மே மாதம் வெளியாகியுள்ள உயிர்மை மாத இதழில் கட்டுரையாளர் ஆர் அபிலாஷ் அவர்கள் எழுதியுள்ள எதேச்சதிகாரம் பின்னிய வெறுப்பின் லவ் ஜிஹாதும் மக்கள் பின்னிய அன்பின் லஹ் ஜிஹாதும்
மிக அற்புதமான மற்றும் அவசியமான கருத்துச்செறிவு மிக்க கட்டுரையாக வெளிவந்துள்ளது.
அரசியல்வாதிகள் பின்னிய வலையில் பொதுமக்கள் மிக எளிமையாக சிக்கித் தவிப்பதை அன்றாட நிகழ்வுகளின் ஊடாக நாம் கவனிக்க முடிகிறது.
அவ்வாறு வகுப்புவாதிகளாலும், பாசிசவாதிகளாலும் மிகக் குறிப்பாக நிகழ்காலத்தில் நாட்டை ஆளும் அரசியல்வாதிகளாலும் பின்னப்பட்ட ஒரு கொடூரமான வலைப்பின்னல் தான் லவ் ஜிஹாத்.
அப்படிப்பட்ட நெருடிய வார்த்தை பிரயோகங்களைக் கொண்ட இந்த சொல்லாடலை மிக லாவகமாகவும், சிக்கல்களை அவிழ்க்கக்கூடிய நுண்ணிய கருத்தாடலாகவும் இந்தக் கட்டுரையை அமைந்தது மிகச் சிறப்பு.
குறிப்பாக இந்தக் கட்டுரை கீழ்க்கண்ட மிகச் சிறப்பான வாதங்களை நம் முன் வைக்கின்றது.
1. லவ் ஜிஹாத் என்ற வார்த்தையை மரபணு ஆய்வு என்ற கனத்த சுத்தியின் மூலமாக அடித்து உடைத்துள்ளார் கட்டுரையாளர்.
2. பண்பாடு மற்றும் கலாச்சாரம் என்பதின் அடிப்படை இயலை இப்படித்தான் - இவ்வாறுதான் என்ற வரையறைக்குள் கொடுத்தது சிறப்பு.
3. ஐரோப்பிய பாசிச சித்தாந்தத்தையும் இந்திய பாஜக சித்தாந்தத்தையும் ஒப்புமைப்படுத்துவதற்கு எடுத்துக்கொண்ட சொல்லாடல்களும் கருத்தாடல்களும் மிகவும் அருமை.
4. போலி கதையாடல்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதனையும் அது எவ்வாறு பொதுமக்களின் மனதில் புகுத்தப்படுகின்றன என்பதனையும் மேலும் வலதுசாரி சிந்தனைகள் எவ்வாறு மக்கள் மனதில் ஒட்டப்பட்டு பின்பு வெட்டப்படுகின்றன என்பதனையும் மிக அழகாக படம் பிடித்து காட்டுகிறது இந்தக் கட்டுரை.
5. நியூரெம்பெர்க் சட்டங்களைப் பற்றி அறிய முடிவதுடன் எந்த அளவிற்கு நாஜி கட்சி உருவாக்கிய இனவாத வெறுப்பு அரசியலின் நீட்சியை இன்று பாசிசவாதிகள் பிடித்து தொங்குகின்றனர் என்பதனையும் மிக எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது.
6. புரளி என்பது உண்மைக்கு மாற்றமானது அது பொய்மையை மறுதலிக்க கூடியது அல்லது வெறுப்பை மறுதலிக்க கூடியது.... என்ற பதத்தினை மிகத் தெளிவாக லவ் ஜிஹாத்தின் வழியாக ஏற்றிச் சொல்லி, நிகழ்கால புரளிகளுக்கு நாம் எவ்வாறு செவிசாய்க்க வேண்டும் என்பதையும் இந்த கட்டுரை விளக்குகிறது.
7. பொய்மையின் பிறப்பிடம் சூன்யமே என்ற என்ற வாதம் மிகச் சிறப்பாக எடுத்தாளப் பட்டுள்ளது. மிகக்குறிப்பாக லவ்ஜிஹாதும் அவ்வகைமைதான் என்பதனையும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
8. கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் நடந்த உண்மைச் சம்பவத்தை எவ்வாறு அப்பகுதி மக்கள் லாவகமாக கையாண்டனர் என்பதனையும் அதற்கு 'அன்பின் பொருள்' எவ்வளவு அவசியப்பட்டது என்பதனையும், அங்கு நடந்த காட்சிகளின் வழியாக கட்டுரையாளர் தெளிவுபடுத்துகிறார். இந்த தெளிவு லவ் ஜிகாத் என்ற பதத்தின் உண்மை தன்மையை (நாம் அறிந்த தகவல்களுக்கு அப்பால் மேலும்) அறிந்து கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
9. இந்துக்களை தோளோடு தோள் சேர்த்து வெறுப்பின் வேர்களை எவ்வாறு இஸ்லாமியர்கள் களைந்துள்ளனர் என்பதை பற்றிய கட்டுரையின் இறுதி பத்தியில் ஒட்டுமொத்தமாக மிகச் சரியானதொரு தீர்வையும் பார்வை மற்றும் பாதையையும் கட்டுரையாளர் கொடுத்துள்ளார்.
10. இன்மையை அடையாளம் கண்டு அதை எவ்வாறு முறியடிக்க வேண்டும் என்ற வகையில் இக்கட்டுரை பேசியுள்ள கருத்துக்கள் சமகாலத்தில் படிப்பினைகளாகவும், இரு சாரார்களுக்கும் தீர்வாகவும் அமைந்துள்ளதை பூங்கொத்துக் கொடுத்து நிச்சயமாக வரவேற்கலாம்.
கட்டுரை எழுதிய அபிலாஷ் அவர்களுக்கும் அச்சிட்ட உயிர்மெய் மாத இதழுக்கும் நன்றிகளும் அன்புகளும்.
ஷா.காதர் கனி
கருத்துகள்