இந்தியா தெ.ஆ அணியிடம் டி20 உலகக்கோப்பைப் போட்டியில் தோற்றதற்கு பல்வேறு காரணங்களை நிபுணர்கள் ஆராய்ந்து கூறியுள்ளார்கள். எனக்கு அவற்றில் ரொம்ப முக்கியமாகப் பட்டது அவர்கள் 'தெனாவட்டாக ஆடினார்கள்' என்பது. பாகிஸ்தானுக்கு எதிராக மட்டுமே இந்தியாவின் மட்டையாட்டம் உருப்படியாக இருந்தது என முன்னாள் பாக் வீச்சாளர் முகம்மது அமீர் சொல்லியுள்ளது சரிதான். பாகிஸ்தானுக்கு எதிராக வென்றதுமே நாம் உலகக்கோப்பையை ஜெயித்துவிட்டோம் எனும் திருப்தி வந்துவிடுகிறது. அடுத்து நாம் எப்படியும் அரை இறுதியை அடைந்துவிடுவோம் எனும் மனப்பான்மை. தெ.ஆ அணியை ஏற்கனவே இரு பக்க டி20 தொடரில் முறியடித்ததால் என்ன நடந்தாலும் கடைசியில் ஜெயிப்போம் எனும் மிகை நம்பிக்கையும் இருந்திருக்கக் கூடும். கூடவே தோல்வி பயமும் பதற்றமும். ஆனால் தெ. ஆ இந்தக் குழப்பங்கள் இல்லாமல் தெளிவாகத் திட்டமிட்டு வந்து தம் இலக்கை நோக்கிப் பயணித்தார்கள். 3 விக்கெட்டுகள் இழந்த பின்னரும் கூட வருண் சக்கரவர்த்தியை அடிக்க வேண்டும் என இட்டத் திட்டத்தை நிறைவேற்றினார்கள். ஸ்டப்ஸ் கடைசி ஓவர் வரை ஆட வேண்டும் எனும் கடமையைச் செய்தார். மார்க்ரம், இங்கிடி, யான்சனும் புள்ளிவிபரப்படி வைடாக முழுநீளத்தில் வீசினார்கள், மெதுப்பந்துகளை பூச்சொரிவது போல போட்டுக் கொண்டே இருந்தார்கள். இப்படி ஒவ்வொருவரும் தமக்கு அளிக்கப்பட்ட பணிகளைச் செய்தனர். இந்தியாவிடம் இத்தகைய அணுகுமுறை இல்லை. அபிஷேக், இஷான் தம் ஈகோவுக்காக ஆடினர். திலக் தன் மீதுள்ள அழுத்தத்தினால் அடித்தாடும் திட்டத்துடன் வந்து சுற்றி அவுட் ஆனார். அதாவது அவர் அணியின் செயல்திட்டத்துக்கு ஏற்ப ஆடவில்லை. இணையத்தில் ரசிகர்கள் வைக்கும் ஸ்டிரைக் ரேட் விமர்சனத்துக்குப் பதிலளிக்க ஆடினார். இவர்கள் இப்படி ஆடுவதைக் கண்டு பயந்து கம்பீர் வாஷிங்டனை அனுப்பினார். ஆட்டத்தை வெல்வதற்காக அல்ல, ஆட்டம் கைவிட்டுப் போகக் கூடாதே எனும் எதிர்மறை எண்ணத்தில் அனுப்பினார்.
இப்படி தெனாவட்டு + பயம் இந்தியாவைச் செலுத்தியது. முதலில் ஆட்டத்தை மதிக்க வேண்டும். அடுத்து ஒவ்வொரு நிலையிலும் எங்கு உள்ளோமோ அதை மதித்து நடந்து கொள்ள வேண்டும். இருப்பதை விட்டுப் பறக்கக் கூடாது. இந்த அணி தட்டையான ஆடுதளங்களில் சரவெடியாக ஆடும்தான். ஆனால் உலகக்கோப்பை ஆட்டத்தொடரை வெல்வதற்கான முதிர்ச்சி அவர்களிடம் இல்லை. எதற்கெடுத்தாலும் எகத்தாளமாகப் பதில் சொல்வது, அக்ஸர் போன்ற சிறந்த வீச்சாளரை அமர வைப்பது என முதிராச் சிறுவர்களைப் போல நடந்துகொள்கிறார்கள். தம் தவறை ஒருபோதும் ஒப்புக் கொள்வதும் இல்லை. இவர்களுடைய உடல்மொழி அப்படியே குட்டி ஷாவினுடையதைப் போன்றே உள்ளது. தெ.ஆப்பிரிக்காவைப் பாருங்கள், என்னவொரு கண்ணியம், பொறுப்பு, பணிவு.
Comments