கடந்த முறை பாகிஸ்தானை இந்தியா முறியடித்தபோதும் இது நடந்தது - ஏதோ உலகத்தையே வென்றது போல மக்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடினார்கள். ஊடகங்களும் அதை ஊக்கப்படுத்தின. இது இந்திய அணியின் அடுத்தடுத்த ஆட்டங்களின் தரத்தை பாதித்தது. அவர்கள் கவனம் சிதறியவர்களாகவும், அதிக அழுத்தத்தினால் தடுமாறுகிறவர்களாகவும் தோன்றினார்கள். அரை இறுதிப் போட்டியை நாம் அடைகிற இத்தருணத்திலும் அத்தகைய கொண்டாட்டங்களின் மிகையை நோக்கிச் செல்கிறோம். இதுவும் நம்மை பாதிக்கும் என்றே நம்புகிறேன். ஆகையால் இது நல்லதல்ல. மிகையை விட மட்டுப்படுத்தப்பட்ட கொண்டாட்டங்களே ஏற்றவை. தொடர்ச்சியாக சஞ்சு சாம்ஸன் உலகையே வென்றுவிட்டதாக நாம் பாவிப்பது, அந்த உணர்வை மிகைப்படுத்துவது அவரை மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளும். நம் அணி வீரர்கள் அதிகமாக சமூக வலைதளங்களைப் பின் தொடர்கிறார்கள்.
நாம் ஏன் ஒன்று முடியும் முன்பே அது நிறைவுற்றுவிட்டதாகப் பாவித்து கொண்டாட ஆரம்பிக்கிறோம்? இது என்ன மாதிரி மனநிலை? இதை நான் முன்பு கண்டதில்லை? இதற்கு சமூகவலைதளங்கள் மட்டுமே காரணமா? இல்லை, சமூகவலைதளங்கள் இந்தப் போக்கின் வெளிப்பாடு மட்டுமே. வெவ்வேறு சமூகக் காரணிகள் நம்மை இந்நிலையை நோக்கித் தள்ளி உள்ளன என நினைக்கிறேன்.
ஒன்றால் நிறைவு கொள்ளுதலும் ஒன்றை 'அடைதலும்' இருவேறு சங்கதிகள்:
அடைதலை ஒருவித கைப்பற்றுதலாக நாம் பார்க்கலாம். அதாவது ஒரு மொபைல் விளையாட்டில் எதிரியை, எதிரியின் கோட்டையைக் கைப்பற்றுவது, ஒரு உணவுப் பொருளை அடைவது, ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை அடைவது. ஆனால் எதை அடைந்தாலும் அதில் நிறைவு வரவில்லை எனும் உண்மை முதலில் நம்மை இடிபோலத் தாக்கும்.
நிறைவு என்பது முழுமை அல்ல, நிறைவு ஒரு ஆழமான பற்றுதல். பற்றுதல் என்பது இங்கு இல்லாத ஒன்றை நோக்கி மனதளவில் பாய்தல். ஆக, நிறைவு என்பது முழுமை அல்ல, முழுமையின்மையைக் கொண்டாடுதல், ரசித்தல், அதில் பெரும் திளைப்பை உணர்தல் (கீர்க்கெகாட் சொல்லும் விசுவாசத்தின் பேரிலான முன்னோக்கிய பாய்ச்சல்). இன்றைய தாராளவாதப் பொருளாதாரத்தில் நாம் நிறைவின்மையைக் கண்டு வெகுவாக அஞ்சுகிறோம். ஒவ்வொன்றையும் பொருண்மையாக நிறுவ வேண்டிய கட்டாயம் இன்று உள்ளது. அன்பா, திகைப்பா, வெறுப்பா அதை ஒரு பொருளாகக் காட்டு என்பதே தாராளவாதப் பொருளாதாரத்தின் விழைவு, வழிமுறை, மதிப்பீடு எல்லாம். காதலர் தினத்தன்று இவ்வளவு பரிசுப் பொருட்கள் அதனாலே விற்கப்படுகின்றன. வெறுப்பை மிகுதியாக்கி ஒரு மற்றமையைக் கண்டறிந்து அவர்களைக் கொன்று அவர்களுடைய குருதியைக் காணத் தவிக்கிறோம். இது ஒரு காட்டுமிராண்டி, நாகரிகமற்ற மனநிலை அல்ல. இது முதிரா அகவிழைவு அல்ல. இதுதான் தாராளவாதத்தின் ‘விபத்து’. எல்லாவற்றையும் பொருண்மைப்படுத்தி கண்முன் காட்ட வேண்டிய அழுத்தத்தின் விபத்து. இது எல்லா தளங்களிலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
நாம் வாழ்கிற பின்நவீனக் காலமானது இச்சிக்கலை இன்னொரு விதத்தில் எதிர்கொள்கிறது - அது தள்ளிப் போட முயல்கிறது. தள்ளிப் போடுதலைத் தன் இருத்தலின் அடிப்படையாக்குகிறது. தள்ளிப் போடும் ஒவ்வொரு சிறு தருணத்திலும் அது நம்மைத் திளைக்க வைக்கிறது. நாம் அடைய வேண்டிய இலக்கு அடைய இயலாத ஒன்று என நாம் ‘உணர்வதிலும்’ மிகுந்த உவகை உண்டு என நம்மை நினைக்க வைக்கிறது.
இடைப்பட்ட வேளையின் மகத்துவத்தில் நாம் மகிழ்கிறோம். இதன் அடிப்படையானது எதற்கும் அடிப்படையில்லை என நம்புவதாகும்; சாராம்சத்தை மறுப்பதாகும். உலகக்கோப்பையானது, அதை வெல்வதானது ‘கிரிக்கெட் விளையாட்டின் உச்சத்தைத் தொடுவது’ எனும் அர்த்தத்தை வெல்வதாகும். நாம் இதை முடிந்தளவுக்குத் தள்ளிப் போட்டு அந்த மகத்துவத்தை அடைய முயல்கிறோம். மனதுக்குள் ஒவ்வொரு சிறு போட்டியின் வெற்றியையும் பேரனுபவமாக பாவிக்கிறோம். ஒவ்வொரு நெருக்கடியான வெற்றியும் ஒரு உலகக்கோப்பை இறுதிப் போட்டி வெற்றியாகிறது. அதே நேரம் நாம் இதை முழுமையாகத் தள்ளிப் போடவும் இயலாது என்பதால் முன்கூறான திருப்தியும் பரவசமும் நம்மை இலக்கைத் தொடும் முன்பே தளர்ச்சியடைய வைக்கும் அல்லது அதை மேலும் அஞ்சி விலகி ஓட வைக்கும்.
இதுதான் பாதி பாலத்தைத் தாண்டியதும் ஆற்றில் குதிக்க வைக்கிற மனநிலை. இதைத் தவிர்க்க ஏதோ ஒன்றின் மீது தீவிர பற்றுதல் கொண்டு, இல்லாத ஒன்றின் மீதான, ஒருபோதும் சென்றடைய இயலாத ஒன்றின் மீதான பற்றுதல் மட்டுமே வெற்றியெனக் கருதும் மனநிலையை வளர்க்க வேண்டும்.
Comments