"தமிழ் அறிவுச்சூழலில் கெட்ட வார்த்தைகள் எதிர்மறையாகவே பார்க்கப்படுகின்றன. ஆனால் சமகால ஆய்வுகள் கெட்ட வார்த்தைகளை மனித வாழ்க்கைக்கு அவசியமான ஒரு நேர்மறையான மொழிப்பயன்பாடாகவே கெட்ட வார்த்தைகளைப் பார்க்கின்றன. நாம் அடிப்படையில் மிருகங்கள் என்பதால் கெட்ட வார்த்தைகளை மிருகங்கள் எப்படி பயன்படுத்துகின்றன என்பதில் இருந்தே ஆரம்பிக்கலாம். விலங்குகளைப் பொறுத்தமட்டில் காயத்தினால் ஏற்படும் வலியை சீறல், உடல்மொழியினால் மிரட்டுதல், பற்களைக் காட்டுதல் என்றே அவை வெளிப்படுத்தும். இவ்வெளிப்பாடு ஒரு நேரடியான சண்டை நிகழாதிருக்க உதவுகிறது. மிக அரிதாக தவிர்க்க இயலாத சூழலிலே விலங்குகள் பரஸ்பரம் காயப்படுத்தும். அது நிகழாதிருக்க ‘கெட்ட வார்த்தைகளே’ விலங்குகளுக்கு முக்கியமான கேடயமாகின்றன. நாய்களை எடுத்துக் கொண்டால் மனிதர்கள் தம் கோபத்தை, எரிச்சலை சொல்லின் வழியாக வெளிப்படுத்துவதையே அவை ஏற்கின்றன. அதாவது நீங்கள் கையை ஓங்கினால் கூட அதை ஒரு சைகைக் குறிப்பானாகவே அவைப் பார்க்கும். உங்களிடம் வராமல் விலகிப் போகும். கையை ஓங்காது ‘கெட்டப் பையன்’ (bad boy) என்று மட்டுமே சொல்லிப் பழக்கினால் நாய் அதை உங்கள் கெட்ட வார்த்தையாக எடுத்துக்கொண்டு உடனே பணியும். (இதை ஒரு நாய்ப்பயிற்சியாளர் எனக்கு சொல்லித் தந்தார்.) அதாவது கெட்ட வார்த்தையின் பொருள் நாய்மொழியில் வெறுப்போ, சமூக விலக்கமோ அல்ல, “நான் கோபமாக இருக்கிறேன், என்னருகே வராதே” என்பதே. சிம்பன்ஸி குரங்குகள் தம் மலத்தை எடுத்து எறிந்தோ காட்டியோ தம் கோபத்தைக் காட்டும். இச்சிம்பன்ஸிகளை ஆய்வுக்காக வளர்க்கும் போது மலம் கழிக்க வேண்டும் எனும் சொல்லுக்கு சைகை மூலம் ஒரு குறியைக் (sign) காட்ட சொல்லித் தருகிறார்கள். போகப் போக இக்குரங்குகள் தம் கோபத்தைக் காட்ட கெட்ட வார்த்தையாக அந்த குறியை சைகையாக தம் வளர்ப்பாளர்களிடம் காட்ட ஆரம்பித்தன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அப்படியே மனிதர்களுக்கு வருவோம்.
சாலையில் வாகன ஓட்டிகளில் தம் எரிச்சலை, கடுங்கோபத்தை வெளிப்படுத்தி கைக்கலப்புகளை தவிர்க்கவே கெட்ட வார்த்தைகளை வெற்றிகரமாகப் பயன்படுத்துவதாக ஸ்டேப்பிள்டன் தன் ஆய்வில் தெரிவிக்கிறார். எனக்கு இதைப் படித்த போது என்னுடைய பல்கலையில் வேலைக்கு சேர்ந்த சில ஐரோப்பியர்கள் கன்னட மொழியில் கெட்ட வார்த்தைகளைக் கேட்டுக் கற்றுக்கொண்டது நினைவுக்கு வந்தது. அக்கெட்ட வார்த்தைகளே தம்மை நிம்மதியாக காரோட்ட அனுமதித்தாக அவர்கள் என்னிடம் குறிப்பிட்டனர்.
கெட்ட வார்த்தைகளை சொல்லும் போது நமது நரம்பியல் எதிர்வினை எப்படி இருக்கிறது என்பது சுவாரஸ்யமானது. கெட்ட வார்த்தைகளை சொல்லும் போது நம் மூளையில் மொழி மற்றும் நினைவுத்திறனுக்குப் பொறுப்பான பகுதிகள் விழித்துக்கொள்ள நாம் ‘சமரிடு அல்லது தப்பித்துச் செல்’ (fight or flight) எனும் மனநிலைக்குச் செல்கிறோம். அதனாலே விளையாட்டின் போதும் (கிரிக்கெட், குத்துச்சண்டை), செக்ஸின் போதும் கெட்ட வார்த்தைகள் நம்மை அதிக விழிப்புடன், தன்னிலை மறந்து உணர்ச்சிப்பெருக்குடன் செயலில் ஈடுபட உதவுகின்றன. அப்போது நமக்கு அதிக செயலின்பம் கிடைக்கிறது. ஒரு குறிப்பிட்ட ஆய்வில் சிலரை வீடியோ கேம் ஆட வைத்து அவர்களில் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவோர் அதிக விழிப்பாக இருந்து கூடுதல் புள்ளிகளை வென்றதைக் கண்டனர். இன்னொரு ஆய்வில் சமூகக் கூச்சத்தைத் தூண்டும் கெட்ட வார்த்தைகள் (தாயின் பிறப்புறுப்பு, தாயுடனான பாலுறவு) விதவிதமாக பயன்படுத்தப்படும் போது அவை வெகுசீக்கிரமாக நம் நினைவில் பதிவதாகவும், அப்போது நமது உணர்ச்சித்தூண்டலும், விழிப்பும் அதிகமாக இருப்பதாகவும் கண்டறிந்திருக்கிறார்கள்."
கருத்துகள்