முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொறாமையை எதிர்கொள்வது


நான் எழுத வந்த இந்த பத்து வருடங்களில் இலக்கிய உலகில் பல பூசல்களைக் கண்டிருக்கிறேன். பெரும்பாலும் காரணம் பொறாமை தான். பெருமாள் முருகன் “மாதொரு பாகன்” சர்ச்சையில் மாட்டிக் கொண்டு துச்சாதனர்களால் துவம்சம் செய்யப்பட்டுக் கொண்டிருந்த போது, அந்த அவலச்சூழலிலும் அவரைக் கண்டு கண்ணீர் உகுக்காமல் “என்ன இவருக்கு மட்டும் ஓவராய் கவனம் கிடைக்கிறது?” என மூக்கில் விரல் வைத்தவர்கள், அந்த பொறாமையினாலே அவரைக் கடுமையாய் வைதவர்களைத் தெரியும். நான் இதுவரையில் அடுத்தவர்களுக்குக் கிடைக்கும் புகழ், கவனம் கண்டு வயிறெரிந்ததில்லை. நான் நல்லவன் என்பதால் அல்ல. நான் இதையெல்லாம் கவனித்ததே இல்லை. அடுத்தவர்களின் பணம், வசதி, அழகிய காதலிகள் கூட என்னை உறுத்தியதில்லை. மண்ணில் முகம் புதைத்த நெருப்புக் கோழி போன்றே இத்தனைக் காலமும் இருந்திருக்கிறேன். ஆனால் கடந்த ஆறுமாதங்களில் என் மனம் சட்டென மாறி விட்டது. எதற்கும் யாரைப் பார்த்தாலும் பொறாமை எனும் நிலைமை! சும்மா சாலையில் பஞ்சுமிட்டாய் விற்கிறவரைப் பார்த்தால் கூட என் கண்ணில் பொறாமை எட்டிப் பார்க்கிறது.

எனக்கு என்ன ஆகிறது? நான் ஏன் இப்படி மாறி இருக்கிறேன்?
உண்மையிலேயே தெரியவில்லை.
இதற்கு இரண்டு தீர்வுகள் தெரிகின்றன.
1)   பொறாமை என்பது அடுத்தவருடன் நம்மை ஒப்பிடுகையில், அடுத்தவரை மற்றமையாக கருதுவதில் தோன்றுகிறது என்கிறார் திருவள்ளுவர் (அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் / பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான்.). அடுத்தவர்கள் யார் என்பது குறித்து நமக்கு தெளிவு இருப்பதில்லை. ஆகையால் ஒரு கற்பனையைக் கொண்டு அவர்கள் மீது பொறாமையை வளர்க்கிறோம். ஆனால் அந்த கற்பனை விரைவில் கலைந்து விடும் என்பதால் நம் பொறாமையும் விரைவில் கலைந்து விடும் என்பதால் நாம் பதற்றமாகிறோம். இது ஆச்சரியம் தான் – நமது பொறாமை ஒரு கருத்தமைவின் மீது வீற்றிருக்கிறது. அந்த கருத்தமைவு தகர்ந்து விடலாம் என்பது நமக்கு நல்லதே. ஆனால் அந்த தகர்வை தடுக்க வேண்டுமே என்கிற ஆவலாதியே நமக்கு அப்போது அதிகம் ஏற்படுகிறது. பதற்றம் அதிகமாக ஆக, நாம் இதை விட்டு, இவரை விட்டு அடுத்தொன்றை அடுத்தொருவரை நோக்கித் தாவுகிறோம். இந்த புதிய நபரை மற்றமையாக்கி பொறாமை கொள்வதைத் தொடர்கிறோம். இன்று பக்கத்து வீட்டுக்காரரை நோக்கி பொறாமைப்பட்டால் நாளை சகபணியாளர். அதற்கு அடுத்த நாள் நண்பர், அதன் பிறகு சாலையில் போகிறவர்…
ஏன் பொறாமைக்குள்ளாகும் ஆள் மீதான கருத்தமைவு கலையக் கூடாதே என தவிக்கிறோம்?
ஏனெனில் நாம் பொறாமைப்படும் முன் காலுடைந்த நாற்காலி போல் ஆடிக் கொண்டே இருக்கிறோம். நாம் யார், என்ன பண்ணுகிறோம் என்பது குறித்த நிலையின்மைகளே நம்மை அடுத்தவரை நோக்கி கவனம் குவித்து அவரை மற்றமையாக்க நம்மைத் தூண்டுகிறது. நம்மைக் குறித்த ஆற்றாமையே அடுத்தவர்கள் குறித்த பொறாமையாகிறது.
சரி, தீர்வுக்கு வருகிறேன்:
இப்போதைக்கு நான் செய்ய வேண்டியது இவ்வாறு அடிக்கடி சொல்லி என்னை உற்சாகமூட்டுவது: “நீ நன்றாகத் தான் வாழ்கிறாய். உன்னளவில் சிறப்பாக அனைத்தையும் செய்து வருகிறாய். முன்னெப்போதும் நீ இவ்வளவு ஆத்மார்த்தமான உணர்வுபூர்வமாய் வாழ்க்கையை அனுபவித்ததில்லை. புன்னகை செய். கண்களில் ஒளி கொண்டு பார். உன்னை விட சிறப்பானவர்கள் வேறு யார் சொல்?”
எந்த தர்க்க வாதங்களையும் நம் மனம் உள்வாங்காது. மனம் முழுக்க முழுக்க உணர்வுத் தளத்தில் இயங்குவது. அது மொழியால் கட்டுண்டது. மொழியின் சக்தியால் எப்படி சோர்ந்த மனத்தையும் நிமிர்ந்து நிற்க, தன்னிறைவுடன் ஆழ்ந்து மூச்சு விட வைக்க முடியும். மனம் தன்னிறைவு கொண்டால் பிறருடன் ஒப்பிடவோ குழம்பவோ தேவையிருக்காது. தான் உறுதியானால் மற்றமை தேவையிருக்காது.
2)   அடுத்து நான் செய்ய வேண்டியது என்னை கூடுதலாய் கண்காணிக்காமல், மனம் அதன் பாட்டுக்கு இயல்பாய் தெளிய அனுமதிப்பது. மனம் தன்னையே குணப்படுத்தும் தன்மை கொண்டது.  இன்று நம்மை சிதைக்கும் இந்த வாழ்க்கையே நாளை நம்மை மீட்டுத் தரும் கருணை கொண்டது. ஆக, நம்மைக் கடந்த ஆற்றல்களை நம்பி ஒப்புக் கொடுத்து விட வேண்டும்.
வள்ளுவர் பொறாமையை (அழுக்காறு) ஆன்மாவின் மீது ஒட்டிக் கொள்ளும் அழுக்காகவே காண்கிறார். ஆன்மா மலரும் போது பொறாமை இருக்காது. ஆன்மா வாடி வதங்கும் போது பொறாமை இருள் சூழும்.
 சீக்கிரமே விடியல் வரும்!


கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை நண்பரே. பலநேரங்களில் நாம் பிறர் மீது பொறாமை கொள்வதைவிட பிறரைப் பற்றி நம் மனதில் ஊவாக்கிக்கொள்ளும் பிம்பத்தின் மீதே பொறாமை கொள்கிறோம். நீங்கள் சொல்வது போல் மனதை அதன் போக்கில் தெளிய விட்டுவிடுவதே நல்லது...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...