எனக்கு டி.எம் கிருஷ்ணாவின் இசை மிகவும் பிடிக்கும். அதைவிட ரஞ்சனி, காயத்ரியை கொஞ்சம் அதிகமாகவும் பிடிக்கும். ஆனால் அவர்களுக்கும், இந்துத்துவ பிராமண பாடகர்களுக்கும் டி.எம் கிருஷ்ணாவுக்கும் இடையிலான எல்லைப் போரில் பிற சாதியினர் காட்டும் ஈடுபாடும், டி.எம்முக்கு தரும் ஆதரவும் எனக்குப் புரியவில்லை. நீங்கள் என்னதான் காக்காயாக கரைந்தாலும் அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். இதை நான் என் அனுபவத்தில் சொல்கிறேன். எனக்கு பிராமணர்கள் மீது எந்த தனிப்பட்ட கோபமும் வன்மமும் இல்லை. ஆனால் இப்போது நடப்பது ஒரு சாதிக்குள் நிகழும் குடுமிப்பிடி சண்டை மட்டுமே என நினைக்கிறேன். டி.எம் கிருஷ்ணா ஒரு பெரியாரியர் அல்லர். அவர் இந்து மதத்துக்குள், சாதிக்குள் இருந்தபடி தனக்குத் தெரிந்த முற்போக்கைப் பேசுபவர். மையவாத வலதுசாரி - சுருக்கமாக காங்கிரஸ்காரர். ஆனால் அதற்கு மேலாக அவர் தான் பிறந்த சமூகத்தின் எல்லைகளை கடக்காதவர். இதை நான் அவரது ரசிகனாகவும், அவரது நூலைப் படித்தவனாகவும் சொல்கிறேன். பிராமண சமூகத்தில் இதற்கு முன்பும் கலகவாதிகள், அறுந்த வால்கள் இருந்திருக்கிறார்கள், இனியும் வருவார்கள். அதனால் சமூகத்திற்கு நன்மை விளைந்ததில்லை, இனியும் விளையாது. இதுதான் வரலாறு. எங்கும் போய் சேர முடியாத ஒரு குழப்பவாதம் அவர்கள் இடையிலான இந்த கலகவாதிகளிடமும் இருந்தது, இருக்கும். சூத்திரர்கள் எப்போதுமே பிராமணர்கள் மத்தியில் தோன்றும் எதிர்சிந்தனையாளர்கள், கலகவாதிகள், போலி புரட்சியாளர்கள் இடத்து மையல் கொண்டிருக்கிறார்கள். அவர்களை கவனித்தபடியே இருப்பார்கள். சாத்தியம் உள்ள போதெல்லாம் அவர்களை சொந்தம் கொண்டாட முயல்வார்கள். இதுவொரு மயக்கநிலை. பிராமணர்களில் தமக்கு சாதகமானவர்களை வரித்துக்கொண்டு தம்மை மேல்நிலையாக்கம் பண்ணும் முயற்சி அல்லது இந்து மதத்தின் அடிப்படையான ஏற்றத்தாழ்வை இதைக்கொண்டு சரிசெய்வதாக பாவனை செய்து தம்மையே ஏமாற்றிக்கொள்ளும் சவலையான எத்தனம். என்ன வேடிக்கையெனில் அவர்கள் இவர்களை கண்டுகொள்ளவே மாட்டார்கள். கோட்டை மதிற்சுவருக்கு வெளியே நின்று வாழ்க, ஒழிக எனக் கத்துவதைப் போலத்தான். உள்ளே இருப்போருக்கு எதுவும் கேட்காது, கேட்டாலும் பொருட்டல்ல.
பிராமண சாதிக்குள் இருந்தபடி சமத்துவம் பேசுவது சாத்தியமே அல்ல. அதற்கு சாதியில் இருந்து, இந்து மதத்தில் இருந்து வெளியேற வேண்டும். அவைதீக தத்துவம், கருத்தியலை ஏற்க வேண்டும். அதை நோக்கி உழைக்க வேண்டும். மேலும் பலரையும் மனம் மாற்ற முயல வேண்டும். இதெல்லாம் மிகவும் கடினம். சூத்திரர்களில் எத்தனை பேரால் சாதியில் இருந்து வெளியேற முடிகிறது. யாராலும் முடிவதில்லை. நான் ஒரு முற்போக்கு எழுத்தாளரின் வீட்டுக்கு சென்று தங்கினேன். அவர் சதா சாதி, மதத்தை, ஏற்றத்தாழ்வை சாடி எழுதியும் பேசியும் கொண்டிருப்பார். ஆனால் அவர் காலையில் இருந்தே ஒரு மதபோதகர் டிவியில் பேசுவதைக் கேட்டுக்கொண்டே குறுக்குமறுக்காக நடந்துகொண்டிருந்தார், வேலை செய்துகொண்டிருந்தார், சாப்பிட்டார், ஓய்வெடுத்தார். நிகழ்ச்சி முடிந்தபின்னர் நாங்கள் பேச ஆரம்பித்தோம். நண்பர் உடனே முற்போக்காக உரையாற்ற ஆரம்பித்தார். இதுதான் எதார்த்தம். சாதிப் பாசமும் இப்படித்தான் செயல்படும். இனி பொறுப்பதில்லை எரிதழல் கொண்டு வா எனக் கொந்தளித்தாலும் அவர்களுடைய நட்பு வட்டம் அனேகமாக சொந்த சாதிக்குள் தான் இருக்கும் - பார்ப்பது ஒரு முகம், பின்னால் நூறு நூறு முகங்கள். மிகச்சிலரே விதிவிலக்குகள். பேஸ்புக் இன்னும் மோசம் - தன் சொந்த மகனுக்கு, மகளுக்கு சாதிக்குள் வரன் பார்த்தபடியே சாதியத்துக்கு, சாதிய திருமணத்துக்கு எதிராக பேஸ்புக்கில் பொங்கிக்கொண்டிருப்பார்கள்.
எனக்கு இவர்களையெல்லாம் பார்த்து அலுத்துவிட்டது. யாரும் சாதியையெல்லாம் விட வேண்டியதில்லை. அப்படியே இருங்கள். எந்த குற்றவுணர்வும் கொள்ளத் தேவையில்லை. இந்த உலகிலே பெரிய போதை மருந்து குற்றவுணர்வுதான் என்றார் நீட்சே. அதுவே குற்றத்தை நோக்கி நம்மை அதிகமாக நகர்த்துகிறது. அதனால் சாதியை எல்லாம் விட வேண்டியதில்லை. சாதி ஒழிப்பு பாவனையை மட்டும் விட்டுவிடுங்கள். உண்மையை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் யார், உங்கள் இடம் என்ன, அந்தஸ்து என்ன, உங்களுடன் இருப்பவர்கள் யார், அவர்களுடைய இடம், அந்தஸ்து என்ன? இதைப் பாருங்கள். இது உங்களுக்குப் பிடிக்கவில்லையா நீங்களே மாறுதலைத் தேடுவீர்கள். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஜாலியாக வாழுங்கள். யாரும் உலகைத் திருத்துவதற்காக பிறக்கவில்லை. மாற்றம் ஒன்றும் கட்டாயமில்லை. உங்கள் தொழுவம் உங்களுக்குப் பிடித்திருந்தால் அதற்குள்ளே இருங்கள். அதுவே உங்கள் அறம். எந்த தப்பும் இல்லை. பிடிக்காமல் உடைத்துக்கொண்டாலும் அதில் எந்த பெருமையும் இல்லை. உங்கள் விடுதலை உங்களுக்கு மட்டுமேயான அகத்தேவை. ஏனென்றால் அப்போதும் நீங்கள் சமூகத்தை மாற்றுவதில்லை. பாவப்பட்ட சமூகத்தை விட்டுவிடுங்கள். ஏசு கிறிஸ்துவுக்கு அடுத்தபடியாக சாதிக்காக சிலுவையில் ஏறி ரத்தம் வடிப்பவர்கள் இந்தியாவின் சூத்திரர்கள் தாம். அதனால் யாருக்கும் பயனில்லை.
அதனால் சும்மா டி.எம் கிருஷ்ணாவைப் பற்றி தொங்கிக்கொண்டு இருக்காதீர்கள். அவரை ஆதரிக்க வேறு ஆட்கள் இருக்கிறார்கள். ரஜினியின் பிறந்த நாளுக்கு அவரது வீட்டு கேட்டுக்கு வெளியே தரிசனத்துக்காக நிற்பதற்கும் இதற்கும் வித்தியாசமில்லை.
நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...
கருத்துகள்