![]() |
| Image courtesy: Down to Earth |
என்னுடைய குடும்பம் புற்றுநோய்க் குடும்பம். என் பாட்டி, அத்தைகள், அத்தை ஒருவரின் கணவர், என் அப்பா என பலரும் புற்றுநோய்க்குப் பலியானதை, அந்நோய் உடலை மெல்ல மெல்ல சிதைக்கும் அவலத்தை, அது குடும்பத்தினருக்கு அளிக்கும் கடும் துயரத்தை, நேரடியாகக் கண்டிருக்கிறேன்; புற்றுநோய் ஏற்படுத்தும் பொருளாதாரப் பாதிப்பையும் அனுபவித்திருக்கிறேன்.
என் அப்பா தனக்குப் புற்றுநோய் உள்ளதாக அறிந்துகொண்டபோது அது ஓரளவு முற்றிப்போன நிலையில் இருந்தது. நான் அப்போது முதுகலைப் பட்டத்துக்காகப் படித்துக்கொண்டிருந்தேன். கடுமையான அலோபதி சிகிச்சைக்குப் பிறகு அவர் சில வருடங்கள் கூடுதலாய் வாழ்ந்தார். ஆனால், அதற்கு அவர் கொடுத்த விலை பெரிது. அவரது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இந்த சிகிச்சைக்காக இழந்தார். அவரது மறைவுக்குப் பிறகு அம்மாவின் எதிர்காலம் கேள்விக்குறியானது. ஒரே வீடு மட்டும் எஞ்சியிருந்தது; அதிலிருந்து வரும் வாடகையும் அதோடு அப்பாவின் மிகச் சொற்ப ஓய்வூதியமும் அவரைச் சற்றே காப்பாற்றின.
முதுகலைப் படிப்புக்குப் பின் ஆய்வுப் படிப்பையும் முடிக்க இயலாத நிலை எனக்கு ஏற்பட்டது; நான் எம்.பில் சேர்ந்த பின் அப்பாவின் நிலை அறிந்தபின் குற்றவுணர்வு என்னை வாட்டியது; குடும்பம் பணமின்றித் தவிக்கையில் நான் மட்டும் சொகுசாகப் படிப்பதா? என் பெற்றோர் படிக்க வேண்டாம் எனத் தடுக்கவில்லை; நான் படிப்பை விட்டுவிட்டு வேலைக்குச் செல்லவா என யோசித்தபோது அவர்கள் “வேண்டாம் படி” எனச் சொல்லவும் இல்லை. அந்தக் குழப்பமான நிலையில் நான் கவிஞர் யுவன் சந்திரசேகரிடம் சென்று என் மனத் தடுமாற்றத்தைப் பகிர்ந்து கொண்டேன். அக்கட்டத்தில் ஒரு தீர்க்கமான முடிவெடுக்க அவர் உதவினார். படிப்பைக் கைவிட்டு வேலைக்குச் செல்ல முடிவெடுத்தேன்.
விளைவாக எந்த வேலையிலும் என்னால் உறுதியாக நீடிக்க முடியவில்லை; என் விருப்பத்துக்குரிய வேலையை நான் அடைய எட்டு வருடங்கள் ஆயின. ஒருவேளை என் இளங்கலையின்போது அப்பாவைப் புற்றுநோய் தாக்கியிருந்தால் நான் கல்லூரிப் படிப்பைக்கூட முடிக்காமல் போயிருக்கலாம். இதுபோன்ற உருக்குலைவுகள் பலர் வாழ்க்கையிலும் நிகழ்ந்துள்ளதை அறிவேன்.

கருத்துகள்