முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாவலெழுதுவது பற்றின குறிப்புகள் 1


 

'நாவலை எழுதும்போது அதைப் பின்னுக்குச் சென்று திருத்தக்கூடாது. முதல் வரைவை வருகிறபடி எழுதிவிட வேண்டும்' என்பார்கள். இது உண்மையே. ஆனாலும் விதிவிலக்குண்டு. சிலநேரங்களில் நாம் எழுதி வரும் ஒரு நாவலில் இருந்து ஒரு சிறிய இடைவேளை எடுத்து திரும்ப வரும்போது சின்னச்சின்ன குறைகள் தென்படும். அப்போது ஆரம்பத்தில் இருந்து சில திருத்தங்களைச் செய்வதே நல்லது. உ.தா., ஒரு கதாபாத்திரம் 200வது பக்கத்தில் திடீரென வந்தால்? அவருக்கான முன்கூறான விபரங்களை முதல் 50 பக்கங்களுக்குள் அங்கங்கே தூவ வேண்டும். காரண காரிய சரடு சரியாக காட்சிகளுக்குள் அமைக்கப்படவில்லை என்று தோன்றினாலும் அதையும் ஆரம்பம் முதலே அங்கங்கே செய்துவிட்டே மிச்ச கதையை எழுத முடியும். எனில் நாவலைத் திருத்தி அதன் இரண்டாவது வரைவை எழுதும்போது குழப்பங்கள் வராது. அப்போது பின்னுக்குப் போய் மீளெழுதுவதைவிட ஆரம்பத்திலே செய்வது நல்லது என்பது என் எண்ணம்.

ஒரு நாவலின் சரியான நடை, கதைசொல்ல வேண்டிய பாணி, மொழி என்ன என்பதும் முக்கியமான கண்டுபிடிப்பே. அதையும் சரியாக எப்போதும் நாம் துவக்கத்திலே கண்டறிவதில்லை. அதைச் சரியாகப் பிடிப்பதே சிலருக்கு பெரும் திகைப்பூட்டும் பணியாக இருக்கும். அங்கதமா, உருவக மொழியா, அடர்த்தியான குறியீட்டு மொழியா, இயல்புவாத மொழியா, மாந்திர்க எதார்த்தமா, உடைந்த மொழியா, முன்னுக்குப் பின் முரணான மொழியா? சொல்லப்போனால் இதைச் சரியாகப் பிடித்துவிட்டால் நாவலுக்கான பாதையும் திறந்துவிடும். ஏனென்றால் மொழிதான் நாவலைக் குறித்த நம் அகப்பார்வை.

அரிதாகத்தான் நாவல் நமக்கு வெட்டவெளிச்சமாக இருக்கும். பெரும்பாலும் எழுத எழுதத்தான் அதில் ஒளி தோன்றி பாதை தெரியும். அடுத்து என்ன வரப்போகிறது என்பது தெரியாது, ஏற்கனவே எழுத உத்தேசித்ததன் காரண காரிய உறவு புரியவில்லை என்பதே ஒரு நாவலை எழுதும்போது வரும் பெரிய நெருக்கடி. அதை எதிர்கொண்டு ஒவ்வொரு காரணமாகக் கண்டுபிடித்து கதையைத் தொகுக்கும்போதே மிகப்பெரிய உவகை கிடைக்கிறது.

நாவல் என்பது கதை அல்ல, அது அர்த்தங்களின் காரண காரியச் சரடு. வாழ்க்கை அனர்த்தமாக இருக்கையில் நாம் நாவல் எழுதுகிறோம். வாழ்க்கையின் பொருளின்மையால் துன்புறுவோருக்கு அதைப் பகிர்கிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...