Skip to main content

சர்வாதிகார ஆதரவாளர்கள்

 நான் அண்மைக் காலமாக சில நண்பர்களிடம் உரையாடும்போது மக்களாட்சி குறித்த கடுமையான தாக்குதலை எதிர்கொள்கிறேன். மக்களாட்சி குறித்து பல விமர்சனங்களைக் கொண்டுள்ள எனக்கே அவர்களின் வன்மத்தைப் பார்த்து அதிர்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால் நான் மக்களாட்சியை இன்னும் decentralize செய்ய வேண்டும், மக்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும், இந்திய ஜனநாயகத்தில் அத்தகைய போக்குகள் இல்லை எனும் கவலை கொண்டவன். ஆனால் இவர்களோ மக்களுக்கு ஜனநாயகத்தைக் கையாளத் தெரியாது, அவர்களுக்கு சர்வாதிகாரமே சிறந்தது எனும் கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பேசும் நண்பர்கள் தவறாமல் பாஜக ஆதரவாளர்களாகவும் இருக்கிறார்கள். லஞ்சம் பற்றிப் பேசினால், வளர்ச்சி பற்றிப் பேசினால் மக்களாட்சியில் லஞ்சம் மட்டுமே இருக்கும், ஆட்சியாளர்கள் பொறுப்பாக இருக்க மாட்டார்கள், மக்கள் சிந்தித்து முடிவெடுக்க மாட்டார்கள், மக்களுக்கு பகுத்தறிவே இல்லை எனக் கூறிவிட்டு, அதனால் என்று ஆரம்பித்து 'மாட்டை' இழுத்து சர்வாதிகாரத்தில் கட்டிவிடுகிறார்கள். மக்களாட்சியில் ஒரு பிரச்சினை இருக்கிறதென்றால் மக்களாட்சியே ஒரு பிரச்சினை எனப் பொருளில்லை என விளக்க வேண்டி இருக்கிறது. மக்களாட்சியை மேம்படுத்துவது பற்றி இவர்களிடம் பேச முடியாது. ஏனோ மக்களாட்சி அமைப்பை மாற்றினாலே தாம் விரும்பும் வளர்ச்சியும் ஒழுங்கும் வருமென உறுதியாக நம்புகிறார்கள்.

இவர்களுடைய இந்த எண்ணம் எங்கிருந்து வருகிறது என்று சிந்தித்தால் முற்றதிகாரம் குறித்த ஹேனா ஆரெண்டின் பார்வைதான் நினைவுக்கு வருகிறது. ஒரு சமூகத்தில் பொருளாதார, கலாச்சார நிச்சயமின்மையும் அச்சமும் நிலவும்போது அங்கு முற்றதிகாரம் பாலான ஒரு ஈர்ப்பு தோன்றுகிறது என்று அவர் சொல்கிறார். இன்றுள்ள சூழலுக்கு இது வெகுபொருத்தமாக இருக்கிறது. மனதுக்குள் பயமும் பதற்றமும் அதிகமாக உள்ளோரே 'பலவீனமான' எல்லாவற்றையும் தமக்கு எதிரியாகக் கருதுகிறார்கள். நெகிழ்வுத்தன்மை கொண்ட மக்களாட்சி அமைப்பை ஒழிக்கக் கோருகிறார்கள். நெகிழ்வான சிந்தனையாளர்களை தேசத்துரோகி என அழைக்கிறார்கள். பலம் பொருந்தியதாகத் தெரியும் பிம்பங்களை வழிபடுகிறார்கள். பொய்ச் செய்திகளை, கதையாடல்களை விரும்புகிறார்கள். தேசத்தை ஒரு தந்தை உருவாகக் கருதுகிறார்கள். தந்தை இல்லாத குடும்பத்தில் ஒரு குழந்தைத் தன்னைத் தந்தையாகக் கருதி வீட்டைப் பாதுகாக்க விழைவதைப் போல, அதிகாரத்தைப் பெருக்கி தன்னை எதிர்காலத்தி பலமான ஒரு 'தந்தையாக' மாற்றிக் கொள்வதைப் போல இவர்கள் மக்களாட்சியை எதிர்க்கிறார்கள். இவர்கள் பார்க்க மறுப்பது தம் நிச்சயமின்மையின் வேர் பொருளாதார ஏற்றத்தாழ்வில் இருக்கிறது, அது ஏற்படுத்தும் அநீதியில் இருக்கிறது என்பதையே.
பொருளாதார நிச்சயமின்மையும், அதனாலான ஏற்றத்தாழ்வுகளும் அச்சமும், பெருவளர்ச்சியும் ஒருசேரத் தோன்றுவதே நவதாராளவாதத்தின் தன்மை. அதாவது உற்பத்தியும் சந்தைப் பெருக்கமும் நடந்துகொண்டே இருக்கும், வேலை இழப்பும் பணவீக்கமும் அதிகரித்தபடி இருக்கும். இதன் விளைவாக கறுப்புப் பணமும் ஊழலும் பெருகும். இதற்குத் தீர்வாக சர்வாதிகாரம் இருந்தால் நன்றாக இருக்கும் என ஒரு சிலர் நம்புவார்கள். இச்சிந்தனை சமூகத்தின் ஒரு மூலையில் தோன்றி அது வளர்ந்து ஒருநாள் வெகுஜன ஊடகத்தில் ஒரு ஏற்கப்பட்ட 'சிந்தனையாக' மலரும். இதனால் மக்களாட்சி ஒழியாது. மக்களாட்சி இதை செரித்துக் கொண்டு முற்றதிகார தன்மை கொண்ட மக்களாட்சியாகும். நிச்சயமின்மைக்கு எதிரான போராட்டங்கள் நிகழாமல் இது தடுக்கும். ஏற்றத்தாழ்வை இன்னும் தீவிரமாக்க இது உதவும்.
இதனால்தான் சமூகத்தின் எல்லா பிரச்சினைகளுக்கும் சில அடிப்படைகள் உண்டெனக் கருதுகிறேன். அவற்றில் ஒன்றுதான் பொருளாதார ஏற்றத்தாழ்வு. பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறைக்க நாம் எதைச் செய்தாலும் அது மக்களாட்சியை மேம்படுத்தும், ஊழலையும் அநீதியையும் குறைக்கும். சமூகத்தின் எல்லா தளங்களிலும் நல்ல விளைவுகள் ஏற்படும். சர்வாதிகார எதிர்ப்பு பொருளாதாரத்திலே துவங்குகிறது. அதற்கு தனிமனித உழைப்பினாலே வளம் உருவாகிறது எனும் கருத்தை மறுக்க வேண்டும். மூலதனம் அனைவருக்கும் பொதுவானது எனும் கருத்தை நோக்கிச் செல்ல வேண்டும். இது நம் மதிப்பீடுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் - வாக்குக்கு பணம் வாங்குகிற தனிநபர் ஊழலைப் பற்றி நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த பணம் வாங்கும் செயலே "என்னிடம் பணமில்லை, அவனிடம் அதிகமாக இருக்கிறது, இச்சந்தர்பத்தில் எனக்கு அவன் அதைத் தருவதற்கு முகாந்திரம் உள்ளது. தரட்டுமே" எனும் நினைப்பில் இருந்து தோன்றுகிறது. ஏற்றத்தாழ்வை ஊழலின் வழியாக (தற்காலிகமாக) சீர் செய்யப் பார்க்கிறோம். ஏழ்மையைக் கொண்டாடி இதை நாம் சரியாக்க முடியாது. ஏற்றத்தாழ்வை ஒரு குற்றமாகக் கருதிப் பேசினால் மட்டுமே ஊழலை நியாயப்படும் எண்ணம் மறையும். ஏற்றத்தாழ்வை ஒரு குற்றமாகப் பார்க்க நாம் முதலீட்டியத்தின் அடிமடியில் கைவைக்க வேண்டும். தனிநபர் சொத்திற்கான உச்சபட்ச வரைமுறையைப் பற்றிப் பேச வேண்டும். இப்படி ஊழலை நமது சமகாலப் பொருளாதார அமைப்பே உருவாக்கும்போது அதைச் சரிசெய்ய திராணி இல்லாதபோது நாம் அங்கே சுற்றி இங்கே சுற்றி மக்களாட்சி முறையை ஒழித்தால் சரியாகி விடும் எனக் கூறுகிறோம். இப்படிப் பணம் வாங்கும் மக்களை ஒழுக்கமற்றவர்கள் எனக் கூறித் தப்பிக்கிறோம். இப்படிப் பேசுகிறவர்களும் ஏதோ ஒருவிதத்தில் இந்த ஏற்றத்தாழ்வினால் பாதிக்கப்படுகிறவர்கள் என்பதே வேடிக்கை.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் ஏற்றத்தாழ்வும்

  முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன் கடைசியாக வெளியிட்ட காணொளியைப் பார்த்தேன். அதில் அவர் தன் ஆட்சியின் சாதனைகளைக் குறிப்பிட்டு சில குறைகள் உள்ளதையும் தான் ஒப்புக்கொள்வதாகத் தெரிவிக்கிறார். கண்ணியமான நிதானமான பேச்சு. அவர் குறிப்பிடும் ஒரு தகவல் உண்மையானது - தமிழ்நாடு வேறு எந்த ஆட்சியிலும் காணாத பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது (11.9%). இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சி இது. வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொணர்வதிலும் புது நிறுவனங்களை அமைப்பதிலும் திமுக முன்னின்று செயல்பட்டுள்ளது. (விஜய் திமுக அரசு மாநிலத்தை கடனில் வீழ்த்தியுள்ளதாகச் சொல்லியிருப்பது ஒரு பொய்.) ஸ்டாலின் சொல்லும் இத்தகவல் இந்த ஆண்டின் துவக்கம் முதலே பல ஆங்கில நாளிதழ்களிலும் காணொளிகளிலும் பேசப்பட்டு வந்துள்ளது. ஒருவிதத்தில் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற விரும்புவதும் இதனால்தான் எனத் தோன்றுகிறது. அவர்கள் வந்தால் அவர்களுடைய தரப்பு முதலாளித்துவ வர்க்கம் உள்ளூர் முதலாளிகளைக் காலி பண்ணுவார்கள். ஊழலில் அவர்களுடைய உள்ளூர் தலைவர்களுக்கு பங்கு போகும். அவர்களால் இங்குள்ள வர்த்தகப் போக்குகளைக் கட்டுப்படுத்த இய...