முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கேள்வி-பதில் 3

 கேள்வி: ஹாய் அபிலாஷ். இந்த பின்நவீனத்துவம் என்றால் என்ன? சாதாரண எழுத்தாளர்களால் பின்நவீன கதைகள் எழுத முடியுமா?

பதில்: பின்நவீனம் என்பதை அ-நவீனம் எனப் புரிந்து கொள்ளலாம். உளவியல் வழியாகப் புரிந்து கொள்வதென்றால் இந்த வாழ்வில் நாம் ஒரு நோக்கத்துக்காக வாழ்கிறோம். இலக்கை நோக்கி ஓடுவதும், அதை அடைவதுமே வாழ்க்கை. இவ்வாறு புரிந்துகொள்ளும் போதே காலம், வெளி சார்ந்த ஒழுங்கு அவசியமாகிறது. அப்போதே வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் தேவையாகிறது. இந்த அர்த்தமே நாம் காணும் பொருட்களின், செயல்களின் சாராம்சம், சாராம்சமே கடவுள், அரசன், சாதி, பாலின பேதம் ஆகியவற்றின் அடிப்படை. பின்நவீனம் இவற்றில் காணும் சாராம்சத்தை காலி பண்ணுகிறது. அது ஒரு புள்ளியில் நிரந்தரமாக நில்லாமல் நழுவிக்கொண்டே போவதைக் காட்டுகிறது. நவீனத்துவ இலக்கியத்தின் எதார்த்தத்தில் உள்ள தீவிரத்தை பகடி பண்ணுகிறது. மொழியை, கதை வடிவத்தை, லட்சியங்களை போலச் செய்து அந்த பிரக்ஞையுடனே தான் அதை செய்வதாக, தான் கதை சொல்லவில்லை, தான் கதையை செய்வதாக பிரகடனம் செய்கிறது. இந்த தீவிரத்துடன் விளையாடும் அதன் போக்கு பின்நவீன இலக்கியத்திற்கு ஒரு சுதந்திரத்தை, அக-விடுதலையை அளிக்கிறது. இதுவே பின்நவீன எழுத்தின் வெகுளிச் சிரிப்பு, அதன் ஆன்மீகம். இந்த ஆன்மீகத்தை நீங்கள் நவீனத்துவ எதார்த்த எழுத்தில் பார்க்க முடியாது. இதை நீங்கள் உங்கள் கதைகளில் எப்படி கொண்டு வந்தாலும் அது பின்நவீன எழுத்தாகி விடும். அது ஒரு மனநிலை, ஒரு வாழ்க்கை நிலை, ஒரு தத்துவம், ஒரு உணர்வு, ஒரு மொழி. பின்நவீனம் என்றால் என்னவென்றே தெரியாத சாமான்யர்களிடம் அது வெளிப்படுவதை காண்கிறோம். எப்படி காதலிக்க தனித்தகுதி தேவையில்லையோ பின்நவீன மனநிலை வெளிப்படவும் தேவையில்லை. ஆனால் நம் எழுத்தில் வெளிப்படுவது அதுதான் எனத் தெரிந்தால் அதை மேலும் செறிவுபடுத்த முடியும். அதுதான் பின்நவீன பிரக்ஞையின், புரிதலின் பயன்.
மேலும் பல கேள்விகளை வகுப்பில் எழுப்பி விடைகளைப் பெற்று உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள இணையுங்கள் நாவல் வகுப்பில். தொடர்புக்கு இன்பாக்ஸுக்கு வரவும். அல்லது 9790929153க்கு வாட்ஸாப் பண்ணவும்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...