முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்வாதி படுகொலையும் போலீஸின் நாடகமும்

குற்றவாளியின் சி.சி.டிவி படம்
ஸ்வாதி படுகொலை வழக்கில் தொடர்ந்து முரண்பாடான தகவல்கள் போலீஸ் தரப்பில் இருந்து கிடைத்து வருகின்றன. நேற்று ஒரு செய்தி இணையதளம் போலீஸ் குற்றவாளி தென் தமிழகத்தை சேர்ந்த வாடகைக் கொலையாளி என ஐயப்படுவதாயும், அங்கு விசாரணை முடுக்கி விடப்படுவதாயும் தெரிவித்தது. குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தி தென் தமிழகத்துக்கு உரித்தானது என்பது காரணம் எனப்பட்டது.

ஆனால் இன்னொரு பக்கம் இன்றைய ஹிந்துவிலும் சரி, சற்று முன் படித்த இணைய செய்திகளிலும் சரி போலீஸ் தரப்பு இதை ஒரு பெண்களை பின் தொடரும் மனநிலை சிக்கலுள்ள ஒருவன் செய்த கொலை என சித்தரிக்க முயல்வதை கண்டேன். நுங்கம்பாக்கம் துணை ஆணையர் குற்றவாளி வாடகைக் கொலையாளியாக இருக்க முடியாது என்கிறார். கடந்த ஒரு மாதமாய் அவன் ஸ்வாதியை பின் தொடர்ந்துள்ளதாய் அவளது தோழிகள் மற்றும் குடும்பத்தினர் கூறுகிறார்கள். ஆனால் இது வாடகைக்கொலையாளிகளின் வழக்கமும் தானே. அவர்கள் ஒருவரது போக்குவரத்து மார்க்கங்கள், வழக்கங்கள், தினசரி நடவடிக்கைகளை ஆராய்ந்த பின்னர் தானே திட்டம் வரைந்து செயல்படுத்துவார்கள்!
வேறு சில கேள்விகளுக்கும் போலீஸ் பதிலளிக்க வேண்டும்.
குற்றம் பழகாத ஒருவர் இப்படி கச்சிதமாய் எப்படி கழுத்தில், அதுவும் ரத்தம் தன் மேல் படாதபடி, பின்னால் இருந்து ஸ்வாதியை வெட்டி சாய்க்க முடியும்?
குற்றம் செய்த கருவியை ஒருவரிடம் இருந்து கண்டெடுத்தால் அதுவே அவரை குற்றவாளி என நிரூபிப்பதற்கு பிரதான ஆதாரம். அதனால் தொழில்முறை குற்றவாளிகள் ஆயுதங்களை போகிற வழியில் கைவிடுவார்கள். இக்குற்றவாளியும் அதையே செய்திருக்கிறான். அதுவும் ரேகைகளை அழித்து விட்டு. குற்ற வாசனை இல்லாத, தொழில்முறை குற்றவாளி அல்லாத ஒருவன் இவ்வளவு தெளிவாய் செயல்படுவானா?
குற்றத்திற்கு பின் அவன் எப்படி தப்பி செல்வது என்பது அறிந்து வைத்திருக்கிறான். அது மட்டுமல்ல கொலை செய்த பின் ஓடித் தப்பும் போது அவன் போனில் பேசியிருக்கிறான். அது வாகனத்தோடு வெளியே காத்திருக்கும் சகாவுடன் என்பதை ஊகிப்பது சுலபம். எந்த நோக்கமும் அற்ற பின் தொடரும் ஒரு ஆள் இப்படி துணைக்கு ஆளை நியமித்து, வேலை முடிந்ததும் கச்சிதமாய் தப்பிச் செல்வானா?
இந்த களேபரத்துக்கு இடையில் அவன் ஏன் ஸ்வாதியின் ஸ்மார்ட் போனை எடுத்து செல்ல வேண்டும்? அவளைக் கொன்ற பின் அவளது போனில் அவனுக்கு என்ன அக்கறை? அவன் வெறுமனே பின் தொடர்கிறவன் என்றால் அவன் அவளுடன் முன்பு போன் மூலம் தொடர்பு கொண்டிருக்க முடியாது. அதனால் சம்மந்தப்பட்ட ஆதாரங்கள் அப்போனில் இருக்க முடியாது. பிறகு அவன் ஏன் போனை கவர்ந்து போக வேண்டும்?
இறுதியாய், இப்படி பின் தொடரும் நபர்கள் பெண்களை பொது இடத்தில் வெட்டி சாய்த்ததற்கு முன்னுதாரணங்கள் உண்டா? பொதுவாக நோக்கமற்று பின் தொடர்பவர்கள் அப்பெண்ணை தொந்தரவு செய்யலாம், பலாத்காரத்துக்கு கூட முயலலாம். ஆனால் அதை ஆளில்லாத இடங்களில் தானே முயல்வார்கள்?
பொது இடத்தில் கொல்லுவது, அதுவும் காலைப் பொழுதில் செய்வது வாடகைக்கொலையாளிகளின் பாணி அல்லவா?
காவல் துறை ஏன் வாடகைக்கொலையாளி சாத்தியத்தை ஏற்க தயங்குகிறது? மக்களிடம் பீதி பரவக் கூடாது என்பது ஒரு காரணமாய் இருக்கலாம். இன்னொன்று, வாடகைக்கொலையாளி என்றால் சம்மந்தப்படாத ஒருவரை கைது செய்து என்கவுண்டர் செய்வது சிக்கலாய் இருக்கும். காரணத்தை நிறுவ வேண்டும், செய்ய நியமித்தவரை கைது செய்ய வேண்டும். ஆனால் பெண்களை பின் தொடரும் மனம் பேதலித்த ஆள் என்றால் இந்த தொந்தரவெல்லாம் போலீசுக்கு கிடையாது அல்லவா! மேலும் வாடகைக்கொலையாளி எனும் போது அது சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகி விடுகிறது. வெறுமனே பெண்களை பின் தொடர்கிறவனின் குற்றம் ஒரு பிறழ்வு நடவடிக்கையாய் பார்க்கப்படும். குற்றத்தையும் பொறுப்பையும் சுலபத்தில் பிளாட்பார்மில் திரிகிறவர்கள், விளிம்புநிலையை சேர்ந்தவர் மீது திணித்து விட முடியும்.

இன்னும் சில வாரங்களில் ஒரு அப்பாவியை என்கவுண்டர் செய்து வழக்கை முடித்து விடுவார்கள் எனத் தோன்றுகிறது!

கருத்துகள்

ஸ்ரீமலையப்பன் இவ்வாறு கூறியுள்ளார்…
அப்படித்தான் முடியும் என்பதே ஏன் கருத்தும்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...