முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"ஏன் வாசிக்க வேண்டும்?" குறித்து மா. அண்ணாமலை

 நூலனுபவம் ( 21 )



நூல் : "ஏன் வாசிக்க வேண்டும்?"
ஆசிரியர் : ஆர். அபிலாஷ்
வெளியீடு : எழுத்து பிரசுரம்
பக்கங்கள் : 176
வகை : கட்டுரை
நூலின் தலைப்பினைக் கொண்டு இந்நூல் என்ன சொல்ல வருகிறது என ஒற்றை முடிவிற்கு என்னால் உடனடியாக வர முடியவில்லை. காரணம் அபிலாஷ். தான் எடுத்தாளும் எந்தக் கருத்தையும் அதன் பின்புலத்தோடு விசாரணைக்குட்படுத்துவது அபிலாஷின் பாணி. செடிகளாய் விதைகளிலிருந்து முளைத்து கிளை பரப்பும் விருட்சங்கள். அபிலாஷின் படைப்புகளோ கிளை பரப்பும் மரங்களை படைப்பெனும் விதைகளுக்குள்ளேயே கொண்டவை. அம்மாதிரியான படைப்புதான், ஏன் வாசிக்க வேண்டும்? என்பதும். பொது, இலக்கியம், தத்துவம், உளவியல் என பிரித்து எழுதியுள்ளார். ஆனால் நூலின் பெரும்பான்மையை பொதுவாசிப்பும் இலக்கியவாசிப்புமே எடுத்துக் கொண்டுள்ளன.
வாசிக்க யாரேனும் சொல்லித் தர வேண்டுமா? என நாம் வினவினால் அபிலாஷ் ஆமாம் என்கிறார். வாசிப்பு பற்றிய நான்கு கேள்விகள் - பகுதியில் அவர் எழுப்பும் எந்த வினாக்களுக்கும் தீர்க்கமான பதில் இல்லை. ஆனால் அக் கேள்விகளுக்கு உறுதியற்ற பதில்களை அளிப்பதன் மூலம் வாசகனை அக் கேள்விகளுக்கான பதிலை தானே கண்டறிய பணிக்கிறார். அப்பகுதியில் வரும் ஒரு கேள்வி இது.
கேள்வி: வாசிப்பினால் வாழ்க்கைக்கு பயன் இல்லையா?
பதில்: ஒரு முறை மனுஷ்யபுத்திரன் என்னிடம் சொன்னார் " இலக்கியம் வாழ்க்கை பற்றி கற்பிக்கும் பாடங்களை வைத்து வாழவே இயலாது. இலக்கியத்தின் அவதானிப்புகள் நடைமுறை வாழ்க்கைக்கு அப்பாலானவை."
இதில் எனக்கு உடன்பாடு இல்லை. காரணம் வாசகன் வாசிப்பின் மூலம், தான் ஏற்றுக்கொண்ட வாழ்வியல் முறைகளுக்கு வலுவூட்டவே முற்படுகிறான். அப்படி இருக்க அவன் வாசிப்பினால் எப்படி பயனடையாமல் இருக்க முடியும். நம்மால் தனித்த வாழ்வை இங்கு வாழ முடியாது. வாழ்வு என்பது கூட்டு முயற்சியே. பரஸ்பரம் ஒவ்வொருவரின் உதவியால்தான் நம்மால் அன்றாடங்களைச் சிரமமின்றி நகர்த்த முடிகிறது. மனித சமூகம் குழுவாக வாழவே தயார்படுத்தப்பட்டது; அக்குழுவின் ஏற்ற இறக்கங்களை கணித்து நிகழ்வாழ்வை இலகுவாக வாழ/ அக்குழுவை எதிர்த்து தன் போக்கில் பயணிக்க வாசிப்பு ஒருவனுக்கு பயன்படுகிறது என்பது என் எண்ணம்.
வாசிப்பின் போது ஏற்படும் சுணக்கங்களை களைய வாசகன் தனக்கு முற்றிலும் புதிய துறைசார் நூல்களை வாசிக்க பரிந்துரைக்கிறார் அபிலாஷ். இது ஒரு விதத்தில் சரிதான். ஆனால் அதன் கலைச்சொற்களுக்கு பழக்கப்படாத மனது அந்நூலை வாசிப்பதில் தடையை கண்டறிந்து விடுமே என்ற ஐயமும் எனக்கு எழுகிறது. அதற்கு மாற்று வழியாக நான் பயன்படுத்தியது. மற்றவர்களுக்கு பொருந்துமா எனத் தெரியவில்லை. 2012ல் நான் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் போது அறிவியல் பகுதிகளை படிக்கும் போது மனம் பெரிதும் அயர்வுறும். அதைப்போக்க எனக்கு இலகுவான ஏற்கனவே வாசித்த தமிழை மீள வாசிப்பேன். அது மனதை லேசாக்குவதுடன் அடுத்து படிக்க வேண்டியவமைக்குமான எரிபொருளை கொடுக்கும். இதைப்போல வாசிக்க கடினமான நூலை தேர்ந்தெடுக்கும் போது நமக்கு பிடித்த நூலையும் அவ்வப்போது வாசிக்க பக்கத்தில் வைத்துக் கொள்ளலாம்.
அதேபோல் வாசிப்பின் முழு இன்பத்தையும் அடைய குழுவாக வாசிப்பதை அபிலாஷ் பரிந்துரைக்கிறார். அது உண்மையில் பயனளிக்கக் கூடியதுதான். சமீபத்தில் நானும் தம்பி மதனும் கவிஞர் இசையின் கவிதைகளின் மீது பெருவிருப்பம் கொண்டு வாசித்தோம். அவன், இசையின் கவிதைகளை பற்றி சொல்லும் வார்த்தை " அண்ணா... இசை என்பவர் நாம சோகமாக இருக்கும்போது வாடா ஒரு டீ குடிச்சிட்டு வரலாம் என்று ஆசுவாசப்படுத்தும் நண்பன் போன்றவர்" என்றான். எவ்வளவு அற்புதமான புரிதல். அவ்வார்த்தையை கேட்கும் வரை நம்மிடம் வேடிக்கையாய் பேசும் நண்பன் என்றே இசையை எண்ணியிருந்தேன். நம் துன்பகரமான நிகழ்வுகளின் வடிகால் அவர் என்பது எனக்குப் புதிது. ஆனால் குழுவாக வாசிப்பதில் பயணிக்க நம் அருகாமையில் ஒருவருமே இல்லை என்பதே இங்கு நிதர்சனம்.
எனக்கு இது அபிலாஷின் நான்காவது நூல். நூல்களின் தலைப்புகளில் எளிமையை தேர்ந்தெடுத்தாலும் நூலின் உள்ளடக்கம் ஆழ்ந்த வாசிப்பை வேண்டுகிறது. அது தேவையும் கூட. ஏனெனில் அபிலாஷ் மீனை சமைத்து தருபவர் அல்ல; மீன்பிடிக்கக் கற்றுத் தருபவர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...