எனக்குத் தெரிந்த ஒருவர், இளைஞர், பொறுப்பானவர், பார்க்க ஆரோக்கியமாகத் தெரிபவர். அவருக்குத் திடீரென மூளைக்குச் செல்லும் தமனியில் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதம் வரும் நிலை ஏற்பட்டது. அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அடுத்து ஓராண்டில் அவருக்கு மூளைக்கும் முதுகெலும்புக்கும் இடைப்பட்ட பகுதியில் கட்டி வந்தது. அதையும் அறுவை சிகிச்சையால் சரி பண்ணினார்கள். அவருக்கு அதன் விளைவாக பக்கவாதம் வந்தது. அதிலிருந்து மீண்டு வந்ததும் மீண்டும் கட்டி ஏற்பட்டு அது புற்றுநோய் என உறுதிப்படுத்தினார்கள். ஊடுகதிர் சிகிச்சை, வேதிச்சிகிச்சை ஆகியவனவற்றை எடுத்துக் கொண்டு வருகிறார். அவர் மிகவும் மனம் நொந்து போயிருக்கிறார். நானும் செய்தியறிந்து மனம் வருந்தினேன். ஆனாலும் என்னிடம் அவர் சொன்ன ஒரு செய்தி என்னை ஆச்சரியப்படுத்தியது - மருத்துவர்கள் தன்னை டய்ட் உணவு மேற்கொள்ளச் சொல்லியிருப்பதாகவும், குறிப்பாக மாவுச்சத்தை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியிறுத்தியிருப்பதாகவும் சொன்னார். இது ஒரு முக்கியமான நகர்வு - ரொம்ப காலமாக மருத்துவர்கள் இதை ஏற்கத் தயங்கினார்கள். இருபதாண்டுகளுக்கு முன் என் அப்பா புற்றுநோயால் அவதிப்பட்டு இச்சிகிச்சைகளை எடுத்துக்கொண்ட போது மருத்துவர்கள் கொழுச்சத்து அதிகமான மாமிசம், குறிப்பாக மாட்டுக்கறி, காரம், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் ஆகியவற்றைத் தவிர்க்கவும் குறைக்கவும் சொன்னார்களே தவிர மாவுச்சத்துதான் புற்றுநோய் அணுக்களுக்கு தூண்டுதல் அளிப்பது எனும் புரிதல் அவர்களுக்கு இருக்கவில்லை. இன்று மெல்லமெல்ல அந்த இடத்துக்கு மருத்துவர்கள் வந்திருப்பது பாராட்டத்தக்கது. ஆனால் இதை அவர்கள் பொதுவெளியில் முன்வைத்து மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும். ஏனென்றால் என் நண்பருக்கு முதலில் மூளையில் பாதிப்பு ஏற்பட்டபோதே அவரிடம் டயட் விசயத்தை அறிவுறுத்தியிருந்தால் புற்றுநோயால் முழுக்க பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்.
புற்றுநோய் குறித்து atavistic கோட்பாடு ஒன்றுள்ளது - அதாவது இந்த புற்று அணுக்கள் நம் உடலில் ஏற்படும் கடும் அழுத்தத்தால் அணுக்களின் ஆதி நினைவைத் தூண்டப்படுவதால் தோன்றுபவை என்று. ரெண்டரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு புவியில் உயிர்வளி குறைவாக இருந்த காலத்தில் பெருகியிருந்த ஒற்றை அணு உயிரிகள் காற்றிலி (aneorobic) உயிரிகள் என அழைக்கப்பட்டன. இவை மாச்சர்க்கரையை (குளூகோஸை) உயிர்வளி இன்றி உடைத்து ஆற்றலை உருவாக்கின. ஆனால் உயிர்வளியைக் காற்றில் பெருக்குகிற கிருமிகள் தோன்றி அவை புதுவகையாக (உயிர்வளியைப் பயன்படுத்தி) ஆற்றலை உற்பத்தி பண்ண ஆரம்பித்தன. பழைய ஓரணு உயிரிகள் (உயிர்வளி தேவையற்றவை) அருகிட, அல்லது புதிய வகை கிருமிகளுடன் கலந்து புதுவகையான கிருமிகள் தோன்றிட நம் பிரபஞ்சமே மாறியது. பல்லணு உயிரிகள் தோன்றிப் பெருகி, மனித இனமும் தோன்றிட நமது அணுக்களுக்குள் கிருமிகளின் மரபணுக்கள் உறைந்திருந்தன. இந்த மரபணுவுக்குள் ரெண்டரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான காற்றிலி உயிரிகளின் நினைவுகளும் இருக்கின்றன. எப்போதெல்லாம் நாம் தொடர்ச்சியாக மாவுச்சத்து மிகுந்த துரித உணவுகளை உட்கொண்டும், வேதியல் நச்சுக்களால், மாசுக்களால் பாதிக்கப்பட்டும் உடலைப் படுத்தி எடுக்கும்போது இந்த உடலால் இனிப் பயனில்லை என அணுக்கள் முடிவெடுக்கின்றன. அவை உடனே ஒரு பக்கம் தற்கொலை செய்கின்றன, இன்னொரு பக்கம் அவை வேகமாகத் தமக்குள் பிரிந்து இந்த உடலுக்குத் தேவையில்லாத சுயாதீனக் குழுமங்களாகின்றன. அவையே புற்று அணுக்கள். உடல் அழியுமுன் வேகமாகத் தோன்றி வளர்ந்து அழிவதே அவற்றின் நோக்கம். உதாரணமாக, இந்த புற்று அணுக்கள் மூளையில் தோன்றினால் அவை மூளையின் பணியைச் செய்து உடலுக்கு உதவாது. மூழ்கும் கப்பலில் உள்ள எலிகளைப் போல அவை நடந்துகொள்ளும். சீக்கிரமாகத் தின்று பெருகிவிட்டு தப்பித்து ஓடப் பார்க்கும்.
ஆனால் உயிர்வளியைப் பயன்படுத்தி ஆற்றலை உற்பத்தி பண்ணும்போது வேகமாக இந்த அணுக்களால் தோன்றவோ வளரவோ முடியாது. அதற்காக இவை காற்றிலி உயிரிகளின் மரபணு நினைவை மீட்டெடுக்கின்றன. அவை பல்லணு உயிரிகளாக அல்லாமல் ஒற்றை அணு உயிரிகளாகத் தம்மைக் கருதிச் செயல்படுகின்றன. உயிர்வளி இன்றியே குளூகோஸைக் கொண்டு ஆற்றலை உற்பத்தி பண்ணுகின்றன. ஆற்றலைக் குறைவாகவே அவ்வாறு பெருக்க முடியும் என்பதால் அவற்றுக்கு மிக அதிகமாக குளோகோஸ் தேவைப்படுகிறது. புற்று அணுக்களில் நாம் காணும் முக்கியமான பண்பு அவற்றில் உயிர்வளி மிகக்குறைவாகவும் குளோகோஸ் அதிகமாகவும் உள்ளன என்பது. இதை 1920களில் ஓட்டோ வார்பெர்க் என்பவர் கண்டறிந்ததால் இது வார்பெர்க் விளைவு என்று அழைக்கப்படுகிறது. முதுமரபை நோக்கிப் பின்னோக்கிச் செல்லும் இந்தப் போக்குக்கும் புற்றுநோயின் வளர்ச்சிக்குமான தொடர்பைப் பற்றி இந்த ஆகையால்தான் இப்போது மருத்துவர்கள் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மருத்துவ சமூகம் ஒட்டுமொத்தமாக வளர்ச்சிதை மாற்றம் சார்ந்த புற்றுநோய் சிகிச்சையை இன்னும் முழுக்க ஏற்கவில்லை என்றாலும் இது கூட ஒரு கவனிக்கத்தக்க மாற்றம்தான்.
இந்தப் புதிய அணுகுமுறையைக் குறித்து Travis Christofferson எழுதியுள்ள நூலும் (Tripping Over the Truth: The Return of the Metabolic Theory of Cancer) பால் டேவிஸ் பேசியுள்ள கருத்துக்களும் முக்கியமானவை.
வாயைக் கட்டுப்படுத்தி, குடலில் நல்ல நுண்ணுயிர்களை வளர்த்து, சரியாக ஓய்வெடுத்து மனத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டாலே புற்றுநோய் அருகிவிடும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளும் காலம் ஒன்று விரைவில் வரும்.
கருத்துகள்