முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீயா நானாவும் நாமும் ஒருசேர மாறிய கதை


 

நேற்றைய நீயா நானாவைப் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒன்று தோன்றியது: நீயா நானா ஆரம்பிக்கப்பட்டு முதல் பத்தாண்டுகளுக்கு மேல் சமூகத்தில் நடக்கும் மாற்றங்களை, அவற்றின் வினோதங்களை, சமூகவியல் தலைப்புகளை, மனித நடத்தையின் புதிர்களை, புதிது புதிதாக நடக்கும் அபத்தங்களை விவாதிக்கக் கூடியதாக இருந்தது. அதாவது ஒரு சமூகப் சுயபரிசீலனைக் காலகட்டம் அது. பரவலாக பலரும் பார்த்து அதைக் குறித்து விவாதித்தார்கள், சமூகத்தின் நாடியைப் பிடித்துச் சொல்லும் அதன் பண்பை வியந்தோதினார்கள். அடுத்து 8-9 ஆண்டுகளாக நீயா நானா சமூகத்தை ஒரு பழங்காலத்துக்கு எடுத்துச் சென்று உறைய வைத்து அதன் பெருமைகளைப் பேசத் தொடங்கியது. அதாவது ஒரேயடியாக மாறிவிட்டது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் மெல்ல மெல்ல அது ஒரு பழம்பெருமை நிகழ்ச்சியாக மாறியது. கூடவே நிகழ்ச்சியை ஆண்களை விட அதிகம் பெண்களே இப்போது பார்ப்பதால் ஏதோ பெமினா பத்திரிகையைப் போல மாறிவிட்டது. அதில் ஒரு woke தன்மையும் அதிகரித்துவிட்டது. சமூகப் பிரச்சினைகளில் அது நாம் தமிழர் கட்சி, திமுகவுக்குள் சுருங்கியது என்றால் பாலினத்தில் பெண்களிடத்து சுருங்கியது. (நான் இங்கு நாதக, திமுக என்பது ஒரு குறியீடாகத்தான்.)

இதை அந்நிகழ்ச்சி மீதான விமர்சனமாக வைக்கவில்லை. வெகுஜன ஊடக வடிவங்களில் வரும் மாற்றங்கள் சமூக மனத்தின் அடியாழத்தில் நிகழும் மாற்றங்களை வெளிப்படுத்தும் அல்லது(மெக்லூஹன் சொன்னது போல) ஊடகங்களே இத்தகைய மாற்றங்களைத் தோற்றுவிக்கும். இப்படிப் பார்க்கையில் நம் சமூகமும் கடந்த பத்தாண்டுக்குள் மெல்லமெல்ல பழம்பெருமைக்குள் உறைகிற போலித்தனம் மிகுந்த ஒரு மனநிலைக்குள் சென்றுவிட்டது, பெருங்கதையாடல்களில் ஊறி கனவு காண அது விரும்புகிறது, உதிரிகளைக் கூட அது woke ஆகவே பார்க்க விரும்புகிறது (அந்த கிளி ஜோசியக்காரரைப் பாருங்கள், அவரது சமூக ஒடுக்குமுறையைக் கண்டு கொந்தளியுங்கள், அவரைச் இச்சமூகம் ஒதுக்கிவிட்டதா, அவர் என்னவொரு அற்புதமான மனிதரெனப் பாருங்கள், அவரது மனித நேயத்தைக் கொண்டாடுங்கள்! ஐயோ நெஞ்சம் துடிக்கிறதே ஆ ஓ!). உதிரிகளை ஆராயக் கூடிய, அவர்களுடன் உரையாடக் கூடிய மனநிலையை இழந்து விட்டிருக்கிறோம். நாம் நம்மை ஒரு உயர்ந்த இடத்தில் வைத்துக் கொண்டு மற்றமையைப் பார்த்துக் கருத்துச் சொல்ல இன்று விரும்புகிறோம். உ.தா., நீயா நானாவில் முன்பு ஒரு திருமணமாகாத ஆண்கள் குறித்த நிகழ்ச்சியென்றால் அதன் அத்தனை சமூக உளவியல் கோணங்களும் அலசப்படும், பல புதிய திறப்புகள் ஏற்படும். அதிலிருந்து ஒரு சமத்துவக் கண்ணோட்டமும் அக்கறையும் விட்டேந்தியான அறிவார்ந்த மனமும் வெளிப்படும். இப்போது அவர்களுடைய கண்ணீரை முன்னிறுத்தி விட்டு அவர்களது கனவை நிறைவேற்றுவதாக ஒரு ஏற்பாட்டைச் செய்கிறோம். அவர்களை வரிசையாக நிற்க வைத்து ஒரு நாடகக் கல்யாணம் போல ஒன்றை நிகழ்த்திக் காட்டுவார்கள். சும்மா யாரையாவது மாலையிடுவதற்காவது அழைப்பார்கள். இது ஒரு அரசதிகார மனநிலைதான். இதை நாம் இன்று உள்ளுக்குள் ரசிக்கிறோம். நீயா நானா மட்டுமல்ல இன்று அரசாங்கமே நிகழ்த்து கலையாக மாறிவிட்டது. மீனவர்களைத் தேடிப் போய் அவர்களுடன் முதல்வரோ கட்சித் தலைவரோ மீன் பிடித்து அதைச் சமைத்து உண்டால் அத்துடன் மீனவர்களின் பிரச்சினை முடிந்தது. அடுத்து பனையேறிகள் பிரச்சினையா? தலைவர்கள் அவர்களுடன் பனையில் ஏறி அவர்களுடைய சிரமங்களைப் புரிந்துகொள்வார். அவர்களை வரிசையாக நிறுத்தி கட்டிப பிடித்து பின்னணி இசையை ஒலிக்க விடுவார். இதை நாம் மக்களாட்சி விழுமியம் எனப் பார்த்து உணர்ச்சிவசப்படுவோம். ஆனால் இது மக்களாட்சி விழுமியம் அல்ல, இது அரசதிகார மனநிலை. மனிதர்களை மற்றமையாக மாற்றி அவர்களுடன் மேலே இருந்து உறவாடி அதிகாரத்தைக் கடத்துவதாக அபிநயிப்பது.
நாம் என்ன செய்கிறோம்? நட்பு, குடும்ப வாழ்க்கை எல்லாவற்றையும் சமூக வலைதளங்களில் நிகழ்த்தி நம்மில் இருந்தே உடைந்து நம்மையே மற்றமையாக்கி விடுகிறோம். "என்னைப் பார், நான் எவ்வளவு நல்லவன், என்னைப் பார், நான் எவ்வளவு பரிதாபத்துக்கு உரியவன், உனக்கு இதைப் பார்த்து கண்ணீர் வரவில்லையா? நான் இன்னும் அதிகமாக நடிக்க வேண்டுமா?"
இப்படி பல தளங்களில் நாம் இவ்வாறு போலி விழுமியங்களைப் பேசி கிளுகிளுப்பவர்களாகவோ அதை நிகழ்த்திக் காட்டி அடுத்தவரிடம் பெருமைப்படுகிறவர்களாகவோ மாறிவிட்டோம். நீயா நானா அதையே பிரதிபலிக்கிறது. சமகாலத்தில் நடக்கிற பல பிரச்சினைகளை, குளறுபடிகளை நாம் பேச விரும்புவதில்லை. இன்று பொறியியல் படித்தவர்களிலேயே 20% மேல் வேலையில்லாமல் திரிகிறார்கள் என ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. பட்டதாரிகள் பலரும் 10,000-20,000 வேலையில் அல்லாடுகிறார்கள். நாம் இதைவிட கல்வியில் சிறந்த தமிழ்நாடு, பீகாரிகள் கேவலமானவர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள் எனத் திரும்பத் திரும்பப் பேசவே விரும்புகிறோம். சுயபரிசீலனைக்கான ஆற்றலோ பொறுமையோ சகிப்புத்தன்மையோ இன்று நமக்கு இல்லை. ஊன்றி கவனித்து அலசி ஆராயும் திறனையும் இழந்து வருகிறோம்.
என்னை ஆச்சரியப்படுத்தியது தனிமனிதர்களான நம் மனமும் நீயா நானா போன்ற ஒரு ரியாலிட்டி ஷோவின் மனமும் ஒரே அலைவரிசையில் எப்படிச் செயல்படுகிறது என்பதுதான். நாம் கடைசியில் தயாரிக்கப்படும் ஒரு நிகழ்ச்சியைப் போல யோசிக்கவும் செயல்படவும் தொடங்கிவிட்டோம் என நினைக்க சற்று பயங்கரமாக இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...