(வெல்பெக்)
பிரஞ்சு நாவலாசிரியர் மிஷல் வெல்பெக்கின் நேர்முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன் (Louisiana Channel). அதில் அவரிடம் எப்படி எழுத்தாளராக முடிவெடுத்தீர்கள் என்று கேட்கிறார்கள். அவர் "எழுத்தாளராவதென்றால் எழுதி ஜீவனம் நடத்த முடிவது. நான் நாற்பது வயதை அடைந்தபோதுதான் என் புத்தகத்தில் இருந்து பணம் வரத் தொடங்கியது. Elementary Particles நன்றாக விற்றது. உடனே என் அலுவலக வேலையை உதறித் தள்ளிவிட்டு எழுத்தாளரானேன். ஆகையால் நான் எழுத்தாளராக வேண்டுமா என்பதை நான் தீர்மானிக்கவில்லை. மக்கள் முடிவெடுத்தார்கள்" என்கிறார். இத்தனைக்கும் வெல்பெக் ஒரு இலக்கிய எழுத்தாளர். பின்நவீனத்துவர். வணிகப் படைப்பாளி அல்லர். இந்த பிரஞ்சு இலக்கியவாதிகளை நினைத்து பொறாமை கொள்ளாமல் இருக்க இயலவில்லை. ஒரு சில ஆண்டுகளிலேயே மூன்று லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறது. முக்கியமாக ஐரோப்பிய நாடுகளில் 25 மொழிகளில் பிரசுரமாகி இருக்கிறது. மலையாளத்தில் கூட நாவல்கள் லட்சங்களில் விற்றதுண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறே. இப்போது அங்கும் நிலை மாறி தர்மஜன் போன்றோர் வணிக மொழியில் எழுதப்பட்ட நாவல்களே பெரும் எண்ணிக்கையில் விற்கின்றன. இலக்கியம் அங்கே ஆயிரங்களுக்குள் சுருங்கிவிட்டது. தமிழில் பிரசித்தமாகும் நாவல்கள் ஆயிரங்களிலும் மற்றவை நூற்றுக்கு சொச்சம் எண்ணிக்கையிலுமே சராசரியாக விற்கின்றன.
கருத்துகள்