முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏன் விஜய் ஆதரவாளர்களை அரசியல்படுத்த இயலாது?




//விஜய்க்கு வாக்களித்தவர்கள், இந்தி எதிர்ப்பு, இடஒதுக்கீடு, தமிழ் உணர்வு, சிறுபான்மை நலன், தொகுதி வரையறை எதிர்ப்பு, மாநில சுயாட்சி இவை மட்டுமல்ல, பாஜக எதிர்ப்பைக்கூட அறியாதவர்கள்(அப்படி ஒரு கட்சி இருப்பதும் பலருக்குத் தெரியாது) இதுதான் அரசியலற்றத் தன்மை. - வே. மதிமாறன்//

இப்பார்வை தவறென்கிறேன். பாசிஸம் ஆன்மீக தோரணை கொண்டது. சினிமா ரசிக மனநிலையும் அப்படியானதே. அது இல்லாத ஒன்றை நோக்கி கற்பனையாலும் உணர்வுகளாலும் பாய முயல்வது. அது இலக்கில்லாத ஒரு பாய்ச்சல். விஜய் ரசிகர்கள் அதனால் ஒரு புது ஆட்சிக்கு வாக்களிக்கவில்லை. அவர்கள் ஒன்றுமில்லாத ஒன்றுக்காக வாக்களிக்கிறார்கள். இத்தகையோர் தனிமனிதப் பண்புகளான கௌரவம், சுயசிந்தனை, பகுத்தறிவு, தொலைநோக்கு இல்லாதவர்கள். கவனியுங்கள்: இவர்கள் படிப்பு, வேலை எனத் தம் வாழ்க்கைத் தேவையின் பொருட்டு பகுத்தறிவைப் பயன்படுத்துவார்கள். ஆனால் தம்மைக் குறித்துப் பரிசீலிக்க, வாழ்க்கையை ஆழமாகப் பார்க்க இவர்களால் பகுத்தறிவின் வழியில் செல்ல இயலாது. இவர்கள் உடைந்து போனவர்கள். முன்பு மதம் மக்களுக்கு இருந்தது. இவர்களுக்கு மதத்திலும் தீவிர பிடிப்பு இருக்காது. பொழுதுபோக்கு, போதை மருந்து, சினிமா, அரசியல் எல்லாமே அதனால் ஒருவித மதமாகி விடுகிறது இவர்களுக்கு. தம்மையே அறியாமல் அப்படிச் செயல்படுகிறார்கள். இவர்களைச் சமூகவலைதளப் பிரச்சாரம் இப்படி மாற்றவில்லை. இவர்கள் இத்தகைய கூட்டு மனநிலைகளை, இன்பத்தையும் குதூகலத்தையும் அளிக்கும் மனநிலைகளைத் தேடுகிறார்கள். விஜய் அதை அளிக்கிறார். கொள்கையும் அரசியல் சிந்தனையும் இவர்களைத் தம்மைக் குறித்தும் வாழ்க்கையைக் குறித்தும் பரிசீலிக்க வைக்கும் என்பதால் அதைச் செய்ய மாட்டார்கள். தம்மைக் கடந்து செல்ல வேண்டிய விழைவுக்கு மதமும் தீனியளிக்காததால் இவர்கள் மேற்சொன்ன வழியில் பயணிக்கிறார்கள்.
இவர்கள் இத்தகைய மனநிலைக்கு வரும்போது தமது எல்லா அடையாளங்களையும் இழந்து ஒரு தலைவரைக் கடவுளாகக் கருதி புளகாங்கிதம் அடைவார்கள். இவர்களுக்கு அதுவே வேண்டும். இதுவே இவர்களை முடிவுகளை எடுப்பதில் இருந்து, பொறுப்புகளை வரிப்பதில் இருந்து காப்பாற்றுகிறது. இதுவே இவர்களுக்கு மர்மமானதொரு அதிகாரத்தை அளிக்கிறது. இத்தகையோரை நீங்கள் அரசியல்படுத்த இயலாது. இவர்கள் மக்களாட்சி முறை, மானுடவாதம், அதன் விழுமியங்களுக்கு அப்பால் உள்ளவர்கள். அரசியல்படுத்துவது தனிமனிதர்களுக்கான செயல்பாடு. இவர்கள் தனிமனிதர்கள் அல்லர்.
இத்தகையோரை நாம் போதை மருந்துப் பயனர்களுடன் ஒப்பிடலாம். ஏனென்றால் இவர்களுடைய மூளையமைப்பிலேயே மாறுதல்கள் தோன்றும். இதைப் படித்துப் பாருங்கள் (https://www.labroots.com/.../15729/cults-change-brain...).
இன்ஸ்டாவில் சென்று பரப்புரை செய்தாலும் இவர்களைக் 'கைப்பற்ற' முடியாது.
இரண்டு விசயங்கள் மட்டுமே சாத்தியம்:
1) இயல்பு வாழ்க்கைக்கு இவர்களைத் திருப்புவது. இயல்பு வாழ்க்கையைத் தன்னளவில் மகிழ்ச்சியாக்குவது. வேலை வாய்ப்புகளைப் பெருக்குவது. குடும்ப அமைப்பை வலுப்படுத்துவது. கல்வி அமைப்பில் ஆசிரியர்களின் இடத்தை வலுவாக்குவது. சமூகத்தில் எல்லா நிலைகளிலும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருப்பது. யாரையும் கைவிடாதிருப்பது. சமூகத் தனிமையை ஒழிப்பது. அதன்பிறகு நம் சமூகத்தில் போதை வஸ்துக்களையும் சினிமா பயன்பாட்டையும் குறைப்பது.
2) இந்த கும்பல் மட்டுமே தமிழ் நாடு அல்லர். 65% மக்கள் இன்றும் பாதிக்கப்படாமலே உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது அவசியம்.
இது அரசியல் பிரச்சினை என்பதை விட ஒரு சமூக உளவியல் பிரச்சினை. இது திமுகவின் பிரச்சினை என்பதைவிட ஒரு சமூகப் பிரச்சினை. ஒருவர் தன் வாழ்வின் கடைநிலையில் இருக்கும்போது மட்டுமே விஜய்யை ஆதரிக்க முடியும். மக்கள் ஏன் அந்நிலைக்குப் போகிறார்கள் எனச் சிந்திக்கலாம். என்றாவது இதெல்லாம் சரியாகலாம். ஆனால் தமிழ்ச் சமூகம் கல்ட் வழிபாட்டாளர்களைக் கடந்தே சிந்திக்க வேண்டும்.
அதேநேரம் இவர்கள் நம் பிள்ளைகளாகவும், சகோதர சகோதரிகளாகவும் தாய்மாராகவும் சக குடிமக்களாகவும் இருப்பதால் நம்மால் இவர்களைக் கடந்தும் செல்ல முடியாது. தனிப்பட்ட நிலையில், நமக்கும் இவர்களுக்குமான இடைவெளியானது ஒரு தலைமுறை இடைவெளி அல்ல. அவ்வாறு சொல்லப்படுவது அபத்தமானது. நாம் இவர்களிடம் எப்படி உரையாடுவது என்பதல்ல, இவர்களை என்ன செய்வது என்பதே பிரச்சினை. நம் குடும்பத்தில், நட்பு வட்டத்தில் இருந்து சிந்தித்துப் பார்க்கலாம். அங்கிருந்து ஆரம்பிக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...