகோவை விடுத்து அங்கு அவர் முன் வெறும் மாணவராக அமர்ந்தது, திட்டு வாங்கியது, திருத்தங்களைப் பெற்றது, இடுபணிகளைச் செய்தது நல்லனுபவம். என்னை வெகுவாக புத்துணர்ச்சியூட்டிய அனுபவம் அது. இன்னொன்று மாணவராக இருக்கையில் நமது மனநிலை எப்படி இருக்கும் எனப் புரிந்தும் கொண்டேன் - மாணவர்களுக்கு சுதந்திரம் உள்ளதைப் போன்றே கடுமையான நெருக்கடியும் உள்ளது. மாணவர்களின் அடிப்படையான தேவையே தாம் தமது நடத்தை காரணாமாக ஆசிரியரால் எதிர்மறையாக மதிப்பிடப்படக் கூடாது, ஆசிரியர் தம்மைப் பொருட்படுத்த வேண்டும், சமமாக நடத்த வேண்டும் என்பதே. ஒரு வகுப்பில் தற்செயலாக சில மாணவர்களை அதிகமாகக் குறிப்பிட்டா கூட அது மற்றவர்களை பாதிக்கும். மாணவர்கள் அடிப்படையில் குழந்தைகளைப் போன்றவர்களே. வயதெல்லாம் பொருட்டில்லை - தன் பலவீனத்தை ஒப்புக்கொண்டு அமையாமல் ஒருவரால் படிக்க முடியாது. ஆசிரியரின் அறம் என்பது தொடர்ந்து தன் சமத்துவப் பண்பை பேணுவதுதான். என் மனநிலையை ஒரு மாணவராக உற்று கவனித்தபின்னர் என் மாணவர்கள் என் வகுப்பில் எப்படி உணர்கிறார்கள் என ஊகிக்க முடிந்தது. ஒரு கனெடிய ஆசிரியர் எங்கள் வகுப்புக்கு வந்து உரையாடியபோது மாணவர்களை நண்பர்களாக நடத்தலாமா, கூடாதா, வரம்பு என்ன ஆகிய விசயங்களை விவாதித்தார். நான் நிறைய யோசிக்கவும் கற்றுக்கொள்ளவும் உதவிய வகுப்பு அது.
என் சக ஆசிரியர்களுக்கு இந்த வகுப்பை பரிந்துரைக்கிறேன். இணையத்தில் Asian College of Teachers எனத் தேடிப் பாருங்கள். இணையவழியிலும் நேரடி வகுப்பிலும் படிக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...