"பிறழ்" ஒரு தனித்துவமான நாவல். கோபிகிருஷ்ணனின் கதைகளுடன் ஒப்பிடலாம் என்றாலும் அவரது அக்கறைகள் மனபிறழ்வை அடக்கப்பட்ட காமத்தின் வெளிப்பாடுகள் எப்படி சமூக மனத்துடன் முரண்படுகின்றன என்பதே. நிஜந்தனின் நாயகனுக்கு இம்மாதிரி காமத்தையும் அது நடத்தையில் ஏற்படுத்தும் சிதைவுகளையும், தனிமனித-சமூக உறவுகளில் வெளிப்படும் அபத்தமான கணங்களையும் தள்ளி நின்று பார்க்கிற சாத்தியமோ அவசாசமோ இல்லை. கோபிகிருஷ்ணன் காமத்தை கொஞ்சம் சர்ரியலாகவும் சில இடங்களிலில் கனிவாகவும் பிரியமாகவும் பார்க்க நிஜந்தனோ ஒருவர் அதன் பகுதியாகவே மாறி துன்புறுவதை, மெல்ல மெல்ல அழிவதைக் காட்டுகிறார். கோபிகிருஷ்ணனுடையது அபத்த நகைச்சுவை நாடகம் என்றால் நிஜந்தனுடையது துன்பியல் நாடகம்.
"பிறழ்வின்" நாயகனின் பிரச்சினை வளர்ந்த பெண்ணுடல்கள் தாம். குழந்தையாக இருக்கையீல் அவர் அத்தகைய பெண்களின் (அம்மா, டியூசன் ஆசிரியை) ஏற்பையே அதிகமும் நாடுகிறார். அவர் நேசிக்கிற பெண்கள் நிதானமாகவும் பொறுப்பாகவும் தம் உணர்ச்சிகளைத் தமக்குத் தேவையானபடி வெளிப்படுத்தி பிறரையும் கையாளக் கூடியவர்களாக உள்ளார்கள் (அவர் நேசிக்கிற - டியூசன் டீச்சரை நினைவுபடுத்தி மனதைச் சிதற வைக்கும் - மலையாளிப் பெண், அவரது பிரமையாக வருகிற கோதுமை வாசம் கொண்ட பெண்). சிறுவயதில் இருந்தே அவர் எதிர்கொள்ளும் ஆண்கள் வன்முறையைப் பிரயோகிக்கிறவர்கள் (குடித்துவிட்டு அம்மாவை அடிக்கும் அப்பா, அவனை வன்புணரும் நபர், கம்யூனிஸ்ட் கட்சியில் அவனைக் கட்டுப்படுத்துகிற, ஒழுங்குபடுத்துகிற, கடைசியில் வெளியேற்றுகிற தலைவர்கள்). அவர் வன்புணரப்படும்போது கூட அது அச்சத்தையும் அருவருப்பையுமே கொண்டு வருகிறதே ஒழிய, அதனால் அவருக்கு மனப்பிறழ்வு ஏற்படுகிறதே ஒழிய, அது ஒரு நீண்டகால மனக்குழப்பத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால் டியூசன் ஆசிரியை அவரை வன்புணரும்போது அவருக்கு அப்படியெல்லாம் ஆகிறது.
ஒரு சிறுவனாக அவர் தன் ஆசிரியையின் நேசத்தை, தொடுகையை விழைகிறார், ஆனால் உடலுறவாக அது மாறுவதை அல்ல, அதை எதிர்கொள்ளும் திராணி தனக்கு அப்போது இல்லை என்கிறார். இன்னொரு காரணம், அந்த காமமற்ற ஈர்ப்பே அவருக்குத் தன் தாயிடம் ஏற்படும் அடக்கப்படும் ஈர்ப்பினால் வருவதே. அதாவது தாயுடனான உறவைத் தள்ளிப் போட வேண்டிய கட்டாயம் அவருக்குள் இருக்கிறது. டியூசன் ஆசிரியை அவரை வன்புணரும்போது அவர் நாயகனின் தந்தையின் வடிவத்தை, அவரை வன்புணர்ந்த ஆணின் வடிவத்தை, எடுக்கிறார். அதாவது தாயின் காமத்தை தந்தையின் வன்முறை 'இடையூறு' செய்கிறது. ஒரு குறியீடு இன்னொரு குறியீட்டை ஆட்கொள்கிறது. அப்போது ஏற்படும் அதிர்ச்சி அவனை நிலைகுலையச் செய்கிறது.
இங்கே நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும் - பெண்ணுடலை - வளர்ந்த பெண்களின் சரீரத்தை, அம்மாவின் சரீரத்தை - நேரடியாகப் பொருள்படுத்த அவசியம் இல்லை. பெண் தேகமானது இச்சமூகத்தில் பண்பாட்டின், அகத்தின் இருண்மையின் குறியீடுதான். இந்த இருண்மையை நாம் மரணமாகவும் காணலாம், பிறப்பாகவும் காணலாம், காமமாகவும் காணலாம் (மூன்றும் ஒன்றுதானே). தாயின் பிறப்புறுப்பு மானிடரின் பிறப்பும் இறப்பும் தாம். இதனால்தான் "பிறழ்" நாவலின் நாயகன் தனக்கு விடுதலையும் திறப்பும் மரணம்தான் என்கிறான். ஆனால் அப்பாக்களின் உடலோ, வளர்ந்த பிற ஆண்களின் உடல்களோ இதற்கு எதிர்-திசையில் செல்கின்றன - வலிமை, ஆதிக்கம், அதிகாரம், அதிகாரத்தில் மட்டுமே இருத்தல். நாம் இந்த இரு உடல்களுக்கும் நடுவே சமநிலையைப் பேணப் போராடுகிறோம். அன்றாட உலகை நம்மால் விடவும் முடியாது, மரணத்தின் இருள் ஆழத்தை மறுக்கவும் முடியாது. ஆனால் சில நேரங்களில் இதிலோ ஒன்று நம்மை முழுக்க ஆட்கொள்ளக் கேட்கிறது. நாம் அப்போதே பிறழ்கிறோம்.
அடக்கப்பட்ட காமமே ஒருவிதத்தில் "பிறழின்" நாயகனின் குற்றவுணர்வைச் செலுத்துகிறது. ஒருவர் தன் தாயின் உடலை நாடுவது வாழ்தலை எதிர்த்துச் செல்வதே. அது இன்பத்துக்கான நாட்டம் மட்டுமல்ல, அது எல்லாமே சென்று முடியும் சூனியத்தை நாடுவதும்தான். இயல்பாகவே இத்தகையோர் இலக்கியம், பண்பாடு, படைப்பாக்கம் என நகர்வார்கள். அங்குதான் அரூபமான ஒரு பெண்ணுடல், அம்மாவின் மீ-உடல் ஒருவருக்குக் கிடைக்கிறது. ஆனால் "பிறழ்" நாயகன் இந்த அரூபப் பெண்ணை அடையும் முன்பு இளவயது வன்புணர்வு நினைவுகள் - அம்மாவே அப்பாவாகி அவனைக் குழப்புவது - அவனை மனப்பிறழ்வுக்குள் தள்ளிவிடுகிறது. வாழ்வின் வன்முறையும் எதிர்வாழ்வின் படைப்பாக்கமும் அவனை இரு திசைகளிலாய் பிடித்தாட்டுகின்றன. காலிலும் கையிலுமாய் கயிறுகள் கட்டப்பட்டு எதிரெதிர் திசைகளில் இழுத்துச் செல்லப்பட்டு ஒருவர் கொல்லப்படுவதைப் போல.
"பிறழ்வில்" மூன்று காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்தவை:
1) மலம் - மனநல மருத்துவமனைக் கழிவறையில் நாயகன் இருக்கையில் ஒர் சகநோயாளி அங்கு அத்துமீறி நுழைந்து மலத்தை எடுத்து நாயகனின் வாயில் திணிக்கிறார். நாயகன் கதறிவிட்டு மயங்கி விழுகிறார். மலம் என்பது கழிவு மட்டுமல்ல ஒரு குறியீடும்தான். அது அவரது உடலின், பொருண்மையான உலகின் குறியீடு. மனம் துன்பத்தைத் தாள முடியாது போகையில் தன்னைத் தின்றும், கழிவை உட்கொண்டும் அவ்வலியைத் தாங்க முயல்கிறது. இது உலகைத் தின்று உலகை மீட்கும் மனதின் தவிப்பாக உள்ளது.
2) பேருந்து - நாயகன் பேருந்தில் செல்லும்போது அதன் சுவரெங்கும் பெண் குறிகள் வரையப்பட்டிருப்பதாக அவருக்குத் தோன்றுகிறது. அவரால் ஒரு கட்டத்திற்கு மேல் பெண்களின் மத்தியில் இருக்க முடியாமல் போகிறது. இது டியூசன் டீச்சரின் வன்முறையின் நினைவினால் ஏற்பட்ட பயமாக இருக்கலாம். பின்னர் தன் காதலியின் மயிர் மழிக்கப்பட்ட பெண்குறியும் அவரை அவ்வாறே மனநலம் பிறழ்ந்து தடுமாற வைக்கிறது. இந்த இடத்தில், ஒரு பேருந்து முழுக்க நிதம்பங்களின் சித்திரங்கள், அவற்றுக்குள் பயந்து தடுமாறும் ஒரு மனிதன் எனும் படிமமே கவித்துவமாக, சுவாரஸ்யமாக உள்ளது.
கடிகாரம் - அவர் மருத்துவமனை வார்டில் இருக்கையில் அவருக்கு அங்கு ஒரு கடிகாரம் டிக் டிக் டிக் என ஓசையெழுப்புவதாகத் தோன்றுகிறது. ஆனால் அதில் முள் நேர்கோட்டில் நகர்வதில்லை. அது நகர்வதே இல்லை. அவருக்கு இது மிகுந்தப் பதற்றத்தை உண்டாக்குகிறது. அவர் மருந்து அருந்தி மனம் சீராகித் திரும்ப அங்கு வரும்போது அது ஒரு டிஜிட்டல் கடிகாரம், அதில் முள்ளே இல்லை. எனில் இந்த பிரமை எதற்கான குறியீடு? காலமா? அவர் ஏன் காலம் நகர்ந்தும் நகராமல் தன்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறது என நினைக்கிறார்? எதிர்-வாழ்வின் பிடியில் இருக்கும் அவருக்கு அக்கடிகாரம் காலம் குறித்த ஒரு பக்கத்தைத் திறந்து காட்டுகிறது. அட்டகாசமான குறியீடு இது. நான் இந்நாவலைத் திருத்தி எழுதுவதானால் டியூசன் ஆசிரியை அவரை வலியுறுத்தி கூடும் காட்சியில் அவர் அந்த பிரமைக் கடிகாரத்தைப் பார்த்து திகைத்துப் போய் அதில் புகுந்து ஆசிரியையின் வீட்டை அடைவதாக எழுதியிருப்பேன். இன்பத்தை நுகரும் உடல்களில் நகரும் கடிகாரங்களைப் பற்றியும் எழுதியிருப்பேன். அந்தளவுக்கு கவித்துவ சாரம் அக்காட்சியில் உள்ளது.
இந்த நாவலின் பலம் - அதன் களத்துக்கு அடுத்தபடியாக -தன் இத்தகைய சொந்த வாழ்க்கையில் இருந்து பெற்ற குறியீடுகளை நிஜந்தன் அழகாக எழுதியுள்ளதே. அவரது நடை துண்டுத்துண்டாக, தன்னைத் தானே சிதைப்பதாக, மினிமலிஸ்டிக்காக உள்ளது. அவர் தொடர்ந்து எழுதியிருக்கும் பட்சத்தில் இதுவே அவரது தனித்துமான நடையாக உருப்பெற்றிருக்கும்.
இந்நாவலின் பலவீனம் சரியான முடிவு இல்லாமையும், படிமங்களை நீட்டித்து சில காட்சிகளை வலுப்படுத்தாததும், உளவியல் எதார்த்தக் கதைகூறலுக்குள் (psychological realism) அவர் சிக்கிக் கொண்டது. மேற்சொன்ன படிமங்களும் குறியீடுகளும் அந்த கோதுமை வாசத்துப் பெண்ணும் வரும்வரையில் கதை ஒரேயிடத்தில் சிக்கிக் கொள்கிறது. மேலும், எதார்த்தமாகக் கதையைச் சொல்ல நிஜந்தன் சற்று சிரமப்படுகிறார். எதிலும் சிக்காமல் அத்துமீறிப் போகும் வாழ்க்கையை ஒரு இலக்கிய வடிவத்துக்குள் அடைக்கப் பார்க்கிறார். ஒரு பின்நவீன நாவலாக இதை எழுதியிருந்தால் இன்னும் சுதந்திரமாக அவரால் பயணித்திருக்க முடிந்திருக்கும்.
நோய்மை காரணமாக நிஜந்தனால் நாவலில் அந்தளவுக்கு வேலை செய்ய இயலவில்லை என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு கலைப் படைப்பாக மட்டுமன்றி இதை ஒரு சுயதேடல் முயற்சியாகவும் பார்க்கலாம். தன் உடல் சார்ந்த அத்தனைச் சரிவுகளுக்கும் மத்தியில் அவர் இதை எழுதியதே தன் வாழ்வு குறித்த ஒரு கேள்விக்கு விடை காணத்தான் என்றும் விளங்குகிறது - அதை அவரால் செவ்வனே செய்யவும் முடிந்திருக்கிறது. அவ்விதத்தில் "பிறழ்" அவருக்கு ஒரு வெற்றிதான்.
கருத்துகள்