வாசிப்பு நம்மூரில் அதிகமும் ரொமாண்டிசைஸ் பண்ணப்படுகிறது. என்னால் அதை ஏற்க முடிவதில்லை. சொல்லப்போனால் வாசிப்பது குறித்து எனக்கு ஒரு குழப்பமான பார்வையே உள்ளது.
நான் எப்போதெல்லாம் நிதானமான, சமநிலையுடன் இருக்கிறேனோ அப்போதெல்லாம் எழுத்தில் கவனம் செலுத்துவேன். நான்கைந்து மணிநேரங்கள் எழுதுவேன். மனம் சமநிலையில் இல்லை, ஒரே தவிப்பாக இருக்கிறது என்றால் கன்னாபின்னாவென்று புனைவுகளை வாசிப்பேன். கடந்த சில தினங்களாக அப்படித்தான் என் நாவலை எழுதாமல் புனைவுகளாக வாசித்துத் தள்ளுகிறேன். ஒரு புத்தகத்தை எடுத்து நூறு பக்கங்கள் படித்துவிட்டு இன்னொன்றுக்குள் தாவி அதைவிட்டு மற்றொன்றை வாசித்து முடித்து அடுத்தடுத்து படிக்க வேண்டிய நாவல்களைத் தேர்வு பண்ணுகிறேன். இது ஏன், எப்படி என்று தெரியவில்லை (அதனாலே குழப்பம் என்கிறேன்). நான் நிறைய வாசிக்கிறேன் என்றால் நான் நன்றாக இல்லையென்று அர்த்தம். நான் நிறைய எழுதுகிறேன் என்றால் ஜாலியாக இருக்கிறேன் என்று பொருள். அதனாலே என்னுடைய புத்தக அலமாரிகளை நான் ஒரு மருத்துவமனையாகவே பாவிக்கிறேன். என் எழுதுமேஜையோ என் குத்துசண்டைப் பயிற்சி அறை. ஏனென்றால் வலுவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கையிலே குத்துச்சண்டையும் உடற்பயிற்சியும் செய்ய இயலும்.
சுஜாதா சொல்லியதைப் போல நிறைய படித்துவிட்டே ஒருவர் எழுத வேண்டும் என்பது எனக்கு எடுபடாது. புத்தகங்கள் ஒருவித மருந்து. வாழ்தலில் இருந்து விலகி இருப்பது. கீதையில் அர்ஜுனனிடம் கிருஷ்ணர் சொல்வார்: நீ சண்டை போடுகிறவன். நிர்வாகம், ஓய்வு, காதல் எல்லாம் நீ ஓய்வில் இருக்கையில் செய்வன. நீ போர்க்களத்தில் நின்று தலைகளைக் கொய்யும்போதே நீ வாழ்கிறாய் (நேரடி மேற்கோள் அல்ல). எழுத்தாளரும் எழுதும்போது மட்டுமே வாழ்கிறார்.
கருத்துகள்