ஒருவர் மானுடவாத கதைகளை எழுதினால் அந்த வடிவத்துக்கே உரிய கூறுகளை, உபகரணங்களை அவர் தவிர்க்க இயலாது. அதனால் அவர் மானுடவாதியோ, தன் கதைகளில் வரும் உயரிய விழுமியங்களின் பிரதிநிதியோ அதன் ஸ்போக் பெர்சனோ அல்ல. அவர் அவற்றைக் கையாள்கிற ஒரு கலைஞன். அவ்வளவே. இது கு. அழகிரிசாமி, பஷீர், தேவதேவன் ஆகியோருக்கும் பொருந்தும். இவர்கள் தம் கதைகள் வழி ஒரு தரிசனத்தை போதிப்பதாக நாம் மயக்கம் கொண்டால் அவர்களை சுலபத்தில் வாழும் தெய்வங்களாக, வள்ளலார்களாக மாற்றி விடுவோம். வண்ணதாசன் மலரினும் மெல்லியவராக இருப்பார். தேவதச்சன் ஜென் துறவியாகி விடுவார். மனுஷ்யபுத்திரன் நந்தவனத்துக் கிருஷ்ணனாகி விடுவார். தேடிப் போனால் இவர்கள் சாதாரண மனிதர்களே. இவர்கள் படைப்புகளை நிகழ்த்தியவர்கள், படைப்பு வழி எதையும் சொன்னவர்கள் அல்ல. இந்த வித்தியாசம் முக்கியம்.
கனிவு, கருணை போன்றவை மானுட நேயத்தின் பகுதியாக வருகின்றன. அவை அவர் உணர்த்தும் விழுமியங்கள் அல்ல ஒருவித கருவிகள், உருவகங்கள். டிராமாவை உருவாக்க பயன்படுத்தப்படுபவை. இந்த சட்டகத்துக்கு வெளியே அவற்றுக்கு மதிப்பில்லாத போது அவர் அவற்றைப் பற்றி - அது பஷீரோ அழகிரிசாமியோ பிரபஞ்சனோ, வேறேதாவது ஒரு மானுடவாத படைப்பாளியோ - எழுதினார் என்பது தவறானது. ஏனென்றால் மனிதநேய, மானுடவாத எழுத்து வடிவை தேர்ந்தெடுத்துக் கொண்டால் இதையெல்லாம் நம்பாத நானும் கூட அப்படியே எழுதியாக வேண்டும்.
ஒரு துப்பறியும் கதையை எழுதிய படைப்பாளியின் நோக்கம் துப்பறிவது என நாம் கூறுவது அல்ல தானே? Pauline Raege எனும் ஆன் செசில் எழுதிய முக்கியமான படைப்பு The Story of O. அதைப் படித்து விட்டு அவர் பெண்கள் தாம் துன்புறுத்தப்படுவதை முன்வந்து ஏற்கிறார்க்ள், தம்மைக் கட்டி வைத்து பலாத்காரம் பண்ணுகிறவர்களை உள்ளூர காதலிக்கிறார்கள் எனச் சொன்னவர், சேடோமெசோக்கிசத்தை முன்வைத்தவர் எனும் முடிவுக்கு நாம் வரலாகாது. அப்படி பழிக்கு ஆளாகக் கூடும் என பயந்து தான் அவர் ரொம்ப காலம் தன் அடையாளத்தை மறைத்து வாழ்ந்து வந்தார்.
ஒரு வடிவத்துக்குள் ஒரு படைப்பாளி இயங்குகிறான், அப்போது அவன் தனக்கான வேடங்களைப் பூண்டு கருவிகளை எடுத்துக் கொண்டு தன்னிடம் எதிர்பார்க்கப்படும் ஒன்றை நிகழ்த்துகிறான். அந்த கருவிகளோ சொல்லப்படும் விசயமோ அவனுடையது அல்ல. இப்படி பார்க்காத பட்சத்தில் நாம் படைப்பாளி ஒன்றை நம்பியதாக, கூறியதாக நம்பி அவரை மகத்துவப்படுத்தவோ இழிவுபடுத்தவோ செய்வோம். ஒன்று எழுத்தாளர்கள் சூபி ஞானிகள், கருணை தெய்வங்கள், ஒரு இலை விழுந்தால் கூட நடுங்கும் மென்னுணர்வாளர்கள், ரேப்பிஸ்ட்கள், கொடூரமானவர்கள் என பலதரப்பட்ட முடிவுகளை எட்டுவோம். இவை எல்லாம் சுத்த பேத்தல்கள். சுருக்கமாக சொல்வதானால் பிரதி வேறு, படைப்ப்பாளி வேறு. பொம்மலாட்டக் கலைஞன் வேறு, அவனுடையபொம்மை வேறு.
இதை நான் முதன்முதலாகக் கூறவில்லை. உலகளவில் ஒரு நூறாண்டுக்கு மேலாகவும் தமிழில் அரை நூற்றாண்டாகவும் இது விரிவாக எழுதப்பட்டு விட்ட ஒன்றாகும். ஆனாலும்
தமிழ்ச் சூழலில் இதை திரும்பத் திரும்ப சொல்ல வேண்டி வருகிறது என்பதை நினைத்தால் தான்...
கருத்துகள்