'நாவலை எழுதும்போது அதைப் பின்னுக்குச் சென்று திருத்தக்கூடாது. முதல் வரைவை வருகிறபடி எழுதிவிட வேண்டும்' என்பார்கள். இது உண்மையே. ஆனாலும் விதிவிலக்குண்டு. சிலநேரங்களில் நாம் எழுதி வரும் ஒரு நாவலில் இருந்து ஒரு சிறிய இடைவேளை எடுத்து திரும்ப வரும்போது சின்னச்சின்ன குறைகள் தென்படும். அப்போது ஆரம்பத்தில் இருந்து சில திருத்தங்களைச் செய்வதே நல்லது. உ.தா., ஒரு கதாபாத்திரம் 200வது பக்கத்தில் திடீரென வந்தால்? அவருக்கான முன்கூறான விபரங்களை முதல் 50 பக்கங்களுக்குள் அங்கங்கே தூவ வேண்டும். காரண காரிய சரடு சரியாக காட்சிகளுக்குள் அமைக்கப்படவில்லை என்று தோன்றினாலும் அதையும் ஆரம்பம் முதலே அங்கங்கே செய்துவிட்டே மிச்ச கதையை எழுத முடியும். எனில் நாவலைத் திருத்தி அதன் இரண்டாவது வரைவை எழுதும்போது குழப்பங்கள் வராது. அப்போது பின்னுக்குப் போய் மீளெழுதுவதைவிட ஆரம்பத்திலே செய்வது நல்லது என்பது என் எண்ணம்.
ஒரு நாவலின் சரியான நடை, கதைசொல்ல வேண்டிய பாணி, மொழி என்ன என்பதும் முக்கியமான கண்டுபிடிப்பே. அதையும் சரியாக எப்போதும் நாம் துவக்கத்திலே கண்டறிவதில்லை. அதைச் சரியாகப் பிடிப்பதே சிலருக்கு பெரும் திகைப்பூட்டும் பணியாக இருக்கும். அங்கதமா, உருவக மொழியா, அடர்த்தியான குறியீட்டு மொழியா, இயல்புவாத மொழியா, மாந்திர்க எதார்த்தமா, உடைந்த மொழியா, முன்னுக்குப் பின் முரணான மொழியா? சொல்லப்போனால் இதைச் சரியாகப் பிடித்துவிட்டால் நாவலுக்கான பாதையும் திறந்துவிடும். ஏனென்றால் மொழிதான் நாவலைக் குறித்த நம் அகப்பார்வை.
அரிதாகத்தான் நாவல் நமக்கு வெட்டவெளிச்சமாக இருக்கும். பெரும்பாலும் எழுத எழுதத்தான் அதில் ஒளி தோன்றி பாதை தெரியும். அடுத்து என்ன வரப்போகிறது என்பது தெரியாது, ஏற்கனவே எழுத உத்தேசித்ததன் காரண காரிய உறவு புரியவில்லை என்பதே ஒரு நாவலை எழுதும்போது வரும் பெரிய நெருக்கடி. அதை எதிர்கொண்டு ஒவ்வொரு காரணமாகக் கண்டுபிடித்து கதையைத் தொகுக்கும்போதே மிகப்பெரிய உவகை கிடைக்கிறது.
நாவல் என்பது கதை அல்ல, அது அர்த்தங்களின் காரண காரியச் சரடு. வாழ்க்கை அனர்த்தமாக இருக்கையில் நாம் நாவல் எழுதுகிறோம். வாழ்க்கையின் பொருளின்மையால் துன்புறுவோருக்கு அதைப் பகிர்கிறோம்.
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....
Comments