Skip to main content

ஸ்வாதி படுகொலையும் போலீஸின் நாடகமும்

குற்றவாளியின் சி.சி.டிவி படம்
ஸ்வாதி படுகொலை வழக்கில் தொடர்ந்து முரண்பாடான தகவல்கள் போலீஸ் தரப்பில் இருந்து கிடைத்து வருகின்றன. நேற்று ஒரு செய்தி இணையதளம் போலீஸ் குற்றவாளி தென் தமிழகத்தை சேர்ந்த வாடகைக் கொலையாளி என ஐயப்படுவதாயும், அங்கு விசாரணை முடுக்கி விடப்படுவதாயும் தெரிவித்தது. குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தி தென் தமிழகத்துக்கு உரித்தானது என்பது காரணம் எனப்பட்டது.

ஆனால் இன்னொரு பக்கம் இன்றைய ஹிந்துவிலும் சரி, சற்று முன் படித்த இணைய செய்திகளிலும் சரி போலீஸ் தரப்பு இதை ஒரு பெண்களை பின் தொடரும் மனநிலை சிக்கலுள்ள ஒருவன் செய்த கொலை என சித்தரிக்க முயல்வதை கண்டேன். நுங்கம்பாக்கம் துணை ஆணையர் குற்றவாளி வாடகைக் கொலையாளியாக இருக்க முடியாது என்கிறார். கடந்த ஒரு மாதமாய் அவன் ஸ்வாதியை பின் தொடர்ந்துள்ளதாய் அவளது தோழிகள் மற்றும் குடும்பத்தினர் கூறுகிறார்கள். ஆனால் இது வாடகைக்கொலையாளிகளின் வழக்கமும் தானே. அவர்கள் ஒருவரது போக்குவரத்து மார்க்கங்கள், வழக்கங்கள், தினசரி நடவடிக்கைகளை ஆராய்ந்த பின்னர் தானே திட்டம் வரைந்து செயல்படுத்துவார்கள்!
வேறு சில கேள்விகளுக்கும் போலீஸ் பதிலளிக்க வேண்டும்.
குற்றம் பழகாத ஒருவர் இப்படி கச்சிதமாய் எப்படி கழுத்தில், அதுவும் ரத்தம் தன் மேல் படாதபடி, பின்னால் இருந்து ஸ்வாதியை வெட்டி சாய்க்க முடியும்?
குற்றம் செய்த கருவியை ஒருவரிடம் இருந்து கண்டெடுத்தால் அதுவே அவரை குற்றவாளி என நிரூபிப்பதற்கு பிரதான ஆதாரம். அதனால் தொழில்முறை குற்றவாளிகள் ஆயுதங்களை போகிற வழியில் கைவிடுவார்கள். இக்குற்றவாளியும் அதையே செய்திருக்கிறான். அதுவும் ரேகைகளை அழித்து விட்டு. குற்ற வாசனை இல்லாத, தொழில்முறை குற்றவாளி அல்லாத ஒருவன் இவ்வளவு தெளிவாய் செயல்படுவானா?
குற்றத்திற்கு பின் அவன் எப்படி தப்பி செல்வது என்பது அறிந்து வைத்திருக்கிறான். அது மட்டுமல்ல கொலை செய்த பின் ஓடித் தப்பும் போது அவன் போனில் பேசியிருக்கிறான். அது வாகனத்தோடு வெளியே காத்திருக்கும் சகாவுடன் என்பதை ஊகிப்பது சுலபம். எந்த நோக்கமும் அற்ற பின் தொடரும் ஒரு ஆள் இப்படி துணைக்கு ஆளை நியமித்து, வேலை முடிந்ததும் கச்சிதமாய் தப்பிச் செல்வானா?
இந்த களேபரத்துக்கு இடையில் அவன் ஏன் ஸ்வாதியின் ஸ்மார்ட் போனை எடுத்து செல்ல வேண்டும்? அவளைக் கொன்ற பின் அவளது போனில் அவனுக்கு என்ன அக்கறை? அவன் வெறுமனே பின் தொடர்கிறவன் என்றால் அவன் அவளுடன் முன்பு போன் மூலம் தொடர்பு கொண்டிருக்க முடியாது. அதனால் சம்மந்தப்பட்ட ஆதாரங்கள் அப்போனில் இருக்க முடியாது. பிறகு அவன் ஏன் போனை கவர்ந்து போக வேண்டும்?
இறுதியாய், இப்படி பின் தொடரும் நபர்கள் பெண்களை பொது இடத்தில் வெட்டி சாய்த்ததற்கு முன்னுதாரணங்கள் உண்டா? பொதுவாக நோக்கமற்று பின் தொடர்பவர்கள் அப்பெண்ணை தொந்தரவு செய்யலாம், பலாத்காரத்துக்கு கூட முயலலாம். ஆனால் அதை ஆளில்லாத இடங்களில் தானே முயல்வார்கள்?
பொது இடத்தில் கொல்லுவது, அதுவும் காலைப் பொழுதில் செய்வது வாடகைக்கொலையாளிகளின் பாணி அல்லவா?
காவல் துறை ஏன் வாடகைக்கொலையாளி சாத்தியத்தை ஏற்க தயங்குகிறது? மக்களிடம் பீதி பரவக் கூடாது என்பது ஒரு காரணமாய் இருக்கலாம். இன்னொன்று, வாடகைக்கொலையாளி என்றால் சம்மந்தப்படாத ஒருவரை கைது செய்து என்கவுண்டர் செய்வது சிக்கலாய் இருக்கும். காரணத்தை நிறுவ வேண்டும், செய்ய நியமித்தவரை கைது செய்ய வேண்டும். ஆனால் பெண்களை பின் தொடரும் மனம் பேதலித்த ஆள் என்றால் இந்த தொந்தரவெல்லாம் போலீசுக்கு கிடையாது அல்லவா! மேலும் வாடகைக்கொலையாளி எனும் போது அது சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகி விடுகிறது. வெறுமனே பெண்களை பின் தொடர்கிறவனின் குற்றம் ஒரு பிறழ்வு நடவடிக்கையாய் பார்க்கப்படும். குற்றத்தையும் பொறுப்பையும் சுலபத்தில் பிளாட்பார்மில் திரிகிறவர்கள், விளிம்புநிலையை சேர்ந்தவர் மீது திணித்து விட முடியும்.

இன்னும் சில வாரங்களில் ஒரு அப்பாவியை என்கவுண்டர் செய்து வழக்கை முடித்து விடுவார்கள் எனத் தோன்றுகிறது!

Comments

அப்படித்தான் முடியும் என்பதே ஏன் கருத்தும்

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...