முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொறாமையை எதிர்கொள்வது


நான் எழுத வந்த இந்த பத்து வருடங்களில் இலக்கிய உலகில் பல பூசல்களைக் கண்டிருக்கிறேன். பெரும்பாலும் காரணம் பொறாமை தான். பெருமாள் முருகன் “மாதொரு பாகன்” சர்ச்சையில் மாட்டிக் கொண்டு துச்சாதனர்களால் துவம்சம் செய்யப்பட்டுக் கொண்டிருந்த போது, அந்த அவலச்சூழலிலும் அவரைக் கண்டு கண்ணீர் உகுக்காமல் “என்ன இவருக்கு மட்டும் ஓவராய் கவனம் கிடைக்கிறது?” என மூக்கில் விரல் வைத்தவர்கள், அந்த பொறாமையினாலே அவரைக் கடுமையாய் வைதவர்களைத் தெரியும். நான் இதுவரையில் அடுத்தவர்களுக்குக் கிடைக்கும் புகழ், கவனம் கண்டு வயிறெரிந்ததில்லை. நான் நல்லவன் என்பதால் அல்ல. நான் இதையெல்லாம் கவனித்ததே இல்லை. அடுத்தவர்களின் பணம், வசதி, அழகிய காதலிகள் கூட என்னை உறுத்தியதில்லை. மண்ணில் முகம் புதைத்த நெருப்புக் கோழி போன்றே இத்தனைக் காலமும் இருந்திருக்கிறேன். ஆனால் கடந்த ஆறுமாதங்களில் என் மனம் சட்டென மாறி விட்டது. எதற்கும் யாரைப் பார்த்தாலும் பொறாமை எனும் நிலைமை! சும்மா சாலையில் பஞ்சுமிட்டாய் விற்கிறவரைப் பார்த்தால் கூட என் கண்ணில் பொறாமை எட்டிப் பார்க்கிறது.

எனக்கு என்ன ஆகிறது? நான் ஏன் இப்படி மாறி இருக்கிறேன்?
உண்மையிலேயே தெரியவில்லை.
இதற்கு இரண்டு தீர்வுகள் தெரிகின்றன.
1)   பொறாமை என்பது அடுத்தவருடன் நம்மை ஒப்பிடுகையில், அடுத்தவரை மற்றமையாக கருதுவதில் தோன்றுகிறது என்கிறார் திருவள்ளுவர் (அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் / பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான்.). அடுத்தவர்கள் யார் என்பது குறித்து நமக்கு தெளிவு இருப்பதில்லை. ஆகையால் ஒரு கற்பனையைக் கொண்டு அவர்கள் மீது பொறாமையை வளர்க்கிறோம். ஆனால் அந்த கற்பனை விரைவில் கலைந்து விடும் என்பதால் நம் பொறாமையும் விரைவில் கலைந்து விடும் என்பதால் நாம் பதற்றமாகிறோம். இது ஆச்சரியம் தான் – நமது பொறாமை ஒரு கருத்தமைவின் மீது வீற்றிருக்கிறது. அந்த கருத்தமைவு தகர்ந்து விடலாம் என்பது நமக்கு நல்லதே. ஆனால் அந்த தகர்வை தடுக்க வேண்டுமே என்கிற ஆவலாதியே நமக்கு அப்போது அதிகம் ஏற்படுகிறது. பதற்றம் அதிகமாக ஆக, நாம் இதை விட்டு, இவரை விட்டு அடுத்தொன்றை அடுத்தொருவரை நோக்கித் தாவுகிறோம். இந்த புதிய நபரை மற்றமையாக்கி பொறாமை கொள்வதைத் தொடர்கிறோம். இன்று பக்கத்து வீட்டுக்காரரை நோக்கி பொறாமைப்பட்டால் நாளை சகபணியாளர். அதற்கு அடுத்த நாள் நண்பர், அதன் பிறகு சாலையில் போகிறவர்…
ஏன் பொறாமைக்குள்ளாகும் ஆள் மீதான கருத்தமைவு கலையக் கூடாதே என தவிக்கிறோம்?
ஏனெனில் நாம் பொறாமைப்படும் முன் காலுடைந்த நாற்காலி போல் ஆடிக் கொண்டே இருக்கிறோம். நாம் யார், என்ன பண்ணுகிறோம் என்பது குறித்த நிலையின்மைகளே நம்மை அடுத்தவரை நோக்கி கவனம் குவித்து அவரை மற்றமையாக்க நம்மைத் தூண்டுகிறது. நம்மைக் குறித்த ஆற்றாமையே அடுத்தவர்கள் குறித்த பொறாமையாகிறது.
சரி, தீர்வுக்கு வருகிறேன்:
இப்போதைக்கு நான் செய்ய வேண்டியது இவ்வாறு அடிக்கடி சொல்லி என்னை உற்சாகமூட்டுவது: “நீ நன்றாகத் தான் வாழ்கிறாய். உன்னளவில் சிறப்பாக அனைத்தையும் செய்து வருகிறாய். முன்னெப்போதும் நீ இவ்வளவு ஆத்மார்த்தமான உணர்வுபூர்வமாய் வாழ்க்கையை அனுபவித்ததில்லை. புன்னகை செய். கண்களில் ஒளி கொண்டு பார். உன்னை விட சிறப்பானவர்கள் வேறு யார் சொல்?”
எந்த தர்க்க வாதங்களையும் நம் மனம் உள்வாங்காது. மனம் முழுக்க முழுக்க உணர்வுத் தளத்தில் இயங்குவது. அது மொழியால் கட்டுண்டது. மொழியின் சக்தியால் எப்படி சோர்ந்த மனத்தையும் நிமிர்ந்து நிற்க, தன்னிறைவுடன் ஆழ்ந்து மூச்சு விட வைக்க முடியும். மனம் தன்னிறைவு கொண்டால் பிறருடன் ஒப்பிடவோ குழம்பவோ தேவையிருக்காது. தான் உறுதியானால் மற்றமை தேவையிருக்காது.
2)   அடுத்து நான் செய்ய வேண்டியது என்னை கூடுதலாய் கண்காணிக்காமல், மனம் அதன் பாட்டுக்கு இயல்பாய் தெளிய அனுமதிப்பது. மனம் தன்னையே குணப்படுத்தும் தன்மை கொண்டது.  இன்று நம்மை சிதைக்கும் இந்த வாழ்க்கையே நாளை நம்மை மீட்டுத் தரும் கருணை கொண்டது. ஆக, நம்மைக் கடந்த ஆற்றல்களை நம்பி ஒப்புக் கொடுத்து விட வேண்டும்.
வள்ளுவர் பொறாமையை (அழுக்காறு) ஆன்மாவின் மீது ஒட்டிக் கொள்ளும் அழுக்காகவே காண்கிறார். ஆன்மா மலரும் போது பொறாமை இருக்காது. ஆன்மா வாடி வதங்கும் போது பொறாமை இருள் சூழும்.
 சீக்கிரமே விடியல் வரும்!


கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை நண்பரே. பலநேரங்களில் நாம் பிறர் மீது பொறாமை கொள்வதைவிட பிறரைப் பற்றி நம் மனதில் ஊவாக்கிக்கொள்ளும் பிம்பத்தின் மீதே பொறாமை கொள்கிறோம். நீங்கள் சொல்வது போல் மனதை அதன் போக்கில் தெளிய விட்டுவிடுவதே நல்லது...