நூலனுபவம் ( 21 )
நூல் : "ஏன் வாசிக்க வேண்டும்?"
ஆசிரியர் : ஆர். அபிலாஷ்
வெளியீடு : எழுத்து பிரசுரம்
பக்கங்கள் : 176
வகை : கட்டுரை
நூலின் தலைப்பினைக் கொண்டு இந்நூல் என்ன சொல்ல வருகிறது என ஒற்றை முடிவிற்கு என்னால் உடனடியாக வர முடியவில்லை. காரணம் அபிலாஷ். தான் எடுத்தாளும் எந்தக் கருத்தையும் அதன் பின்புலத்தோடு விசாரணைக்குட்படுத்துவது அபிலாஷின் பாணி. செடிகளாய் விதைகளிலிருந்து முளைத்து கிளை பரப்பும் விருட்சங்கள். அபிலாஷின் படைப்புகளோ கிளை பரப்பும் மரங்களை படைப்பெனும் விதைகளுக்குள்ளேயே கொண்டவை. அம்மாதிரியான படைப்புதான், ஏன் வாசிக்க வேண்டும்? என்பதும். பொது, இலக்கியம், தத்துவம், உளவியல் என பிரித்து எழுதியுள்ளார். ஆனால் நூலின் பெரும்பான்மையை பொதுவாசிப்பும் இலக்கியவாசிப்புமே எடுத்துக் கொண்டுள்ளன.
வாசிக்க யாரேனும் சொல்லித் தர வேண்டுமா? என நாம் வினவினால் அபிலாஷ் ஆமாம் என்கிறார். வாசிப்பு பற்றிய நான்கு கேள்விகள் - பகுதியில் அவர் எழுப்பும் எந்த வினாக்களுக்கும் தீர்க்கமான பதில் இல்லை. ஆனால் அக் கேள்விகளுக்கு உறுதியற்ற பதில்களை அளிப்பதன் மூலம் வாசகனை அக் கேள்விகளுக்கான பதிலை தானே கண்டறிய பணிக்கிறார். அப்பகுதியில் வரும் ஒரு கேள்வி இது.
கேள்வி: வாசிப்பினால் வாழ்க்கைக்கு பயன் இல்லையா?
பதில்: ஒரு முறை மனுஷ்யபுத்திரன் என்னிடம் சொன்னார் " இலக்கியம் வாழ்க்கை பற்றி கற்பிக்கும் பாடங்களை வைத்து வாழவே இயலாது. இலக்கியத்தின் அவதானிப்புகள் நடைமுறை வாழ்க்கைக்கு அப்பாலானவை."
இதில் எனக்கு உடன்பாடு இல்லை. காரணம் வாசகன் வாசிப்பின் மூலம், தான் ஏற்றுக்கொண்ட வாழ்வியல் முறைகளுக்கு வலுவூட்டவே முற்படுகிறான். அப்படி இருக்க அவன் வாசிப்பினால் எப்படி பயனடையாமல் இருக்க முடியும். நம்மால் தனித்த வாழ்வை இங்கு வாழ முடியாது. வாழ்வு என்பது கூட்டு முயற்சியே. பரஸ்பரம் ஒவ்வொருவரின் உதவியால்தான் நம்மால் அன்றாடங்களைச் சிரமமின்றி நகர்த்த முடிகிறது. மனித சமூகம் குழுவாக வாழவே தயார்படுத்தப்பட்டது; அக்குழுவின் ஏற்ற இறக்கங்களை கணித்து நிகழ்வாழ்வை இலகுவாக வாழ/ அக்குழுவை எதிர்த்து தன் போக்கில் பயணிக்க வாசிப்பு ஒருவனுக்கு பயன்படுகிறது என்பது என் எண்ணம்.
வாசிப்பின் போது ஏற்படும் சுணக்கங்களை களைய வாசகன் தனக்கு முற்றிலும் புதிய துறைசார் நூல்களை வாசிக்க பரிந்துரைக்கிறார் அபிலாஷ். இது ஒரு விதத்தில் சரிதான். ஆனால் அதன் கலைச்சொற்களுக்கு பழக்கப்படாத மனது அந்நூலை வாசிப்பதில் தடையை கண்டறிந்து விடுமே என்ற ஐயமும் எனக்கு எழுகிறது. அதற்கு மாற்று வழியாக நான் பயன்படுத்தியது. மற்றவர்களுக்கு பொருந்துமா எனத் தெரியவில்லை. 2012ல் நான் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் போது அறிவியல் பகுதிகளை படிக்கும் போது மனம் பெரிதும் அயர்வுறும். அதைப்போக்க எனக்கு இலகுவான ஏற்கனவே வாசித்த தமிழை மீள வாசிப்பேன். அது மனதை லேசாக்குவதுடன் அடுத்து படிக்க வேண்டியவமைக்குமான எரிபொருளை கொடுக்கும். இதைப்போல வாசிக்க கடினமான நூலை தேர்ந்தெடுக்கும் போது நமக்கு பிடித்த நூலையும் அவ்வப்போது வாசிக்க பக்கத்தில் வைத்துக் கொள்ளலாம்.
அதேபோல் வாசிப்பின் முழு இன்பத்தையும் அடைய குழுவாக வாசிப்பதை அபிலாஷ் பரிந்துரைக்கிறார். அது உண்மையில் பயனளிக்கக் கூடியதுதான். சமீபத்தில் நானும் தம்பி மதனும் கவிஞர் இசையின் கவிதைகளின் மீது பெருவிருப்பம் கொண்டு வாசித்தோம். அவன், இசையின் கவிதைகளை பற்றி சொல்லும் வார்த்தை " அண்ணா... இசை என்பவர் நாம சோகமாக இருக்கும்போது வாடா ஒரு டீ குடிச்சிட்டு வரலாம் என்று ஆசுவாசப்படுத்தும் நண்பன் போன்றவர்" என்றான். எவ்வளவு அற்புதமான புரிதல். அவ்வார்த்தையை கேட்கும் வரை நம்மிடம் வேடிக்கையாய் பேசும் நண்பன் என்றே இசையை எண்ணியிருந்தேன். நம் துன்பகரமான நிகழ்வுகளின் வடிகால் அவர் என்பது எனக்குப் புதிது. ஆனால் குழுவாக வாசிப்பதில் பயணிக்க நம் அருகாமையில் ஒருவருமே இல்லை என்பதே இங்கு நிதர்சனம்.
எனக்கு இது அபிலாஷின் நான்காவது நூல். நூல்களின் தலைப்புகளில் எளிமையை தேர்ந்தெடுத்தாலும் நூலின் உள்ளடக்கம் ஆழ்ந்த வாசிப்பை வேண்டுகிறது. அது தேவையும் கூட. ஏனெனில் அபிலாஷ் மீனை சமைத்து தருபவர் அல்ல; மீன்பிடிக்கக் கற்றுத் தருபவர்.
கருத்துகள்