உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் எதையும் கணிக்க முடியாது. ஆனாலும் இந்தியாவின் நிலைமை பால் என்று நினைத்து பால்டாயிலைக் குடித்த குடிகாரனின் நிலைதான். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகக் கிடைத்த மரண அடி அவர்களுடைய சராசரி ஓட்ட விகிதத்தை வெகுவாக இறக்கிவிட்டது. ஆகையால் அவர்கள் இனி அடுத்துள்ள இரு போட்டிகளில் வென்றால் மட்டும் போதாது. ஜிம்பாப்வேவும், மே.இ தீவுகள் அணி இரண்டுமே இந்தியாவைப் போன்றே மோசமான தோல்விகளைப் பெற்று சராசரி ஓட்ட விகிதத்தில் நமக்குப் பக்கத்தில் வரவேண்டும். மே.இ தீவுகள் ஜிம்பாப்வேவுக்கு எதிராக வென்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத் தோற்க வேண்டும், அல்லது தென்னாப்பிரிக்கா அடுத்து ஆடும் இரு போட்டிகளையும் வெல்ல வேண்டும் என்பதான சில அம்புலிமாமா கணக்குகளை ஊடகங்கள் சொல்கின்றன. அப்படியெல்லாம் நடக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவை அரை இறுதிக்குப் போக அனுமதிக்கக் கூடாது என்றே அவர்கள் ஒரு போட்டியை விட்டுக் கொடுத்தால் என்ன ஆகும்? தென்னாப்பிரிக்கப் பயிற்சியாளர் அப்படி யோசிக்கும் குசும்புக்காரர்தான். இன்னொரு சாத்தியம் இந்தியா ஜிம்பாப்வேயையும், மே.இ தீவுகளையும் பெரிய வித்தியாசத்தில் தோற்கடிப்பது. அது சுலபம் அல்ல. மே.இ தீவுகள் நல்ல ஆட்டநிலையில் உள்ளது. இந்த மெத்தனமான நின்றுவரும் ஆடுதளங்கள் அவர்களுடைய நாட்டிலுள்ள ஆடுதளங்களை ஒத்துள்ளன என்பதால் அதற்கான ஆட்டமும் பந்துவீச்சும் அவர்களிடம் உள்ளன. மட்டையாட்டத்தில் இந்தியாவைப் போன்றே அடித்துப் பிளக்கும் ஆற்றலும் உண்டு. ஜிம்பாப்வேயும் நன்றாக ஆடி வருகிறது. கடைசியாக பந்து வீச்சுக்குச் சாதகமான நம் ஆடுதளங்கள் பலவீனமான அணிகளையும் இந்தியாவையும் நெருக்கமாகக் கொண்டு வருகின்றன. ஆக, இந்த இரு அணிகளையும் (அவை குறிப்பிட்ட தினம் எதிர்பாராமல் மிக மட்டமாக ஆடினால் ஒழிய) இந்தியா கடுமையாகப் போராடியே வீழ்த்த முடியும்.
இந்தியா இப்போது வித்தியாசமாக எதையாவது செய்தாக வேண்டும். என்னுடைய சில பரிந்துரைகள்:
- பந்துவீச்சைப் பலப்படுத்துவது. கொல்கொத்தாவில் ஈடன் கார்டன்ஸில் அண்மையில் நடந்த உலகக்கோப்பைப் போட்டிகளில் சராசரி ஸ்கோர் 160-180தான். பெரும்பாலான போட்டிகளில் இத்தாலி ஆடியதால்தான் இந்தளவுக்காவது ஸ்கோரை எதிரணியால் அடிக்க முடிந்தது. நான் ரஞ்சிக் கோப்பைப் போட்டிகள் இந்த மைதானத்தில் நடந்ததையும் பார்த்தேன். இந்த ஆடுதளமானது வேகவீச்சாளர்களுக்கு எதையாவது எப்போதுமே வைத்திருக்கும். சுழலர்களுக்கும் சிறிது உதவும் என்றாலும் வேகவீச்சாளர்களே அதிகமாக விக்கெட் எடுக்கிறார்கள். மே.இ தீவுகளின் ரோமிரோ ஷெப்பர்ட் ஐந்து விக்கெட்டுகளை ஒரு போட்டியில் இங்கு எடுத்துள்ளார். சென்னையின் ஆடுதளமும் இப்படித்தான். இப்போதெல்லாம் சுழலர்கள் அங்கு அதிகமாக விக்கெட் எடுப்பதில்லை. இந்தியா ஹர்த்திக்கை மட்டும் நம்பி இரண்டு பிரதான வேகவீச்சாளர்களை எடுத்துப் போவது சில நேரங்களில் கைகொடுக்காது. அதனால் மோசமான ஆட்டநிலையில் இருக்கும் திலக்கை நீக்கிவிட்டு சிராஜையும், வாஷிங்டனின் இடத்தில் அக்ஸரையும் கொண்டு வரலாம். ஹர்த்திக்கையும் சேர்த்து 6 வலுவான வீச்சாளர்கள் இருந்தால் நம்மால் சில போட்டிகளில் தேவைப்படி வேகவீச்சையோ சுழலையோ கூடக் குறைய வீசி எதிரணியைத் திணறடிக்க முடியும். ஓரிருவர் அடிபட்டாலும் அது (தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்ததைப் போல) அணியை நிலைகுலைய வைக்காது. எதிரணியை 140க்குள் தூக்க முடிந்தால் நம்மால் 15வது ஓவருக்குள் போட்டியை வென்று ஒட்டுமொத்த ஓட்ட சராசரியை அதிகரிக்கலாம். எப்படியும் இந்த ஆடுதளங்கள் மட்டையாட்டத்துக்கு ரொம்ப சாதகமாக இருக்காது என்பதால் 8 வரை மட்டையாடுவதால் பலனிருக்காது. அது வெல்ல உதவலாம், ஆனால் பெரிய வித்தியாசத்தில் வெல்ல உதவாது.
- இப்போது இந்திய அணியின் துவக்க மட்டையாளரான அபிஷேக்கும் சாம்ஸனும் மூன்றாவது எண்ணில் ஆடும் திலக்கும் மோசமான ஆட்டநிலையில் இருப்பதால் திலக்கைக் காயம் என்று சொல்லி நீக்கிவிட்டு அவரிடத்தில் பிரியன்ஷ் ஆர்யாவைக் கொண்டு வரலாம். மற்ற மட்டையாளர்களின் பலவீனத்தைப் புரிந்து எதிரணியினர் சரியாகத் திட்டமிட்டு விட்டனர். அபிஷேக்குக்கும், திலக்குக்கும் பந்தை முழுநீளத்தில் வைடாகவும் குறைந்த வேகத்திலும் வீசிக் கட்டுப்படுத்துகிறார்கள். அவர்களும் சரியான ஆட்டநிலையில் இல்லாததால் சிக்கிக் கொள்கிறார்கள். ஆகையால் யாரும் எதிர்பாராதபோது பிரியன்ஷ் ஆர்யாவைக் கொண்டு வந்தால் அவரது எதிர்த்தாக்குதலில் எதிரணி வீச்சாளர்கள் சிக்கிக் கொள்வார்கள். இது இந்தியாவுக்கு சிறிது ஆசுவாசத்தைக் கொடுக்கும். முதல் 7 ஓவர்கள் எதிரணி வீச்சாளர்கள் குழம்பிப் போய்விட்டால் நம் மத்திய வரிசையால் ரன் குவிக்க முடியும். (வைபவ்வைக் கொண்டு வரலாம் என்றால் அவருக்கு இன்னும் 15 வயதாகவில்லை.)
இந்தியா ஒருவேளை தொடரில் இருந்து வெளியேறினால் அது இத்தொடரின் வருமானத்தைப் பெருமளவில் பாதிக்கும். ஒளிபரப்பும் சேனலும் விளம்பரதாரர்களும் நிலைகுலைந்து போவார்கள். நமக்கும் கல்யாண வீட்டில் சாவு விழுந்ததைப் போலும் நிலைமையாகும். அதனால் நம்புவோம்.
Comments