'நாவலை எழுதும்போது அதைப் பின்னுக்குச் சென்று திருத்தக்கூடாது. முதல் வரைவை வருகிறபடி எழுதிவிட வேண்டும்' என்பார்கள். இது உண்மையே. ஆனாலும் விதிவிலக்குண்டு. சிலநேரங்களில் நாம் எழுதி வரும் ஒரு நாவலில் இருந்து ஒரு சிறிய இடைவேளை எடுத்து திரும்ப வரும்போது சின்னச்சின்ன குறைகள் தென்படும். அப்போது ஆரம்பத்தில் இருந்து சில திருத்தங்களைச் செய்வதே நல்லது. உ.தா., ஒரு கதாபாத்திரம் 200வது பக்கத்தில் திடீரென வந்தால்? அவருக்கான முன்கூறான விபரங்களை முதல் 50 பக்கங்களுக்குள் அங்கங்கே தூவ வேண்டும். காரண காரிய சரடு சரியாக காட்சிகளுக்குள் அமைக்கப்படவில்லை என்று தோன்றினாலும் அதையும் ஆரம்பம் முதலே அங்கங்கே செய்துவிட்டே மிச்ச கதையை எழுத முடியும். எனில் நாவலைத் திருத்தி அதன் இரண்டாவது வரைவை எழுதும்போது குழப்பங்கள் வராது. அப்போது பின்னுக்குப் போய் மீளெழுதுவதைவிட ஆரம்பத்திலே செய்வது நல்லது என்பது என் எண்ணம்.
ஒரு நாவலின் சரியான நடை, கதைசொல்ல வேண்டிய பாணி, மொழி என்ன என்பதும் முக்கியமான கண்டுபிடிப்பே. அதையும் சரியாக எப்போதும் நாம் துவக்கத்திலே கண்டறிவதில்லை. அதைச் சரியாகப் பிடிப்பதே சிலருக்கு பெரும் திகைப்பூட்டும் பணியாக இருக்கும். அங்கதமா, உருவக மொழியா, அடர்த்தியான குறியீட்டு மொழியா, இயல்புவாத மொழியா, மாந்திர்க எதார்த்தமா, உடைந்த மொழியா, முன்னுக்குப் பின் முரணான மொழியா? சொல்லப்போனால் இதைச் சரியாகப் பிடித்துவிட்டால் நாவலுக்கான பாதையும் திறந்துவிடும். ஏனென்றால் மொழிதான் நாவலைக் குறித்த நம் அகப்பார்வை.
அரிதாகத்தான் நாவல் நமக்கு வெட்டவெளிச்சமாக இருக்கும். பெரும்பாலும் எழுத எழுதத்தான் அதில் ஒளி தோன்றி பாதை தெரியும். அடுத்து என்ன வரப்போகிறது என்பது தெரியாது, ஏற்கனவே எழுத உத்தேசித்ததன் காரண காரிய உறவு புரியவில்லை என்பதே ஒரு நாவலை எழுதும்போது வரும் பெரிய நெருக்கடி. அதை எதிர்கொண்டு ஒவ்வொரு காரணமாகக் கண்டுபிடித்து கதையைத் தொகுக்கும்போதே மிகப்பெரிய உவகை கிடைக்கிறது.
நாவல் என்பது கதை அல்ல, அது அர்த்தங்களின் காரண காரியச் சரடு. வாழ்க்கை அனர்த்தமாக இருக்கையில் நாம் நாவல் எழுதுகிறோம். வாழ்க்கையின் பொருளின்மையால் துன்புறுவோருக்கு அதைப் பகிர்கிறோம்.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share