Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஸ்வாதி படுகொலையும் போலீஸின் நாடகமும்

குற்றவாளியின் சி.சி.டிவி படம்
ஸ்வாதி படுகொலை வழக்கில் தொடர்ந்து முரண்பாடான தகவல்கள் போலீஸ் தரப்பில் இருந்து கிடைத்து வருகின்றன. நேற்று ஒரு செய்தி இணையதளம் போலீஸ் குற்றவாளி தென் தமிழகத்தை சேர்ந்த வாடகைக் கொலையாளி என ஐயப்படுவதாயும், அங்கு விசாரணை முடுக்கி விடப்படுவதாயும் தெரிவித்தது. குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தி தென் தமிழகத்துக்கு உரித்தானது என்பது காரணம் எனப்பட்டது.

ஆனால் இன்னொரு பக்கம் இன்றைய ஹிந்துவிலும் சரி, சற்று முன் படித்த இணைய செய்திகளிலும் சரி போலீஸ் தரப்பு இதை ஒரு பெண்களை பின் தொடரும் மனநிலை சிக்கலுள்ள ஒருவன் செய்த கொலை என சித்தரிக்க முயல்வதை கண்டேன். நுங்கம்பாக்கம் துணை ஆணையர் குற்றவாளி வாடகைக் கொலையாளியாக இருக்க முடியாது என்கிறார். கடந்த ஒரு மாதமாய் அவன் ஸ்வாதியை பின் தொடர்ந்துள்ளதாய் அவளது தோழிகள் மற்றும் குடும்பத்தினர் கூறுகிறார்கள். ஆனால் இது வாடகைக்கொலையாளிகளின் வழக்கமும் தானே. அவர்கள் ஒருவரது போக்குவரத்து மார்க்கங்கள், வழக்கங்கள், தினசரி நடவடிக்கைகளை ஆராய்ந்த பின்னர் தானே திட்டம் வரைந்து செயல்படுத்துவார்கள்!
வேறு சில கேள்விகளுக்கும் போலீஸ் பதிலளிக்க வேண்டும்.
குற்றம் பழகாத ஒருவர் இப்படி கச்சிதமாய் எப்படி கழுத்தில், அதுவும் ரத்தம் தன் மேல் படாதபடி, பின்னால் இருந்து ஸ்வாதியை வெட்டி சாய்க்க முடியும்?
குற்றம் செய்த கருவியை ஒருவரிடம் இருந்து கண்டெடுத்தால் அதுவே அவரை குற்றவாளி என நிரூபிப்பதற்கு பிரதான ஆதாரம். அதனால் தொழில்முறை குற்றவாளிகள் ஆயுதங்களை போகிற வழியில் கைவிடுவார்கள். இக்குற்றவாளியும் அதையே செய்திருக்கிறான். அதுவும் ரேகைகளை அழித்து விட்டு. குற்ற வாசனை இல்லாத, தொழில்முறை குற்றவாளி அல்லாத ஒருவன் இவ்வளவு தெளிவாய் செயல்படுவானா?
குற்றத்திற்கு பின் அவன் எப்படி தப்பி செல்வது என்பது அறிந்து வைத்திருக்கிறான். அது மட்டுமல்ல கொலை செய்த பின் ஓடித் தப்பும் போது அவன் போனில் பேசியிருக்கிறான். அது வாகனத்தோடு வெளியே காத்திருக்கும் சகாவுடன் என்பதை ஊகிப்பது சுலபம். எந்த நோக்கமும் அற்ற பின் தொடரும் ஒரு ஆள் இப்படி துணைக்கு ஆளை நியமித்து, வேலை முடிந்ததும் கச்சிதமாய் தப்பிச் செல்வானா?
இந்த களேபரத்துக்கு இடையில் அவன் ஏன் ஸ்வாதியின் ஸ்மார்ட் போனை எடுத்து செல்ல வேண்டும்? அவளைக் கொன்ற பின் அவளது போனில் அவனுக்கு என்ன அக்கறை? அவன் வெறுமனே பின் தொடர்கிறவன் என்றால் அவன் அவளுடன் முன்பு போன் மூலம் தொடர்பு கொண்டிருக்க முடியாது. அதனால் சம்மந்தப்பட்ட ஆதாரங்கள் அப்போனில் இருக்க முடியாது. பிறகு அவன் ஏன் போனை கவர்ந்து போக வேண்டும்?
இறுதியாய், இப்படி பின் தொடரும் நபர்கள் பெண்களை பொது இடத்தில் வெட்டி சாய்த்ததற்கு முன்னுதாரணங்கள் உண்டா? பொதுவாக நோக்கமற்று பின் தொடர்பவர்கள் அப்பெண்ணை தொந்தரவு செய்யலாம், பலாத்காரத்துக்கு கூட முயலலாம். ஆனால் அதை ஆளில்லாத இடங்களில் தானே முயல்வார்கள்?
பொது இடத்தில் கொல்லுவது, அதுவும் காலைப் பொழுதில் செய்வது வாடகைக்கொலையாளிகளின் பாணி அல்லவா?
காவல் துறை ஏன் வாடகைக்கொலையாளி சாத்தியத்தை ஏற்க தயங்குகிறது? மக்களிடம் பீதி பரவக் கூடாது என்பது ஒரு காரணமாய் இருக்கலாம். இன்னொன்று, வாடகைக்கொலையாளி என்றால் சம்மந்தப்படாத ஒருவரை கைது செய்து என்கவுண்டர் செய்வது சிக்கலாய் இருக்கும். காரணத்தை நிறுவ வேண்டும், செய்ய நியமித்தவரை கைது செய்ய வேண்டும். ஆனால் பெண்களை பின் தொடரும் மனம் பேதலித்த ஆள் என்றால் இந்த தொந்தரவெல்லாம் போலீசுக்கு கிடையாது அல்லவா! மேலும் வாடகைக்கொலையாளி எனும் போது அது சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகி விடுகிறது. வெறுமனே பெண்களை பின் தொடர்கிறவனின் குற்றம் ஒரு பிறழ்வு நடவடிக்கையாய் பார்க்கப்படும். குற்றத்தையும் பொறுப்பையும் சுலபத்தில் பிளாட்பார்மில் திரிகிறவர்கள், விளிம்புநிலையை சேர்ந்தவர் மீது திணித்து விட முடியும்.

இன்னும் சில வாரங்களில் ஒரு அப்பாவியை என்கவுண்டர் செய்து வழக்கை முடித்து விடுவார்கள் எனத் தோன்றுகிறது!

Comments

அப்படித்தான் முடியும் என்பதே ஏன் கருத்தும்

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...