முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இருவிதமான சமூகங்கள்

                                                            (வெல்பெக்)
 

பிரஞ்சு நாவலாசிரியர் மிஷல் வெல்பெக்கின் நேர்முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன் (Louisiana Channel). அதில் அவரிடம் எப்படி எழுத்தாளராக முடிவெடுத்தீர்கள் என்று கேட்கிறார்கள். அவர் "எழுத்தாளராவதென்றால் எழுதி ஜீவனம் நடத்த முடிவது. நான் நாற்பது வயதை அடைந்தபோதுதான் என் புத்தகத்தில் இருந்து பணம் வரத் தொடங்கியது. Elementary Particles நன்றாக விற்றது. உடனே என் அலுவலக வேலையை உதறித் தள்ளிவிட்டு எழுத்தாளரானேன். ஆகையால் நான் எழுத்தாளராக வேண்டுமா என்பதை நான் தீர்மானிக்கவில்லை. மக்கள் முடிவெடுத்தார்கள்" என்கிறார். இத்தனைக்கும் வெல்பெக் ஒரு இலக்கிய எழுத்தாளர். பின்நவீனத்துவர். வணிகப் படைப்பாளி அல்லர். இந்த பிரஞ்சு இலக்கியவாதிகளை நினைத்து பொறாமை கொள்ளாமல் இருக்க இயலவில்லை. ஒரு சில ஆண்டுகளிலேயே மூன்று லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறது. முக்கியமாக ஐரோப்பிய நாடுகளில் 25 மொழிகளில் பிரசுரமாகி இருக்கிறது. மலையாளத்தில் கூட நாவல்கள் லட்சங்களில் விற்றதுண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறே. இப்போது அங்கும் நிலை மாறி தர்மஜன் போன்றோர் வணிக மொழியில் எழுதப்பட்ட நாவல்களே பெரும் எண்ணிக்கையில் விற்கின்றன. இலக்கியம் அங்கே ஆயிரங்களுக்குள் சுருங்கிவிட்டது. தமிழில் பிரசித்தமாகும் நாவல்கள் ஆயிரங்களிலும் மற்றவை நூற்றுக்கு சொச்சம் எண்ணிக்கையிலுமே சராசரியாக விற்கின்றன.

இதை நினைத்துப் பொறாமை கொள்ளும்போது வேறொரு எண்ணமும் எழுகிறது.
பொதுவாக இலக்கியம் வாசிக்கும் சமூகம் சுயச்சிந்தனையும் உணர்ச்சிக் கட்டுப்பாடும் பரந்துபட்ட சிந்தனையும் கொண்டிருப்பர். குறைந்தது சினிமா கவர்ச்சிக்கு ஆட்பட்டு பலியாக மாட்டார்கள். உதாரணமாக, ஒரு நடிகர் கைகாட்டினார் என்பதற்காக அறிமுகமில்லாத சின்னத்தில் நிற்கிற பெயர் தெரியாத ஒருவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். அவர்கள் நடிகரை ஒரு தொழிலாளியாக மட்டுமே பார்ப்பர். சிந்தனைத் திறன் இல்லாமல் வெறுமனே சம்பாத்தியத்திற்காக மட்டுமே படிக்கிறவர்கள் உள்ள சமூகத்தில்தான் நடிகரைப் பார்க்க மக்கள் பெருந்திரளாகக் கூடுவர். நடிகர் முட்டிப் போடு என்றால் முட்டிப் போடுவர். நடிகர் கடலில் குதி என்றால் பாட்டுப் பாடிக் கொண்டே குதிப்பர். நடிகரை முதல்வராக்கி கடவுள் ஆக்குவர். அந்த விதத்தில் தமிழர்களை விட பீடா வாயன்கள் என்று நாம் அழைக்கும் உ.பிகாரர்களும் பீகாரிகளும் மேல்.
படித்தும் முட்டாளாக இருப்பது மிகவும் கேவலம்.

கருத்துகள்