முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எம்.எஸ்: அஞ்சலி

Image result for எம்.எஸ் மொழிபெயர்ப்பு
ஒரு எழுத்துக் கலைஞன் மேடைக்குப் பின்னால் பதுங்கி இருக்கும் நிழல் மனிதனாகவே வாழ்வது தமிழில் ஒரு அபாயம். இங்கு நீங்கள் உங்கள் எழுத்தளவு, உங்கள் கலைப் பணி அளவு, மூர்க்கமாய் உங்கள் ஆளுமையை பிரதானப்படுத்த வேண்டும்; முன்வைக்க வேண்டும்; முச்சந்தியில் நின்று கைகாலை உதறி சத்தம் எழுப்பி கவனத்தைக் கவர வேண்டும் (உருவகமாகத் தான்). இதையெல்லாம் செய்யாதவர்கள் என்னதான் அபாரமான பங்காற்றியிருந்தாலும் நம் சமூகம் பெரிதாய் கவனிக்காது. அவர்கள் சத்தமின்றி வாழ்ந்து சத்தமின்றி மடிய நேரிடும். எம்.எஸ் அப்படியான ஒருவர். அபாரமான மொழிபெயர்ப்பாளர். இனிமையான சுவாரஸ்யமான மனிதர். அனுபவம் மிக்க மெய்ப்புக் கலைஞர். ஆனால் அவரது மறைவின் பொருட்டு தான் அவரைப் பற்றி பேச வேண்டியிருக்கிறது. ஏனெனில் தன்னை பேசும்படியான ஆளாக வைக்க அவர் முயலவில்லை; விரும்பவில்லை.

நான் பலரையும் போல் அவரை சு.ராவின் வீட்டில் வைத்து சந்திக்கவில்லை. ஜெயமோகனின் வீட்டில் வைத்தே பார்த்தேன். அவரிடம் அதிகம் உரையாடினதில்லை. ஆனால் பேசக் கிடைத்த ஓரிரு சந்தர்பங்கள் எனக்கு பெரிய தெளிவை நல்கின. எனக்கு அப்போது 17 வயதிருக்கும். ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு சில கதைகளை மொழியாக்க முயன்று கொண்டிருந்தேன். எழுதுவதை விட மொழியாக்குவது வெகுசிரமம் என உணர்ந்த காலம் அது. ஒரு பரதநாட்டியக் கலைஞன் சும்மா நடந்து வரும் போதும் சுவடு பிழைக்காமல தாளம் பிசகாமல் நடப்பது போல் மொழியாக்க கலைஞன் மொழிக்குள் இயங்க வேண்டும். மூலப் படைப்பின் பண்பாடு, அரசியல் அர்த்தத்தளங்களை அழிக்காமல், தொனி பிசகாமல் பெயர்க்க வேண்டும். ரொம்ப சிரமமான வேலை.
 நான் அப்போது மொழியாக்கி வந்த சிறுகதை ஒரு புற்றுநோய் சிகிச்சை கேந்திரத்தில் சில பெண்களுக்கு நேரும் துயரத்தை பகடியாய் பேசும் ஒரு கதை. அக்கதை ஒரு பதின்வயதுப் பெண்ணின் பார்வையில் இருந்து நகரும். ஒரு முதிர்ப் பெண் இவளுக்கு அத்தை முறை. எங்கள் ஊரில் அப்போது அத்தை என்ற பிரயோகம் இல்லை. மாமி தான். ஆனால் பொதுத் தமிழில் மாமியின் பொருள் வேறு. நான் ஒரு லாவகத்துக்காக பிரதி முழுக்க மாமி என்றே பயன்படுத்தினேன். பிறகு அது நெருடியது. எம்.எஸ்ஸை சந்திக்க நேர்ந்த போது இது குறித்துக் கேட்டேன். வட்டார வழக்கா பொதுத் தமிழா, எது மொழியாக்கத்துக்கு சிறந்தது? மூலமொழியில் வரும் கொச்சை வழக்கை எப்படி கையாள்வது? நம்மூர் வட்டார வழக்கை பயன்படுத்தலாமா? இரண்டுக்கும் பொதுத் தமிழே சிறந்தது என்றார் எம்.எஸ். பின்னர் ஜெயமோகன் மற்றும் மனுஷ்யபுத்திரனிடம் பல்வேறு சந்தர்பங்களில் உரையாடுகையில் அவர்களுக்கும் இதே நம்பிக்கை இருந்ததை அறிந்து கொண்டேன்.
மொழியாக்கத்தில் மொழிபெயர்ப்பாளனின் சொந்த அடையாளம் முடிந்தவரை மறைந்திருக்க வேண்டும் என எம்.எஸ் நம்பினார். ஆனால் இந்த தரப்பை ஏற்றுக் கொள்ள எனக்கு அன்று சிரமமாக இருந்தது. ஹெமிங்வேயின் A Clean Well-lighted Room கதையை மொழியாக்கும் போது வசனங்களுக்கு குமரிமாவட்ட வழக்கை பயன்படுத்தினேன். நண்பர் மனுஷ்யபுத்திரன் அதன் சிக்கல்களை விளக்கின பின் அதை பொதுத் தமிழுக்கு மாற்றினேன். ஜி.குப்புசாமி ஆர்கன் பாமுக்கின் ”என் பெயர் சிவப்பு” நாவலை மொழியாக்கின போது அதன் வரலாற்றுக் காலத்தை உணர்த்த செவ்வியல் தமிழை பயன்படுத்தி இருந்தார். இது பாமுக்கின் பூர்வ மொழியில் இருந்து வழுவும் காரியம். ஆனால் இதையெல்லாம் முயல ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு மிக ஆர்வமாய் இருக்கும். சு.ரா ”தோட்டியின் மகன்” மொழியாக்கத்தில் இது போன்ற சில சுதந்திரங்களை எடுத்திருந்தார். அதற்காக விமர்சிக்கவும் பட்டார்.
இதை செய்யலாமா கூடாதா? எளிதில் விடை காண இயலாத கேள்வி இது. எம்.எஸ் இவ்விசயத்தில் ஒரு செவ்வியல்வாதி. பொதுமொழியே சரி எனும் தரப்பாளர்.

எம்.எஸ்ஸின் மொழியாக்கங்களை மூலத்துடன் ஒப்பிட்டு விவாதிக்கும் ஒரு கருத்தரங்கை யாராவது ஏற்பாடு செய்ய வேண்டும். மொழிபெயர்ப்பாளர்களை பொருட்படுத்தி நுணுக்கங்களை விவாதிக்கும் வாய்ப்புகளே இங்கு உருவாவதில்லை. அதற்கான ஒரு முன்முயற்சியாய் இதை நாம் அணுகலாம். எம்.எஸ் போன்றவர்களுக்கு சிறந்த அஞ்சலியாய் அதுவே அமையும். அதுவரை எனது இதயபூர்வமான அன்பை அவரது ஆன்மாவுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...