முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா முழுக்க நாம் காணும் விசித்திரம்

தமிழக அபிராணர்களுக்கு பணமில்லை, பஞ்சம், அதனால் இசை உள்ளிட்ட கலைகளில் ஆர்வம் செலுத்தவில்லை, வாய்ப்பில்லாமையாலே அன்றாட வாழ்வில் சினிமாவுக்கு அப்பால் கலாவாசனையே இன்றி மூடுண்டு கிடக்கிறார்கள் என்பது மட்டமான வாதம். ஏனென்று சொல்கிறேன் - இதே அபிராமணர்களான கிறித்துவர்கள் கிட்டார், கீபோர்ட், சேர்ந்திசை போன்ற இசைக்கருவிகள், வடிவங்களில் குழந்தைப் பருவம் முதலே ஆர்வம் காட்டுவதை, பயிற்சி பெறுவதைப் பார்க்கிறோம். இப்போதும் கூட ஒரு தெருவில் ஒரு குழந்தை இம்மாதிரி இசைக்கருவிகளை பயன்படுத்துகிறது எனில் அதன் பின்னால் தேவாலய செயல்பாடுகள் இருக்கும். அவர்களுக்கு படிக்கத் தேவையிருக்கவில்லையா? ஏழ்மையும் பிரச்சினைகளும் இல்லையா? தொழிலில் ஈடுபடும் நெருக்கடி இல்லையா? இருந்தும் எப்படி கலை ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள்? (தஞ்சை அபிரகாம் பண்டிதர் கூட கிறித்துவர் தான்.)
பூர்வ பௌத்தர்களான தலித்துகளிடம் எப்படி கானா இசை தழைத்தது? அவர்களுக்கு வறுமையில்லையா? (அவர்களிடம் இருந்துதானே இளையராஜாவே வருகிறார். மேலும் அவர் கிறித்துவராகப் பிறந்தவர்.) வடகிழக்கு மாநில பழங்குடி மக்களிடமும் அதிகமான கலை ஆர்வங்களை, இசைத்திறனைப் பார்க்கிறோம். 

 ஆக, இது பழங்குடிகள், தலித்துகள், கிறித்துவர்கள் அல்லாத அபிராமண இந்துக்களின் கலை சார்ந்த வீழ்ச்சி மட்டுமே. இதை ஒட்டுமொத்தமான தமிழர்களின் பொருளாதார எழுச்சி சார்ந்த பிரச்சினையாக காணக் கூடாது என நினைக்கிறேன்! 
கலையில் மட்டுமல்ல இந்துக்களாக இருந்தாலும் இந்து மதத்தின் தத்துவங்கள், ஆன்மீக நூல்களைப் பயில்வதிலும் இவர்களுக்கு ஆர்வமில்லை. சடங்குகள், நம்பிக்கைகளின் பூர்வீகம் தெரியாது. அத்வைதிகளாக இருப்பர், ஆனால் அத்வைதத்தின் பொருள் தெரியாது. நாட்டார் மதங்களிலும் ஆர்வம் குறைவு. சாதிய சடங்குகளுக்குள் நின்றபடி மட்டுமே மதத்தை அணுகுவார்கள். தீவிர மதவாதிகளாக கூட இருப்பர், ஆனால் தம் மதத்தின் அடிப்படைகள் பற்றி ஒன்றுமே தெரியாது. நீங்கள் ஒரு கிறித்துவரோ பௌத்தரோ இப்படி இருந்து பார்க்க முடியுமா? முடியாது. வேதங்களையோ உபநிடங்களையோ கல்லாதவர்களே 99.99% இந்துக்கள். "இவர்கள் தம் வேதங்களைக் கல்லாதவர்களாக இருப்பதாலே அதிலுள்ள கீழ்மை குறித்த போதமின்றி அடிமைகளாக இருக்கிறார்கள்" என்று அம்பேத்கர் சொல்வதை கவனிக்க வேண்டும்.

இவர்கள் பெரும்பாலும் மத்திய, உயர்மத்திய அபிராமண சாதியினர். ஆக, மதம், தத்துவம், இசை, இலக்கியம், ஓவியம் உள்ளிட்ட கலை வடிவங்களில் ஆர்வமே காட்டாதவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். இந்து மதத்தின் பொருளையே இந்துத்துவா வந்து தலைகீழாக மாற்றுவதற்கும் இவர்கள் தம் வேர்களில் ஆர்வமற்றவர்களாக இருப்பதற்கும் தொடர்புண்டோ என்றும் தோன்றுகிறது. பெரும்பாலான இந்துத்துவ செயல்பாட்டாளர்களுக்கும் தம் மதம் குறித்த அறிவு இல்லை, கலைகளிலும் ஈடுபாடு இல்லை. மனு ஸ்மிருதியை தீவிரமாக ஆதரிப்போருடன் விவாதிக்கும் போதெல்லாம் நான் ஒன்றை கவனிக்கிறேன் - அவர்கள் மனுவைப் படித்ததில்லை. உபநிடங்களை விட கீதையை கூட முழுமையாக படித்ததில்லை. இப்படியான சோம்பேறிகளை நீங்கள் வேறெந்த மதத்திலும் பார்க்க முடியாது. இவர்களை மிக சுலபத்தில் ஏமாற்ற முடியும்.

எனக்கு இதைக் குறித்துள்ள கேள்வி ஒரு காலத்தில் விவசாய குடிகளாகவும் நிலவுரிமையாளர்களாகவும் இந்த அபிராமணர்கள் இருந்து பின்னர் நகரமயமாக்கல் தோன்ற அதற்கு தம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்காமல் அரைகுறையாக நவீன கல்விக்கும் மாற்றத்திற்கும் மரபுக்கும் இடையில் மாட்டிக்கொண்டதற்கும் அவர்களுடைய கலை, அறிவுத் துறைகள் மீதான அலட்சியத்துக்கு எதாவது தொடர்புண்டா என்பதே. 

எனக்கு விடை நிச்சயமாகத் தெரியவில்லை. இது தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுக்க நாம் காணும் விசித்திரமே!
- ஆர். அபிலாஷ்

கருத்துகள்