முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சர்வாதிகார ஆதரவாளர்கள்

 நான் அண்மைக் காலமாக சில நண்பர்களிடம் உரையாடும்போது மக்களாட்சி குறித்த கடுமையான தாக்குதலை எதிர்கொள்கிறேன். மக்களாட்சி குறித்து பல விமர்சனங்களைக் கொண்டுள்ள எனக்கே அவர்களின் வன்மத்தைப் பார்த்து அதிர்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால் நான் மக்களாட்சியை இன்னும் decentralize செய்ய வேண்டும், மக்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும், இந்திய ஜனநாயகத்தில் அத்தகைய போக்குகள் இல்லை எனும் கவலை கொண்டவன். ஆனால் இவர்களோ மக்களுக்கு ஜனநாயகத்தைக் கையாளத் தெரியாது, அவர்களுக்கு சர்வாதிகாரமே சிறந்தது எனும் கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பேசும் நண்பர்கள் தவறாமல் பாஜக ஆதரவாளர்களாகவும் இருக்கிறார்கள். லஞ்சம் பற்றிப் பேசினால், வளர்ச்சி பற்றிப் பேசினால் மக்களாட்சியில் லஞ்சம் மட்டுமே இருக்கும், ஆட்சியாளர்கள் பொறுப்பாக இருக்க மாட்டார்கள், மக்கள் சிந்தித்து முடிவெடுக்க மாட்டார்கள், மக்களுக்கு பகுத்தறிவே இல்லை எனக் கூறிவிட்டு, அதனால் என்று ஆரம்பித்து 'மாட்டை' இழுத்து சர்வாதிகாரத்தில் கட்டிவிடுகிறார்கள். மக்களாட்சியில் ஒரு பிரச்சினை இருக்கிறதென்றால் மக்களாட்சியே ஒரு பிரச்சினை எனப் பொருளில்லை என விளக்க வேண்டி இருக்கிறது. மக்களாட்சியை மேம்படுத்துவது பற்றி இவர்களிடம் பேச முடியாது. ஏனோ மக்களாட்சி அமைப்பை மாற்றினாலே தாம் விரும்பும் வளர்ச்சியும் ஒழுங்கும் வருமென உறுதியாக நம்புகிறார்கள்.

இவர்களுடைய இந்த எண்ணம் எங்கிருந்து வருகிறது என்று சிந்தித்தால் முற்றதிகாரம் குறித்த ஹேனா ஆரெண்டின் பார்வைதான் நினைவுக்கு வருகிறது. ஒரு சமூகத்தில் பொருளாதார, கலாச்சார நிச்சயமின்மையும் அச்சமும் நிலவும்போது அங்கு முற்றதிகாரம் பாலான ஒரு ஈர்ப்பு தோன்றுகிறது என்று அவர் சொல்கிறார். இன்றுள்ள சூழலுக்கு இது வெகுபொருத்தமாக இருக்கிறது. மனதுக்குள் பயமும் பதற்றமும் அதிகமாக உள்ளோரே 'பலவீனமான' எல்லாவற்றையும் தமக்கு எதிரியாகக் கருதுகிறார்கள். நெகிழ்வுத்தன்மை கொண்ட மக்களாட்சி அமைப்பை ஒழிக்கக் கோருகிறார்கள். நெகிழ்வான சிந்தனையாளர்களை தேசத்துரோகி என அழைக்கிறார்கள். பலம் பொருந்தியதாகத் தெரியும் பிம்பங்களை வழிபடுகிறார்கள். பொய்ச் செய்திகளை, கதையாடல்களை விரும்புகிறார்கள். தேசத்தை ஒரு தந்தை உருவாகக் கருதுகிறார்கள். தந்தை இல்லாத குடும்பத்தில் ஒரு குழந்தைத் தன்னைத் தந்தையாகக் கருதி வீட்டைப் பாதுகாக்க விழைவதைப் போல, அதிகாரத்தைப் பெருக்கி தன்னை எதிர்காலத்தி பலமான ஒரு 'தந்தையாக' மாற்றிக் கொள்வதைப் போல இவர்கள் மக்களாட்சியை எதிர்க்கிறார்கள். இவர்கள் பார்க்க மறுப்பது தம் நிச்சயமின்மையின் வேர் பொருளாதார ஏற்றத்தாழ்வில் இருக்கிறது, அது ஏற்படுத்தும் அநீதியில் இருக்கிறது என்பதையே.
பொருளாதார நிச்சயமின்மையும், அதனாலான ஏற்றத்தாழ்வுகளும் அச்சமும், பெருவளர்ச்சியும் ஒருசேரத் தோன்றுவதே நவதாராளவாதத்தின் தன்மை. அதாவது உற்பத்தியும் சந்தைப் பெருக்கமும் நடந்துகொண்டே இருக்கும், வேலை இழப்பும் பணவீக்கமும் அதிகரித்தபடி இருக்கும். இதன் விளைவாக கறுப்புப் பணமும் ஊழலும் பெருகும். இதற்குத் தீர்வாக சர்வாதிகாரம் இருந்தால் நன்றாக இருக்கும் என ஒரு சிலர் நம்புவார்கள். இச்சிந்தனை சமூகத்தின் ஒரு மூலையில் தோன்றி அது வளர்ந்து ஒருநாள் வெகுஜன ஊடகத்தில் ஒரு ஏற்கப்பட்ட 'சிந்தனையாக' மலரும். இதனால் மக்களாட்சி ஒழியாது. மக்களாட்சி இதை செரித்துக் கொண்டு முற்றதிகார தன்மை கொண்ட மக்களாட்சியாகும். நிச்சயமின்மைக்கு எதிரான போராட்டங்கள் நிகழாமல் இது தடுக்கும். ஏற்றத்தாழ்வை இன்னும் தீவிரமாக்க இது உதவும்.
இதனால்தான் சமூகத்தின் எல்லா பிரச்சினைகளுக்கும் சில அடிப்படைகள் உண்டெனக் கருதுகிறேன். அவற்றில் ஒன்றுதான் பொருளாதார ஏற்றத்தாழ்வு. பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறைக்க நாம் எதைச் செய்தாலும் அது மக்களாட்சியை மேம்படுத்தும், ஊழலையும் அநீதியையும் குறைக்கும். சமூகத்தின் எல்லா தளங்களிலும் நல்ல விளைவுகள் ஏற்படும். சர்வாதிகார எதிர்ப்பு பொருளாதாரத்திலே துவங்குகிறது. அதற்கு தனிமனித உழைப்பினாலே வளம் உருவாகிறது எனும் கருத்தை மறுக்க வேண்டும். மூலதனம் அனைவருக்கும் பொதுவானது எனும் கருத்தை நோக்கிச் செல்ல வேண்டும். இது நம் மதிப்பீடுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் - வாக்குக்கு பணம் வாங்குகிற தனிநபர் ஊழலைப் பற்றி நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த பணம் வாங்கும் செயலே "என்னிடம் பணமில்லை, அவனிடம் அதிகமாக இருக்கிறது, இச்சந்தர்பத்தில் எனக்கு அவன் அதைத் தருவதற்கு முகாந்திரம் உள்ளது. தரட்டுமே" எனும் நினைப்பில் இருந்து தோன்றுகிறது. ஏற்றத்தாழ்வை ஊழலின் வழியாக (தற்காலிகமாக) சீர் செய்யப் பார்க்கிறோம். ஏழ்மையைக் கொண்டாடி இதை நாம் சரியாக்க முடியாது. ஏற்றத்தாழ்வை ஒரு குற்றமாகக் கருதிப் பேசினால் மட்டுமே ஊழலை நியாயப்படும் எண்ணம் மறையும். ஏற்றத்தாழ்வை ஒரு குற்றமாகப் பார்க்க நாம் முதலீட்டியத்தின் அடிமடியில் கைவைக்க வேண்டும். தனிநபர் சொத்திற்கான உச்சபட்ச வரைமுறையைப் பற்றிப் பேச வேண்டும். இப்படி ஊழலை நமது சமகாலப் பொருளாதார அமைப்பே உருவாக்கும்போது அதைச் சரிசெய்ய திராணி இல்லாதபோது நாம் அங்கே சுற்றி இங்கே சுற்றி மக்களாட்சி முறையை ஒழித்தால் சரியாகி விடும் எனக் கூறுகிறோம். இப்படிப் பணம் வாங்கும் மக்களை ஒழுக்கமற்றவர்கள் எனக் கூறித் தப்பிக்கிறோம். இப்படிப் பேசுகிறவர்களும் ஏதோ ஒருவிதத்தில் இந்த ஏற்றத்தாழ்வினால் பாதிக்கப்படுகிறவர்கள் என்பதே வேடிக்கை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...