தற்கொலை எண்ணம் தீவிரமான போது என்ன செய்தேன் என ஒரு இளம் எழுத்தாளர் ஒரு பதிவிட்டிருந்தார். அவருக்கு நான் எழுதிக் கொண்டது:
"ஒரு நாவல் எழுத முயற்சி பண்ணுங்க. தினமும் 15 நிமிடங்கள் குறைந்தது அதில் செலவிடுங்க. சரியாயிடும். எழுத்தாளனுக்கு மருந்து எழுத்து மட்டுமே. வேறெதிலும் தேடாதீங்க.
காசு, சொத்து, செக்ஸ் எல்லாம் வேஸ்ட். அதெல்லாம் சாமான்யர்களுக்கானது. "வாழ்க்கை என்றால் போராடித்தான் வெல்ல வேண்டும்' என அறிவுரைப்பவர்களை புறக்கணியுங்கள். ஏனென்றால் அதெல்லாம் முட்டாள்தனம். மரணம் குறித்து சிந்திப்பதில் எந்த தப்பும் எதிர்மறையும் இல்லை.
மரணம் என்பது காலத்தைக் கடந்து செல்வதற்கான ஒரு உருவகம். அனந்தரத்தின் வாசல் அது. இலக்கியம் வாசிக்கும் போதும் எழுதும் போதும் நாம் மரணம் எனும் வாசலை நோக்கித் தான் நடையிடுகிறோம். மரணம் நம் நாவில் அதக்கிக் கொள்ளும் புளிப்பு மிட்டாய். என்றும் சுகந்தம் குறையாத அழகிய வாடாமலர் அது. நாம் காலமெல்லாம் மரணத்தைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருக்கக் காரணம் அது ஒரு அழகான பயமூட்டும் இருட்டு என்பது. அது கடவுளுக்கு சமானமானது.
நம் பண்பாட்டில் சிவன் அழிவின், சாவின் தெய்வம் அல்லவா. அவன் சுடுகாட்டில் வசிப்பவன் அல்லவா. ஏன்? அவனும் எழுத்தாளனைப் போன்றவனே. காலத்தின் விளிம்பில் குடியிருக்கிற எவனும் சிவனே. ஆகையால் இதை ஒரு மனப்பிரச்சனை என கருத வேண்டாம். மரணத்தைக் குறித்து சிந்திப்பது நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்ட யாரும் செய்வதே. மரணம் எனும் அந்த அழகிய தோரண வாயிலைத் தொட்டு விட வேண்டும் என நம்மில் ஒவ்வொருவரும் தவித்தபடியே இருக்கிறோம். உலகின் மிகப்பெரிய தவிப்பு அதுவே. அதை ஒருவன் எழுத்து போன்ற கலைநாட்டங்கள் வழி செய்யலாம், அல்லது செக்ஸ், காதல், வன்முறை மூலம் செய்யலாம். இரண்டில் முதலாவதே சிறந்தது என நான் சொல்லாமலே உங்களுக்குத் தெரியும்.
அதனால் கவலை வேண்டாம்.
தாராளமாக மரணத்தில் ஆழ்ந்து செல்லுங்கள். அப்போது மரணம் ஒரு அழகிய கற்பனை என உறைக்கும். அதன் திகைப்பும் கிளர்ச்சியும் வாழ்வை தீவிரமாக அனுபவிக்க உதவும். மரணம் இல்லாதிருந்தால் வாழ்வு அலுப்பாகும், அர்த்தமற்றதாகும். வாழ்த்துக்கள்!"
கருத்துகள்