மேற்கு வங்கத்தில் நடந்துள்ள தேர்தலில் பல அத்துமீறல்கள் நிகழ்ந்துள்ளதாக குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் வைக்கிறார்கள். 13 வாக்குச்சாவடிகளை பாஜகவினர் கைப்பற்றியதாக சொல்லுகிறார்கள். அது மட்டுமல்ல, பாஜக செயல்பாட்டாளர்கள் எனும் பெயரில் கணிசமான ரௌடிகளை உத்தரபிரதேசத்தில் இருந்தும், பீகாரில் இருந்தும் அவர்கள் களமிறக்கியிருக்கிறார்கள். இதை நேரில் கண்ட முதல்வர் மம்தாவை ஒரு வாக்குச்சாவடிக்குள் சிறை வைத்து பிரச்சனை பண்ணி இருக்கிறார்கள். CPRF மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டுருந்தார்கள் எனக் கூறிய மம்தா ஆளுநருக்கு போன் செய்து உதவி கேட்ட பின்னரே வெளியேற முடிந்தது. இந்த நிகழ்வு எனக்கு அண்மையில் யோகியாரின் கோவை வருகையின் போது நடந்த சம்பவங்களை நினைவுபடுத்தியது - அந்த கூட்டத்தில் தென்பட்டவர்கள் கணிசமாக வடமாநிலத்தவர்களே, ஊர்வலத்தில் தென்பட்டவர்கள் உள்ளூர் குஜராத்திகளா அல்லது இறக்குமதியான உ.பி, பீகாரிகளா எனத் தெரியவில்லை. ஆனால் பிற மாநில தேர்தல் பணிகளின் போது உ.பி, பீகாரில் இருந்து பெருமளவில் ஆட்களை இறக்கி பிரச்சாரத்துக்கு, கலவரத்துக்கு, வாக்குச்சாவடி கைப்பற்றலுக்கு பயன்படுத்துகிற போக்கை பாஜக ஆரம்பித்துள்ளது அப்பட்டமாகி உள்ளது. இத்துடன் வடமாநிலத்தவர்களுக்கு தமிழகத்தில் வாக்களிக்கும் உரிமையை அளிப்போம் என அவர்கள் சொல்வதையும் வைத்துப் பார்த்தால் உ.பி பாஜகவினரை வைத்தே பிரச்சாரம், கலவரம், வாக்களிப்பு என இந்தியா முழுக்க தேர்தலை சமாளிக்கலாம் என நினைக்கிறார்கள் எனத் தெரிகிறது. ஒட்டுமொத்தமாக அனைத்து உள்ளூர் வாக்காளர்களின் உரிமையையும் பறிக்க முடியாது எனினும் ஒவ்வொரு மாநிலத்திலும் போட்டி நெருக்கமாக செல்லும் தொகுதிகளில் உ.பி. பீகாரிய மக்களை வைத்து ஓட்டளிக்க செய்து பாஜக பக்கம் முடிவு சாய வைக்க முடியும். இதை பாஜக நாளை இந்தியா முழுக்க நிகழ்த்தினால் தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கை பார்ப்பதுடன் யாரும் குற்றச்சாட்டு எழுப்பாதபடி பார்த்துக் கொள்ளவும் செய்வார்கள் என்பதில் ஐயமில்லை.
தேர்தலின் போது மாநில உரிமைகள் இப்படி அப்பட்டமாக பறிக்கப்படும் நிலைமை இதுவரை வந்ததில்லை. இதுவரை தமிழகத்தில் உ.பிகாரர்கள், குஜராத்திகள் நூற்றுக்கணக்கான பைக்குளில் அச்சுறுத்தும் விதமாக ஊர்வலம் போவது நடந்ததுண்டா? உ.பியிலோ பீகாரில் தமிழர்கள் இப்படி கோஷமிட்டபடி ஊர்வலம் போக முடியுமா? அங்குள்ள கடைகள் மீது கல்லெறிந்து கலவரத்தை தூண்ட முயற்சியெடுக்க முடியுமா? ஒரு சில வடமாநிலங்கள் மட்டுமே முக்கியம், மிச்ச மாநிலத்தவர்களுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனும் மனப்பான்மையுடன் பாஜக செயல்பட பிரதமர் மட்டும் அடிக்கடி திருக்குறளை தப்பும் தவறுமாக உச்சரித்து மேற்கோள் காட்டி கடுப்பேற்றுகிறார். மக்களாட்சி என்பது கேலிக்கூத்தாகி வருகிறது. இந்தித் திணிப்பு என்பது மேற்பூச்சு தான் - உ.பி, குஜராத்திய மாடலை அல்ல, அம்மாநிலங்களே இனி இந்தியா எனும் எண்ணத்துடன் திமிர்த்தனமாக இந்த நடுவண் அரசு நடந்து வருகிறது.
இது ஒரு மிகப்பெரிய பிரச்சனை. இப்போதைக்கு தேர்தலின் போது வெளிமாநில மக்கள் (மிக முக்கிய தேசிய தலைவர்களைத் தவிர) ஒரு மாநிலத்துக்குள் நுழைவதை தடை செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் போராட வேண்டும்!

கருத்துகள்