பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ஷேகர் குப்தா தனது கட்டுரை ஒன்றில் என்னதான் சமூக வலைதளங்களில் கலாய்க்கப்பட்டாலும் மோடி தன் ஒவ்வொரு அடியிலும் வெற்றிபெறுகிறார் என்கிறார். அவர் எந்தளவுக்குத் திறமையான புத்திசாலித்தனமான ஒரு ‘பேச்சாளர்’, சமூகமாக்கல் நிபுணர் என்பதைக் குறிப்பிடுகிறார். எப்படி?
மற்ற தலைவர்கள் மக்களிடம் தன் கருத்துக்களைக் கூறுவார்கள், சமூகப் பிரச்சனைகளைப் பற்றி ஆவேசமான மொழியில் உரையாடுவார்கள். ஆனால் அப்போது மக்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருப்பர். ஆனால் மோடிக்கு மக்களின் நாடித்துடிப்பு தெரிகிறது. எவ்வளவு நெருக்கடியான சமயத்திலும் மக்களின் நற்பெயரை சம்பாதிக்கத் தெரிகிறது. அதற்கு அவர் பயன்படுத்தும் ஒரு உத்தி சமூகவலைதளங்களில் இருந்து உருவியது. என்ன உத்தி?
சமூக வலைதளங்கள் ஏன் இவ்வளவு வசீகரமாய் போதையூட்டும்படியாய் இருக்கின்றன? அங்கு நாம் எவ்வளவு படித்தாலும் ‘படிப்பதாக’ உணர்வதில்லை. யாரோ ரொம்ப பக்கத்தில் நின்று நம்மிடம் அரட்டை அடிக்கிற உணர்வு வருகிறது. அந்த நபர் தொடர்ந்து நம்முடைய உணர்ச்சிகளை மதிக்கிறார், கருத்துக்களை பொருட்படுத்துகிறார். (அவரைப் பிடிக்காவிட்டால் நாம் அவரிடம் இருந்து விலகிட முடியும்.) முதன்முதலாக நாம் மதிக்கப்படுவதாக, பொருட்படுத்தப்படுவதாக உணர்கிறோம். மோடி நம்மை கொரோனாவுக்கு எதிராக கைதட்ட சொல்லும் போதும், விளக்கணைத்து டார்ச் அடிக்க சொல்லும் போதும் அவர் நம்முடன் ஒரு பேஸ்புக் பதிவரைப் போன்றே நடந்து கொள்கிறார் - அவர் நம்மை சமமாக நடத்துவதாய், நம்முடனே இருப்பதாய் ஒரு பிரமையை ஏற்படுத்துகிறார். நம்மிடம் கோரிக்கைகள் வைக்கிறார். அவற்றை நாம் ஏற்று நடந்து கொண்டால் நாம் அவரது அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதாய், அவரிடத்தில் இருந்து தேசத்துக்காக சேவை செய்வதாக உணர்கிறோம்.
தொடர்ந்து தனிமையில் தவிக்கிற, போதிய கவனம் கிடைக்கவில்லை என வாடுகிற ஒரு பெரும் ஜனக்கூட்டத்துக்கு இந்த சின்னச்சின்ன செய்கைகள் பெரிய நம்பிக்கையை, நிறைவை அளிக்கிறது. இத்தனை கோடி பேர் ‘கொண்டாடுகிற’ ஒரு பெரும் தலைவன் தன்னிடம் கைகூப்பிக் கெஞ்சுகிறானே, அவனுக்காக நாம் பதிலுக்கு ஒன்றை செய்தோமோ என நெகிழ்கிறார்கள். எப்படி பேஸ்புக் பதிவர்களிடம் நாம் நம்முடன் வாழும் குடும்பத்தினரை விட அதிக அணுக்கத்தை உணர்கிறோமே அதைப் போல மெல்ல மெல்ல மோடியிடமும் உணரத் தொடங்குகிறோம்.
இன்று இரவு விளக்கேற்றி வைத்து என் அண்டை வீட்டார்கள் கொண்டாடியதைக் கண்டேன். அத்தனை பேரும் சங்கிகள் அல்ல. அவர்களில் கிறுத்துவர்கள், இஸ்லாமியர், இந்துத்துவ எதிர்ப்பாளர்கள் கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் தம் பிரதமருக்கு அணுக்கமாய் சில நொடிகளாவது உணர்ந்த வாக்காளர்கள். அவர்கள் விளக்கணைத்து மெழுகுவர்த்தியை ஏற்றும் போது தாம் தனிமையாக பலவீனமாக இல்லை என உணர்கிறவர்கள். இவ்வளவு சமூகத்தனிமையும், பாதுகாப்பின்மையும் கொண்ட ஒரு காலத்தில் அது அவர்களுக்கு அதிகாரத்தின் ஒரு தற்காலிக அரவணைப்பை, நம்பிக்கையை, வலிமையை அளிக்கிறது.
மோடியின் இந்த கொரோனா எதிர்ப்பு பரிந்துரைகள் நமக்கு வேடிக்கையாகத் தெரியலாம். அவர் படித்தவரும் அல்ல. ஆனால் இன்றைய காலத்தில் எப்படி மக்களுடன் உரையாட வேண்டும் என கண்டுபிடித்த புத்திசாலி.
இன்று மக்களுக்கு கேட்க அல்ல பேசவே விருப்பம். ஆகையால் மோடி அனைவரையும் கைதட்டி, டார்ச் அடித்து, சங்கை முழக்கி, பட்டாசு வெடித்து தன்னிடம் ‘பேச’ ஒரு வாய்ப்பை அளிக்கிறார்.
ஒரு புதுப்படம் வெளியாகும் போது ரஜினி / விஜய்யின் ரசிகர் மன்றங்கள் எப்படி செயல்படும் எனப் பார்த்திருப்பீர்கள். ரசிகர்களுக்கு இந்த நட்சத்திர நடிகர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவர்களைப் பொருட்படுத்தி அங்கீகரிப்பது, பெரிய விளம்பரத் தட்டிகளை எழுப்பி, அதில் பால் ஊற்றி, பெரிய ஆர்ப்பாட்டம் செய்ய இடமளிப்பது மட்டுமே. அந்த ஆர்ப்பாட்டங்கள் ஒருவித உரையாடல். அது அவர்களுக்கு அடையாளத்தை, வாழ்க்கை மீது நம்பிக்கையை அளிக்கிறது. மோடி இதை அடுத்த நிலைக்கு எடுத்து செல்கிறார்.
அவர் யாரையும் தன்னைப் புகழ, பாராட்டக் கோருவதில்லை. அவர் மக்களிடம் தமக்காக சில காரியங்களைச் செய்யக் கோருகிறார். அச்செயல்கள் அபத்தமாக் இருந்தாலும் அவற்றின் வழி இந்த தேசம் மொத்தத்துடன் பேச, தேசத்தின் கவனத்தை தம் பால் திருப்பிட ஒரு வாய்ப்பை அவர் வழங்குகிறார். எப்படி மோடியின் ட்வீட்டுக்கு எல்லாரும் செவிசாய்ப்பார்களோ இப்போது அவருக்கு இசைந்து செயலாற்றுகிறவர்களும் சில நிமிடங்கள் மோடியின் ஒளிவட்டத்தைப் பெற முடியும். ரஜினி / விஜய் ரசிகர்களின் எண்ணிக்கை கூடவோ குறையவோ செய்யாது. ஆனால் மோடி இந்த உத்தி மூலம் தன்னை நேசிக்காதவர்களைக் கூட ‘நேசிக்க’ வைத்து விடுகிறார். ஒன்பதே நொடிகளில் அவர் பல கோடி பேர்களைத் தன்னுடன் உரையாட வைக்கிறார். அது தான் அவரது அதிகாரம்!
ஒரு ஆசிரியனாக நான் இந்த உளவியல் மாற்றத்தை தற்போது கவனிக்கிறேன் - இன்று வகுப்புகளில் மாணவர்களை கவனிக்க வைக்க சிறந்த வழி அவர்களைப் பேச வைத்து அதன் வழியே நாம் பேசுவது தான். இன்று ஸ்மார்ட் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பாடமெடுப்பதில்லை - அவர்கள் செயலிகள் வழி மாணவர்களை தம்மைத் தாமே கற்க செய்கிறார்கள். மாணவர்கள் அப்போது தாம் செயலூக்கத்துடன் உள்ளதாக, அதிகாரம் பெறுவதாக நினைத்து குஷியாகிறார்கள். ஒரு ஆசிரியர் இன்று வகுப்பை நடத்துகிறவர் அல்ல ஒருங்கிணைப்பவர் (facilitator).
மோடியும் இந்த ஸ்மார்ட் வகுப்பறையின் facilitator ஆசிரியர்களைப் போலத் தான் குடிமக்களை நடத்துகிறார். எதிர்கால இளம் தலைவர்களுக்கு மோடியின் இந்த கோமாளித்தனங்கள் ஒரு பாடப்புத்தகமாக இருக்கும்!

கருத்துகள்