கட்டியங்காரன் பாடி பார்வையாளர்களை கட்டிப் போடுகிறான், வேடிக்கையாய் பேசி சிரிக்க வைக்கிறான். ஆக இந்த மரபு வழி வரும் நாம் நம்மையறியாமலே இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர்கள் மற்றும் நகைச்சுவையாளர்களை கதைசொல்லி எனும் ஒருவரது பல வடிவங்களாக
காணத் துவங்குகிறோம் – நாயகனுக்கு இணையாகவும்
இவர்கள் மாறுகிறார்கள். கட்டியங்காரன்
எடுக்கும் பல தோற்றங்களாகிறார்கள் இவர்கள். நமது தமிழ் சினிமாவில் கூத்தின் தாக்கம் வலுவாக இன்னும் உள்ளதற்கு
இந்த இயக்குநர்கள் துவங்கி இசைக்கலைஞர், விதூஷகன் வரையிலானவர்களின் நாயக பரிணாமம் ஒரு அத்தாட்சி.
1) கார்ப்பரேட்மயமாகாத நிலை: சினிமா கார்ப்பரேட்மயமாக ஆக, அதனுள் உள்ள ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி நிபுணர்கள் தோன்றுவார்கள். அப்போது இயக்குநர் தனக்குத் தரப்பட்ட திரைக்கதைக்கு ஒரு காட்சி
மொழி அளிப்பவராக, படவேலைகள் திறம்பட
நடப்பதை நிர்வகிப்பவராய், உண்மையான ஒரு “இயக்குநராய்” (ஹாலிவுட் பாணியில்) மாறுவார். அதாவது பாரதிராஜா, கமல்கள் மணிரத்னம் போல் ஆவார்கள். தமிழ் சினிமா கார்ப்பரேட்மயமாகும் போது மாற்று சினிமா கூட
தனக்கான விற்பனைத் திறனைப் பொறுத்து மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என்றாகும். அப்போது ஒருவரே அனைத்து துறைகளிலும் வேலை செய்து நடிகராகவும்
இயக்குநராகவும் செயல்பட்டு சின்ன பட்ஜட்டில் படமெடுத்து யாருடைய தலையீடும் இன்றி பரிசோதனைகள்
செய்யும் காலம் முடிவுக்கு வரும். இயக்குநரின் தேகத்தில்
இருந்து “கட்டியங்காரனின்” சாமி இறங்கிப் போக, இயக்குநர் ஒரு எந்திரத்தனமான கார்ப்பரேட் சி.இ.ஓ போல ஆவார்.
நமது இயக்குநர்-நடிகர்களை நாம் சீரியசாக எடுத்துக் கொள்வதோ அவர்கள் கொண்டு
வந்த மறுமலர்ச்சியை போதுமான அளவு பாராட்டுவதோ இல்லை. தெருக்கூத்து வடிவத்தில் இருந்து அந்நியப்பட்டு முழுக்க ஹாலிவுட்
பார்முலா படங்களை நோக்கி, கார்ப்பரேட்டுகளால்
விலாவரியாய் விவாதித்து, அளந்து உறுதி
செய்து அளிக்கப்படும் பேக்கேஜ்ட் அயிட்டம் போன்ற படங்களை நோக்கி தமிழ் சினிமா நகரும்
காலம் வெகுதொலைவில் இல்லை. ஒருவிதத்தில்
அந்த ராட்சத எந்திர சக்கரங்கள் நம் சினிமாவை அரைப்பதற்கு தடைகளாய் இருப்பவர்களும் இந்த
இயக்குநர்-நடிகர்களே.
நடிகனுக்கான எந்த பொருத்தங்களும் இல்லாதவன் என
நிராகரிக்கப்பட்டவன் ஒருவன் நடிகனாகி பெரும் வெற்றி பெறுவதும் இயக்குநர்-நடிகர்கள் விசயத்தில் மட்டுமே சாத்தியப்பட்டுள்ளது. இந்த பொதுப்போக்குக்கு பொருந்தாத, பிசிறுபட்ட தன்மையே இவர்களின் முக்கியத்துவம். ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற நட்சத்திர
நடிகர்களால் முழுக்க நீர்த்துப் போக செய்யப்பட்ட சினிமாவில் கதைக்கும் வசனங்களுக்கும்
தனி கவனம் ஏற்படுத்தி அவற்றால் மட்டுமே ஒரு படத்தை பெரும் வெற்றியாக்க முடியும் என
நிரூபித்தவர்களும் இவர்களே. இந்த விளிம்புநிலை
நட்சத்திரங்கள் இருக்கும் வரை அதன் தொல்வடிவமான கூத்தில் இருந்தும் துண்டிக்கப்படாமல், தனது தனித்தன்மையை இழக்காமல் தமிழ் சினிமா இருக்கும். அதற்காகவே நாம் இவர்களைக் கொண்டாட வேண்டும்.
நன்றி: உயிர்மை, டிசம்பர் 2018
கருத்துகள்