நேற்று நண்பர் கணேஷ் என்னைப் பார்க்க வந்த போது இப்போதைய நாவல்கள் பற்றி ஒரு கேள்வி வந்தது. நான் சொன்னேன், “இங்கு எல்லாருக்குமே இந்த உலகில் யாராக இருக்கிறோம், ஏன் அப்படி இருக்க முடியாமல் போகிறது, அந்த போதாமை என்ன எனும் கேள்வி உள்ளது. பலருக்கும் அப்படி ஒரு கேள்வி உள்ளது பற்றி பிரக்ஞை இல்லாமல் இருந்தாலும் அதுதான் உள்ளுக்குள் அவர்களை தொடர்ந்து செலுத்திக்கொண்டிருக்கிறது. நாம் எழுதும் நாவல்களின் மையமாக இக்கேள்வியே இருந்தாக வேண்டும். அப்போதே வாசகனுக்கு அப்படைப்பு அர்த்தமுள்ளதாகத் தோன்றும். இல்லாவிட்டால் வெறும் தகவல்களாக, வரலாறாக, கருத்துக்களின் தொகுப்பாகத் தோன்றும். எடையற்ற கதையாக ஏமாற்றமளிக்கும். தனது Story எனும் நூலில் ராபர்ட் மெக்கீ இதை கதைகளின் விழுமியம் - value - என்கிறார். தமிழில் சிலர் இதை தரிசனம் என்றும், வேறு சிலர் ஆழம் என்றும் கூறுகிறார்கள். தமிழின் சிறந்த படைப்பாளிகளின் மோசமாக எழுதப்பட்ட நாவல்களில் கூட இந்த கேள்வி இருக்கும், அதுவே வாசகர்களை திரும்பத் திரும்ப ஈர்க்கிறது. நவீன இலக்கியத்தில் மட்டுமல்ல சங்க இலக்கியம், காப்பியங்களில் கூட இந்த கேள்வி முக்கியமாக உள்ளது.
ஒரு சங்கப் பாடலில் (மருதத் திணை) தலைவியான குறப்பெண் தான் காயப்போடும் தானியங்களை குருவிகள் வந்து திசைக்கொன்றாய் கொத்திக்கொண்டு பறந்து போவதைக் குறிப்பிட்டு மறைமுகமாக தன் மனத்துடன் அதை ஒப்பிடுகிறாள். அதில் கேள்வி இப்படி இந்த தெளிவான புத்திசாலித்தனமான உலகிலும் அதற்கு நேரெதிரான இன்னொரு உலகிலும் என் மனம் ஏன் சிதறிப் பறக்கிறது, அதை ஏன் நான் அனுமதிக்கிறேன் என்பதே.சில நேரங்களில் நாம் வரலாற்றுத் தகவல்களை, பத்திரிகைத்தனமான ஆய்வில் கிடைக்கும் கதைகளை, குடும்பத்தின் வரலாறு எனும் வம்சாவழிக் கதைகளை ஒரு டெம்பிளேட்டில் வைத்து வசவசவென எழுதிக்கொண்டே போகிறோம். அதில் கதையிருக்கும், உணர்ச்சியிருக்கும், தகவல்கள் இருக்கும், ஆனால் மனிதனின் இருப்பு குறித்த விசாரணை இருக்காது. இது இன்று மட்டுமல்ல முன்பும் இருந்தது. அதை இயல்புவாதம் என அழைத்தார்கள். உள்ளுக்குள் ஒன்றுமில்லாத வெற்றுப் படைப்புகள். வாழ்க்கையை இயல்பாகக் காட்டுவதாக சிலாகிப்பார்கள். ஆனால் வாழ்க்கையே இருக்காது. இந்த ‘விபத்து’ தமிழுக்கு ஏன் ஏற்பட்டது என்பது முக்கியமான கேள்வி.
நீலபத்மநாபனின் கதையுலகம் இந்த விபத்துக்கு ஒரு நல்ல உதாரணம்.
இன்னும் சிலரிடம் மனிதனின் இருப்பு குறித்த கேள்விகளுடன் தட்டையான முன்முடிவுகள் இருக்கும். ஜெயகாந்தன் ஒரு உதாரணம். ஆனால் அவர்கள் எழுதியது ஒன்றுமே இல்லாத எழுத்தை விட மேலானது. ஏனென்றால் அது நம்மை பல சிந்தனைகளை, கேள்விகளை நோக்கி செலுத்தக் கூடும். எனக்குத் தமிழின் இயல்புவாத நாவல்களை விட 80, 90களின் சில வணிக நாவல்களே மேல் எனத் தோன்றும். சிவசங்கரி, இந்துமதி போன்றோர் ஒரு பக்கம், பாலகுமாரன் போன்ற சிலர் இன்னொரு பக்கம். அவர்களுடைய பாத்திரங்களுக்கென ஏதோ ஒரு தேடல் இருக்கும். நாம் அப்படைப்புகளை இப்போது நினைத்தாலும் பிரதான பாத்திரங்களின் அத்தேடலே கண்ணுக்கு முன் வரும். பேதங்களின் நடுவே நான் எப்படி இருக்கிறேன், குடும்பத்தின் நடுவே சம்மந்தமில்லாத லட்சியத்துடன் நான் எப்படி, யாராக இருக்கிறேன், குடும்பத்தில், லௌகீகங்களின் மத்தியில் ஆன்மீக நாட்டத்துடன் இருக்கும் நான் யார், எப்படியாக இதில் இருக்கிறேன்? இப்படியான கேள்விகளே அங்கு முக்கியம். பேய்க்கதைகள் இந்த இருப்பு குறித்த கேள்விகளின் போதாமையை கண்ணுக்கு முன்னால் கொண்டு வரும் காட்சியை அமானுஷ்யமாக முன்வைத்தவை. இன்மையே அங்கு பீதியை உண்டாக்குகிறது. அது இருத்தலின் இன்மையின் பீதி. அதனாலே மேற்குலகிலும் பேய்க்கதைகள் எப்போதும் இலக்கிய வாசகர்களை ஈர்க்கிறது. அவை அடிப்படையில் தத்துவார்த்த கதைகளே.
ஆனால் சுஜாதாவின் நாவல்களில், கதைகளில் இயல்புவாத படைப்புகளைப் போன்றே தத்துவார்த்தம் இருக்காது. ஒரு காகிதத்தன்மை மட்டுமே இருக்கும். சுஜாதவுக்கும் வாழ்க்கையை எதிர்கொள்வதில் ஒரு தயக்கம் இருந்தது, அவர் அதை எளிய உயிரிவேதியல் என சுருக்கிக் கொண்டார்.
தமிழில் நடந்த பெரும் நெருக்கடி அறிவியல் யுகத்தின் போது இங்கு வந்த காலனியாதிக்க, இடதுசாரி, முற்போக்கு, சமூகவியல், பகுத்தறிவு மரபை என்ன செய்வது என்பதே. ஏனென்றால் அதை ஏற்றுக்கொண்டால் ஆன்மா என ஒன்று இல்லையென்றாகி விடும். ஆன்மா இல்லாத உலகில் அகத்தை எப்படிப் பேச முடியும்? ஆகையால் நம் ஆட்களில் ஒரு பகுதியினர் அகவாழ்க்கையை புறவயமாகப் பேசத் தலைப்பட்டார்கள். அவர்கள் தீவிர மதவாதிகளாக இருந்தாலும் அதை எழுத்தில் கொண்டு வரவும் முடியவில்லை. எப்படி புறவயமாக இருப்பை அணுகுவது என்றும் தெரியவில்லை. ஆகையால் அவர்கள் இருப்பு குறித்த கேள்வியை கடாசி விட்டு மேலோட்டமான உளவியலைக் கொண்டும், புறவுலக விவரணைகளைக் கொண்டும் வாழ்க்கையைப் பேசத் தலைப்பட்டார்கள். தமிழில் நல்லவேளையாக எதார்த்தவாத நாவல்களுக்கு இப்பிரச்சினை இருக்கவில்லை. அதனாலே அவ்வடிவம் பின்நவீனத்துவத்துக்குப் பின்பும் இங்கு தழைக்கிறது.
இப்போதும் நாம் ஒரு நாவலை எழுதும் முன்பு இதில் வரும் பிரதான பாத்திரத்திற்கு இந்த வாழ்க்கையில், இருத்தலில் உள்ள போதாமை என்ன எனும் கேள்வியை எழுப்பி, அதன் திசையிலே மொத்த கதையையும் வடிவமைக்க வேண்டும். அதை விடுத்து வாழ்க்கையை, வரலாற்றை, சமூகத்தை, உலகைப் பேச முயல்வது சட்டையை எடுத்து காற்றுக்கு மாட்டிவிடுவதைப் போன்றது. அந்த சட்டை பறந்துகொண்டே இருக்க வேண்டியதுதான்.
நான் குறிப்பிடுவது தத்துவ நாவலை அல்ல. காதல், வேலை, சமூகப் பிரச்சினைகள், தனிப்பட்ட பிரச்சினைகள், சாகசம், துயரம் ஆகியவற்றைப் பேசும் நாவல்களைப் பற்றியே சொல்கிறேன். எல்லா படைப்புகளிலும் இந்த தத்துவார்த்தம் இருக்க வேண்டும். தத்துவம் வேறு, தத்துவார்த்தம் வேறு. ஆஸ்பத்திரிகளில் குழந்தைகள் எவ்வாறு கவனிக்கப்படுகிறார்கள், கவனிக்கப்படவில்லை என்பது தகவல். ஆஸ்பத்திரியில் ஏன் ஒரு குழந்தை போயிருக்கிறது என்பது தத்துவார்த்தம். கீதை (கொஞ்சம் பிழையுள்ள) தத்துவம், மகாபாரதம் தத்துவார்த்தம். மூலமத்தியமகாகாரிகை தத்துவம், திருக்குறள் தத்துவார்த்தம். விக்கிரமாதித்தன்-வேதாளம் கதைகளில் உள்ளது தத்துவார்த்தம். தத்துவ நாவலில் தத்துவார்த்தத்துடன் தத்துவப் பிரச்சினையே மையமான சிக்கலாக இருக்கும். “அந்நியன்”, “பிளேக்” இதற்கு உதாரணம். நான் தத்துவார்த்தத்தையே குறிப்பிடுகிறேன். அது தமிழ்ப் பண்பாட்டின் முக்கியமான சாரம். அந்த அம்சம் இல்லாவிடில் ஒரு கதை வாசகர்களின் உரையாட முடியாது. அது ஊமையாகி விடும். ஏனோ நவீன யுகத்தில் சில கட்டங்களில் அது காணாமல் போய்விடுகிறது.”
கருத்துகள்