முபியில் ஒரு கொரியன் படம் பார்த்தேன். No Other Choice ("வேறு வழியே இல்லை"). அதை நான் கண்ட சிறந்த அரசியல் படங்களின் பட்டியலில் வைப்பேன். அது நேரடி கட்சி அரசியல் பற்றின படம் அல்ல. நடைமுறை உலகில் உள்ள நவமுதலீட்டிய அரசியல்தான் அதன் மையம். தனியார் காகிதத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் நல்ல பொறுப்பில் இருந்த நாயகனுக்கு நிறுவன நிர்வாகம் அமெரிக்கர்கள் வசம் போனதும் செலவு குறைப்பு நடவடிக்கையின் பகுதியாக வேலை போகிறது. அடுத்து நல்ல வேலை எவ்வளவு முயன்றும் கிடைக்கவில்லை. அவருக்கு (இப்படி பாதிக்கப்படுகிற பலரையும் போல) உண்மை புரியவில்லை - வேலையைப் பறித்தது நிர்வாகம் மட்டுமே அல்ல, புது வேலை கிடைக்காததற்குக் காரணம் தன் போட்டியாளர்கள் மட்டும் அல்லர். நிரந்தரமின்மை என்பது இந்த பொருளாதார அமைப்புக்குள் திட்டமிட்டே உருவாக்கப்பட்டு அதன் வழியாக பெருமுதலாளிகளுக்குச் சாதகமான அதிக லாபமீடும் நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சி.இ.ஓ போன்ற பெரும்பொறுப்பில் இருப்போரே அங்கு மிக அதிகமாக ஈட்டுவதாலும் நிறுவனங்கள் தொடர்ந்து உடைக்கப்பட்டு லாபமும் முதலீடும் பல இடங்களில் மீளமீள செலுத்தப்படுவதாலும் யாரிடமும் பணம் இல்லாததைப் போன்ற சூழல் ஏற்படுத்தப்படுகிறது. ஆகையால் பெரும்பணக்காரர்கள் மட்டுமே நிம்மதியாகவும் ஸ்திரமாகவும் இருக்கிறார்கள். பெரும்பகுதி மக்கள் வெள்ளம் சூழ்ந்த வீட்டில் பரணில் அமர்ந்திருப்பவர்களைப் போல காலத்தை ஓட்டுகிறார்கள். இதற்குத் தற்காலிகத் தீர்வு இந்த அமைப்புக்குள்ளே ஒருவர் முதலாளி ஆவது. நிரந்தரத் தீர்வு இந்த அமைப்பை மக்களின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவது. நடைமுறையை மக்களின் சமத்துவத்திற்காக மாற்றியமைப்பது. ஆனால் தனிமனிதர்களால் இப்படி பரந்துபட்டு யுக்திபூர்வமாகச் சிந்திக்க முடியாது. அவர்கள் தனிமனிதர்களே தம் நிலைக்குக் காரணம் என நினைக்கிறார்கள். ஆகையால் இந்த நாயகனும் அவ்வாறே நினைத்து இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்கிறார் - பிரதான தனியார் நிறுவனத்தில் தான் வேலை தேடும்போது அங்கு தனக்குப் போட்டியாக நேர்முகத்தில் கலந்து கொள்வோரைக் கண்டுபிடித்துக் கொல்வது. அதற்காக அவர் செய்யும் அபத்தங்களும் குற்றங்களுமே மிச்சக் கதை. படத்துக்குள் இந்தப் பொருளாதார அமைப்பு நம் குடும்ப அமைப்பில் ஏற்படுத்தும் சிதைவுகள், மகக்ளின் உளவியலை அது விரோதமாக, வெறுப்பால் சூழ்ந்ததாக மாற்றுவது, அடிப்படை சுதந்திரம் கூட இல்லாமல் எல்லாருமே மாட்டிக் கொண்டிருப்பதாக உணர்வது என பல தளங்கள் உண்டு. படத்தின் முடிவில் நாயகன் எப்படியோ ஒரு கனவைப் போல பல குற்றங்களைப் பண்ணி மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கிறார், வேலையிலும் அமர்கிறார் என்றாலும் நமக்குத் தெரியும் நிஜவுலகில் இப்படிச் செய்கிறவர்கள் சிறையில்தான் வாழ்க்கையை முடித்துக் கொள்வர் என்றும். அது போகட்டும். எனக்கு இப்படத்தைப் பார்க்கவே மிகக் கடினமாக இருந்தது - இன்றைய கார்ப்பரேட், தனியார் வேலைச் சூழலை, அது தனிமனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பரிசீலிப்பது ஒரு துன்பமாக இருந்தது. இப்படம் எனக்கு இன்று நடக்கும் ஊழல் ஒழிப்பு நாடகத்தையும் நினைவுபடுத்தியது.
ஊழல் ஒரு மிகப்பெரிய பிரச்சினைதான். அது அடிப்படையில் நமது தனிப்பட்ட வருமானத்திலேயே கைவைக்கிறது. சந்தைக்கு வர வேண்டிய பணம் ஆட்சியாளர்களாலும அதிகாரிகளாலும் சுரண்டப்பட்டு கறுப்புப் பணம் ஆவதால், ஒரு பக்கம் வரி குறைகிறது, இதனால் நம் மீதான மறைமுக, நேரடி வரியை அதிகரிக்கிறார்கள்; அடுத்து, பணப்புழக்கம் குறைந்து பணவீக்கம் அதிகரிக்கிறது. சமூகத்தில் ஏற்றத்தாழ்வு அதிகரிக்கிறது. கடைசியாக, நமக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படைச் சேவைகளின் தரம் பல மடங்கு குறைகிறது. இந்தக் கடைசி விசயமே நேரடியாக இருப்பதால் இதை மட்டுமே அதிகம் பேசுகிறோம். இதனாலே நாம் ஊழலை ஒழிப்பதற்கு முடியாவிட்டாலும் ஊழல் செய்த கட்சியைத் தண்டிப்போம் என்று ஒரு கட்சியை ஆட்சியில் இருந்து நீக்குகிறோம். புது கட்சி வந்து அதே ஊழலைத் தொடர்கிறது. அவர்களுக்கு அவகாசம் கொடுப்போமே எனப் பொறுத்திருந்து இருந்து கடைசியில் நொந்து போய் அவர்களுக்கு வாக்களிக்கவும் தயங்கி இன்னொரு கட்சியின் பக்கமோ ஆரம்பத்தில் ஆண்டவர்களிடமோ சாய்கிறோம். ஊழல் இப்போதும் தொடர்கிறது. ஏன் இது தொடர்கிறது என்று கேட்டால் தனிமனித ஒழுக்கமில்லை என்று காரணம் சொல்கிறோம். எனில் ஏன் யாரைத் தேர்ந்தெடுத்தாலும் ஊழல் கொழிக்கிறது? இக்கேள்வியை நாம் கேட்க விரும்புவதில்லை. ஏனென்றால் நான் மேற்சொன்ன படத்தைக் குறித்துச் சொன்னதைப் போல இம்மாதிரி கேள்விகள் நம்மை ஆழமாகத் துன்புறுத்துகின்றன. இவற்றை சாய்ஸில் விடவே விரும்புகிறோம். ஒருவேளை அப்படி இல்லை, அடியாழத்துக்குப் போய் ‘சிஸ்டத்தை’ மாற்ற வேண்டும் எனில் செய்ய வேண்டியதென்ன?
இப்போதுள்ள ஊழியர்கள், அதிகாரிகள், அவர்களுக்கு மேல் ஐ.ஏ.எஸ் தலைமை, அவர்களுக்கு மேல் அமைச்சர்கள் எனும் படிநிலை மாறி ஊழியர்கள், அதிகாரிகள், அவர்களை அவர்களுடைய சேவைக்கு ரேட்டிங் வழங்கி நிர்வகிக்கும் வாடிக்கையாளர்கள் (பொதுமக்கள்) என்று மாற வேண்டும். இந்த ரேட்டிங் இறங்கினால் சம்மந்தப்பட்ட ஊழியர், அவருக்கு மேலுள்ள அதிகாரிகள் வரை சம்பளம் தன்னியக்கமாக குறைக்கப்பட்டு, ரேட்டிங் ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு மேல் இறங்கினால் மூன்று மாத வேலை நீக்கம், ஒரேயடியான வேலை நீக்கம் என நடவடிக்கைகள் தன்னியக்கமாக நடக்க வேண்டும். சம்பளம், வேலை உயர்வு ஆகியவை இதை நம்பியே இருக்க வேண்டும். ஊழியர்களின் லகான் மேலதிகாரிகளிடம் இருந்தும், மேலதிகாரிகளின் லகான் அமைச்சர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு ஊரோ பெயரோ சொல்லாமல் பொதுமக்களான பயனர்கள் வழங்கும் ரேட்டிங்கைச் சார்ந்ததாக மாற்றப்பட வேண்டும். இப்போது ஒருவர் உயரதிகாரிக்குப் பயந்து வேலை செய்ய மாட்டார். பயனர்களைப் பார்த்து மட்டும் வேலை செய்வார். இரண்டுக்கும் பாரித்த வேறுபாடு உண்டு. இன்று கணினி வழியாக இதைச் சுலபத்தில் செய்ய இயலும். இதில் திருப்தி இல்லாத ஊழியர்களும் அதிகாரிகளும் நீதிமன்றம் சென்று போராட வேண்டியதுதான். மக்களுக்குத் தம் ரகசியத்தன்மையைப் பாதுகாக்கும் உரிமை உள்ளதால் அவர்கள் நீதிமன்றத்திற்கு அலையவும் வேண்டியிருக்காது. இது ஊழலைப் பெருமளவில் ஒழித்துவிடும். நீங்கள் பத்திரப் பதிவு செய்யவும்ம், ஒப்புதல் வாங்கவும் சிரமப்பட்டால் உங்களைப் போல சிரமப்படுவோரிடம் பேசி ஒருங்கிணைத்து ஒரு குறிப்பிட்ட ஊழியரை மட்டுமல்ல அவருக்கு மேலுள்ள பலரையும் கடும் சிரமங்களுக்கு உள்ளாக்கலாம். சாலை அமைப்பு, ஊராட்சி, நகராட்சி எங்குமே தரம் குறைந்தால் மக்களே நேரடியாக நடவடிக்கை எடுக்க முடிய வேண்டும். அப்போது ஊழல் தானாகவே நின்றுவிடும்.
இந்த அமைப்புகளை அமைச்சர்களும் ஆளுங்கட்சியும் கட்டுப்படுத்துகிற நிலைமை மாறினாலே டெண்டர் ஊழல்கள் முடிந்துவிடும். அரசின் வேலை என்பது நிர்வாகமாக அல்லாமல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதாகவே இருக்க வேண்டும். பொருளாதாரம், குறிப்பாக தனிமனித வருமானம் குறைந்தால், அவர்களுக்கும் தண்டனை (அடுத்தடுத்து தேர்தல்களில் பங்கேற்க தடை) இருக்க வேண்டும்.
இது அரசையும் அரசின் பல துறைகளையும் தனியாரைப் போல பயனர்களின் அங்கீகாரத்தை நாடி, அவர்களுடைய மதிப்பீட்டை நம்பிச் செயல்படுவதாக மாற்றும். தனியாரிலும் ஊழல் உள்ளது. ஆனால் அது பெரும்பாலும் மக்கள் பணத்தைச் சுரண்டுவதாகவோ கறுப்புப் பணத்தைப் பதுக்குவதாகவோ தான் இருக்கிறது. அதாவது ஏற்கனவே ஊழல் மலிந்துள்ள அரசின் அமைப்புகளைப் பயன்படுத்தித் திருடுவது. அந்த ஓட்டையை அடைத்தால் இதுவும் அடைந்துவிடும். இவ்வளவு ஊழல் நடக்காவிட்டால் இவ்வளவு திடீர் பெரும்பணக்காரர்கள், திடீர் ரௌடிகள் தோன்ற முடியாது.
நாம் இப்போது பயன்படுத்துவது பிரதிநுத்துவ மக்களாட்சி. நான் பரிந்துரைப்பது பங்கேற்பு மக்களாட்சி. ஊழல் என்பது பிரதிநுத்துவ மக்களாட்சியின் நோய். அது கண்டுபிடித்த கருவி. தார்மீக அடிப்படையில் ஒரு பிரதிநிதியோ ஊழியரோ ஒழுங்காக இருந்தால் கட்டமைப்பு சிறப்பாக இருக்கும் என்பது உண்மையல்ல. மனிதர்கள் அடிப்படையில் தன்னலமானவர்கள். வாய்ப்புக் கிடைத்தால் சிலர் திருடுவார்கள். ஒரு அமைப்பே மனிதர் திருடுவதை ஊக்கப்படுத்தும் வண்ணம் ‘தன்னிச்சையாக’ கட்டுப்பாடின்றி அமைக்கப்பட்டால் திருட்டு ஒழுங்குபடுத்தப்பட்டு ஊழலாகும். தனியாரிடம் நிதியளித்து அரசு சேவைகளைப் பெறும் நிலை வந்தபின் இந்த ஊழல் பன்மடங்கு அதிகரிக்கிறது. அதாவது ஊழலை தனியார் முதலீட்டாளர்கள் வானுயரத்துக்குக் கொண்டு போய் அவர்களும் திருடிப் பெரும்பணக்காரர்கள் ஆகிறார்கள். இதற்கான ஒரு தனி தொழில்துறையே, தனி வர்க்கமே தோன்றிவிட்டது. பிரதிநுத்துவ மக்களாட்சி இதைக் கட்டுப்படுத்துவதற்கான யுக்தியை வகுக்கவில்லை. அதை மாற்றினால் மட்டுமே ஊழல் ஒழியும். கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றுவது நமக்கு ஒரு திருப்தி கொடுக்கும். ஆனால் ஒரு குழுவிடம் இருந்து ஊழல் மற்றொரு குழுவுக்குப் போகும். மாறி மாறி பல குழுக்கள் திருடுவதால் மக்களுக்கு ஒரு பயனும் இல்லை. இது மக்களுக்கும் தெரியும். அவர்களுக்கு சரியான நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பை இந்த மக்களாட்சி அமைப்பு வழங்கினால் அவர்கள் ஊழலைத் தண்டிப்பார்கள். இப்போது அப்படி ஒன்று இல்லை. அதுவரை ஊழல் ஒழிப்பு என்பதே - No Other Choice படத்தில் வருவதைப் போல - மக்கள் முகத்தில் மக்களைக் கொண்டே கரியைப் பூசும் ஒரு நடவடிக்கை மட்டுமே.
கருத்துகள்