Skip to main content

மனுஷுக்கு வாழ்த்துகள்

 மனுஷ்ய புத்திரன் - Tamil Wiki

திமுக ஆட்சிக் காலத்தில் சில இலக்கியவாதிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் பல்வேறு குழுக்களில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. எனக்குத் தெரிந்தே சிறப்பாகச் செயல்பட்டவர்கள் உள்ளவர்கள் இருக்கிறார்கள். (எனக்கு அங்கு நடந்தவற்றில் நேரடியாகத் தெரிந்தது குறைவு என்பதால் சொல்கிறேன்.) அவர்களில் நூலகக ஆணைக் குழுவின் தலைவராக மனுஷ்ய புத்திரன் சிறப்பாகச் செயலாற்றினார் என்று நான் தனியாகச் சொல்லத் தேவையில்லை. ஊருக்கே தெரிந்த உண்மை அது. குறைவான அதிகாரமும் எல்லையும் கொண்ட சிறிய பொறுப்புதான். அதை வைத்தே என்னவெல்லாம் செய்தார் என்று யோசித்துப் பார்க்க வியப்பாக உள்ளது. நூலக அரங்குகளை கூட்டங்களுக்காகச் சிறப்பாக நடத்தினார். அதற்கு ஒரு எழுத்தாளர் அங்கு பொறுப்பில் இருக்க வேண்டியிருக்கிறது. (இனி பாருங்கள். தூங்க ஆரம்பித்துவிடுவார்கள்.)

நான் கவனித்ததை மட்டும் சொல்கிறேன்: இன்ஸ்டாவில் மாணவர்களை கவிதை வாசிக்க வைத்தது, அதற்குப் பயிற்சி அளித்தது, எழுத்தாளர்களையும் சிந்தனையாளர்களையும் அவர்களுடன் தொடர்ந்து உரையாட வைத்தது, கவிதை தினமன்று கூட்டங்கள் நடத்தியது, பல கல்லூரிகளில் பேசி அங்குள்ள அரங்குகளில் கூட்டங்கள் நடத்தியது என ஒரு சலனத்தை நிகழ்த்திக் கொண்டே இருந்தார். பெரும்பாலும் தன் அண்மையில் உள்ள, தொடர்பில் உள்ள படைப்பாளிகளை இதற்குப் பயன்படுத்திக் கொண்டார்.

அரசு சார்ந்த ஒரு பொறுப்பில் இருக்கையில் சமூகத்துடன் பரவலாகத் தொடர்புறுத்தவும், அனைவருக்கும் சென்று சேரத்தக்க விதத்தில் நிகழ்ச்சிகளை நடத்தும் கட்டாயம் இருக்கும். ஒரு தனியார் அமைப்பு சிறிய அளவில் நபர்களை வைத்து நடத்தும் கூட்டங்களில் இருக்கும் ஆழமும் தீவிரமும் சாத்தியப்படாது. இந்த எல்லைகளுக்குள் ஒரு சமநிலையைப் பேண முயன்றார். நான் கடந்த சில ஆண்டுகள் சென்னையில் பணி செய்திருந்தால் எந்த விதத்திலும் என்னால் அவருக்கு உதவ இயலவில்லை என்று அவ்வப்போது வருத்தப்படுவேன்.

அவர் இப்போது அப்பதவியில் இருந்து விலகுகிறார். அவருடன் பயணித்தவர்களுக்கு இது பெரும் துக்கமாக இருக்கும் என அறிவேன். அற்புதமான மனிதர். யார் அவருடன் இருந்தாலும் ஒரு தனி செயலூக்கம் வந்துவிடும். யாருடைய முடிவுகளிலும் குறுக்கிடாமல் கட்டுப்படுத்தாமல் நிறைய சுதந்திரம் அளிப்பார்.

அதேநேரம் இத்தகைய பணிகள் ஒரு எழுத்தாளருக்கு தண்டனைதாம். எழுத்தாளர்கள் இவற்றை எடுத்துக் கொள்ளவே கூடாது என நினைக்கிறேன். தினம் தினம் நிறைய பேர்களுடன் பேச வேண்டும், பொறுப்புகள், கவலைகள், ஒருங்கிணைக்கும் அழுத்தம் நம் மனதில் அமர்ந்து அழுத்தும். நேரத்தை முழுமையாகத் தின்றுவிடும். உடல் ஆற்றலைவிட மீட்க முடியாதது அக ஆற்றல்தாம். தொடர்ச்சியாக கூட்டங்களில் கலந்துகொள்ளும்போதும் அவற்றை நடத்தும்போதும் நாம் அதனைத்தான் அதிகமாக இழக்கிறோம். ஒரு எழுத்தாளருக்கு அகத்தனிமையும் அவசியமானது - கூட்டத்தின் நடுவே இருந்தாலும் நாம் உள்ளுக்குள் எதிலும் பட்டுக்கொள்ளாமல் சிந்தித்துக் கொண்டும் மொழிக்குள் ஒரு பந்தைப் போல உருண்டு சென்று கொண்டும் இருப்போம். இத்தனிமை வரும் அமைதியில் இருந்தே நம் அமைதியின்மையின் சொற்கள் பிறக்கின்றன. இப்பணி இல்லாவிட்டால் மனுஷ்ய புத்திரன் கடந்த ஐந்தாண்டுகளில் 4-5 நாவல்களையாவது எழுதியிருப்பார். தனக்கென ஒரு வடிவத்தையும் மொழியையும் நாவலில் கண்டடைந்திருப்பார். கொஞ்சம் அதி-செயலூக்கத்துடன் புற உலகில் இருந்துவிட்டார். வரும் ஐந்தாண்டுகளில் அவர் புனைவெழுத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இது ஒரு நல்வாய்ப்பு.

அதிகமாக கூட்டங்கள் நடத்துவதும் கலந்துகொள்வதும் படைப்பாற்றலும் சிந்தனையாற்றலும் இல்லாதவர்களோ அதை இழந்து விட்டவர்களோ செய்ய வேண்டியது. மனுஷ்ய புத்திரன் தன் படைப்பாற்றலின் உச்சத்தில் இருக்கிறார்.

இன்னொரு விசயம் அவர் கடந்த ஐந்தாண்டுகளை, தனக்குள்ள வாய்ப்புகளைக் கொண்டு, தன் படைப்புகளை ஆங்கிலத்தில் கொண்டு வரவும், இந்தியா முழுக்க நடக்கும் இலக்கிய விழாக்களில் கலந்துகொள்ளவும் பயன்படுத்தி இருக்க முடியும். ஆனால் துளி கூட முயலவில்லை. அதேபோலத்தான் உயிர்மைப் பதிப்பகத்தையும் அதில் எழுதுகிறவர்களையும் பாதி கட்டி முடித்த கட்டிடத்தைப் போல விட்டுவிட்டார். எனக்கு இது குறித்து வருத்தமுண்டு. அவர் தன்னை சார்பற்றவராகக் காட்டிக் கொள்ள அதீதமாக முயன்றார். காலச்சுவடு படைப்பாளிகளுக்கு (ஒரு சிலருக்காவது) கண்ணன் என்னவெல்லாம் வாய்ப்புகளைப் பெற்றுத் தருகிறார். ஜெயமோகன் தாய்க் கோழி தன் குஞ்சுகளை அழைத்துச் செல்வதைப் போல தன்னை ஒருநாள் வந்து பார்த்தவர்களைக் கூட நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பதாகக் கனவு கண்டுவிட்டு அதைச் செய்ததாக அறிவிக்கிறார்; சைக்கிள் கூட விடத் தெரியாதவர்களை விண்கலனில் ஏற்றி தண்ணீரில்லாத கிரகத்துக்கு அனுப்பி விடுகிறார். அவ்விதத்தில் மனுஷ்ய புத்திரன் தனக்குக் கிடைத்த வாய்ப்பை தன் பதிப்பக படைப்பாளிகளுக்காக சரிவரப் பயன்படுத்தவில்லை என்றே சொல்வேன். நீங்கள் எந்த அமைப்பில், பதிப்பகம் / இதழ்-சார்ந்த குழுவில் இருந்தலும் எதாவது ஒரு பலனிருக்கும் - ஆனால் உயிர்மை எழுத்தாளர்கள் உயிர்மையில் இருப்பதாலே எங்கும் அழைக்கப்பட மாட்டார்கள். இதுவே ஜெயமோகனாக இருந்திருந்தால் தமிழ்நாட்டையே 'விஷ்ணுபுர நாடாக்கியிருப்பார்'. இந்த ஐந்தாண்டுகள் மிகக்குறைவான விருது பெற்றவரும் மனுஷ்தான். எங்கள் மண்ணின் மகனான ஒரு படைப்பாளி இருக்கிறார். அவர் மட்டும் நூலக ஆணைக்குழுத் தலைவராக இருந்திருந்தால் ஐந்தாண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு, தனியார் விருதுகளை வாங்கிக் குவித்திருப்பார். எனக்குத் தெரிந்து மனுஷ் அரசு அதிகாரிகளுக்கான அரசாங்கக் குடியிருப்பில் ஒரு வீட்டை வாடகைக்குப் பெற்றார் என்பதைத் தாண்டி எதையும் அனுபவிக்கவில்லை. மனுஷுக்குள் ஒரு பயங்கர காந்தியவாதி இருக்கிறார். அவரதை மாற்றிக் கொண்டால் நன்றாக இருக்கும்.

கடந்த முறை சர்வதேசப் புத்தக விழாவுக்குச் சென்றபோது உயிர்மை நூல்கள் மற்ற பதிப்பக நூல்களை விட குறைவாகவே மொழியாக்கப்பட்டுள்ளன என்பதை கவனித்தேன். சர்வதேசப் பதிப்பாளர்களுடன் பேசுவது, விருந்துகளில் கலந்துகொள்வது, சர்வதேசப் படைப்பாளிகளுடன், முகவர்களுடன் லாபி செய்வது, அதைக் கொண்டு தனக்காக எழுதுவோரின் நாவல்களை, கதைகளை பிரெஞ்சிலோ ஜெர்மனிலோ கொண்டு போவது என எதையும் அவர் செய்யவில்லை. காலை 5 முயல் 10 வரை கட்சிப் பணி, 10இல் இருந்து இரவு பன்னிரெண்டு வரை நூலக ஆணைக்குழு பணி, இரவு பன்னிரெண்டில் இருந்து காலை 5 வரை மாணவர் பயிற்றுவிப்புப் பணிகளுக்கான திட்டமிடல் ஒருங்கிணைப்பு என்று கிறிஸ்துவ ஊழியக்காரர்கள் தன்னலமற்று பணியாற்றுவதைப் போல இருந்தார். இப்படியெல்லாம் ரொம்பவும் அனைவருக்குமானவராகப் பணியாற்றத் தேவையில்லை. அவர் கொஞ்சம் instrumental ஆக இருக்கலாம். இவ்வளவு நல்லவராக, "கௌரவம்" சிவாஜி போல இருக்கத் தேவையில்லை.

முக்கியமாகப் பாராட்டத்தக்க வேண்டிய விசயம் அவர் இப்படி தூங்காமல் பணி செய்ததல்ல. அவர் ஒரு நண்பராகவோ சக எழுத்தாளராகவோ துளியும் மாறாமல் இருந்ததே. டிவி விவாதங்களில் தலையை வெட்டி வெட்டி அவர் பேசும்போது அதிலொரு அதிகார மமமதை உள்ளதாகத் தோன்றும். ஆனால் அது அவரது தற்பாதுபாதுகாப்பு எத்தனம்தான். அதிகாரம் அவரைச் சற்றும் நிலைமாற்றவில்லை, தடம் மாறச் செய்யவில்லை. இதுவே ஆகக் கடினமான செயல். எப்போதாவது கோபித்துக் கொண்டு மாதக்கணக்காகப் போனை எடுக்காமல் இருப்பாரே தவிர அதுவும் அசல் கோபமாக இருக்காது. பெரும்பாலும் எல்லாருக்கும் அணுக்கமாக இருந்தார். ஒரு போனைப் போட்டால் தன்னால் எதையாவது செய்ய இயலுமா என்றே முதலில் யோசிப்பார். அவர் பொறுப்புக்கு வரும் முன்பும் அப்படியே இருந்தார், பிறகும் கூட அப்படியே. இது பெரிய விசயம் - எனக்குத் தெரிந்து பலர் அதிகாரம் கிடைத்ததும் புத்தருக்கு ஞானம் கிடைத்ததைப் போல மோன நிலைக்குள் சென்றுவிடுவர். மனுஷ் அப்படி அல்லர் என்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. திமுக ஆட்சி இழந்து தன் பதவியையும் அவர் துறந்தபிறகே மோன நிலைக்குள் போய்விட்டார். பலமுறை அழைத்தும் எடுக்கவில்லை.

இப்படி அபாரமாகப் பணியாற்றி நம் நெஞ்சங்களை வென்ற மனுஷ்ய புத்திரனுக்கு இந்த பணி விலகல் தருணத்தில் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...