Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

பாதி பாலத்தைத் தாண்டியதன் பிரச்சினைகள்



கடந்த முறை பாகிஸ்தானை இந்தியா முறியடித்தபோதும் இது நடந்தது - ஏதோ உலகத்தையே வென்றது போல மக்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடினார்கள். ஊடகங்களும் அதை ஊக்கப்படுத்தின. இது இந்திய அணியின் அடுத்தடுத்த ஆட்டங்களின் தரத்தை பாதித்தது. அவர்கள் கவனம் சிதறியவர்களாகவும், அதிக அழுத்தத்தினால் தடுமாறுகிறவர்களாகவும் தோன்றினார்கள். அரை இறுதிப் போட்டியை நாம் அடைகிற இத்தருணத்திலும் அத்தகைய கொண்டாட்டங்களின் மிகையை நோக்கிச் செல்கிறோம். இதுவும் நம்மை பாதிக்கும் என்றே நம்புகிறேன். ஆகையால் இது நல்லதல்ல. மிகையை விட மட்டுப்படுத்தப்பட்ட கொண்டாட்டங்களே ஏற்றவை. தொடர்ச்சியாக சஞ்சு சாம்ஸன் உலகையே வென்றுவிட்டதாக நாம் பாவிப்பது, அந்த உணர்வை மிகைப்படுத்துவது அவரை மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளும். நம் அணி வீரர்கள் அதிகமாக சமூக வலைதளங்களைப் பின் தொடர்கிறார்கள்.

நாம் ஏன் ஒன்று முடியும் முன்பே அது நிறைவுற்றுவிட்டதாகப் பாவித்து கொண்டாட ஆரம்பிக்கிறோம்? இது என்ன மாதிரி மனநிலை? இதை நான் முன்பு கண்டதில்லை? இதற்கு சமூகவலைதளங்கள் மட்டுமே காரணமா? இல்லை, சமூகவலைதளங்கள் இந்தப் போக்கின் வெளிப்பாடு மட்டுமே. வெவ்வேறு சமூகக் காரணிகள் நம்மை இந்நிலையை நோக்கித் தள்ளி உள்ளன என நினைக்கிறேன்.

ஒன்றால் நிறைவு கொள்ளுதலும் ஒன்றை 'அடைதலும்' இருவேறு சங்கதிகள்:
அடைதலை ஒருவித கைப்பற்றுதலாக நாம் பார்க்கலாம். அதாவது ஒரு மொபைல் விளையாட்டில் எதிரியை, எதிரியின் கோட்டையைக் கைப்பற்றுவது, ஒரு உணவுப் பொருளை அடைவது, ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை அடைவது. ஆனால் எதை அடைந்தாலும் அதில் நிறைவு வரவில்லை எனும் உண்மை முதலில் நம்மை இடிபோலத் தாக்கும்.

நிறைவு என்பது முழுமை அல்ல, நிறைவு ஒரு ஆழமான பற்றுதல். பற்றுதல் என்பது இங்கு இல்லாத ஒன்றை நோக்கி மனதளவில் பாய்தல். ஆக, நிறைவு என்பது முழுமை அல்ல, முழுமையின்மையைக் கொண்டாடுதல், ரசித்தல், அதில் பெரும் திளைப்பை உணர்தல் (கீர்க்கெகாட் சொல்லும் விசுவாசத்தின் பேரிலான முன்னோக்கிய பாய்ச்சல்). இன்றைய தாராளவாதப் பொருளாதாரத்தில் நாம் நிறைவின்மையைக் கண்டு வெகுவாக அஞ்சுகிறோம். ஒவ்வொன்றையும் பொருண்மையாக நிறுவ வேண்டிய கட்டாயம் இன்று உள்ளது. அன்பா, திகைப்பா, வெறுப்பா அதை ஒரு பொருளாகக் காட்டு என்பதே தாராளவாதப் பொருளாதாரத்தின் விழைவு, வழிமுறை, மதிப்பீடு எல்லாம். காதலர் தினத்தன்று இவ்வளவு பரிசுப் பொருட்கள் அதனாலே விற்கப்படுகின்றன. வெறுப்பை மிகுதியாக்கி ஒரு மற்றமையைக் கண்டறிந்து அவர்களைக் கொன்று அவர்களுடைய குருதியைக் காணத் தவிக்கிறோம். இது ஒரு காட்டுமிராண்டி, நாகரிகமற்ற மனநிலை அல்ல. இது முதிரா அகவிழைவு அல்ல. இதுதான் தாராளவாதத்தின் ‘விபத்து’. எல்லாவற்றையும் பொருண்மைப்படுத்தி கண்முன் காட்ட வேண்டிய அழுத்தத்தின் விபத்து. இது எல்லா தளங்களிலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

நாம் வாழ்கிற பின்நவீனக் காலமானது இச்சிக்கலை இன்னொரு விதத்தில் எதிர்கொள்கிறது - அது தள்ளிப் போட முயல்கிறது. தள்ளிப் போடுதலைத் தன் இருத்தலின் அடிப்படையாக்குகிறது. தள்ளிப் போடும் ஒவ்வொரு சிறு தருணத்திலும் அது நம்மைத் திளைக்க வைக்கிறது. நாம் அடைய வேண்டிய இலக்கு அடைய இயலாத ஒன்று என நாம் ‘உணர்வதிலும்’ மிகுந்த உவகை உண்டு என நம்மை நினைக்க வைக்கிறது.

இடைப்பட்ட வேளையின் மகத்துவத்தில் நாம் மகிழ்கிறோம். இதன் அடிப்படையானது எதற்கும் அடிப்படையில்லை என நம்புவதாகும்; சாராம்சத்தை மறுப்பதாகும். உலகக்கோப்பையானது, அதை வெல்வதானது ‘கிரிக்கெட் விளையாட்டின் உச்சத்தைத் தொடுவது’ எனும் அர்த்தத்தை வெல்வதாகும். நாம் இதை முடிந்தளவுக்குத் தள்ளிப் போட்டு அந்த மகத்துவத்தை அடைய முயல்கிறோம். மனதுக்குள் ஒவ்வொரு சிறு போட்டியின் வெற்றியையும் பேரனுபவமாக பாவிக்கிறோம். ஒவ்வொரு நெருக்கடியான வெற்றியும் ஒரு உலகக்கோப்பை இறுதிப் போட்டி வெற்றியாகிறது. அதே நேரம் நாம் இதை முழுமையாகத் தள்ளிப் போடவும் இயலாது என்பதால் முன்கூறான திருப்தியும் பரவசமும் நம்மை இலக்கைத் தொடும் முன்பே தளர்ச்சியடைய வைக்கும் அல்லது அதை மேலும் அஞ்சி விலகி ஓட வைக்கும்.

இதுதான் பாதி பாலத்தைத் தாண்டியதும் ஆற்றில் குதிக்க வைக்கிற மனநிலை. இதைத் தவிர்க்க ஏதோ ஒன்றின் மீது தீவிர பற்றுதல் கொண்டு, இல்லாத ஒன்றின் மீதான, ஒருபோதும் சென்றடைய இயலாத ஒன்றின் மீதான பற்றுதல் மட்டுமே வெற்றியெனக் கருதும் மனநிலையை வளர்க்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

பாலியல் வன்முறை எனும் விதிவிலக்கின் மொழி

எப்ஸ்டைன் கோப்புகள் குறித்த தரவுகள் உண்மையில் கொட்டிக் கிடக்கின்றன . இந்தியாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்குமான வித்தியாசம் இது . நாம் இத்தகைய விவகாரங்களை கிசுகிசு , வம்பு , கற்பனைக் கதைகளுக்குள் மறைத்துவிடுவோம் . அவர்களை அவற்றை ஆவணங்களாகவே பொதுவெளியில் வெளியிடுகிறார்கள் . ஆனால் அதற்காக எப்ஸ்டைனைப் போன்ற சிறுமிகளைப் பாலியல் தேவைக்காக பயன்படுத்துவோர் , பணத்தைக் காட்டி பல இளம்பெண்களைச் சுரண்டுவோர் , அவர்களை டிரம்பைப் போன்ற வேறு நண்பர்கள் , அதிகார வர்க்கத்தினரிடம் பகிர்ந்து கொள்வோர் இந்தியாவில் இல்லையென்றில்லை . இத்தகையோர் வரலாற்றில் இதற்கு முன் இருந்ததில்லையா ? இருந்தார்கள் , இருக்கிறார்கள் , இருப்பார்கள் . இதைப் பற்றிப் படிப்பவர்களை அதிகம் தொந்தரவு செய்வது , கலங்கடிப்பது எந்த வரைமுறையுமற்ற பாலியல் அத்துமீறல்கள் . குற்றங்கள் கூட அல்ல . ஏனென்றால் ஒருவிதத்தில் பாலியல் தரகர்கள் , சினிமா தயாரிப்பாளர்கள் , மாடல்களை வைத்து நிகழ்ச்சி நடத்தும் நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் . பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார் எப்...

நடிகையரின் பிம்பச்சிறை - அழகு ஏன் ஒரு பிரச்சினையாகிறது?

  ( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....