Skip to main content

கத்தியுடன் திரிபவர்கள்

என் அப்பா ஒரு பேனா கத்தி வைத்திருந்தார். அடர்சிவப்பு பிடி கொண்டது. அதை கையில் வைத்து உருட்டும் போது அதன் இதமான குளிர்மை, கனம், அதன் உறுத்தலான கூர்முனை, மூடும் போது சட்டென வெட்கத்தில் சேலை தலைப்பில் பதுங்கும் முகம் போல் அது மறைவது என அந்த கத்தி மீது குழந்தைப் பருவத்தில் எனக்கு ஒரு தனிக்காதல். என் அப்பா அதை பெரும்பாலும் காய்கறி நறுக்கத் தான் பயன்படுத்திய ஞாபகம். எனக்கு அது போல் ஒரு பேனா கத்தி வாங்க வேண்டும் என ஆசை.

வளர்ந்த பின் hiking போது பயன்படுத்தும் ஒரு அலங்காரமான கத்தி வாங்கினேன். ஆனால் அது வெற்று உபகரணம், கடினமான பொருளை வெட்டினால் அதன் விளிம்பு உடைந்து விடும். சில வருடங்களுக்கு முன்பு ஷிலோங் போன போது அங்குள்ள சந்தையில் ஒரு பாட்டியிடம் நிறைய பேனா கத்திகள் பார்த்தேன். அதன் முனைப் பகுதி மேல் நோக்கி வளைவாய் இருந்தது. நல்ல கூர்மை. ஆனால் கனம் குறைவு. அவர் ஐம்பது ரூபாய் சொன்னார். நான் பத்து ரூபாய்க்கு கேட்டேன். அவர் என்னை குத்தி விடுவது போல் முறைத்தார். கொஞ்ச நேரத்தில் திட்ட ஆரம்பித்தவர் அவர் மொழியில் போ போ என சைகை காட்டினார். நான் அவரிடம் முப்பது ரூபாய் என்றேன். அவர் ஒத்துக் கொண்டார். ஆரஞ்சு வண்ண பிடி கொண்ட கத்தியை தேர்ந்தெடுத்தேன்.
 அது ஒரிஜினல் கத்தி. அதன் முனை இன்னும் உடையவில்லை. கூர்மையும் குறையவில்லை. எப்போதும் என் பையிலே வைத்திருப்பேன். பயன்பாடு கருதியல்ல. ஒரு விளையாட்டுக்கு. காதலியின் பெயரை பச்சை குத்துவது போல ஒரு த்ரில்லுக்காக. இன்று பீனிக்ஸ் மால் சென்றிருந்த போது பையை சோதனை போட்டார்கள். “உங்க பையில் கத்தி இருக்கு. அதை வெளியே எடுத்திருங்க” என செக்யூரிட்டி பெண் கீச்சென சொல்ல என கூச்சமாகி விட்டது. அது போதாதென்று எனக்கு பின்னால் பை வாங்க காத்திருந்தவரிடம் “அவரு பையில கத்தி இருக்கு. எடுக்கட்டும். அது வரை வெயிட் பண்ணுங்க” என்றார். என்னை ஏதாவது தீவிரவாதி என அசிங்கமாய் நினைப்பார்கள் என மனதுக்குள் குமைந்தபடி பையில் இருந்து நானே மறந்து போன அந்த பேனா கத்தியை தேடி கண்டெடுத்தேன். இதனிடையே சோதனைக்கான ஆட்களின் வரிசை நீளமாகிக் கொண்டே போக அப்பெண் என்னை காத்திருக்க சொன்னார்.
நான் ஒவ்வொரு பையாய் ஸ்கேன் ஆகி சதுரப் பெட்டியில் இருந்து வெளியே உருண்டு வருவதை, அவற்றின் உள் பிம்பங்கள் சிவப்பு நிற எலும்புக் கூடுகளாய் கணினித்திரையில் தெரிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டே காத்திருந்தேன். அப்போது அப்பெண் மீண்டும் “சார் உங்க பையில கத்தி இருக்கு” என மற்றொருவரை பார்த்து கத்தினார். “அதை வெளியே எடுங்க”. நான் காத்திருந்த ஒரு நிமிடத்தில் ஐந்து பேருக்கு மேல் பையில் கத்தியுடன் ”பிடிபட்டார்கள்”. அவர்கள் என்னைப் போல் அல்லாது கத்தியை கொண்டு வந்ததற்காய் நியாயங்கள் சொன்னார்கள். ஒருவர் “பழம் நறுக்கிறதுக்கு” என்றார். மாலுக்குள் அவர் ஏன் பழம் நறுக்கப் போகிறார்? அவர் எடுத்த கத்தி பழக்கத்தியும் அல்ல. இப்படி பிடிபடும் கத்திகளை போட்டு வைக்க அப்பெண் ஒரு பிளாஸ்டிக் கூடை வைத்திருந்தார். என் கத்தியை இறுதியாய் வாங்கி வைத்தவர் “போகும் போது வாங்கிக்கிங்க.” என்றார்.
என்னை ஒரு கேள்வி தொந்தரவு செய்தது. ஏன் இவ்வளவு பேர் கத்தியுடன் திரிகிறார்கள்? என்னைப் போல் சும்மா விளையாட்டுக்காய் என நான் நம்பவில்லை. இது போன்ற பொதுவிடங்களில் என் பாக்கெட்டில் மட்டும் தான் கத்தி இருக்கிறது என த்ரில்லாய் நினைத்துக் கொள்வேன். ம்ஹும். ஒவ்வொருவரும் அப்படித் தான் நினைத்துக் கொள்கிறார்கள்!



Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் ஏற்றத்தாழ்வும்

  முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன் கடைசியாக வெளியிட்ட காணொளியைப் பார்த்தேன். அதில் அவர் தன் ஆட்சியின் சாதனைகளைக் குறிப்பிட்டு சில குறைகள் உள்ளதையும் தான் ஒப்புக்கொள்வதாகத் தெரிவிக்கிறார். கண்ணியமான நிதானமான பேச்சு. அவர் குறிப்பிடும் ஒரு தகவல் உண்மையானது - தமிழ்நாடு வேறு எந்த ஆட்சியிலும் காணாத பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது (11.9%). இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சி இது. வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொணர்வதிலும் புது நிறுவனங்களை அமைப்பதிலும் திமுக முன்னின்று செயல்பட்டுள்ளது. (விஜய் திமுக அரசு மாநிலத்தை கடனில் வீழ்த்தியுள்ளதாகச் சொல்லியிருப்பது ஒரு பொய்.) ஸ்டாலின் சொல்லும் இத்தகவல் இந்த ஆண்டின் துவக்கம் முதலே பல ஆங்கில நாளிதழ்களிலும் காணொளிகளிலும் பேசப்பட்டு வந்துள்ளது. ஒருவிதத்தில் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற விரும்புவதும் இதனால்தான் எனத் தோன்றுகிறது. அவர்கள் வந்தால் அவர்களுடைய தரப்பு முதலாளித்துவ வர்க்கம் உள்ளூர் முதலாளிகளைக் காலி பண்ணுவார்கள். ஊழலில் அவர்களுடைய உள்ளூர் தலைவர்களுக்கு பங்கு போகும். அவர்களால் இங்குள்ள வர்த்தகப் போக்குகளைக் கட்டுப்படுத்த இய...