வெளியான சந்தர்பத்தில் வெகுவாக பாராட்டப்பட்ட படம் “பிச்சைக்காரன்”.
நான் இப்படத்தை அப்போது பார்த்த போது ஒரு தெளிவான நேர்த்தியான திரைக்கதை அமைப்பு (சண்டைக்காட்சிகளைத்
தவிர) கொண்ட படம், அம்மா செண்டிமெண்டை மெலோடிராமா இன்றி பயன்படுத்திக் கொண்ட படம் என்கிற
அளவிலே ரசித்தேன்.
இன்று இணையத்தில் மீண்டும் பார்த்தேன். அப்போது எனக்கு மகாபாரதத்தின்
பாண்டவர்களின் மறைந்து வாழும் படலத்தை நினைவு வந்தது. விராத தேசத்தில் அரண்மனையில்
பிரஹண்ணளையாக திருநங்கையாக மாறுவேடத்தில் இருக்கும் அர்ஜுனன் தன் அந்தஸ்து, திறன்,
கௌரவம் ஆகியவற்றை கைவிட்டு பணிவாக தயக்கமின்றி செயல்படுகிறான். கௌரவர்கள் அத்தேசத்தை
படையெடுக்கும் போது, அப்படி அவர்கள் வென்றால் அது தம் வேடத்தை கலைக்கும் எனும் நிலை
ஏற்படும் போது மட்டும் அர்ஜுனன் தன் வேடத்தை கலைக்காமலே தன் திறன்களை வெளிப்படுத்துகிறான்;
அச்சம் மிக்க இளவரன் உத்தரன் பின்னிருந்து அவனுக்கு தேரோட்டியாய் செயல்பட்டு தன்னந்தனியாய்
துரியோதனன், கர்ணன் உள்ளிட்டோரை முறியடிக்கிறான். இறுதியில் தம் தலைமறைவு காலம் முடிந்த
பின் பாண்டவர் தம் வேடத்தைக் கலைத்து உரிய கௌரவம் பெற்று, மன்னருக்கு உறவும் ஆகிறார்கள்.
“பிச்சைக்காரனிலும்” இதே தான் நடக்கிறது. அருள் எனும் பெரும்
கோடீஸ்வரன் தன் தாயின் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு, ஒரு சாமியார் அறிவுரையின்படி,
48 நாள் பிச்சைக்காரனாய் வாழ்ந்து தீர்க்க முடிவெடுக்கிறான். அப்போது தன் காதலியிடத்து
உண்மை சொல்ல முடியாமல், இறுதியில் அவள் உயிரைக் காப்பாற்றவே தன் அடையாளத்தை பயன்படுத்த
இயலாமல் அவன் பரிதவிக்கிறான். இப்படி தானற்றுப் போகும் இந்த காலத்தில் அவன் முதிர்ச்சியடைகிறான்.
சமூகத் தீமைகளை அழிக்கிறான். மகாபாரதத்திலும் பாண்டவர்களுக்கு இதுவே நிகழ்கிறது. இந்த
தியாகம் வீணாகி விடுமோ எனும் அச்சம் இருந்து கொண்டே இருந்தாலும் இறுதியில் அவன் தாய்
மீள்கிறாள்; மகாபாரத்தில், பல அவநம்பிக்கை தருணங்களுக்கு முடிவில், தர்மம் ஜெயிக்கிறது.
நமது புராணங்களின் பல நெருக்கடி தருணங்கள் இந்திய கூட்டுமனதை
அசைப்பவை. லோகித தாஸ் ஒருமுறை சொன்னாராம், அவரது எல்லா படங்களின் கதையும் ஏதாவதொரு
மகாபாரத சம்பவத்தை ஒட்டியது என. எனக்கென்னவோ தமிழின் பெரும்பாலான வணிக பட கதைகள் பாரதக்
கதைகளின் நீட்சி எனத் தோன்றும். உ.தா. “பாட்ஷா” மேற்சொன்ன மகாபாரத தலைமறைவு பருவக்
கதையே. “அண்ணாமலை”? துரோணருக்கும் அவரது ஆதி நண்பரான தௌரபதருக்கும் இடையிலான அன்பும்
பிரிவும் மோதலும் பழிவாங்கலும் பற்றின கதையின் ஸ்டைலான ரஜினி டெம்பிளேட் தானே. ஒட்டுமொத்த
மகாபாரதக் கதையின் சுருக்க வடிவம் தானே “தேவர் மகன்”. இப்படி நீங்கள் எந்த வெற்றி பெற்ற
தமிழ் சினிமாவை எடுத்தாலும் அதில் மகாபாரதச் சாயல் இருக்கும்.
ஆக, “பிச்சைக்காரன்” விசயத்தில் எனக்கு ஆச்சரியம் இல்லை!
கருத்துகள்