முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"ஏன் வாசிக்க வேண்டும்?" குறித்து மா. அண்ணாமலை

 நூலனுபவம் ( 21 )



நூல் : "ஏன் வாசிக்க வேண்டும்?"
ஆசிரியர் : ஆர். அபிலாஷ்
வெளியீடு : எழுத்து பிரசுரம்
பக்கங்கள் : 176
வகை : கட்டுரை
நூலின் தலைப்பினைக் கொண்டு இந்நூல் என்ன சொல்ல வருகிறது என ஒற்றை முடிவிற்கு என்னால் உடனடியாக வர முடியவில்லை. காரணம் அபிலாஷ். தான் எடுத்தாளும் எந்தக் கருத்தையும் அதன் பின்புலத்தோடு விசாரணைக்குட்படுத்துவது அபிலாஷின் பாணி. செடிகளாய் விதைகளிலிருந்து முளைத்து கிளை பரப்பும் விருட்சங்கள். அபிலாஷின் படைப்புகளோ கிளை பரப்பும் மரங்களை படைப்பெனும் விதைகளுக்குள்ளேயே கொண்டவை. அம்மாதிரியான படைப்புதான், ஏன் வாசிக்க வேண்டும்? என்பதும். பொது, இலக்கியம், தத்துவம், உளவியல் என பிரித்து எழுதியுள்ளார். ஆனால் நூலின் பெரும்பான்மையை பொதுவாசிப்பும் இலக்கியவாசிப்புமே எடுத்துக் கொண்டுள்ளன.
வாசிக்க யாரேனும் சொல்லித் தர வேண்டுமா? என நாம் வினவினால் அபிலாஷ் ஆமாம் என்கிறார். வாசிப்பு பற்றிய நான்கு கேள்விகள் - பகுதியில் அவர் எழுப்பும் எந்த வினாக்களுக்கும் தீர்க்கமான பதில் இல்லை. ஆனால் அக் கேள்விகளுக்கு உறுதியற்ற பதில்களை அளிப்பதன் மூலம் வாசகனை அக் கேள்விகளுக்கான பதிலை தானே கண்டறிய பணிக்கிறார். அப்பகுதியில் வரும் ஒரு கேள்வி இது.
கேள்வி: வாசிப்பினால் வாழ்க்கைக்கு பயன் இல்லையா?
பதில்: ஒரு முறை மனுஷ்யபுத்திரன் என்னிடம் சொன்னார் " இலக்கியம் வாழ்க்கை பற்றி கற்பிக்கும் பாடங்களை வைத்து வாழவே இயலாது. இலக்கியத்தின் அவதானிப்புகள் நடைமுறை வாழ்க்கைக்கு அப்பாலானவை."
இதில் எனக்கு உடன்பாடு இல்லை. காரணம் வாசகன் வாசிப்பின் மூலம், தான் ஏற்றுக்கொண்ட வாழ்வியல் முறைகளுக்கு வலுவூட்டவே முற்படுகிறான். அப்படி இருக்க அவன் வாசிப்பினால் எப்படி பயனடையாமல் இருக்க முடியும். நம்மால் தனித்த வாழ்வை இங்கு வாழ முடியாது. வாழ்வு என்பது கூட்டு முயற்சியே. பரஸ்பரம் ஒவ்வொருவரின் உதவியால்தான் நம்மால் அன்றாடங்களைச் சிரமமின்றி நகர்த்த முடிகிறது. மனித சமூகம் குழுவாக வாழவே தயார்படுத்தப்பட்டது; அக்குழுவின் ஏற்ற இறக்கங்களை கணித்து நிகழ்வாழ்வை இலகுவாக வாழ/ அக்குழுவை எதிர்த்து தன் போக்கில் பயணிக்க வாசிப்பு ஒருவனுக்கு பயன்படுகிறது என்பது என் எண்ணம்.
வாசிப்பின் போது ஏற்படும் சுணக்கங்களை களைய வாசகன் தனக்கு முற்றிலும் புதிய துறைசார் நூல்களை வாசிக்க பரிந்துரைக்கிறார் அபிலாஷ். இது ஒரு விதத்தில் சரிதான். ஆனால் அதன் கலைச்சொற்களுக்கு பழக்கப்படாத மனது அந்நூலை வாசிப்பதில் தடையை கண்டறிந்து விடுமே என்ற ஐயமும் எனக்கு எழுகிறது. அதற்கு மாற்று வழியாக நான் பயன்படுத்தியது. மற்றவர்களுக்கு பொருந்துமா எனத் தெரியவில்லை. 2012ல் நான் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் போது அறிவியல் பகுதிகளை படிக்கும் போது மனம் பெரிதும் அயர்வுறும். அதைப்போக்க எனக்கு இலகுவான ஏற்கனவே வாசித்த தமிழை மீள வாசிப்பேன். அது மனதை லேசாக்குவதுடன் அடுத்து படிக்க வேண்டியவமைக்குமான எரிபொருளை கொடுக்கும். இதைப்போல வாசிக்க கடினமான நூலை தேர்ந்தெடுக்கும் போது நமக்கு பிடித்த நூலையும் அவ்வப்போது வாசிக்க பக்கத்தில் வைத்துக் கொள்ளலாம்.
அதேபோல் வாசிப்பின் முழு இன்பத்தையும் அடைய குழுவாக வாசிப்பதை அபிலாஷ் பரிந்துரைக்கிறார். அது உண்மையில் பயனளிக்கக் கூடியதுதான். சமீபத்தில் நானும் தம்பி மதனும் கவிஞர் இசையின் கவிதைகளின் மீது பெருவிருப்பம் கொண்டு வாசித்தோம். அவன், இசையின் கவிதைகளை பற்றி சொல்லும் வார்த்தை " அண்ணா... இசை என்பவர் நாம சோகமாக இருக்கும்போது வாடா ஒரு டீ குடிச்சிட்டு வரலாம் என்று ஆசுவாசப்படுத்தும் நண்பன் போன்றவர்" என்றான். எவ்வளவு அற்புதமான புரிதல். அவ்வார்த்தையை கேட்கும் வரை நம்மிடம் வேடிக்கையாய் பேசும் நண்பன் என்றே இசையை எண்ணியிருந்தேன். நம் துன்பகரமான நிகழ்வுகளின் வடிகால் அவர் என்பது எனக்குப் புதிது. ஆனால் குழுவாக வாசிப்பதில் பயணிக்க நம் அருகாமையில் ஒருவருமே இல்லை என்பதே இங்கு நிதர்சனம்.
எனக்கு இது அபிலாஷின் நான்காவது நூல். நூல்களின் தலைப்புகளில் எளிமையை தேர்ந்தெடுத்தாலும் நூலின் உள்ளடக்கம் ஆழ்ந்த வாசிப்பை வேண்டுகிறது. அது தேவையும் கூட. ஏனெனில் அபிலாஷ் மீனை சமைத்து தருபவர் அல்ல; மீன்பிடிக்கக் கற்றுத் தருபவர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...