இன்றைய போட்டியில் 164 எனும் இலக்கை ஹைதராபாத்தால் அடித்திருக்க முடியும் - துரதிஷ்டவசமாக ரன் அவுட்டுகள் இரண்டு, ஒரு காயம் ஆகியவை அவர்களை முடக்கியிராவிட்டால். ஆனால் பெங்களூர் இதை சாதகமாக பயன்படுத்தி பந்து வீசி வென்றனர். குறிப்பாக இன்றைய நட்சத்திரம் வீச்சாளர்கள் சயினி மற்றும் சாஹல். இறுதி ஓவர்களில் துபேவை ஹைதராபாதால் அடிக்க முடியவில்லை என்பது விசித்திரமே. அடித்துப் பிடித்து வென்றிருந்தாலும் பெங்களூர் அணியின் பந்து வீச்சு பெரிதும் நம்பிக்கையளிக்கவில்லை.
இன்றைய ஆடுதளம், சூழல் - முந்தின ஆட்டங்களில் இருந்து சற்று வித்தியாசமாக உள்ளது - துவக்க 6-8 ஓவர்களுக்கு ஆடுவது சுலபமாகி உள்ளது. குறைநீளத்தில் அதிகம் எகிறவில்லை. பந்து சுழலவில்லை. ஆடுதள அமைப்பாளர்கள் வேலை பார்த்துள்ளார்கள்.
முதலில் மட்டையாடிய பெங்களூர் துவக்க வீரர்கள் சிறப்பாக ஆடினர். குறிப்பாக தேவ்தத் படிக்கல்லின் அரை சதம் - அவர் உயரமான இடதுகையாளர். நன்றாக டைமிங் செய்கிறார். கால்கள் அதிகம் நகர்வதில்லை. நேராகவோ v வடிவிலோ அடிப்பதில்லை. off பக்கம் இடம் விட்டு அடிக்கிறார். கால் பக்கம் வந்தால் flick செய்கிறார். சற்று 90 மற்றும் 2000த்தின் துவக்கத்தின் இலங்கை அணியில் ஆடிய இடதுகை மட்டையாளர்களை நினைவுபடுத்துகிறார்; குறிப்பாக உப்புல் தரங்காவை. ஆனால் இப்போதைக்கு அவரை ஒரு சிறந்த வீரர் என சொல்ல முடியாது. தொழில்நுட்பத்தில் வலுவானவர் அல்ல. ஒரே பாணியில் அநேகமாய் ஒரே இடங்களில அடிக்கிறார். வருங்காலத்தில் அவரது பலவீனத்தை உணர்ந்து வீசுவார்கள். டி-20யில் ஜொலிப்பதற்கான தோள்வலிமையும் இல்லை.
ஒரு விசயம் வினோதமாக இருந்தது - துவக்க வீரர்கள் நன்றாக ஆடி வந்த போதே தொடர்ந்து 15வது ஓவர் வரை அதை எடுத்து செல்லாமல் அவசரப்பட்டு வெளியேறினார்கள். ஒருவேளை 180-200 ரன்களை எதிர்பார்க்கிறார்களோ என நினைத்தேன். ஆனால் இருவரும் போன பிறகு வந்த கோலி மற்றும் டிவில்லியர்கள் பொறுமையாக ஒற்றை இரட்டை ஓட்டங்கள் எடுத்து ரன் ரேட்டை குறைத்தார்கள். இதற்கு துவக்க வீரர்களே ஆடியிருக்கலாமே?
முக்கியமான திருப்புமுனை நடராஜன் கோலியின் விக்கெட்டை எடுத்தது.
இறுதி 8 ஓவர்களில் ஓட்டமெடுப்பது சிரமமாக உள்ளது. வந்தவுடன் பந்தின் வேகத்தை கணித்து அடிக்க இயலவில்லை. ஒருவேளை டிவில்லியர்ஸ் அரைசதம் அடிக்காவிடில் பெங்களூர் இன்னும் சிரமப்பட்டிருக்கும்.
மைதானத்தின் புல்வெளி, லேண்டிங் இடம் ஆகியவை சற்று இளகின மண்ணால் அமைக்கப்பட்டுள்ளதால் சுலபத்தில் களத்தடுப்பாளர்களுக்கு வழுக்குகிறது. நேற்று அஷ்வின் காயப்பட்டால் இன்று இரண்டு மேல் மேலும் காயப்பட்டார்கள் - மிச்சல் மார்ஷ் மற்றும் சாஹல். அதுவும் சரியாக முதல் 6 ஓவர்களுக்குள் இது நடக்கிறது. என்ன மாயமோ?
நேற்றைக்கும் இன்றைக்குமான முக்கிய வித்தியாசம் இந்த ஆடுதளத்தில் திடீரென சுழல்பந்து திரும்பவில்லை - ரஷீதுக்கு அது நடக்கவில்லை என்றால் பாருங்களேன். (ஆனால் சாஹலின் ஒரு பந்து திரும்பியது - அவர் ரஷீதை விட சரியான நீளத்தில் வீசயதாலா அல்லது இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுதளம் சற்று மாறுகிறதா?) இது மத்திய ஓவர்களில் விக்கெட் எடுப்பதை சிரமமாக்கியது. பொறுமையாக கராறாக வீசி ரன்களை குறைத்து மட்டையாளனை கடுப்பேற்றி விக்கெட் எடுப்பது மட்டுமே சாத்தியம். அதைச் செய்கிற அணியே வெல்லும்.
நவ்தீப் சயினி மிக நன்றாக வீசினார் - 145 கி.மீ வேகத்தில் சரியான நீளத்தில். ஒரு சர்வதேச வீச்சாளரைப் போல அவ்வளவு நிதானமாய் வீசுகிறார். வரும் சீஸனில் இந்திய அணிக்குள் தொடர்ந்து இடம்பெறுவார் என நினைக்கிறேன்.
இது போன்ற ஆடுதளத்தில் 160க்கு மேல் இலக்கை விரட்டும் போது முதல் 10 ஓவர்களில் 90-100 ரன்களைக் குவித்து விட வேண்டும். அல்லாவிடில் ஒன்றிரண்டு மட்டையாளர்கள் இறுதி ஓவர் வரை நின்றாட வேண்டும்.
ஹைதராபாத் முடிந்தவரை ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்திருந்தார்கள் என்றாலும் காயம், துரதிஷ்டமான ரன் அவுட்டுகளை அவர்களை பின்னுக்குத் தள்ளியது. அதிர்ஷ்ட தேவதை இன்று கோலியை தாராளமாக அணைத்துக் கொண்டாள்.
வரும் ஆட்டங்களில் பெங்களூர் இன்னும் சிறப்பாக பந்து வீச்சில் ஆட முயன்றால் இத்தொடரில் இறுதிப்போட்டியைக் கூட அடைய முடியும்.

கருத்துகள்