Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

நாக்கைக் குறித்த ஒரு புனைகதை


 
நண்பர்: நீங்க என்னதான் சொல்லுங்க பாஸ் விஷ்ணுபுரம் கட்சியைப் போல வராது.

நான்: ஏன் பாஸ்?

நண்பர்: ஐந்து பேர் நாவல் எழுதுகிறார்கள் என்றால் சுலபத்தில் தலா நான்கு விமர்சனங்கள் உடனடியாக வந்துவிடும்.

நான்: அதான் எப்படி? ஒரு மதிப்புரை வாங்கவே நிறைய காத்திருக்க வேண்டியிருக்கே...

நண்பர்: அவங்களே மாறி மாறி எழுதிப்பாங்க. உலகத்தரம்னு சொல்லுவாங்க. நீங்க யாரைப் பத்தியாவது அப்படிச் சொல்லுவீங்களா? உங்களுக்கு பிரண்டா இருக்கிறது வேஸ்டு.

நான்: அதுக்காக ஆன்மாவைப் பணயம் வைக்க மாட்டேன் ...

நண்பர்: இருங்க இருங்க. இன்னும் முடியல. வெளிநாட்டுப் பயணம், விஷ்ணுபுரத்தின் துணைக் கட்சிகளின் விருதுகள் இப்படி ஏராளமான வாய்ப்புகள்.

நான்: அதுக்கும் எழுத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

நண்பர்: நீங்க ஒரு எழுத்தாளரா உருவாக பல வருடங்கள் எழுதணும். அப்பவும் கண்டுக்க மாட்டாங்க. ஆனால் ஜெயமோகனுக்கு கடிதம் மட்டும் எழுதிப் பாருங்க, தமிழ் விக்கியில் மாய்ந்து மாய்ந்து உங்களைப் பற்றி குறிப்பு வரும்.

நான்: தமிழ் விக்கிக்கு எந்த மரியாதையும் இல்ல. வாசக மனத்தில்தான் எழுத்தாளனுக்கு எப்போதுமான இடம். அதுக்காக கட்சியில் உறுப்பினர் ஆக முடியாதுங்க.

நண்பர்: ஜெயமோகன் பாராட்டி எழுதினா உங்க புக் நூற்றுக்கணக்கில் பிரதிகள் விற்கும்.

நான்: கமல் யாருக்கும் புரியாமல் பேசினாலும் விற்கும். இன்ஸ்டாவில் எவனாவது தறுதலை நம்மைப் புரமோட் பண்ணினாலும் விற்கும். புத்தகம் மட்டுமில்ல டூத் பேஸ்ட் கூடத்தான் புரொமோட் பண்ணினால் விற்கும். அது எழுத்தாளனின் பிரச்சினை இல்லை. வாசகர்கள் கவனித்து நம்மை உள்வாங்கணும், நாம் அவர்களின் ஆன்மாவைத் தொடணும். அதுதான் அசல் எழுத்தாளரின் இலக்கு.

நண்பர்: நீங்க விஷ்ணுபுரம் கட்சி மேடையில் புத்தகத்தோட வந்து நின்னா பரபரன்னு அங்க வரும் பங்கேற்பாளர்களே வாங்கிக் குவிப்பாங்கன்னு சொல்லலாமுன்னு நினைச்சேன். இல்ல வேணாம். ஒண்ணு சொல்றேன், நீங்க நாளைக்கு கைகால் வெளங்காம கஷ்டப்பட்டீங்கன்னு ஜெயமோகன் உங்களுக்குப் பணம் தந்து காப்பாற்றுவார். அதை வேறு யார் செய்வாங்க?

நான்: ஆமாம், அதோட 'என்னிடம் இரந்து பெற்றவன்' என்று நம்மைப் பற்றி பக்கம் பக்கமாக ஊர் ஊராக அசிங்கப்படுத்தி கேவலமாக உணர வைப்பார். சமத்துவம் இல்லாதபோது உதவி என்பது பிச்சை வாங்குவதற்குச் சமம். அதன்பிறகு அவர் அஞ்சலிக் கட்டுரை எழுதுவார், நம் பெயரில் விருதளிப்பார் எனும் பயத்திலேயே நம்மால் நிம்மதியாகச் சாகவும் முடியாது. வாழவும் முடியாது.

நண்பர்: சமூகமும் அரசும் கைவிட்ட படைப்பாளிகளுக்கு அவர் விருதளித்துக் கொண்டாடுவார். ஆவணப்படம், புத்தகம் ஆகியவை உங்களைக் குறித்து வெளியிடுவார். இதெல்லாம் வேறெங்க கிடைக்கும்?

நான்: ஆம், அதை ஏற்றால் நம்மைக் குறித்து அவர் வைக்கும் மனப்பதிவு சரியென்றாகும். அவரது மதிப்பீடுகளை சிலுவையாகச் சுமக்க வேண்டும். சாகித்ய அகாடெமி விருது வாங்கியவர்கள் அந்த அமைப்பை கன்னாபின்னாவென விமர்சித்திருக்கிறார்கள். அரசைக் கூட விமர்சிக்கிறோம். ஆனால் விஷ்ண்புரம் விருது பெற்றவர்கள் தம் நாக்கைப் பறிகொடுத்திருக்கிறார்கள். அவர்கள் நீண்ட மௌனத்திற்கு ஆட்படுகிறார்கள். அவர்கள் அதன்பின் பேசியதே இல்லை.

நண்பர்: எழுத்தாளர் ஏன் நினைத்ததை எல்லாம் சொல்லணும்? நாக்கை வச்சு என்ன பயன்? நாம வீட்டிலயும் வேலையிடத்திலயும் நினைச்சதை சொல்றோமோ?

நான்: எழுத்தாளராக இருப்பதே சுதந்திரம்தான். அதில்லாமல் எழுத்தில்லை. நினைத்ததை எழுதும் சொல்லும் சுதந்திரம். ஜெயமோகன் சொல்லும் பல அபத்தமான கருத்துக்களை மறுக்கும் சுதந்திரம். அவரது எழுத்து பாணியை, அழகியலை, கருத்தியலை மறுத்து புதிதாக எழுதும் சுதந்திரம். சுருக்கமா சொல்றதுன்னா நம் அரசியலமைப்பு நமக்கு அளிக்கும் உரிமை. அந்த நாக்கைத்தான் பிடுங்கி விடுகிறார்கள். விருது மேடைக்குத்தான் போக வேண்டுமென்றில்லை. அந்தக் கட்சியின் நிகழ்ச்சி நடக்கும் அரங்குக்குள் போகவே நாக்கை செருப்புடன் வெளியே கழற்றி வைத்துவிட வேண்டும்.

நண்பர்: அவர் மீதான மரியாதையால் அப்படி இருக்கிறார்கள்.

நான்: அதன் பெயர் மரியாதை இல்ல, பயம். இதைக் கட்சி ஒழுங்குன்னும் சொல்வாங்க. அவர்கள் தமக்குள் மட்டும் பேசிக் கொள்வார்கள். வெளியே சொல்ல பயம். யாராவது சொன்னால் கோபம்.

நண்பர்: அது அன்புங்க. தீவிரமான பற்று.

நான்: ஜெயமோகன் "சொல்லாமலே" கவுசல்யாவைப் போல. அவர் ஊமையை மட்டும்தான் காதலிப்பார். அவருக்குப் பிடிக்குமே என்று நாம ஊமையா நடிச்சா பிறகு அவருக்கு பயந்து ஒருநாள் நாக்கை வெட்டிக்கணும். ஆனால் அவருக்கு அது தெரிஞ்சா கண்ணீர் விட்டு அழுவார். அவருக்காக நாக்கை வெட்டிக்கொண்டு ஆயுள் பரியந்ததும் ஊமை பாஷையில் பேசிக்கொண்டு இருப்பதெல்லாம் ஒரு வாழ்க்கையா?
என்னைப் பாருங்கள். நான் என் நண்பர்களைக் குறித்து சுதந்திரமாக என் கருத்துக்களைச் சொல்கிறேன். அவர்கள் என்னை வெளியேற்றுவதில்லை. அவர்களும் என்னை விமர்சிக்கலாம். நான் பிளாக் செய்வதோ கட்சியில் இருந்து வெளியேற்றுவேன் என மிரட்டுவதோ இல்லை. அற்ப மனம் படைத்த பதர்கள் என்று ஏசுவதில்லை.

எனக்கு வெளிநாட்டுப் பயண வாய்ப்பு, மொழிபெயர்ப்பு வாய்ப்பு, மதிப்புரைகள், விற்பனை, விருது கிடைக்காமல் இருக்கும். ஆனால் ஒப்பற்ற ஒன்று என்னிடம் உள்ளது - என்னால் அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேச முடியும்.

கடைசியாக ஒன்றைச் சொல்கிறேன் - எழுத்தாளர்கள் தனியர்கள். அவர்கள் குழு விலங்குகள் அல்லர். அளிக்கப்பட்ட இலக்குகளை கூட்டாக நிறைவேற்றுவோர் தனிப்பட்ட கனவுகளும் சுதந்திரமும் இல்லாதவர்கள். எழுத்தாளர்கள் ஒருபோதும் குழு, அமைப்பு, கட்சியில் உறுப்பினர்களாக இருக்கலாகாது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...