முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏன் 'சோம்பேறியாக' இருப்பது அவசியம்?


 

உடல் ஆரோக்கியம் என்பது காலையில் பூங்காவில் நடப்பதோ ஜிம்மில் எடை தூக்குவதோ டயட் இருப்பதோ அல்ல என்று இப்போதெல்லாம் தோன்றுகிறது. இளமையிலேயே மோசமாக உடல் பாதிக்கப்படுவோர், மரணமடைவோரைப் பார்க்கையில் இந்த எண்ணம் வலுப்படுகிறது. மன அழுத்தம், நெருக்கடியை, பதற்றத்தை மற்றொரு காரணமாக முன்வைக்கிறார்கள். ஆனால் இவை எங்கிருந்து வருகின்றன என யாரும் கேட்பதில்லை. வேலையில் இருந்து. ஆய்வின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட தரவொன்று இப்படிச் சொல்கிறது - ஒரு நாளை எட்டு மணிநேரம் உழைக்க வேண்டும் என்பது விதிமுறை. அதைத்தாண்டி நாம் போடும் ஒவ்வொரு மணிநேர உழைப்பும் (அவை வாரக்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் குவிவதால்) நம் வாழ்வில் இரண்டு ஆண்டுகளைக் காவு வாங்குகின்றன. உடல் உழைப்புக்கு ஒரு வரம்பு உண்டு. 10-16 மணிநேரங்கள் உடலுழைப்பில் ஈடுபட்டால் அதன் எதிர் விளைவு உடனடியாகத் தெரியும் என்பதால் யாரையும் அவ்வாறு வலியுறுத்த முடியாது. அத்தகைய உழைப்பாளிகளுக்கு சங்கமும் சட்டப்பாதுகாப்பும் உண்டு. ஆனால் மூளையுழைப்பிற்கு அத்தகைய வரைமுறைகள் இல்லை. இன்று 12-14 மணிநேரம் உழைப்பது வெகு சாதாரணமாகி விட்டது. வீட்டுக்காக, காருக்காக, குழந்தைகளின் படிப்புக்காக, வாடகை கொடுப்பதற்காக, சேமிப்புக்காக, வீட்டுச் செலவுகளை நடத்துவதற்காக, சமூக மதிப்பிற்காக, உயிர்வாழ்வதற்காக. நிறுவனங்களில் பணியாற்றுவோர் மட்டுமல்ல சுயதொழில் செய்வோருக்கும் இன்று இப்பிரச்சினை உண்டு. எவ்வளவு உழைத்தாலும் அவர்களுக்குப் போதவில்லை. எனில் இது ஒரு பண்பாட்டுப் பிரச்சினையும்தான்.

இந்த கார்டியன் இதழ் கட்டுரையைப் படியுங்கள் - அதிகமாக உழைக்காமல் மெத்தனமான வாழ்க்கையில் இருப்போரே அதிக ஆயுளுடன் இருக்கிறார்கள் எனச் சொல்கிறது (https://www.theguardian.com/.../live-long-lazy-britain...). 2007இல் 23,000 மேலான கிரேக்கர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் மதியத் தூக்கம் தூங்குவோருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு 37% குறைவு எனத் தெரிய வந்தது.
நாம் அதிகமாக உழைக்கும்போது நம்மையே அறியாமல் நமது உடலும் மூளையும் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. உடலைப் பொறுத்தமட்டில் அதிகமான உழைப்பு ஒருவித நெருக்கடியில் நிகழும்போது அது புத்துணர்வு ஊட்டப்படுவதில்லை, மாறாக ஒரு எதிரியிடம் இருந்து தப்பித்து ஓடுகிற உணர்வு அதற்கு ஏற்படுகிறது. தொடர்சசியாக தினமும் பல மணிநேரங்கள் எதிரியிடம் இருந்து ஓடிக்கொண்டிருக்கையில் ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிற மனவுளைச்சல் வளர்வூக்கிகள் (ஸ்டிரெஸ் ஹார்மோன்கள்) தூண்டப்படுகின்றன. இதெல்லாம் நமக்கு நடப்பதை உணராமல் நாம் எந்திரத்தனமாக ஓடிக்கொண்டே இருக்கிறோம். நம் உடலுக்கும் ஒரு மனம் உண்டு (இது நம் 'மனம்' அல்ல). உடலின் மனதை உடலின் அணுக்களின் மனம் எனலாம். அவை நமக்குள் இருப்பது நாம் அவற்றை நன்றாக வைத்துக் கொள்வோம் என்றுதான். நீங்கள் ஒரு வாடகை வீட்டில் இருக்கிறீர்கள். அது ஒரு போர் நடக்கும் பகுதியில் இருக்கிறது. சதா இரவெல்லாம் குண்டு வெடிக்கும் சத்தம். நீங்கள் என்ன செய்வீர்கள். வேறு வீட்டுக்குப் பெயர்வீர்கள். தப்பித்து ஓடுவீர்கள். உடல் அணுக்களுக்கு தன்னழித்தல் பாங்கு உண்டு. அது தன்னை அழித்துவிட்டு மாய்ந்திட முயலும்போதே பல்வேறு வளர்சிதை மாற்ற உபாதைகளும் புற்றுநோயும் வருகின்றன என்பது என் புரிதல்.
உடலுக்குத் தேவை உழைப்பல்ல - உடல் தன்னியல்பில் ஓய்வையே அதிகமாக நாடுகிறது. உணவையும் பாதுகாப்பையும் தேடும் சூழல் மட்டுமே உடலை உழைக்கத் தூண்டும். நீங்கள் விலங்குகளை, பறவைகளைப் பாருங்கள். அவை இப்படி மணிக்கணக்காய் உழைப்பதில்லை. சிலமணிநேர உழைப்புக்குப் பின் பல மணிநேரங்கள் ஓய்வுதான். நான் என் வீட்டின் அருகிலுள்ள கட்டிடங்களின் கூரையிலும் மரக்கிளைகளிலும் தினமும் வருகிற குரங்குகளை கவனிக்கிறேன். அவை தூங்கிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்கின்றன. ஏன் என்றால் அதிகமாக உழைக்க அதிகமான ஆற்றல் வேண்டும். உடல் ஆற்றலை வெளிப்படுத்தினால் அதனால் தசை வளரும் என நாம் நினைக்கலாம். அதற்கும் ஒரு வரையறை உண்டு. மன ஆற்றலுக்கும் அப்படித்தான். உழைப்புக்கு ஈடாக நம் உடலிலும் மூளையிலும் ஏற்படும் சேதாரங்களைச் சரி செய்ய நிறைய ஓய்வு அவசியம். அது 6-8 மணிநேர தூக்கத்தினால் மட்டுமே கிடைக்காது. முன்பு மனிதர்கள் இதைவிட அதிகமாக ஓய்வெடுத்தார்கள் என்பதே என் நம்பிக்கை. Witold Rybczynski எனும் பண்பாட்டு ஆய்வாளர் மத்திய கால ஐரோப்பாவில் மக்கள் மூன்றில் ஒரு மடங்கு காலத்தை ஓய்வில் செலவிட்டார்கள் என்கிறார். அன்று அதிகமான திருவிழாக்கள் இருந்தன. ஊரில் இருந்து நான் நகரத்திற்கு வந்ததும் கண்ட முதல் மாற்றமே அதிகமான உழைப்புதான். கிராமத்தில் உடலுழைப்பாளர்கள் கூட காலையில் சில மணிநேரங்கள், மதியத்திற்கு மேல் சில மணிநேரங்கள் என்றே வேலை செய்வார்கள். அதுவும் வாரத்திற்கு 6 நாட்களும் அல்ல. வேலையில்லாத நாட்கள் அதிகமாக இருக்கும். வேலையில்லாமல் வீட்டில் இருப்பது ஒரு அவமானமாக அங்கு இருந்ததில்லை. நகரத்தில்தான் வேலை நேரம் தன்மானமாக மாற்றப்படுகிறது - வேலையே பணம், பணமே சுயமரியாதை, சுயமரியாதையே சுதந்திரம் என்று ஆகிறது. ஆனால் நான் ஊரில் பார்த்த வாழ்க்கையில் பலரிடமும் நேரமும் தன் நேரத்தை தன் விருப்பப்படி செலவழிக்கும் சுதந்திரமும் இருந்தது. இவ்வளவு விலாவரியாக நான் அவர்கள் சமைத்துப் பார்த்ததில்லை - முன்னிரவு உணவில் காலைக்காக நீரை ஊற்றி வைப்பார்கள். இரவு மிக எளிய உணவு. மதியம் மட்டுமே எதாவது காய்கறிகளைச் சமைப்பார்கள். காலையிலும் மதியமும் உறங்குவார்கள். மாலையில் மட்டுமே அரட்டையடிப்பது, காலாற நடப்பது. இவ்விசயங்கள் தொண்ணூறுகளில் மாறத் தொடங்குவதைக் கண்டேன். இன்று கிராமமோ நகரமோ எங்கெல்லாம் நவீனம் புகுந்ததோ அங்கெல்லாம் நேரம் இருந்தாலும் நேரமில்லை. அரசு ஓய்வூதியம் பெறுகிற ஒரு சிறு சதவீதத்தினர் மட்டுமே இன்று ஓய்வின் மகத்துவத்தை அனுபவிக்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அவ்வாழ்க்கை ஒரு கருத்தமைவாகவே உருவாக்கப்பட்டு விட்டது. அவர்களும் ஓய்வூதியம் போதவில்லை எனக் கருதும்போது தன்னழிவு வாழ்க்கைக்குள் வந்துவிடுவார்கள்.
அடுத்து தற்கொலை - இன்று மனவுளைச்சலால் அதிகமான மக்கள் தற்கொலை பண்ணுகிறார்கள். ஏன்? வலிதாங்காமல் மட்டுமல்ல. தற்கொலை என்பது நம் மனமும் உடலும் தன் 'வலி' பொறுக்காமால் தன்னை அழிக்கிற முயற்சிதானோ எனும் கேள்வி என்னிடம் உண்டு. மன அழுத்தம், மனச்சிதைவுக்கும் குடலில் உள்ள நுண்ணுயிர்களுக்குமான தொடர்பு குறித்து இன்றுள்ள ஆய்வுகள் சொல்கின்றன. இந்த நுண்ணுயிர்கள் மகிழ்ச்சியாக உள்ளபோது அவை நாம் நீண்ட காலம் வாழ வேண்டும் எனக் கருதுகின்றன. நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இவை எண்ணிக்கையில் குறைந்து உடலைத் தற்காலிக உறைவிடமாகக் கருதும் நுண்ணுயிர்கள் பெருகும்போதோ பல நோய்கள் தோன்றுகின்றன. உடல் அழியத் தொடங்குகிறது. ஏனென்றால் அவை நம்மை வெகு சீக்கிரம் பயன்படுத்தி அழித்துவிட்டுப் போகவே விரும்புகின்றன. இவை நம்மை அவ்வாறு அழிந்திடத் தூண்டுவதன் ஒரு வழி 'தற்கொலை' - இன்று இந்த கோணத்தில் ஆய்வுகள் ஆரம்பித்துள்ளன (https://www.mdpi.com/2673-5318/6/3/84). என்னதான் நேரடி வாழ்வின் தூண்டுதல்கள் மனிதரை தற்கொலையை நோக்கிச் செலுத்தினாலும் அதற்கு ஒரு தீவிரமான விசையை அளிப்பது இந்த நுண்ணுயிர்களாக இருக்கக் கூடும்.
நாம் என்றால் நமது உடலும் மனமும் - ஆனால் இன்று ஆய்வுகள் நமது அணுக்களுக்கு என்றே தனியான பிரக்ஞை உண்டா, நமது நுண்ணுயிர்கள் நமது வாழ்வை நாம் நடத்துவதற்கான முகமையைக் கட்டுப்படுத்துகின்றனவா எனும் கேள்விகளை எழுப்புகின்றன? ஒருவேளை நாம் உடலெனக் கருதுவது ஒரு வாடகை வீடோ? ஒருவேளை நாம் மனமெனக் கருதுவது பல்வேறு நுண்ணுயிர்களின், அணுக்களின் அக-விழைவுகளின் கூட்டிணைவு மட்டும்தானோ? நாம் அவற்றின் அகவிழைவுகளுடன் நமது அகவிழைவையும் இணைத்து மனமெனச் சிந்திக்கிறோமோ?
எனில் சமூகத்திற்காக, குடும்பத்திற்காக உழைக்காமல், சிந்திக்காமல் நாம் இவற்றுக்காக உழைக்கவும் சிந்திக்கவும் வேண்டுமோ? அவற்றுக்குப் பிடித்தாற்போல வாழ்ந்தால் நான் நீண்ட காலம் மகிழ்ச்சியாக இருக்க முடியுமெனில் ஏன் என்னால் அது இயல்வதில்லை? என் உடலும் மனமும் என்னுடையவை அல்ல, அவை ஒரு கூட்டுச் செயல்பாடு எனில் ஏன் அடுத்தவர்களுக்காக இவ்வளவு உழைக்கிறேன்? என் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் சமூகத்தில் இருந்தும் உறவுகளில் இருந்து வருவதாக நான் நினைப்பது ஒரு தோற்றம் மட்டும்தானோ? அசலான ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் உள்ளிருந்து வருவதோ? உலகில் எல்லாரும் என்னை விட்டுப் போகும்போதும் என் உடல் மட்டும்தானே என்னை விட்டுவிடாமல் இருக்கிறது? எனில் நான் ஏன் பிறருக்காக இவ்வளவு கவலைப்படுகிறேன்?
நாம் சோம்பேறித்தனத்தை ஒரு சமூகக் கருத்தாக்கமாக மாற்றியதே பிரச்சினை என நினைக்கிறேன். ஒவ்வொரு தனிமனிதனும் தன் 'உடலுக்கு', தன்னைக் காப்பாற்றுவதற்கு எவ்வளவு உழைப்பு வேண்டும் எனச் சிந்திப்பதே சரியானது எனத் தோன்றுகிறது. ஆனால் அதை அனுமதிக்காதபடி நம் கலாச்சாரமும் பொருளாதாரமும் நம்மைப் பிடித்தாட்டுகின்றன. நம்மை அவை பயமுறுத்தி ஓடிக்கொண்டே இருக்க வைக்கிறது. சோம்பேறித்தனத்தை நற்பண்பாகப் பார்க்கையிலே மகிழ்ச்சியும் திருப்தியும் தோன்றும்.
குறிப்பு: நான் இங்கு குறிப்பிடுவது தன் விருப்பத்தின் பெயரில் மகிழ்ந்து செய்கிற உழைப்பை அல்ல. பணத்துக்கான, சமூக அங்கீகாரத்துக்கான உழைப்பை மட்டுமே.

கருத்துகள்

తిరుపతి మహేష్ இவ்வாறு கூறியுள்ளார்…
Interesting and thought-provoking article sir.
It definitely makes me feel that being a little lazy once in a while can actually be a good thing.
---
Tirupati Mahesh

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...