முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விமர்சனத்தின் முடிவுக்கு வந்து விட்டீர்கள்

சி. சரவணகார்த்திகேயன் தனது இணையதளத்தில் “கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” நாவலுக்கு எழுதியுள்ள மதிப்புரை இது. சரவணகார்த்திகேயனின் மொழி அழகானது. விரிவான வாசிப்பு பின்புலம் அவரது அலசலுக்கு பெரும் வலு. அவரது பதிவை இங்கு மீள்பதிவு செய்கிறேன்:

ஆர். அபிலாஷ் எழுதிய‌ 'கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்' நாவலை சற்று முன் தான் வாசித்து முடித்தேன். எனக்கு மிகப் பிடித்திருக்கிறது. நல்ல‌ வாசிப்பின்பம் கொண்ட எழுத்து. பொருட்படுத்ததக்க சீரியஸ் உள்ளடக்கம் கொண்டது என்றாலும் துப்பறியும் நாவல் என்பதற்கு நியாயம் செய்யும் வகையிலான‌ சுவாரஸ்யமான‌ ஆக்கம். 2008 நொய்டா இரட்டைக் கொலை வழக்கு, 2014 சென்னை மென்பொருள் ஊழியை கொலை வழக்கு, (நாவல் வந்த பின் சமீபத்தில் நிகழ்ந்த ஜிஷா கொலை வழக்கும் கூட‌) என நிஜ சம்பவங்களின் வலுவான சாயைகள் இப்புதினத்தில் இடம் பெறுகின்றன. சில திரைப்படங்களின் வாசனை கூட மனதில் நிழலாடியது - அமீர் கான் நடித்த‌ 'Talaash' மற்றும் மிஷ்கினின் 'யுத்தம் செய்'.


துப்பறியும் நாவல்கள் அல்லது சாகசப் புனைகதைகளில் சிந்தனைக்கு உரியவை தமிழில் மிக அரிது. அவை சம்பவங்கள் மற்றும் உரையாடல்களின் தொகுப்பாகவே அமைகின்றன. அதிகம் போனால் நேர்த்தியான வர்ணனைகள் இருக்கும். போக அரிதாய்ச் சில கவிதைத் தருணங்கள் தென்படும். அவை லேசாய் வாசகனை யோசிக்கத் தூண்டும். சுஜாதாவின் நாவல்களில் அவ்வப்போது இத்தகைய இடங்களைக் காணலாம். (சட்டென நினைவுக்கு வருவது 'ஒரு நடுப்பகல் மரணம்' நாவலில் புதிதாய்க் கல்யாணம் ஆன பெண்ணொருத்தி தன் கணவனைக் கொலையில் இழக்கும் அறிமுகப் பக்கங்கள்.)

அது போக நாவல் நெடுகவும் இது போன்ற விஷயங்களைத் தீவிரமாய்ப் பேசுபவை என என் வாசிப்பில் சொல்ல முடிவது நான்கு - தமிழவனின் 'ஜிகே எழுதிய மர்ம நாவல்', எம்ஜி சுரேஷின் 'சிலந்தி', யுவன் சந்திரசேகரின் 'பகடையாட்டம்' மற்றும் ஜெயமோகனின் 'உலோகம்'. இப்போது அந்த வரிசையில் அபிலாஷின் நாவலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

நவீன இலக்கியம் தான் என்றாலும் ஒரு துப்பறியும் நாவலுக்கான விமர்சனத்தில் அதன் கதைச் சுருக்கத்தை நல்குவது பாவக் கணக்கில் சேரும். அதனால் வேண்டாம். ஆனால் கதை இறுதியில் பனிமூட்டமாகவே முடிகிறது என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். அதுவே யதார்த்தம் என்பதால் ஒருவகையில் அது நாவலுக்கு பலமாகவும் மாறி விடுகிறது.

இந்நாவலின் பாத்திரங்கள் அனைத்துமே நமக்கு ஒரு கட்டத்தில் அதிர்ச்சி ஊட்டுகிறார்கள். அதுவும் நாடகத்தனமாக அல்லாமல் இயல்பான, சாத்தியமான அதிர்ச்சிகள். கயல்விழி, முண்டா, மோகனா கதைகள் அப்படிப்பட்டவை தாம். கதையின் பிரதானப் பாத்திரமான ஜார்ஜ் கூட இதற்கு விலக்கல்ல. ஷீனா, ஸ்ரீதர், மோகன் போன்ற சிறுபாத்திரங்கள் கூட அதையே செய்கின்றன. எல்லோருக்கும் ஒரு பின்புலம் இருக்கிறது. நாவலின் வசீகரம் என இதைச் சொல்வேன்.

குறை என்று யோசித்தால் மூன்று விஷயங்களைச் சுட்டலாம். ஒன்று ஜார்ஜின் மனக்குறளியாக வரும் பகுதிகள் சற்று தேவைக்கதிகமாகப் பட்டன. மோகனா குழந்தை காணாமல் போனதை வர்ணிப்பதும் அப்படியே தோன்றியது. அது கதைப்போக்கின் ஆற்றொழுக்கைத் தடை செய்வதாக, அதன் இயல்பிலிருந்து பிடுங்குவதாகத் தோன்றியது. அடுத்து முந்தைய அத்தியாயத்துக்கும் பிந்தைய அத்தியாத்துக்குமான முரண்கள். உதாரணமாய் கோகிலா மோகனாவின் குழந்தை அல்ல எனத் திடீரெனக் கடைசியில் சொல்லப்படுகிறது, வேலைக்காரி குழந்தையை இரவு வரை பார்த்ததான தகவல் விசாரிக்கும் இடத்தில் சொல்லப்படவில்லை. கடைசியாய் முதல் சில அத்தியாயங்களிலும் இறுதி சில அத்தியாயங்களிலும் அதிக எண்ணிக்கையிலான (அதாவது வாசிப்பை உறுத்துமளவு) எழுத்துப் பிழைகள் தென்பட்டன. 

விமர்சனத்துக்கு வெளியே ஒரு விஷயத்தைப் பகிர நினைக்கிறேன். இந்த நாவலை கிட்டத்தட்ட அப்படியே மிஷ்கின் திரைப்படமாகச் செய்யலாம். 'அஞ்சாதே', 'யுத்தம் செய்' இவற்றின் தர்க்கத் தொடர்ச்சியாக அமையக்கூடும். இன்னும் சொல்லப் போனால் மிஷ்கின் திரையில் நிகழ்த்தியிருக்கும் சாதனை என்ன என்பதை இந்த நாவல் வாசிக்கையில் மேலும் துல்லிமாய் உணர முடிகிறது. (பொதுவாய் நான் சினிமாவை எப்போதும் இலக்கியத்துக்கு ஒரு படி கீழ் தான் பாவிப்பேன் என்பதைக் கொண்டு இவ்வாக்கியம் முன்வைக்கும் கருத்தின் முக்கியத்துவத்தை அணுகலாம்.)

நூறு பக்கங்கள், நூறு ரூபாய். ஒரு சினிமாவிற்குப் போவதை விட சுலபம். ஒரே நாளில் அலுவலம் - வீடு இடையிலான இரு திசைப் பயண தூரத்தில் வாசித்து முடித்தேன். நீங்களும் வாங்கி வாசியுங்கள். தவற விடக்கூடாத அனுபவம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...