முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் கிரிக்கெட் வர்ணனை எனும் சித்திரவதை



ஆதான் டிவி யுடியூப் சேனலில் ஷாலின் தமிழ் கிரிக்கெட் வர்ணனை பற்றி கூறிய புகார்களைக் கேட்டேன் - உண்மைகளை பொட்டில் அடித்தாற் போல சொல்லியிருக்கிறார்:

1) ஆம், வர்ணனையாளர்களின் பிராமண கொச்சைத் தமிழ் எரிச்சலூட்டுகிறது.

2) அவர்கள் சமூகப்பொறுப்பின்றி உடல்தோற்றத்தை அவமதிக்கும்படி பேசுகிறார்கள்.

3) அவர்களின் உடல்மொழியில் ஒரு சகஜத்தன்மை இல்லை, அகங்காரம் தொனிக்கிறது.


கூடுதலாய் எனது சில புகார்களையும் சேர்த்துக் கொள்கிறேன்:


அவர்களுக்கு தமிழில் சரளமாய் பேசத் தெரியவில்லை


 - நீங்கள் இந்தியில் சரளமாய் பேசத் தெரியாமல் இந்தி வர்ணனையாளர் ஆக முடியுமா? நான் இந்தி வர்ணனையை நீண்ட காலமாகவே கவனித்து வருகிறேன். அவர்கள் ஆங்கிலக் கலப்பின்றி முடிந்தவரை சரளமாக பேசுகிறார்கள். ஏன் தமிழ் வர்ணனையாளர்களுக்கு அது சாத்தியமாவதில்லை. ஏனென்றால் இவர்கள் அதற்கான முயற்சி எடுப்பதில்லை. ஒரு பேட்டியில் லஷ்மண் சிவராமகிருஷ்ணன் தான் ஆங்கில வர்ணனையாளர் ஆன பிறகு வீட்டில் குடும்பத்தினருடன் பிரக்ஞைபூர்வமாய் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கியதாய், இது தனது சரளத்தன்மையை அதிகரிக்க உதவியது என்கிறார். ஆனால் இந்த பயம், பொறுப்புணர்வு தமிழ் வர்ணனையாளர்களுக்கு இல்லை

ஆர்.கே எனப்படும் ராதாகிருஷ்ணன்சந்தர்ப்பம்’ / ‘கட்டம்என வரவேண்டிய இடத்தில்காலகட்டம்எனும் சொல்லை தொடர்ந்து பயன்படுத்தும் போது காது கூசுகிறது. மேலும் அவர் அப்படியே ஆங்கிலத்தில் பேச வேண்டியதை தமிழில் மொழியாக்கி அதே ஆங்கில உச்சரிப்பில் தமிழில் பேசுவதைக் கேட்கபுலிகேசியில்நிக்சன் துரை பேசுவதைப் போன்றே இருக்கிறது. பத்ரிநாத்தைப் போன்ற கான்வேண்ட் கிளிகளுக்கு அடிப்படையான தமிழ்ச் சொற்களே தெரியவில்லை. pitch, wicket, batsman, ground எனக் கொல்லாமல் ஆடுதளம், மட்டையாளர், மைதானம் என எளிய சொற்களை பயன்படுத்தினால் என்ன? அரைக்கோழி என கொச்சையாய் சொல்லாமல் குறைநீளப் பந்து எனக் கூறலாமே. இன்னொரு கொடுமைகாற்று வெளியிடை” - அதன் பொருள் காற்றைப் போன்ற இடையினள் எனத் தெரியாமல் விளையாட்டுக்காகவே சொல்கிறார்களா தெரியவில்லை; மட்டைக்கும் பந்துக்கும் இடைவெளி இருந்தது எனக் கூற எதற்கு பாரதியாரை தவறாக மேற்கோள் காட்ட வேண்டும்? ஏன் ஒரு அழகிய இலக்கிய வரியை அவமதிக்க வேண்டும்? இதை ஆரம்பித்து வைத்தவர் ஆர்.ஜெ பாலாஜி என்றாலும் அடுத்தடுத்து வந்தவர்களுக்கு இதன் பொருள் தெரியாததால் அப்படியே பின்பற்றுகிறார்கள். ஆங்கில வர்ணனையில் நீங்கள் இப்படி ஷேக்ஸ்பியரை தவறாக மேற்கோள் காட்ட முடியுமா? அது அசிங்கம். ஆனால் தமிழ் தெரியாமல் இருப்பது பெருமை


அடுத்த பிரச்சனை இவர்களில் பிராமணர்களுக்கு பொதுத்தமிழே தெரியவில்லை என்பது.

 

இவர்களுக்குத் தெரிந்த தமிழானது உள்வட்டத்தில் நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினரிடம் பேசும் தமிழ். அது இயல்பாகவே பிராமணத் தமிழாக உள்ளது. வெளிவட்டத்திலும் பிராமணத் தமிழில் அவர்கள் பேணுவதன் அவசியம், நியாயம் எனக்கு என்றுமே விளங்கியதில்லை. ஏனென்றால் நம்மில் பலரும் இரட்டைத் தமிழை வைத்திருக்கிறோம் - ஒன்று நெருக்கமானவர்களிடம், வீட்டிலுள்ளோரிடம், ஊர்க்காரர்களிடம் பேசும் ஊர்த்தமிழ்; மற்றொன்று ஒரு பொதுத்தமிழ். பிராமணர்கள் ஏனோ பொதுத்தமிழை அதிகம் பயன்படுத்துவதில்லை. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளர்களில் 98% தமிழ் பிரமாணர்கள் என்பதால் அவர்களுக்கு உண்மையிலேயே தெரிந்த அந்த கொச்சைத்தமிழில் பேசி நம்மை கடுப்பேற்றுகிறார்கள். ஏன் கடுப்பென்றால் நமக்கு அவர்களது வரவேற்பறையில் உட்கார்ந்து ஒட்டுக்கேட்கிற உணர்வு வருகிறது. இது ஏதோ பிராமண சங்க கூட்டம் போல என நினைக்கிறோம், நாம் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்படுவதாய் உணர்கிறோம்.


இங்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து தாக்குகிறோம் என பிராமணர்களில் சிலர் நினைக்கலாம். இல்லை. நீங்கள் குமரி மாவட்டத்துக்கு வந்து யாரைப் பார்த்தாலும் அனேகமாய் ஒரே தமிழைத் தான் பேசுவார்கள், பிராமணர்கள் மட்டும் தான் அங்கும் தனித்து நிற்பார்கள். இதை அவர்கள் திட்டமிட்டு செய்வதாய் நான் கூறவில்லை - இது ஒரு தன்னிச்சையான செய்கை; தனித்திருக்க வேண்டும் எனும் ஒரு விழைவு; இது அவர்களது பண்பாட்டில் இருந்து உருவாகி வரலாம்; அல்லது வேறு காரணங்களால் இருக்கலாம். பிராமண நண்பர்கள் தாம் ஆராய்ந்து காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும்.

 ஒரு பொது மொழியை பயன்படுத்தாத போது பிராமணர்கள் ஒரு சமூக உயிரியாக இல்லாமல் ஆகிறார்கள். இதை ஒரு அக்கறையின்மை, சமூகப் பொறுப்பின்மை என்றே பார்க்கிறேன் - ஏனென்றால் தமிழில் நல்ல வாசிப்பு கொண்ட பிராமணர்கள், மொழி உணர்வு கொண்ட பிராமணர்கள் பொதுத்தமிழில் சரளமாய் உரையாடுவதைக் காண்கிறேன். (அவர்களிலும் (அசோகமித்திரனைப் போல) சிலர் பிரக்ஞைபூர்வமாய் பொதுத்தமிழை தவிர்த்தார்கள்.) இன்னொரு பக்கம் சினிமாவில் எஸ்.பி.பியைப் போன்ற தெலுங்கு பிராமணர்கள் அவ்வளவு துல்லியமாய் தமிழை உச்சரித்தார்கள். கமலஹாசன் பொதுவெளியில் பிராமணத் தமிழில் பேசி நான் கேட்டதில்லை - அவர் ஒன்று பொதுத்தமிழில் பேசுவார், வட்டாரத் தமிழ் என்றால் மதுரைத்தமிழுக்கு உற்சாகமாய் தாவி விடுவார். பிற பிராமணர்கள் இவர்களைக் கண்டு சற்று மெனெக்கெட்டு ஒழுங்காய் பொதுத் தமிழைப் பயில்வதே ஒரே வழி. இல்லாவிடில் இப்படியான புகார்களை தொடர்ந்து சந்திக்க நேரும். பிராமணர்கள் மீது தமிழகத்தில் உள்ள வெறுப்புக்கு இங்குள்ள திராவிட இயக்கங்கள் மட்டும் காரணமல்ல, அச்சமூகத்தினர் மொழி மற்றும் தோற்றத்தினால் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டதே. இப்போது தோற்றத்தில் ஓரளவு பொதுத்தன்மையை பெற்று விட்டார்கள், மொழியில் பிடிவாதமாய் அந்த இடத்திலேயே நிற்கிறார்கள். அவர்கள் பிராமணத் தமிழை பேசக் கூடாது என யாரும் சொல்லவில்லை, அதை எல்லா இடங்களிலும் பேசாதீர்கள் என்கிறோம்.


பொதுத்தமிழில் பேசுவதன் இன்னொரு அனுகூலம் அது கேட்க அவ்வளவு இனிமையாக இருக்கும் என்பது. இதனாலே இன்றும் சிறந்த பேச்சாளர்கள் பொதுத்தமிழை பயன்படுத்துகிறார்கள் - அந்த இசையொழுங்கு, சரளம், ஓசை அழகு கொச்சைத்தமிழுக்கு இல்லை. ஒரு விசயத்தில் நீங்கள் பொதுத் தமிழில் பேசினால் மக்கள் கவனித்துக் கேட்பார்கள், இதுவே ஒரு ஜாலியான மேட்டர் என்றால் கொச்சைத் தமிழில் கதைக்கலாம். நம் தமிழ் வர்ணனையாளர்களுக்கு இந்த போதம் இல்லாதது அவர்கள் இந்த வேலைக்கே தயாராக இல்லை என்பதாலே - பத்ரி, ஶ்ரீகாந்த் போன்றோர் ஆங்கில வர்ணனையில் இடம்பெறவே விரும்புவார்கள்; அங்கே இடமில்லை என இங்கே அனுப்ப இதை ஏதோ பார்ட்-டைம் ஜாப் போல பாவித்து நம் தாலியை அறுக்கிறார்கள்.


இந்த பிராமணக் கொச்சையில் ஒரு மறைமுகமான அதிகார அரசியலும் இருக்கிறது - இது இவர்களின் அடிமனத்தில் கொழுந்து விட்டு எரிகிறது. பதானி ஒரு உதாரணம் - அவர் பிராமணர் அல்ல. ஆனால் பிராமணக் கொச்சையில் தான்வந்துண்டிருக்கு, போயிண்டிருக்குஎனப் பேசுவார்; பேசிப்பேசியே பிராமணர்களுடன் தன்னை அடையாளப்படுத்துவதில் கிளுகிளுப்பு அடைகிறார்.


சடகோபன் ரமேஷ் போன்ற சிலர் சென்னைத் தமிழில் பேசி ஓரளவுக்கு தம் பொதுத்தமிழ் அறிவீனத்தை ஈடுகட்டுகிறார்கள், ஆனாலும அவ்வப்போது சாதித்தமிழ் பல்லிளிக்கிறது.


இது வெறும் சாதி அதிகார அரசியல் / சாதி விரோதப் பிரச்சனை மட்டும் அல்ல என நினைக்கிறேன் - ஏன் இந்த வெறுப்பு, கசப்பு நமக்கு கவாஸ்கர், மஞ்சிரேக்கர், ரவி சாஸ்திரி, லஷ்மண், சச்சின் பேசும் போது வர மாட்டேன் என்கிறது? ஆங்கிலம். கவாஸ்கரும், ரவி சாஸ்திரியும் சில நேரம் வர்ணனையில் அவ்வளவு நட்புணர்வுடன், பரஸ்பர மரியாதையுடன் ஜாலியாக உரையாடிக்கொள்வார்கள், ஆனால் நமக்கு அது இரு பிராமணர்கள் பரஸ்பரம் கொஞ்சுவதாகத் தோன்றாது; இரண்டு மும்பைக்காரர்கள் பிராந்தியப் பாசத்துடன் கொஞ்சுவதாகவே தோன்றும். நம் பத்ரி, ஆர்.கேக்கள் இவர்களிடம் இருந்தே கற்றுக் கொள்ள வேண்டும்.


இன்னொரு பக்கம், தமிழகத்தில் பெரும்பாலான கிரிக்கெட் கிளப் நடத்துகிறவர்கள், பயிற்சியாளர்கள், முன்னாள் வீரர்கள் பிராமணர்களாக இருக்கும் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகிகளும் என்னதான் செய்ய முடியும்? முடியும், அவர்கள் சற்று முயற்சியெடுத்து தேடினால் நல்ல தமிழில் உரையாடுகிற வர்ணனையாளர்கள் கிடைப்பார்கள், முன்னாள் (பிராமண) வீரர்களுக்கும் பொதுத்தமிழில் அடிப்படையான பயிற்சியை அளிக்கலாம். சொல்வளமோ உச்சரிப்போ இலக்கணமோ தெரியாதவர்களை ஆங்கில வர்ணனைக்கு அனுமதிக்க மாட்டீர்கள் தானே, ஏன் தமிழ் மட்டும் கிள்ளுக்கீரையா?


ஆர்.ஜெ பாலாஜியின் வர்ணனையை நான் வெகுவாக ரசிப்பேன் - அவர் அவ்வப்போது வரம்பு மீறுகிறார் தான். அவருக்கு பெரிதாய் கிரிக்கெட் அறிவும் இல்லை, ஆனாலும் சந்தானம் போல கலந்துகட்டி வேகமாய் பேசி வேடிக்கை காட்டி சிரிக்க வைக்கிறார்; அதை ரொம்பவே விமர்சிக்காமல் போகிற போக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். ஶ்ரீகாந்தின் லூசுத்தனங்களும் ரசிக்கத் தக்கவையாகவே இருக்கின்றன. ஒருமாதிரி வெள்ளந்தியான துணிச்சலான பேச்சு. அபினவ் முகுந்த் நிதானமாய் நேர்த்தியாய் நட்புணர்வுடன் பேசுகிறார். பத்ரியைப் போல அகந்தை, முறுக்கு, சுயபிரேமை அவருக்கு இல்லை என்பதால் கேட்க முடிகிறது.

ஆனால் பிராமணர்களை வர்ணனையில் இருந்து நீக்கி விட்டால் மட்டும் பிரச்சனை சரியாகப் போவதில்லை. பிராமணர் அல்லாத வர்ணனையாளர்கள் வந்தாலும் இதே போலத்தான் மென்று துப்பி பேசுவார்கள். அவர்களுக்கு முதலில் தமிழ் போதம் வரவேண்டும், வீட்டிலும் வெளியிலும் தூய தமிழில் பேசி அவர்கள் பழக வேண்டும், தமிழ்ச் சொற்களை ரசிக்க வேண்டும். இல்லாவிட்டால் நம் காதுகளில் ரத்தம் வழிவது நிற்காது



கருத்துகள்

Murugan R.D. இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான அலசல்,
சென்னைவாசிகள் (அது பிராமணராகவோ அல்லது பிறராகவோ இருப்பினும்) வர்ணனையாளர்களா இருந்தால் அவர்களுக்கு இந்த மாதிரியான பேச்சு வழக்கிலிருந்து வெளிவருது மிகவும் கடினம்னு நினைக்கிறேன்,,,

சென்னைக்கு வெளியிலிருந்து வருபவர்களை வர்ணனையாளர்களாக போட்டால் இந்த பிரச்சனை இருக்காதுன்னு நம்புறேன், அதே சமயம் அவர்கள் பிராணமர்களாக இருந்தால் இந்த பொது தமிழ் பேச்சு வழக்கை பயன்படுத்துவார்களா என்பது சற்று சந்தேகமே ஆனால் மைலாப்பூர் வாழ் தெலுங்கு, தமிழ் பிராணமர்களின் மன போக்கை மாற்றுவது நடக்காத விசயமாகவே தோணுது,

மேல உள்ளதில் கிரிக்கெட் தவிர்த்து தாங்களாகவே வலிந்து திணித்துக் கொள்ளும் சில தனித்தன்மை விசயங்களை அப்படியே இங்கு முஸ்லீம்களுக்கும் பொருத்திப்பார்க்க முடியும்,, பிராணமர்கள் அளவுக்கு இல்லாட்டாலும் அவர்களும் குறிப்பிடதகுந்த அளவுக்கு பொது தமிழ் சமூகத்தில் இருந்து தனித்து தெரிவதற்கு சில பல விசயங்களை தொடர்ந்து கடைபிடிக்கிறார்கள்,, பிராமணர்களை போல அது மற்ற மனிதர்களிடத்தில் ஏற்றத்தாழ்வு பார்க்காது என்றாலும் அவர்களைப் போல இவர்களையும் தனித்து தெரியச் செய்கிறது,, அரசியல் நிலைப்பாடுகளில் கூட,,,
ttcudai இவ்வாறு கூறியுள்ளார்…
சரியான கருத்து வாழ்த்துக்கள்
சாரல் இவ்வாறு கூறியுள்ளார்…
இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு விளையாட்டு பற்றிய அறிவு குறைவாக இருப்பதால் உளறிக்கொட்டுகிறார்கள். கட்சிகளின் கடைநிலைப் பேச்சாளர்கள் போலத் தான் இவர்கள் உளறிக்கொட்டுகிறார்கள். 1980 களில் ராமமூர்த்தி,அப்துல் ஜபார் போன்றவர்கள் மிகவும் அருமையாக வானொலிகளில் வருணனை செய்வார்கள்.இந்தியா தோற்றாலும் இவர்களின் தமிழ் வருணனை மிகவும் நன்றாக இருக்கும்.எல்லாம் தறி கெட்டுப் போச்சு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...