Skip to main content

மூன்று மாநில தோல்விகள் சொல்வதென்ன?

 



மே.வங்கத்தில் மமதா பேனர்ஜியின் தோல்வி என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே நான் பல வங்காளிகளிடம் பேசி வருகிறேன் (மாணவர்கள், சக-ஊழியர்கள், எழுத்தாளர்கள்). யாருமே மமதா மீது ஆதரவு நிலையில் இல்லை. ஒரு பிரபலமான தலைவரை எப்படி மக்கள் வெறுக்க முடியும் என எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அதுவும் பாஜகவுக்கு சரியான முட்டுக்கட்டை போடும், அதிரடி கருத்துக்களை வைக்கும் கட்சி அவர்களுடையது என்பதால் அவர்கள் மீது தமிழ்நாட்டில் ஒரு நேர்மறையான பார்வையே இருக்கும். ஆனால் சொந்த ஊரில் அப்படி இல்லை. வளர்ச்சியின்மை, ஊழல், வாரிசு அரசியல், வளர்ச்சியற்ற ஏற்றத்தாழ்வான எல்லா மாநிலங்களிலும் தோன்றும் அராஜக கும்பல்களின் வளர்ச்சி, வன்முறை, குற்றங்கள் அங்கும் உண்டு. வங்க அடையாளப் பெருமிதம் மட்டுமே மமதாவை இத்தனை நாட்கள் காப்பாற்றியது என்பது என் பார்வை. இப்போது மக்கள் தாங்க முடியாத இடத்துக்கு நகர்ந்துவிட்டார்கள். அடுத்து பல லட்சம் சிறுபான்மை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செயது. சுமார் 5% மமதா ஆதரவு வாக்காளர்களை நீக்கிவிட்டார்கள் என்று யோகேஷ் யாதவ் அண்மையில் ஒரு நேர்முகத்தில் சொன்னார், கட்டுரைகளில் எழுதவும் செய்தார். 'சிறப்பு தீவிர திருத்தம்' ஒரு பாஜக சார்பு வாக்காளர் திருத்தமாகவும் மாறிவிட்டதுதான். ஆனால் இது மட்டுமே மமதாவின் தோல்விக்கு காரணம் அல்ல. என்னதான் தேர்தல் ஆணையம், வாக்குப் பதிவு எந்திர தில்லுமுல்லுகள் நடந்தாலும் மக்கள் பெரும்பான்மை வாக்குகள் ஒரு கட்சிக்குப் போனால் அதைத் தடுக்க யாராலும் இயலாது.


இதில் ஒரு முக்கியமான பாடம் உண்டு - கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாகவே அரசியலென்பது ஒரு பக்கம் தேசப்பாதுகாப்பு, இந்து சமூகப் பாதுகாப்பு, தேசப்பற்று என்று ஒரு பக்கமும், மாநில உரிமை, மதவாத எதிர்ப்பு, மொழியுணர்வு, எதிர்ப்பரசியல் என்று இன்னொரு பக்கமும் கதையாடல் உருவாக்கமே அரசியல் ஆகி விட்டது. கிட்டத்தட்ட இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் இருந்ததைப் போல எதிரிகளையும், மற்றமைகளையும் தேடுவதையும் எதிர்ப்பதையும், ஒத்தவர்களுடன் இணைந்து போராடுவதையும் முன்னிலைப்படுத்துகிறோம். பாஜக ஆட்சிக்கு வரும் முன்பு இப்படி இல்லை. இரண்டு எதிர்முனைகள் உருவாக்கப்பட்டு அவற்றுக்கு இடையில் முடிவற்ற கால்பந்து போட்டி ஒன்று நடந்து வருகிறது. இதனிடையே அரசியல் என்பது மக்களுக்கு அடிப்படை வசதிகளைப் பண்ணித் தருவது, அன்றாட வாழ்க்கைக்குப் பாதுகாப்பை உறுதி செய்வது, வளர்ச்சிக்கான கட்டமைப்புகளை உருவாக்குவது, வருமானத்தை அதிகரிப்பது என்பதை ஆளுங்கட்சிகள் பெருமளவு மறந்துவிட்டன. அவ்வப்போது சில நலத்திட்டங்களை ஒன்றிய, மாநில அரசுகள் அறிவிப்பதுடன் சரி. உழைக்கிற மக்களை ஒரு திரட்சியாகப் பார்க்கத் தவறி அவர்களை அரசியல் பிரஜைகளாக்கி விட்டனர். பொருளாதாரம் தேக்க நிலை அடைந்து மக்கள் செலவுக்குப் பணமின்றி திணறிக் கொண்டிருக்கும்போதும் அரசியல் கட்சிகள் மேற்சொன்ன கால்பந்தாட்டத்தையே ஆடிக் கொண்டிருந்தனர்.

கேரளத்தில் இடதுசாரி ஆட்சி அமைந்தபோது கூட அவர்களும் 'வளர்ச்சி' எனும் கார்ப்பரேட் சித்தாந்தத்தைக் கொண்டு வந்து முதலீட்டை இழுக்கப் பார்த்தார்கள். அந்த வருமானத்தை மக்களுக்கு முகமை அளிப்பது, உரிமைகளைப் பாதுகாப்பதன் வழியாக பகிர்ந்து கொடுக்க முயலவில்லை. கூடுதலாக, அவர்களுடைய கட்சி ஊழியர்களின் அராஜகச் செயல்கள் மீது மக்களுக்கு கசப்பு ஏற்பட்டுள்ளது. பினராய் கட்சியை அரசாகவும், அரசையே மாநிலமாகவும் கருதுகிற ஒரு பண்பாட்டை ஏற்படுத்தினார். கட்சியை விமர்சிப்போர் துன்புறுத்தப்பட்டனர். விளைவாக இம்முறை தேர்தலில் தோற்றுள்ளார்கள்.
அதுவே தமிழ்நாட்டிலும் வேறொரு விதத்தில் நடந்தது - இங்கும் தொழ்ல்வளர்ச்சி அபாரம், ஆனால் வருமானம் கிராமங்கள், சிறுநகரங்கள், ஏழைகள், கீழ்மத்திய வர்க்கத்தினர் நோக்கி வளர்ச்சியின் பயன்கள் போகவில்லை. சிறுதொழில்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளைச் செய்து, கூட்டுறவுகளை உருவாக்கி கீழ்மட்டத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவது, தொழிலாளர் நலன்களைக் காப்பது, தரமான இலவசக் கல்வியை உத்தரவாதம் செய்வது, கல்வியில் தனியாரைப் பின்னிலைப்படுத்துவது, வரிகளைக் குறைப்பதன் வழியாகவும், இலவசங்களைக் குறைப்பதன் வழியாகவும் இதற்கான வருமானத்தை உத்தரவாதம் செய்வதை திமுக பிரதானப்படுத்தவில்லை. ஒருபக்கம் இலவசங்கள், இன்னொரு பக்கம் மாணவர் பயிற்சி, தொழிற்சாலைகளுக்கு கட்டமைப்பு வசதிகள், முதலீட்டாளர்களுக்கு உவப்பான ஏற்பாடுகள் என்று ஒரு மேல்மத்திய, உயர்த்தட்டு கார்ப்பரேட் அரசியலை நோக்கியே திமுக தன்னையறியாமலே நகர்ந்து கொண்டிருந்தது. நான் கடந்த முறை சென்னை வந்திருந்தபோது எனக்கும் நண்பர் கண்ணனுக்கும் ஒரு உரையாடல் நடந்தது. நாங்கள் மாநிலத்தில் உள்ள வளர்ச்சியைப் பற்றியும் உள்கட்டமைப்புகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நான் அவரிடம் "இவையெல்லாம் புறமே நடப்பன. உங்கள் வாழ்க்கையில் உங்களால் தொட்டுணரக் கூடிய மாற்றம் என்று எதைச் சொல்வீர்கள்? தெருவில் அழுக்கு ஆடையுடன் நடந்து போகிறவனுக்கு கிடைத்த மாற்றம் என்ன? ஒவ்வொருவரும் இக்கேள்வியைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். நாம் அரசியல் உணர்வு சார்ந்து பெருமிதப்படலாம். ஆனால் நடைமுறையில் உங்கள் கையில் வருவதென்ன?" அவர் எதுவும் இல்லை என்றுவிட்டு "ஆனால் அண்ணே...." என்று நியாயப்படுத்த தொடங்கினார். லட்சியவாதம், கருத்துமுதல்வாதம் கட்சியின் கருத்தியலாக நம்மை ஆட்கொள்ளும்போது நடப்புலகில் நம் இருத்தலை நாம் அறியாமல் இல்லாத ஒன்றுக்காக பெருமிதம் கொள்ளவும் வருந்தவும் தொடங்குவோம், அது நல்லதல்ல என்று அவரிடம் நான் சொன்னேன்.

மாநிலத்தில் உள்ள வளர்ச்சியைப் பற்றி நானும் பாராட்டுவேன். ஆனால் வளர்ச்சியின் பயன் கருத்தாகவோ தரவாகவோ அல்லாமல் பொருளாக நம் கையிலும் ஜேப்பிலும் இருக்க வேண்டும். அனைவருக்கும் இது சாத்தியமாவதே வளர்ச்சி. கொள்கை, அரசியல், சமூகத்திற்குப் போய்ச் சேரும் நலத்திட்டங்கள் இரண்டாம் பட்சமே. மாநிலம், தேசம் ஆகியவை நமது புலன்களால் அறிய முடியாதபோது பயனற்ற கருத்தமைவுகளே. மாநில, தேச வளர்ச்சியும்தான். கர்நாடகத்தில் பாஜக ஆட்சி விலகி காங்கிரஸ் ஆட்சி அமைத்தது ஒரு நிம்மதியைத் தந்தது. எப்போதுமே சூழலில் உள்ள ஒரு பயம், கலவரம் வெடிக்கும் பயம், வெறுப்பு மனநிலை குறைந்தது. ஆனால் அதைத் தாண்டி மக்களின் அன்றாட வாழ்க்கையை காங்கிரஸ் மேம்படுத்தவில்லை. காங்கிரஸ் மட்டுமல்ல கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகவே ஆட்சியையும் நிர்வாகத்தையும் நாம் பார்க்கும் விதமே தவறாக உள்ளது. உ.தா., ஒரு தனியார் நிறுவனம் தன் லாபத்தைப் பெருக்குவதில் கட்டும் இடையறாத முயற்சி, மும்முரத்தை அரசுகள் இன்று மக்களின் வருமானத்தை, சொத்துக்களைப் பெருக்குவதில் காட்டுவதில்லை. அவர்களுடைய கவனமெல்லாம் சொந்த சொத்தைப் பெருக்குவதிலும் 'அரசியல்' செய்வதிலும் உள்ளது. அதன் விளைவே அரசியல் நிச்சயமின்மை.

பாஜகவின் இந்துத்துவத்துக்கு எதிரான மூன்று அரசுகளின் வீழ்ச்சியை நான் இவ்வாறுதான் பார்க்கிறேன்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...