ஒரு வாசகர் அழைத்து ஆச்சரியமானதொரு செய்தியை சொன்னார் - அவர் மென்பொருள் துறையில் பணி செய்கிறார். அவருக்கு சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணுடன் நிச்சயமாகி இருக்கிறது. பெண் பார்க்க செல்லும் போது “உன் எதிர்பார்ப்பு என்ன?” என்று இவர் கேட்டதற்கு அவள் “எனக்கு சொத்து, பணம் எல்லாம் முக்கியமில்ல, என்னை அன்பா வச்சிக்கிட்டா போதும்” என சொல்லிட இவர் “அடடா நமது வாழ்க்கைக்கு ஏற்ற பெண்கள் இவள் தான்” என மகிழ்ந்து ஒப்புதல் அளித்திருக்கிறார். ஆனால் நிச்சயதார்த்தத்துக்கும் கல்யாணத்துக்கும் இடையே அப்பெண்ணின் மற்றொரு முகம் வெளிப்பட்டிருக்கிறது. இவர் ஊரில் உள்ள தன் குடும்ப வீட்டை மறுசீரமைத்துக் கட்ட நினைத்திருக்கிறார். அதற்கு பணம் போதாமல் போக தன் அம்மாவின் பணம் மற்றும் சிலரிடம் இருந்து பெற்ற பணத்தைக் கொண்டு வீட்டை செம்மையாக திருத்தி எழுப்பியிருக்கிறார். அப்போது இப்பெண் இவரை அழைத்து “ஏன் உங்களிடம் 25 லட்சம் கூட சேவிங்க்ஸாக இல்லையா? இப்படித்தான் நகையை விற்பீர்களா?” என்று பிரச்சினை பண்ணியிருக்கிறாள். இதே போல தொடர்ந்து பணம் குறித்து பல்வேறு விசாரணைகள், மிரட்டல்கள், எதையாவது மறுத்துப் பேசினால் அழுது ஒரே டார்ச்சர். இவரும் அவளுக்கு முதிர்ச்சியில்லை, வீட்டில் வளர்ப்பு சரியில்லை போல என பொறுத்திருக்கிறார். இவரது அம்மாவும் அவளை அழைத்து அறிவுரைத்திருக்கிறார். அவளோ தொடர்ந்து அதே போல மிரட்டல், கத்தல், அழுகை என நவரசங்களை காட்டி கலங்கடிதிருக்கிறார். கடைசியாக திருமணத்துக்கு முன்பு இவரது அம்மா, சகோதரி மற்றும் உறவினர்களுக்கு புது துணியெடுத்துக் கொடுத்ததற்கு “ஏன் இப்படி உன் பணத்தை வீணடிக்கிறாய்? இப்போதே இப்படியென்றால் கல்யாணத்துக்குப் பின்னால் எப்படி கட்டுப்பாடாக இருப்பாய்? உன்னைக் கட்டிக்கொண்டு நான் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?” எனக் கேட்டு தகராறு பண்ணியிருக்கிறார். இவரால் திருமணம் இவ்வளவு நெருங்கி வந்த பிறகு அதை ரத்து பண்ணவும் மனம் வரவில்லை. அது தவறு எனும் உறுத்தல். இன்னொரு பக்கம் அப்பெண்ணின் டார்ச்சரால் நிம்மதியே இல்லை. என்ன முடிவெடுப்பது எனத் தெரியாமல் தத்தளித்தபடி இருந்தவர் பேஸ்புக்கில் என் பதிவைப் படித்து மனம் தெளிந்திருக்கிறார். அப்பெண்ணை அழைத்து “முடியாது” என்று உறுதியாக சொல்லி திருமணத்தையும் ரத்து பண்ணியிருக்கிறார்.
இதை அவர் தன் நண்பர்களிடம் சொன்ன போது “நல்ல வேளை கல்யாணத்துக்கு முன்னாலே தப்பித்து விட்டாய்” என்று பாராட்டியிருக்கிறார்கள். நானும் “நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலிங்க” என்று சொன்னேன். “என் நண்பர்கள் பலரும் அவஸ்தைப்படுகிறார்கள். ஆனால் கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டார்கள், தப்புக்க முடியாது” என்று சிரித்தார். “உங்களுக்கு நன்றி சொல்வதற்காகத் தான் அழைத்தேன்.” என்றார்.
எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு சாகித்ய அகாடெமி யுவபுரஸ்கார் கிடைத்த போது நான் இந்தளவுக்கு மகிழ்ந்ததில்லை. என் படைப்புகள் பலமுறை பாராட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் எனக்கு கிடைத்த உச்சபட்ச பாராட்டு இது தான். என்னால் முதன்முதலாக இச்சமூகத்துக்கு ஒரு பயன் ஏற்பட்டிருக்கிறது. இது போதும்!

Comments